ஞாயிறு, 17 ஜூன், 2012

பாரதியார் கவிதைகள் - பல்வகைப் பாடல்கள்


ராதே கிருஷ்ணா 17-06-2012

பாரதியார் கவிதைகள்


பாரதியார் கவிதைகள்
Bharathiar Kavithaigal
arrow வரலாறுarrow தேசீய கீதங்கள்
arrow தெய்வப் பாடல்கள்arrow பல்வகைப் பாடல்கள்
arrow முப்பெரும் பாடல்கள்arrow புதிய பாடல்கள்
  தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்




பல்வகைப் பாடல்கள்
temple

நீதிஜனவரி 21,2012

1. புதிய ஆத்திசூடி
காப்பு-பரம்பொருள் வாழ்த்து
ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியான்;
கருநிறங் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன்;
மகமது ... மேலும்

temple
1. காலைப்பொழுது

காலைப் பொழுதினிலே கண்விழித்து மேனிலை மேல்
மேலைச் சுடர்வானை நோக்கி நின்றோம் விண்ணகத்தே.
கீழ்த்திசையில் ஞாயிறுதான் கேடில் சுடர் ... மேலும்

temple

சுய சரிதைஜனவரி 21,2012

1. கனவு

பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய்
மெல்லப் போனதுவே.
-பட்டினத்துப் பிள்ளை
முன்னுரை
வாழ்வு முற்றும் கனவெனக் கூறிய
மறைவ லோர்தம் உரைபிழை ... மேலும்

temple

வசன கவிதைஜனவரி 21,2012

1. காட்சி
முதற்கிளை : இன்பம்
1. இவ்வுலகம் இனியது இதிலுள்ள வான் இனிமையுடைத்து;
காற்றும் இனிது. தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது.
ஞாயிறு நன்று; திங்களும் நன்று. ... மேலும்


































நீதி





1. புதிய ஆத்திசூடி
காப்பு-பரம்பொருள் வாழ்த்து
ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியான்;
கருநிறங் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உயர்ந்துண ராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே:அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.
நூல்
அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்.
இளைத்தல் இகழ்ச்சி
ஈகை திறன்
உடலினை உறுதிசெய்
ஊண்மிக விரும்பு
எண்ணுவது உயர்வு
ஏறுபோல் நட
ஐம்பொறி ஆட்சிக்கொள்
ஒற்றுமை வலிமையாம்.
ஓய்தல் ஒழி.
ஓளடதம் குறை.
கற்றது ஒழுகு.
காலம் அழியேல்.
கிளைபல தாங்கேல்.
கீழோர்க்கு அஞ்சேல்.
குன்றென நிமர்ந்து நில்.
கூடித் தொழில் செய்.
கெடுப்பது சோர்வு
கேட்டிலும் துணிந்து நில்.
கைத்தொழில் போற்று
கொடுமையை எதிர்த்து நில்.
கோல்கைக் கொண்டுவாழ்
கவ்வியதை விடேல்.
சரித்திரச் தேர்ச்சி கொள்
சாவதற்கு அஞ்சேல்
சிதையா நெஞ்சு கொள்.
சீறுவோர்ச் சீறு.
சுமையினுக்கு இளைத்திடேல்.
சூரரைப் போற்று
செய்வது துணிந்து செய்
சேர்க்கை அழியேல்.
சைகையில் பொருளுணர்.
சொல்வது தெளிந்து சொல்
சோதிடந் தளை யிகழ்.
சௌரியம் தவறேல்.
ஞமலிபோல் வாழேல்.
ஞாயிறு போற்று
ஞிமறென இன்புறு.
ஞெகிழ்வது அருளின்.
ஞேயம் காத்தல்செய்.
தன்மை இழவேல்.
தாழ்ந்து நடவேல்.
திருவினை வென்று வாழ்.
தீயோர்க்கு அஞ்சேல்.
துன்பம் மறந்திடு
தூற்றுதல் ஒழி.
தெய்வம் நீ என் றுணர்.
தேசத்தைக் காத்தல் செய்.
தையலை உணர்வு செய்.
தொன்மைக்கு அஞ்சேல்.
தோல்வியில் கலங்கேல்.
தவத்தினை நிதம் புரி.
நன்று கருது.
நாளெலாம் வினை செய்;
நினைப்பது முடியும்
நீதிநூல் பயில்.
நுனியளவு செல்.
நூலினைப் பகுத்துணர்.
நெற்றி சுருக்கிடேல்.
நேர்படப் பேசு.
நையப் புடை.
நொந்தது சாகும்.
நோற்பது கைவிடேல்.
பணத்தினைப் பெருக்கு.
பாட்டினில் அன்பு செய்.
பிணத்தினைப் போற்றேல்.
பீழைக்கு இடங்கொடேல்.
புதியன விரும்பு.
பூமி இழந்திடேல்.
பெரிதினும் பெரிது கேள்.
பேய்களுக்கு அஞ்சேல்.
கொய்மை இகழ்.
போர்த் தொழில் பழகு.
மந்திரம் வலிமை.
மானம் போற்று.
மிடிமையில் அழிந்திடேல்.
மீளுமாறு உணர்ந்துகொள்.
முனையிலே முகத்து நில்.
மூப்பினுக்கு இடங் கொடேல்.
மெல்லத் தெரிந்து சொல்.
மேழி போற்று.
மொய்ம்புறத் தவஞ் செய்.
மோனம் போற்று.
மௌட்டியந் தனைக் கொல்.
யவனர்போல் முயற்சிகொள்.
யாரையும் மதித்து வாழ்.
யௌவனம் காத்தல் செய்.
ரஸத்திலே தேர்ச்சிகொள்.
ராஜஸம் பயில்.
ரீதி தவறேல்.
ருசிபல வென்றுணர்.
ரூபம் செம்மை செய்.
ரேகையில் கனி கொல்.
ரோதனம் தவிர்.
ரௌத்திரம் பழகு.
லவம் பல வெள்ளமாம்.
லாகவம் பியற்சி செய்.
லீலை இவ் வுலகு.
(உ)லுத்தரை இகழ்.
(உ)லோக நூல் கற்றுணர்.
லௌகிகம் ஆற்று.
வருவதை மகிழ்ந்துண்.
வான நூற் பயிற்சி கொள்.
விதையினைத் தெரிந்திடு.
வீரியம் பெருக்கு
வெடிப்புறப் பேசு.
வேதம் புதுமை செய்.
வையத் தலைமை கொள்.
வௌவுதல் நீக்கு.
2. பாப்பாப் பாட்டு
ஓடி விளையாடு பாப்பா!-நீ
ஓய்ந்திருக்க லாகாகது பாப்பா!
கூடி விளையாடு பாப்பா!-ஒரு
குழந்தையை வையாதே பாப்பா!  1
சின்னஞ் சிறுகுருவி போலே-நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
வன்னப் பறவைகளைக் கண்டு-நீ
மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா! 2
கொத்தித் திரியுமந்தக் கோழி-அதைக்
கூட்டி விளையாடு பாப்பா!
எத்தித் திருடுமந்தக் காக்காய்-அதற்கு
இரக்கப் படவேணும் பாப்பா!  3
பாலைப் பொழிந்துதரும் பாப்பா!-அந்தப்
பசுமிக நல்லதடி பாப்பா!
வாலைக் குழைத்துவரும் நாய்தான்-அது
மனிதர்க்கு தோழனடி பாப்பா!  4
வண்டி இழுக்கும்நல்ல குதிரை,-நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை,ஆடு,-இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா!  5
காலை எழுந்தவுடன் படிப்பு-பின்பு
கனிவு கொடுக்கும்நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு-என்று
வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா! 6
பொய்சொல்லக் கூடாது பாப்பா!-என்றும்
புறஞ்சொல்ல லாகாது பாப்பா!
தெய்வம் நமக்குத்துணை பாப்பா!-ஒருன
தீங்குவர மாட்டாது பாப்பா!  7
பாதகஞ் செய்பவரைக் கணடால்-நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!  8
துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்ததெய்வ முண்டு-துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா! 9
சோம்பல் மிகக்கெடுதி பாப்பா!-தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா!
தேம்பி யழுங்குழந்தை நொண்டி,-நீ
திடங்கொண்டு போராடு பாப்பா!  10
தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற-எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தில் இனியதடி பாப்பா!-நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!  11
சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே!-அதைத்
தொழுது படித்திடடி பாப்பா!
செல்வம் நிறைந்த ஹிந்துஸ்தானம்-அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா!  12
வடக்கில் இமயமலை பாப்பா!-தெற்கில்
வாழும் குமரிமுனை பாப்பா!
கிடக்கும் பெரியகடல் கண்டாய்-இதன்
கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா!  13
வேத முடையதிந்த நாடு,-நல்ல
வீரர் பிறந்ததிந்த நாடு;
சேதமில் லாதஹிந்து ஸ்தானம்-இதைத்
தெய்வமென்று கும்பிடடி பாப்பா!  14
சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்பு
நிறை உடையவர்கள் மேலோர்.  15
உயிர்க ளிடத்தில்அன்பு வேணும்;-தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடையநெஞ்சு வேணும்;-இது
வாழும் முறைமையடி பாப்பா!  16
3. முரசு

வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே!
வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே!
நெற்றி யொற்றைக் கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள்
நித்த சக்தி வாழ்க என்று கொட்டு முரசே!
1. ஊருக்கு நல்லது சொல்வேன்-எனக்
குண்மை தெரிந்தது சொல்வேன்;
சீருக் கெல்லாம் முதலாகும்-ஒரு
தெவ்ம் துணைசெய்ய வேண்டும்.
2. வேத மறிந்தவன் பாப்பான்,-பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்,
நீதி நிலைதவ றாமல்-தண்ட
நேமங்கள் செய்பவன் நாய்க்கன்.
3. பண்டங்கள் விற்பவன் செட்டி-பிறர்
பட்டினி தீர்ப்பவன் செட்டி.
தொண்டரென் றோர்வகுப் பில்லை,-தொழில்
சோம்பலைப் போல்இழி வில்லை.
4. நாலு வகுப்பும்இங் கொன்றே-இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்,
வேலை தவறிச் சிதைந்தே-செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி.
5. ஒற்றைக் குடும்பந் தனிலே-பொருள்
ஓங்க வளர்ப்பவன் தந்தை;
மற்றைக் கருமங்கள் செய்தே-மனை
வாழ்ந்திடச் செய்பவள் அன்னை.
6. ஏவல்கள் செய்பவர் மக்கள்;-இவ்
யாவரும் ஓர்குலம் அன்றோ!
மேவி அனைவரும் ஒன்றாய்-நல்ல
வீடு நடத்துதல் கண்டோம்.
7. சாதிப் பிரிவுக் சொல்லி-அதில்
தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்.
நீதிப் பிரிவுகள் செய்வார்-அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்.
8. சாதிக் கொடுமைகள் வேண்டாம்;-அன்பு
தன்னில் செழித்திடும் வையம்;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்;-தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்.
9. பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்-புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக் குள்ளே சிலமூடர் நல்ல
மாத ரறிவைக் கெடுத்தார்.
10. கண்கள் இரண்டில் ஒன்றைக்-குத்தி
காட்சி கெடுத்திட லாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால்-வையம்
பெதைமை யற்றிடுங் காணீர்.
11. தெய்வம் பலபல சொல்லிப் -பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்;
உய்வதனைத்திலும் ஒன்றாய்-எங்கும்
ஓர்பொரு ளானது தெய்வம்.
12. தீயினைக் கும்பிடும் பார்ப்பார்,-நித்தம்
திககை வணங்கும் துருக்கர்,
கோயிற் சிலுவையின் முன்னே-நின்று
கும்பிடும் யேசு மதத்தார்:
13. யாரும் பணிந்திடும் தெய்வம்-பொருள்
யாவினும் நின்றிடும் தெவ்ம்,
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று;-இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்.
14. வெள்ளை நிறத்தொரு பூனை-எங்கள்
வீட்டில் வளருதுகண்டீர்;
பிள்ளைகள் பெற்றதப் பூனை;-அவை
பேருக் கொருநிற மாகும்.
15. சாம்பல் நிறமொரு குட்டி;-கருஞ்
சாந்து நிறமொரு குட்டி,
பாம்பு நிறமொரு குட்டி,-வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி.
16. எந்த நிறமிருந் தாலும்-அவை
யாவும் ஒரேதர மன்றோ?
இந்த நிறம்சிறி தென்றும்-இஃது
ஏற்ற மென்றும் சொல்லலாமோ?
17. வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால்-அதில்
மானுடர் வேற்றுமை யில்லை,
எண்ணங்கள செய்கைக ளெல்லாம்-இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்.
18. நிகரென்று கொட்டு முரசே!-இந்த
நீணிலம் வாழ்பவ ரெல்லாம்;
தகரென்று கொட்டு முரசே!-பொய்மைச்
சாதி வகுப்பினை யெல்லாம்.
19. அன்பென்று கொட்டு முரசே-அதில்
ஆக்கமுண் டாமென்று கொட்டு;
துன்பங்கள் யாவும் போகும்-வெறுஞ்
சூதுப் பிரிவுகள் போனால்.
20. அன்பென்று கொட்டு முரசே!-மக்கள்
அத்தனை பேரும் நிகராம்;
இன்பங்கள் யாவும் பெருகும்-இங்கு
யாவரும் ஒன்றென்று கொண்டால்.
21. உடன்பிறந் தாக்ளைப் போல-இவ்
வுலகில் மனிதரெல் லாரும்;
இடம்பெரி துண்டுவை யத்தில்-இதில்
ஏதுக்குச் சண்டைகள் செய்வீர்?
22. மரத்தினக நட்டவன் தண்ணீர்-நன்கு
வார்த்ததை ஓங்கிடச் செய்வான்;
சிரத்தை யுடையது தெய்வம்,-இங்கு
சேர்ந்த உணவெலை யில்லை.
23. வயிற்றுக்குச் சொறுண்டு கண்டீர்!-இங்கு
வாழும் மனிதரெல் லோர்க்கும்;
பயிற்றி உழுதுண்டு வாழ்வீர்!-பிறர்
பங்கைத் திருடுதல் வேண்டாம்.
24. உடன்பிறந் தவர்களைப் போலே-இவ்
வுலகினில் மனிதரெல் லோரும்;
திடங்கொண் டவர்மெலிந் தோரை-இங்கு
தின்று பிழைத்திட லாமோ?
25. வலிமை யுடையது தெய்வம்,-நம்மை
வாழ்ந்திடச் செய்வது தெய்வம்;
மெலிவுகண் டாலும் குழந்தை-தன்னை
வீழ்த்தி மிதித்திட லாமோ?
26. தம்பிசற் றேமெலி வானால்-அண்ணன்
தானடி மைகொள்ள லாமோ?
செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி-மக்கள்
சிற்றடி மைப்பட லாமோ?
27. அன்பென்று கொட்டு முரசே!-அதில்
யார்க்கும் விடுதலை உண்டு;
பின்பு மனிதர்க ளெல்லாம் கல்வி
பெற்றுப் பதம்பெற்று வாழ்வார்.
28. அறிவை வளர்த்திட வேண்டும்-மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்;
சிறியாரை மேம்படச் செய்தால்-பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்.
29. பாருக்குள் ளேசமத் தன்மை-தொடர்
பற்றுஞ் சதோதரத் தன்மை,
யாருக்கும் தீமைசெய் யாது-புவி
யெங்கும் விடுதலை செய்யும்.
30. வயிற்றுக்குச் சோறிட வேண்டும்-இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து-இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்.
31. ஒன்றென்று கொட்டு முரசே!-அன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே!
நன்றென்று கொட்டு முரசே!-இந்த
நானில மாந்தருக் கெல்லாம்.
2. சமூகம்
1. புதுமைப் பெண்

போற்றி போற்றி!ஓர் ஆயிரம் போற்றி!நின்
பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றி காண்!
சேற்றி லேபுதி தாக முளைத்த தோர்
செய்ய தாமரைத் தேமலர் போலொளி
தோற்றி நின்றனை பாரத நாட்டிலே;
துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை,மாதரசே!எங்கள்
சாதி செய்த தவப்பயன், வாழி நீ!  1
மாதர்க் குண்டு சுதந்திரம் என்றுநின்
வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல்
நாதந் தானது நாரதர் வீணையோ?
நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ?
வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியே
மேன்மை செய்தெமைக் காத்திடச் சொலவதோ?
சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமோ?
தையல் வாழ்கபல் லாண்டுப்ல லாண்டிங்கே! 2
அறிவு கொண்ட மனித வுயிர்களை
அடிமை யாக்க முயல்பவர் பித்தராம்;
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்
நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே,
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்
தீயி லிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்;
நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ! 3
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாட்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ! 4
நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்;
நீசத் தொண்டும் மடமையும் கொண்டதாய்
தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்
சால வேயரி தாவதொர் செய்தியாம்;
குலத்து மாதர்க்குக் கற்பியல் பாகுமாம்;
கொடுமை செய்தும் அறிவை யழித்துமந்
நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்;
நங்கை கூறும் வியப்புக்கள் கேட்டிரோ! 5
புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்
பொய்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்
சதும றைப்படி மாந்தர் இருந்தநாள்
தன்னி லேபொது வான வழக்கமாம்;
மதுரத் தேமொழி மங்கைய் உண்மைதேர்
மாத வப்பெரி யோருட னொப்புற்றே
முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய
முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம். 6
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின் றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்ன உரைப்பது கேட்டிரோ! 7
உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேச மோங்க உழைத்திடல் வேண்டுமாம்;
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம். 8
சாத்தி ரங்கள் பலபல கற்பராம்;
சவுரி யங்கள் பலபல செய்வராம்;
மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்;
காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்;
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டிரோ; 9
போற்றி,போற்றி!ஜயஜய போற்றி!இப்
புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே!
மாற்றி வையம் புதுமை யுறச்செய்து
மனிதர் தம்மை அமரர்க ளாக்கவே
ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னை,நல்
அருளி னாலொரு கன்னிகை யாகியே
தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்
செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்.! 10
2. பெண்கள் வாழ்க!

பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!
தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன
தாயின் பேரும் சதியென்ற நாமமும். 1
அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம்.
ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்.
துன்பம் தீர்வது பெண்மையி னாலடா!
சூரப் பிள்ளைகள் தாயென் றும் போற்றுவோம். 2
வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்
கலிய ழிப்பது பெண்க ளறமடா!
கைகள் கோர்த்துக் களிப்பதுநின் றாடுவோம். 3
பெண்ண றத்தின ஆண்மக்கள் வீரந்தான்
பேணு மாயின் பிறகொரு தாழ்வில்லை;
கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே
காத லின்பத்தைக் காத்திடு வோமடா! 4
சக்தி யென்ற மதுவையுண் போமடா!
தாளங் கொட்டித் திசைகள் அதிரனேவ,
ஒத்தி யல்வதொர் பாட்டும் குழல்களும்
ஊர்வி யக்கக் கவித்துநின் றாடுவோம். 5
உயிரைக் காக்கும்,உயிரினைச் சேர்த்திடும்;
உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்;
உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா!
ஊது கொம்புகள்,ஆடு களிகொண்டே 6
போற்றி தாய் என்று தோள்கொட்டி யாடுவீர்
புகழ்ச்சி கூறுவிர் காதற் கிளிகட்கே,
நூற்றி ரண்டு மலைகளைச் சாடுவோம்
நுண்ணி டைப்பெண் ணொருத்தி பணியிலே. 7
போற்றி தாய் என்று தாளங்கள் கொட்டடா!
போற்றி தாய் என்று பொற்குழ லூதடா!
காற்றி லேறியவ விண்ணையுஞ் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே 8
அன்ன மூட்டிய தெய்வ மணிக்கையின்
ஆணை காட்டில் அனலை விழுங்குவோம்;
கன்னத் தேமுத்தம் கொண்டு களிப்பினும்
கையைத் தள்ளும்பொற் கைகளைப் பாடுவோம். 9
3. பெண்கள் விடுதலைக் கும்மி

காப்பு
பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்
பேசிக் களிப்பொடு நாம்பாடக்
கண்களி லேயொளி போல வுயிரில்
கலந்தொளிர் தெய்வம் நற் காப்பாமே.
1. கும்மி யடி!தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி!  (கும்மி)
2. ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக் குள்ளேபெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.   (கும்மி)
3. மாட்டையடித்து வசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே,
வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்,அதை
வெட்டிவிட் டோமென்று கும்மியடி! (கும்மி)
4. நல்ல விலைகொண்டு நாயை விற்பார்,அந்த
நாயிடம் யோசனை கேட்பதுண்டோ?
கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை
கூட்டிவைத் தார்பழி கூட்டி விட்டார்.   (கும்மி)
5. கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;
வ்ற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்.  (கும்மி)
6. பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி!  (கும்மி)
7. வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோ மென்று கும்மியடி!
சாதம் படைக்கவும் செய்திடுவோம்;தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடுவோம்.  (கும்மி)
8. காத லொருவனைக் கைப்பிடித்தே,அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து,
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச்செய்து வாழ்வமடி!    (கும்மி)
4. பெண் விடுலை
விடுத லைக்கு மகளிரெல் லோரும்
வேட்கை கொண்டனம்; வெல்லுவம் என்றே
திடம னத்தின் மதுக்கிண்ண மீது
சேர்ந்து நாம்பிர திக்கினை செய்வோம்.
உடைய வள்சக்தி ஆண்பெண் ணிரண்டும்
ஒருநி கர்செய் துரிமை சமைத்தாள்;
இடையி லேபட்ட கீழ்நிலை கண்டீர்,
இதற்கு நாமொருப் பட்டிருப் போமோ? 1
திறமை யால்இங்கு மேனிலை சேர்வோம்;
தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம்;
குறைவி லாது முழுநிகர் நம்மைக்
கொள்வ ராண்க ளெனிலவ ரோடும்
சிறுமை தீரநந் தாய்ததிரு நாட்டைத்
திரும்ப வெல்வதில் சேர்ந்திங் குழைப்போம்;
அறவி ழுந்தது பண்டை வழக்கம்;
ஆணுக் குப்பெண் விலங்கெனும் அஃதே. 2
விடியும் நல்லொளி காணுதி நின்றே,
மேவு நாக ரிகம்புதி தொன்றே;
கொடியர் நம்மை அடிமைகள் என்றே
கொண்டு, தாம் முதல் என்றன ரன்றே?
அடியோ டநத் வழக்கத்தைக் கொன்றே,
அறிவு யாவும் பயிற்சியில் வென்றே
கடமை செய்விர்நந் தேசத்து வீரக்
காரி கைக்கணத் தீர்,துணி வுற்றே. 3
5. தொழில்

இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே!
யந்தி ரங்கள் வகுத்திடு வீரே!
கரும்பைச் சாறு பிழிந்திடு வீரே
கடலில் மூழ்கிநன் முத்தெடுப் பீரே!
அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயி ரந்தொழில் செய்திடு வீரே!
பெரும்பு கழ்நுமக் கேயிசைக் கின்றேன்
பிரம தேவன் கலையிங்கு நீரே!  1
மண்ணெ டுத்துக் குடங்கள்செய் வீரே!
மரத்தை வெட்டி மனைசெய்கு வீரே!
உண்ணக் காய்கனி தந்திடு வீரே!
உழுது நன்செய்ப் பயிரிடு வீரே!
எண்ணெய் பால்நெய் கொணர்ந்திடு வீரே!
இழையை நூற்றுநல் லாடைசெய் வீரே!
விண்ணி னின்றெமை வானவர் காப்பார்!
மேவிப் பார்மிசைக் காப்பவர் நீரே! 2
பாட்டும் செய்யுளும் கோத்திடு வீரே!
பரத நாட்டியக் கூத்திடு வீரே!
காட்டும் வையப் பொருள் களின் உண்மை
கண்டு சாத்திரம் சேர்த்துட வீரே!
நாட்டி லேயறம் கூட்டிவைப் பீரே!
நாடும் இன்பங்கள் ஊட்டி வைப்பீரே!
தேட்ட மின்றி விழியெதிர் காணும்
தெய்வ மாக விளங்குவிர் நீரே!  3
6. மறவன் பாட்டு
மண்வெட்டிக் கூலிதின லாச்சே!-எங்கள்
வாள்வலியும் வேல்வலியும் போச்சே!
விண்முட்டிச் சென்றபுகர் போச்சே!இந்த
மேதினியில் கெட்டபெய ராச்சே!  1
நாணிலகு வில்லினொடு தூணி-நல்ல
நாதமிகு சங்கொலியும் பேணி,
பூணிலகு திண்கதையும் கொண்டு,-நாங்கள்
போர்செய்த காலமெல்லாம் பண்டு. 2
கன்னங் கரியவிருள் நேரம்-தில்
காற்றும் பெருமழையும் சேரும்;
சின்னக் கரியதுணி யாலே எங்கள்
தேகமெல்லாம் மூடிநரி போலே,  3
ஏழை யெளியவர்கள் வீட்டில்-இந்த
ஈன வயிறுபடும் பாட்டில்,
கோழை யெலிக ளென்னவே-பொருள்
கொண்டு வந்து... ... ...  4
முன்னாளில் ஐயரெல்லாம் வேதம் ஓதுவார்
மூன்றுமழை பெய்யுமடா மாதம்;
இந்நாளி லேபொய்மைப் பார்ப்பார்-இவர்
ஏதுசெய்தும் காசுபெறப் பார்ப்பார்!  5
பேராசைக் காரனடா பார்ப்பான்-ஆனால்
பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான்;
யாரானா லும்கொடுமை... ... ...
... ... ... ... ... ... ...   6
பிள்ளைக்குப் பூணூலாம் என்பான்-நம்மைப்
பிச்சுப் பணங்கொடெனத் தின்பான்;
கொள்கைக் கேகென்.............
... ... ... ... ... ... ...   7
சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்-வெறுஞ்
சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்?
... ... ... ... ... ... ...
... ... ... ... ... ... ...   8
நாயும் பிழைக்கும் இந்தப்-பிழைப்பு
நாளெல்லாம் மற்றி திலே உழைப்பு;
பாயும் கடிநாய்ப் போலீசுக்-காரப்
பார்ப்பானுக் குண்டிதிலே பீசு.  9
சோரந் தொழிலாக் கொள்வோமோ?-முந்தைச்
சூரர் பெயரை அழிப்போமோ?
வீர மறவர் நாமன்றோ?-இந்த
வீண்வாழ்க்கை வாழ்வதினி நன்றோ? 10
7. நாட்டுக் கல்வி
(ஆங்கிலத்தில் ரவீந்திரநாதர் எழுதிய பாடலின் மொழிபெயர்ப்பு)

விளக்கி லேதிரி நன்கு சமைந்தது
மேவு வீர்இங்கு தீக்கொண்டு தோழரே!
களக்க முற்ற இருள்கடந் தேகுவார்
காலைச் சோதிக் கதிரவன் கோவிற்கே;
துளக்க முற்றவிண் மீனிடம் செல்லுவார்
தொகையில் சேர்ந்திட உம்மையும் கூவினார்;
களிப்பு மிஞ்சி ஒளியினைப் பண்டொரு
காலம் நீர் சென்று தேடிய தில்லையோ? 1
அன்று நுங்கள் கொடியினை முத்திட்டே
ஆசை யென்றவிண் மீன்ஒளிர் செய்ததே;
துன்று நள்ளிருள் மாலை மயக்கத்தால்,
சோம்பி நீரும் வழிநடை பிந்தினீர்;
நின்ற விந்தன நுங்கள் விளக்கெலாம்;
நீங்கள் கண்ட கனாக்களெல் லாம்இசை
குன்றித் தீக்குறி தோன்றும்;இராப்புட்கள்
கூவு மாறொத் திருந்தன காண்டிரோ? 2
இன்னு மிங்கிருள் கூடி யிருப்பினும்
ஏங்கு கின்ற நரகத் துயிர்கள்போல்
இன்னு மிங்கு வனத்திடை காற்றுத்தான்
ஓங்கும் ஓதை இருந்திடும் ஆயினும்
முன்னைக் காலத்தின் நின்றெழும் பேரொலி
முறைமு றைபல ஊழியின் ஊடுற்றே
பின்னை இங்குவந் தெய்திய பேரொலி
போல மந்திர வேதத்தின் பேரொலி.
இருளை நீக்கி ஒளியினைக் காட்டுவாய்,
இறப்பை நீக்கி, அமிர்தத்தை ஊட்டுவாய்
அருளும் இந்த மறையொலி வந்திங்கே
ஆழ்ந்த தூக்கத்தில் வீழ்ந்திருப் பீர்தமைத்
தெருளு றுத்தவும் நீர்எழு கில்லிரோ?
தீய நாச உறக்கத்தில் வீழ்ந்தநீர்
மருளை நீக்கி அறிதிர் அறிதிரோ?
வான்ஒ ளிக்கு மகாஅர்இ யாம்என்றே. 3
8. புதிய கோணங்கி
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
நல்லகாலம் வருகுது;நல்லகாலம் வருகுது;
சாதிகள் சேருது;சண்டைகள் தொலையுது;
சொல்லடி,சொல்லடி,சக்தி,மாகாளீ!
வேதபுரந் தாருக்கு நல்ல குறி சொல்லு. 1
தரித்திரம் போகுது;செல்வம் வருகுது;
படிப்பு வளருது;பாவம் தொலையுது;
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான்,போவான்,ஐயோவென்று போவான். 2
வேத புரத்திலே வியாபாரம் பெருகுது;
தொழில் பெருகுது;தொழிலாளி வாழ்வான்;
சாத்திரம் வளருது; சூத்திரம் தெரியுது;
யந்திரம் பெருகுது; தந்திரம் வளருது;
மந்திர மெல்லாம் வளருது,வளருது, 3
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
சொல்லடீ சொல்லடி,மலையாள பகவதீ!
அந்திரி,வீரி,சண்டிகை சூலி!
குடுகுடு குடுகுடு.  4
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
சாமிமார்க் கெல்லாம் தைரியம் வளருது;
தொப்பை சுருங்குது;சுறுசுறுப்பு விளையுது;
எட்டு லச்சுமியும் ஏறி வளருது;
பயந் தொலையுது,பாவந் தொலையுது,
சாத்திரம் வளருது, சாதி குறையுது;
நேத்திரம் திறக்குது,நியாயம் தெரியுது;
பழைய பயித்தியம் படீலென்று தௌயுது;
வீரம் வருகுது,மேன்மை கிடைக்குது;
சொல்லடீ சக்தி,மலையாள பகவதீ!
தர்மம் பெருகுத,தர்மம் பெருகுது.  5
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்


தனிப் பாடல்கள்



1. காலைப்பொழுது

காலைப் பொழுதினிலே கண்விழித்து மேனிலை மேல்
மேலைச் சுடர்வானை நோக்கி நின்றோம் விண்ணகத்தே.
கீழ்த்திசையில் ஞாயிறுதான் கேடில் சுடர் விடுத்தான்;
பார்த்த வெளியெல்லாம் பகலொளியாய் மின்னற்றே.
தென்னை மரத்தின் கிளையிடையே தென்றல் போய்
மன்னப் பருந்தினுக்கு மாலை யிட்டுச் சென்றதுவே.
தென்னை மரக்கிளைமேற் சிந்தனையோ டோர் காகம்
னவன்னமுற வீற்றிருந்து வானைமுத்த மிட்டதுவே.
தென்னைப் பசுங் கீற்றைக் கொத்திச் சிறு காக்கை
மின்னுகின்ற தென்கடலை நோக்கி விழித்ததுவே.
வன்னச் சுடர் மிகுந்த வானகத்தே தென் திசையில்
கன்னங் கருங்காகக் கூட்டம்வரக் கண்ட தங்கே.
கூட்டத்தைக் கண்டஃது கும்பிட்டே தன்னருகோர்
பாட்டுக் குருவிதனைப் பார்த்து நகைத்ததுவே.
சின்னக் குருவி சிரிப்புடனே வந்தாங்கு
கன்னங் கருங்காக்கை கண்ணெதிரே யோர்கிளைமேல்
வீற்றிருந்தேகிக் கிக்கீ;காக்காய் நீ விண்ணிடையே
போற்றியெதை நோக்குகிறாய்? கூட்டமங்குப் போவ தென்னே?:
என்றவுட னே காக்கை-என் தோழா! நீ கேளாய்,
மன்றுதனைக் கண்டே மனமகிழ்ந்து போற்றுகிறேன்.
என்றுசொல்லிக் காக்கை இருக்கையிலே ஆங்கணோர்
மின்திகழும் பச்சைக் கிளிவந்து வீற்றிருந்தே.
நட்புக் குருவியே ஞாயிற்றிளவெயிலில்
கட்புலனுக் கெல்லாம் களியாகத் தோன்றுகையில்,
நும்மை மகிழ்ச்சிடன் நோக்கியிங்கு வந்திட்டேன்!
அம்மவோ!காகப் பெருங்கூட்ட மஃதென்னே?
என்று வினவக் குருவிதான் இஃதுரைக்கும்;-
நன்றுநீ கேட்டாய்,பசுங்கிளியே!நானுமிங்கு.
மற்றதனை யோர்ந்திடவே காக்கையிடம் வந்திட்டேன்;
கற்றறிந்த காக்காய்,கழறுக நீ! என்றதுவே.
அப்போது காக்கை,அருமையுள்ள தோழர்களே!
செப்புவேன் கேளீர்,சில நாளாக் காக்கையுள்ளே.
நேர்ந்த புதுமைகளை நீர்கேட்டறியீ ரோ?
சார்ந்துநின்ற கூட்டமங்கு சாலையின்மேற் கண்டீரே?
மற்றந்தக் கூட்டத்து மன்னவனைக் காணீரே?
கற்றறிந்த ஞானி கடவுளையே நேராவான்;
ஏழுநாள் முன்னே இறைமகுடந் தான் புனைந்தான்;
வாழியவன் எங்கள் வருத்தமெல்லாம் போக்கிவிட்டான்.
சோற்றுக்குப் பஞ்சமில்லை; போரில்லை;துன்பமில்லை;
போற்றற் குரியான் புதுமன்னன்,காணீரோ?
என்றுரைத்துக் காக்கை இருக்கையிலே அன்னமொன்று
தென்திசையி னின்று சிரிப்புடனே வந்ததங்கே.
அன்னமந்தத் தென்னை யருகினிலோர் மாடமிசை
வன்னமுற வீற்றிருந்து,-வாழ்க,துணைவரே!
காலை யிளவெயிலிற் காண்பதெலாம் இன்பமன்றோ?
சால நுமைக் கண்டுகளித்தேன் சருவிநீர்,
ஏதுரைகள் பேசி யிருக்கின்றீர்? என்றிடவே
போதமுள்ள காக்கை புகன்றதந்தச் செய்தியெல்லாம்.
அன்னமிது கேட்டு மகிழ்ந்துரைக்கும்;-ஆங் காணும்!
மன்னர் அறம்புரிந்தால்,வையமெல்லாம் மாண்புபெறும்.
ஒற்றுமையால் மேன்மையுண்டாம்; ஒன்றையொன்று துன்பிழைத்தல்
குற்றமென்று கண்டால் குறைவுண்டோ வாழ்வினுக்கே?
என்று சொல்லி அன்னம் பறந்தாங்கே ஏகிற்றால்;
மன்று கலைந்து மறைந்தனவப் புட்களெல்லாம்.
காலைப் பொழுதினிலே கண்டிருந்தோம் நாங்களிதை;
ஞால மறிந்திடவே நாங்களிதைப் பாட்டிசைத் தோம்.
2. அந்திப் பொழுது
காவென்று கத்திடுங் காக்கை-என்தன்
கண்ணுக் கினிய கருநிறக் காக்கை,
மேவிப் பலகிளை மீதில்-இங்கு
விண்ணிடை அந்திப் பொழுதினைக் கண்டே,
கூவித் திரியும் சிலவே;-சில
கூட்டங்கள் கூடித் திசைதொறும் போகும்.
தேவி பராசக்தி யன்னை -வின்ணிற்
செவ்வொளி காட்டிப் பிறைதலைக் கொண்டாள். 1
தென்னை மரக்கிளை மீதில்-அங்கோர்
செல்வப் பசுங்கிளி கீச்சிட்டுப் பாயும்
சின்னஞ் சிறிய குருவி-அது
ஜிவ் வென்று விண்ணிடை யூசலிட் டேகுட்.
மன்னப் பருந்தொ ரிரண்டு-மெல்ல
வட்ட மிட்டுப்பின் நெடுந்தொலை போகும்,
பின்னர் தெருவிலார் சேவல்-அதன்
பேச்சினி லேசக்தி வேல் என்று கூவும். 2
செவ்வொளி வானில் மறைந்தே-இளந்
தேநில வெங்கும் பொழிந்தது கண்டீர்!
இவ்வள வான பொழுதில் அவள்
ஏறிவந்தே யுச்சி மாடத்தின் மீது,
கொவ்வை யிதழ்நகை வீச,-விழிக்
கோணத்தைக் கொண்டு நிலவைப் பிடித்தான்.
செவ்விது,செவ்விது,பெண்மை!-ஆ!
செவ்விது,செவ்விது,செவ்விது காதல்! 3
காதலி னாலுயிர் தோன்றும்;-இங்கு
காதலி னாலுயிர் வீரத்தி லேறும்;
காலி னாலறி வெய்தும்-இங்கு
காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்;
ஆதலி னாலவள் கையைப் -பற்றி
அற்புத மென்றிரு கண்ணிடை யொற்றி
வேதனை யின்றி இருந்தேன்,-அவள்
வீணைக் குரலிலோப் பாட்டிசைத் திட்டாள். 4
காதலியின் பாட்டு
கோல மிட்டு விளக்கினை யேற்றிக்
கூடி நின்று பராசக்தி முன்னே
ஓல மிட்டுப் புகழ்ச்சிகள் சொல்வார்
உண்மை கண்டிலர் வையத்து மாக்கள்;
ஞால முற்றும் பராசக்தி தோற்றம்
ஞான மென்ற விளக்கினை யேற்றிக்
கால முற்றுந் தொழுதிடல் வேண்டும்,
காத லென்பதொர் கோயிலின் கண்ணே. 5
3. நிலாவும் வான்மீனும் காற்றும்
(மனத்தை வாழ்த்துதல்)


நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
நேர்பட வைத்தாங்கே
குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு
கோலவெறி படைத்தோம்;
உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்
ஓட்டி மகிழ்ந்திடுவோம்;
பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு
பாடுவதும் வியப்போ!  1
தாரகை யென்ற மணித்திரள் யாவையும்
சார்ந்திடப் போமனமே,
சரச் சுவையதி லுறி வருமதில்
இன்புறு வாய்மனமே!
சீர விருஞ்சுடர் மீனொடு வானத்துத்
திங்களையுஞ் சமைத்தே
ஓரழ காக விழுங்கிடும் உள்ளத்தை
ஒப்பதொர் செல்வமுண்டா  2
பன்றியைப் போலிங்கு மண்ணிடைச் சேற்றில்
படுத்துப் புரளாதே
வென்றியை நாடியிவ் வானத்தில் ஓட
விரும்பி விரைந்திடுமே;
முன்றலில் ஓடுமோர் வண்டியைப் போலன்று
மூன்றுலகுஞ் சூழ்ந்தே
நன்று திரியும்வி மானத்தைப் போலொரு
நல்ல மனம் படைத்தோம்.  3
தென்னையின் கீற்றுச் சலசலச வென்றிடச்
செய்துவருங் காற்றே!
உன்னைக் குதிரைகொண் டேறித் திரியுமொர்
உள்ளம் படைத்துவிட்டோம்.
சின்னப் பறவையின் மெல்லொலி கொண்டிங்கு
சேர்ந்திடு நற் காற்றே!
மின்னல் விளக்கிற்கு வானகங் கொட்டுமிவ்
வெட்டொலி யேன் கொணர்ந்தாய்? 4
மண்ணுல கத்துநல் லோசைகள் காற்றெனும்
வானவன் கொண்டுவந்தான்;
பண்ணி விசைத்தவ வொலிக ளனைத்தையும்
பாடி மகிழ்ந்திடுவோம்.
நண்ணி வருமணி யோசையும்,பின்னங்கு
நாய்கள் குலைப்பதுவும்,
எண்ணுமுன்னேஅன்னக் காவடிப் பிச்சையென்
றேங்கிடு வான் குரலும்,
வீதிக் கதவை அடைப்பதும் கீழ்த்திசை
விம்மிடும் சங்கொலியும்,
வாதுகள் பேசிடு மாந்தர் குரலும்
மதலை யழுங் குரலும்,
ஏதெது கொண்டு வருகுது காற்றிவை
எண்ணி லகப்படுமோ?
சீதக் கதிர்மதி மேற்சென்று பாய்ந்தங்கு
தேனுண்ணு வாய்,மனமே!  6
4. மழை
திக்குக்கள் எட்டும் சிதறி-தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து-வெள்ளம்
பாயுது பாயுது பாயுது-தாம்தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம்-அண்டம்
சாயுது சாயுது சாயுது-பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்று-தக்கத்
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட 1
வெட்டி யடிக்குது மின்னல்,-கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;
கொட்டி யிடிக்குது மேகம்;-கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று;
சட்டச்சட சட்டச்சட டட்டா-என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்;
எட்டுத் திசையும் இடிய-மழை
எங்ஙனம் வந்ததடா,தம்பி வீரா!  2
அண்டம் குலுங்குது,தம்பி!-தலை
ஆயிரந் தூக்கிய சேடனும் பேய்போல்
மிண்டிக் குதித்திடு கின்றான்;-திசை
வெற்புக் குதிக்குது;வானத்துத் தேவர்
செண்டு புடைத்திடு கின்றார்;-என்ன
தெய்விகக் காட்சியை கண்முன்பு கண்டோம்!
கண்டோம் கண்டோம் கண்டோம்-இந்தக்
காலத்தின் கூத்தினைக் கண்முன்பு கண்டோம்! 3
5. புயற் காற்று
(நள வருடம் காத்திகை மாதம் 8ம் தேதி புதன் இரவு ஒரு கணவனும் மனைவியும்)
மனைவி: காற்றடிக்குது,கடல்குமுறுது
கண்ணை விழிப்பாய் நாயகமே!
தூற்றல் கதவு சாளரமெல்லாம்
தொளைத்தடிக்குது, பள்ளியிலே.
கணவன்: வானம் சினந்தது;வையம் நடுங்குது;
வாழி பராசக்தி காத்திடவே!
தீனக்குழந்தைகள் துன்பப்படாதிங்கு
தேவி, அருள்செய்ய வேண்டுகிறோம்.
மனைவி:நேற்றிருந் தோம்அந்த வீட்டினிலே,இந்த
நேரமிருந்தால் என்படுவோம்?
காற்றெனவந்தது கூற்றமிங்கே,நம்மைக்
காத்ததுதெய்வ வலிமையன்றோ?
6. பிழைத்த தென்னந்தோப்பு
வயலிடை யினிலே-செழுநீர்-மடுக் கரையினிலே
அய லெவரு மில்லை-தனியே-ஆறுதல் கொள்ள வந்தேன்.
காற்றடித் ததிலே-மரங்கள்-கணக்கிடத் தகுமோ?
நாற்றி னைப்போலே-சிதறி-நாடெங்கும் வீழ்ந்தனவே.
சிறிய திட்டையிலே,உளதோர்-தென்னஞ் சிறுதோப்பு
வறியவ னுடைமை-அதனை-வாயு பொடிக்க வில்லை
வீழ்ந்தன சிலவாம்-மரங்கள்-மீந்தன பலவாம்;
வாழ்ந்திருக்க வென்றே-அதனை-வாயு பொறுத்து விட்டான்
தனிமை கண்டதுண்டு;-அதில்-சார மிருக்கு தம்மா!
பனிதொலைக்கும் வெயில்,-அது தேம்-பாகு மதுர மன்றோ?
இரவி நின்றது காண்-விண்ணிலே-இன்பவொளித்திரளாய்;
பரவி யெங்கணுமே-கதிர்கள்-பாடிக் களித்தனவே.
நின்ற மரத்திடையே-சிறிதோர்-நிழலினில் இருந்தேன்,
என்றும் கவிதையிலே-நிலையாம்-இன்பம் அறிந்து கொண்டேன்.
வாழ்க பராசக்தி!-நினையே-வாழ்த்திடுவோர் வாழ்வார்;
வாழ்க பராசக்தி!-இதையென்-வாக்கு மறவாதே
7. அக்கினிக் குஞ்சு
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்.
8. சாதாரண வருஷத்துத் தூமகேது
தினையின் மீது பனைநின் றாங்கு
மணிச்சிறு மீன்மிசை வளர்வால் ஒளிதரக்
ழ்த்திசை வெள்ளியைக் கேண்மைகொண் டிலகும்
தூம கேதுச் சுடரே,வாராய்!
எண்ணில் பல கோடி யோசனை யெல்லை
எண்ணிலா மென்மை இயன்றதோர் வாயுவால்
புனைந்த நின்னெடுவால் போவதென் கின்றார்.
மண்ணகத் தினையும் வால்கொடு தீண்டி
ஏழையர்க் கேதும் இடர்செயா தேநீ
போதி யென்கின்றார்;புதுமைகள் ஆயிரம்
நினைக்குறித் தறிஞர் நிகழ்த்துகின் றனரால்.
பாரத நாட்டில் பரவிய எம்மனோர்
நூற்கணம் மறந்துபன் னூறாண் டாயின;
உனதியல் அன்னியர் உரைத்தடக் கேட்டே
தெரிந்தனம்;எம்முளே தெளிந்தவர் ஈங்கிலை.
வாராய்,சுடரே!வார்த்தைசில கேட்பேன்;
தீயர்க் கெல்லாம் தீமைகள் விளைத்துத்
தொல்புவி யதனைத் துயர்க்கட லாழ்த்திநீ
போவை யென்கின்றார்; பொய்யோ,மெய்யோ?
ஆதித் தலைவி யாணையின் படிநீ
சலித்திடுந் தன்மையால்,தண்டம் நீ செய்வது
புவியினைப் புனிதமாப் புனைதற் கேயென
விளம்பு கின்றனர் அது மெய்யோ,பொய்யோ?
ஆண்டோர் எழுபத் தைந்தினில் ஒரு முறை
மண்ணைநீ அணுகும் வழக்கினை யாயினும்
இம்முறை வரவினால் எண்ணிலாப் புதுமைகள்
விளையு மென்கின்றார்;மெய்யோ,பொய்யோ?
சித்திகள் பலவும்,சிறந்திடு ஞானமும
மீட்டும் எம்மிடைநின் வரவினால் விளைவதாப்
புகலு கின்றனர்; அது பொய்யோ,மெய்யோ?
9. அழகுத் தெய்வம்
மங்கியதொர் நிலவினிலே கனவிலிது கண்டேன்,
வயதுபதி னாறிருக்கும் இளவயது மங்கை;
பொங்கிவரும் பெருநிலவு போன்றவொளி முகமும்.
புன்னகையின் புதுநிலவும் போற்றவருந் தோற்றம்,
துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து,
தூங்காதே யெழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்.
அங்கதனிற் கண்விழித்தேன் அடடாவோ! அடடா!
அழகென்னும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்ததேன். 1
யோகந்தான் சிறந்ததுவோ? தவம் பெரிதோ?என்றேன்;
யோகமே தவம்,தவமே யோகமென உரைத்தாள்.
ஏகமோ பொருளன்றி இரண்டாமோ?என்றேன்;
இரண்டுமாம்,ஒன்று மாம்,யாவுமாம்என்றாள்.
தாகமறிந் தீயுமருள் வான்மழைக்கே யுண்டோ?
தாகத்தின் துயர்மழைதான் அறிந்திடுமோ?என்றேன்.
வேகமுடன் அன்பினையே வெளிப்படுத்தா மழைதான்
விருப்புடனே பெய்குவது வேறாமோ?என்றாள்.  2
காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ?என்றேன்.
காலமே மதியினுக்கோர் கருவியாம்என்றாள்.
ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ?என்றேன்;
நானிலே ஒன்றிரண்டு பலித்திடலாம்என்றாள்
ஏலத்தில் விடுவதுண்டோ எண்ணத்தை?என்றேன்;
எண்ணினால் எண்ணியது நண்ணுங்காண்என்றாள்.
மூலத்தைச் சொல்லவோ?வேண்டாமோ?என்றேன்;
முகத்திலருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன்.  3
10. ஒளியும் இருளும்
வானமெங்கும் பரிதியின் சோதி;
மலைகள் மீதும் பரிதியின் சோதி;
தானை நீர்க்கடல் மீதிலும் ஆங்கே
தரையின் மீதும் தருக்களின் மீதும்
கான கத்திலும் பற்பல ஆற்றின்
கரைகள் மீதும் பரிதியின் சோதி;
மானவன்தன் உளத்தினில் மட்டும்
வந்து நிற்கும் இருளிது வென்னே! 1
சோதி என்னும் கரையற்ற வெள்ளம்
தோன்றி எங்கும் திரைகொண்டு பாய,
சோதி என்னும் பெருங்கடல்,சோதிச்
சூறை,மாசறு சோதி யனந்தம்,
சோதி என்னும் நிறைவிஃதுலகைச்
சூழ்ந்து நிற்ப,ஒரு தனி நெஞ்சம்
கோதி யன்றதொர் சிற்றிருள் சேரக்
குமைந்து சோரும் கொடுமையி தென்னே! 2
தேம லர்க்கொர் அமுதன்ன சோதி,
சேர்ந்து புள்ளினம் வாழ்ந்திடும் சோதி,
காம முற்று நிலத்தொடு நீரும்
காற்றும் நன்கு தழுவி நகைத்தே
தாம யங்கநல் லின்புறுஞ் சோதி,
தரணி முற்றும் ததும்பி யிருப்ப,
தீமை கொண்ட புலையிருள் சேர்ந்தோர்
சிறிய நெஞ்சம் தியங்குவ தென்னே! 3
நீர்ச்சு னைக்கணம் மின்னுற் றிலக,
நெடிய குன்றம் நகைத்தெழில் கொள்ள,
கார்ச்ச டைக்கரு மேகங்க ளெல்லாம்
கனக மொத்துச் சுடர்கொண் டுலாவ,
தேர்ச்சி கொண்டுபல் சாத்திரம் கற்றும்
தெவிட்டொ ணாதநல்லின்பக் கருவாம்
வேர்ச்சு டர்பர மாண்பொருள் கேட்டும்
மெலிவொர் நெஞ்சிடை மேவுதல் என்னே! 4
11. சொல்
சொல் ஒன்று வேண்டும்,தேவ சக்திகளை
நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்.
தேவர் வருகவென்று சொல்வதோ?-ஒரு
செம்மைத் தமிழ்மொழியை நாட்டினால்,
ஆவ லறிந்துவரு வீர்கொலோ?-உம்மை
யன்றி யொருபுகலும் இல்லையே. 1
ஓம்என் றுரைத்துவிடிற் போதுமோ?-அதில்
உண்மைப் பொருளறிய லாகுமோ?
தீமை யனைத்துமிறந்தேகுமோ?-என்தன்
சித்தம் தெளிவுநிலை கூடுமோ?  2
உண்மை ஒளிர்கஎன்று பாடவோ?-அதில்
உங்கள் அருள்பொருந்தக் கூடுமோ?
வண்மை யுடையதொரு சொல்லினால்-உங்கள்
வாழ்வு பெறவிரும்பி நிற்கிறோம். 3
தீயை அகத்தினிடை மூட்டுவோம்-என்று
செப்பும் மொழிவலிய தாகுமோ?
ஈயைக் கருடநிலை யேற்றுவீர்-எம்மை
என்றுந் துயரமின்றி வாழ்த்துவீர்.  4
வான மழைபொழிதல் போலவே-நித்தம்
வந்து பொழியுமின்பங் கூட்டுவீர்;
கானை அழித்து மனை கட்டுவீர்-துன்பக்
கட்டுச் சிதறிவிழ வெட்டுவீர்.  5
விரியும் அறிவுநிலை காட்டுவீர்-அங்கு
வீழும் சிறுமைகளை ஓட்டுவீர்:
தெரியும் ஒளிவிழியை நாட்டுவீர்-நல்ல
தீரப் பெருந்தொழிலில் பூட்டுவீர்.  6
மின்ன லனையதி றல் ஓங்குமே-உயிர்
வெள்ளம் கரையடங்கிப் பாயுமே;
தின்னும் பொருளமுதம் ஆகுமே-இங்குச்
செய்கை யதனில் வெற்றி யேறுமே. 7
தெய்வக் கனல்விளைந்து காக்குமே-நம்மைச்
சேரும் இருளழியத் தாக்குமே;
கைவைத் ததுபசும்பொன் ஆகுமே-பின்பு
காலன் பயமொழிந்து போகுமே.  8
வலிமை,வலிமைஎன்று பாடுவோம்-என்றும்
வாழுஞ் சுடர்க்குலத்தை நாடுவோம்;
கலியைப் பிளந்திடக் கை யோங்கினோம்-நெஞ்சில்
கவலை யிருளனைத்தும் நீங்கினோம். 9
அமிழ்தம்,அமிழ்தம்என்று கூறுவோம்-நித்தம்
அனலைப் பணிந்துமலர் தூவுவோம்;
தமிழில் பழமறையைப் பாடுவோம்-என்றும்
தலைமை பெருமை புகழ் கூடுவோம். 10
12. கவிதைத் தலைவி
வாழ்க மனைவியாம் கவிதைத் தலைவி!
தினமும்இவ் வுலகில் சிதறியே நிகழும்
பலபல பொருளிலாப் பாழ்படு செய்தியை
வாழ்க்கைப் பாலையில் வளர்பல முட்கள்போல்
பேதை யுலகைப் பேதைமைப் படுத்தும்
வெறுங்கதைத் திரளை,வெள்ளறி வுடைய
மாயா சக்தியின் மகளே!மனைக்கண்
வாழ்வினை வகுப்பாய்,வருடம் பலவினும்
ஓர்நாட் போலமற் றோர்நாள் தோன்றாது
பலவித வண்ணம் வீட்டிடைப் பரவ
நடத்திடுஞ் சக்தி நிலையமே!நன்மனைத்
தலைவீ!ஆங்கத் தனிப்பதர்ச் செய்திகள்
அனைத்தையும் பயன்நிறை அனுபவ மாக்கி,
உயிரிலாச் செய்திகட்கு உயிர்மிகக் கொடுத்து,
ஒளியிலாச் செய்திகட்கு ஒளியருள் புரிந்து
வான சாத்திரம்,மகமது வீழ்ச்சி,
சின்னப் பையல் சேவகத் திறமை;
எனவரு நிகழ்ச்சி யாவே யாயினும்,
அனைத்தையும் ஆங்கே அழகுறச் செய்து,
இலௌகிக வாழ்க்கையில் பொருளினை இணைக்கும்
பேதை மாசத்தியின் பெண்ணே!வாழ்க!
காளியின் குமாரி!அறங்காத் திடுக
வாழ்க!மனையகத் தலைவீ வாழ்க!
13. கவிதைக் காதலி
வாராய்!கவிதையாம் மணிப்பெயர்க் காதலி!
பன்னாள் பன்மதி ஆண்டுபல கழிந்தன,
நின்னருள் வதனம் நான் நேருறக் கண்டே
அந்தநாள் நீயெனை அடிமையாக் கொள,யாம்
மானிடர் குழாத்தின் மறைவுறத் தனியிருந்து
எண்ணிலா இன்பத்து இருங்கடல் திளைத்தோம்;
கலந்துயாம் பொழிலிடைக் களித்தவந் நாட்களிற்
பூம்பொழிற் குயில்களின் இன்குரல் போன்ற
தீங்குரலு டைத்தோர் புள்ளினைத் தெரிந்திலேன்;
மலரினத் துன்தன் வாள்விழி யொப்ப
நிலவிய தொன்றினை நேர்ந்திலேன்;குளிர்புனற்
சுனைகளில் உன்மணிச் சொற்கள் போல் தண்ணிய
நீருடைத் தறிகிறேன்;நின்னொடு தமியனாய்
நீயே உயிரெனத் தெய்வமும் நீயென
நின்னையே பேணி நெடுநாள் போக்கினேன்.
வானகத் தமுதம் மடுத்திடும் போழ்து
மற்றத னிடையோர் வஞ்சகத் தொடுமுள்
வீழ்ந்திடைத் தொண்டையில் வேதனை செய்தன.
நின்னொடு களித்து நினைவிழந் திருந்த
எனைத்துயர்ப் படுத்தவந் தெய்திய துலகிற்
கொடியன யாவுளும் கொடியதாம் மிடிமை
அடிநா முள்ளினை அயல்சிறி தேகிக்
களைந்து பின்வந்து காண்பொழுத ஐயகோ!
மறைந்தது தெய்வ மருந்துடைப் பொற்குடம்
மிடிமைநோய் தீர்ப்பான் வீணர்தம் முலகப்
புன்தொழில் ஒன்று போற்றுதும் என்பாள்
தென்திசைக் கண்ணொரு சிற்றூர்க் கிறைவனாம்
திருந்திய ஒருவனைத் துணையெனப் புகுந்து,அவன்
பணிசெய இசைந்தேன்,பதகிநீ!என்னைப்
பிரிந்துமற் றகன்றனை பேசொணா நின்னருள்.
இன்பமத் தனையும் இழந்துநான் உழன்றேன்,
சின்னாள் கழிந்தபின் -யாதெனச் செப்புகேன்!
நின்னொடு வாழ்ந்த நினைப்புமே தேய்ந்தது.
கதையிலோர் முனிவன் கடியதாஞ் சாப
விளைவினால் பன்றியா வீழ்ந்திடு முன்னர்த்
தன்மக னிடை என் தனயநீ யான்புலைப்
பன்றியாம் போது பார்த்துநில் லாதே!
விரைவிலோர் வாள்கொடு வெறுப்புடை யவ்வுடர்ல
துணித்தெனைக் கொன்று தொலைத்தலுன் கடனாம்.
பாவமிங் கில்லையென் பணிப்பிஃ தாகலின்!
தாதைசொற்கு இளைஞன் தளர்வொடும் இணங்கினான்.
முனிவனும் பன் றியா முடிந்தபின்,மைந்தன்
முன்னவன் கூறிய மொரீயினை நினைந்தும்,
இரும்புகழ் முனிவனுக்குன இழியதா மிவ்வுடல்
அமைந்தது கண்டுநெஞ் சழன்றிடல் கொண்டும்.
வாள்கொடு பன்றியை மாய்த்திட லுற்றனன்,
ஆயிடை மற்றவ் வருந்தவப் பன்றி
இனையது கூறும்.ஏடா!நிற்க!
நிற்க!நிற்க!முன்னர்யாம் நினைந்தவாறு
அத்துணைத் துன்புடைத் தன்றிவ் வாழ்க்கை
காற்றும் புனலும் கடிப்புற் கிழங்கும்
இனையபல் லின்பம் இதன் கணே யுளவாம்;
ஆறேழ் திங்கள் அகன்றபின் வருதியேல்
பின்னெனைக் கோறலாம்பீழையோ டிவ்வுரை
செவியுறீஈ முடிசாய்த் திளையவன் சென்றனன்.
திங்கள்பல போனபின் முனிமகன் சென்ற
தாதைப் பன்றியோர் தடத்திடைப் பெடையொடும்
போத்தினம் பலவொடும் அன்பினிற் பொருத்தி
ஆடல்கண் டயிர்த்தனன். ஆற்றொணா தருகுசென்று
எந்தாய்!எந்தாய்!யாதரோ மற்றிது!
வேதநூ லறிந்த மேதகு முனிவரர்
போற்றிட வாழ்ந்தநின் புகழ்க்கிது சாலுமோ?
எனப்பல கூறி இரங்கினன்;பின்னர்
வாள்கொடு பன்றியை பாய்ததிடல் விழைந்தான்.
ஆயிடை முனிவன் அகம்பதைக் துரைக்கும்
செல்லடா! செல்க தீக்குணத் திழிஞ!
எனக்கிவ் வாழ்க்கை இன்புடைத் தேயாம்;
நினக்கிதில் துன்பம் நிகழுமேல் சென்றவ்
வாளினின் நெஞ்சை வகுத்து நீ மடிக
என்றிது கூறி இருந்தவப் பன்றிதன்
இனத்தொடும் ஓடி இன்னுயிர் காத்தது.
இன்னது கண்ட இளையவன் கருதும்.
ஆவா!மானிடர் அருமையின் வீழ்ந்து
புன்னிலை யெய்திய போழ்ததில் நெடுங்கால்
தெரு மரு கின்றிலர் சிலபகல் கழிந்தபின்
புதியதா நீசப் பொய்மைகொள் வாழ்வில்
விருப்புடை யவராய் வேறுதா மென்றும்
அறிந்திலரேபோன் றதிற்களிக் கின்றார்.
என்சொல்கேன் மாயையின் எண்ணரும் வஞ்சம்.
திமிங்கில வுடலும் சிறியபுன் மதியும்
ஓரேழ் பெண்டிரும் உடையதோர் வேந்தன்
தன்பணிக் கிசைந்தென் தருக்கெலாம் அழிந்து
வாழ்ந்தனன் கதையின் முனிபோல் வாழ்க்கை!
14. மது
போகி
பச்சை முந்திரித் தேம்பழங் கொன்று
பாட்டுப் பாடிநற் சாறு பிழிந்தே
இச்சை தீர மதுவடித் துண்போம்;
இஃது தீதென் றிடையர்கள் சொல்லும்
கொச்சைப் பேச்சிற்கை கொட்டி நகைபோம்;
கொஞ்சு மாரும் கூட்டுணும் கள்ளும்
இச்சகத்தினில் இன்பங்க ளன்றோ?
இவற்றின் நல்லின்பம் வேறொன்று முண்டோ? 1
யோகி
பச்சை முந்திரி யன்ன துலகம்;
பாட்டுப் பாடடல் சிவக்களி எய்தல்;
இச்சை தீர உலகினைக் கொல்வோம்;
இனிய சாறு சிவமதை உண்போம்;
கொச்சை மக்களுக் கிஃதெளி தாமோ?
கொஞ்சு மாதொரு குண்டலி சக்தி
இச்சகத்தில் இவையின்ப மன்றோ?
இவற்றின் நல்லின்பம் வேறுளதாமோ? 2
போகி
வெற்றி கொள்ளும் படைகள் நடத்தி
வேந்தர் தம்முட் பெரும்புகழ் எய்தி
ஒற்றை வெள்ளைக் கவிதை உயத்தே
உலகம் அஞ்சிப் பணிந்திட வாழ்வோம்;
சுற்று தேங்கமழ் மென்மலர் மாலை
தோளின் மீதுருப் பெண்கள் குலாவச்
சற்றும் நெஞ்சம் கவலுத லின்றித்
தரணி மீதில் மதுவுண்டு வாழ்வோம். 3
யோகி
வெற்றி ஐந்து புலன்மிசைக் கொள்வோம்;
வீழ்ந்து தாளிடை வையகம் போற்றும்;
ஒற்றை வெள்ளைக் கவிதைமெய்ஞ் ஞானம்
உண்மை வேந்தர் சிவநிலை கண்டார்;
மற்றவர் தம்முட் சீர்பெற வாழ்வோம்;
வண்ம லர்நறு மாலை தெளிவாம்!
சுற்றி மார்பில் அருள்மது வுண்டே
தோகை சக்தியொ டின்புற்று வாழ்வோம். 4
போகி
நல்ல கீதத் தொழிலுணர் பாணர்
நடனம் வல்ல நகைமுக மாதர்
அல்லல் போக இருடன் கூடி
ஆடி யாடிக் களித்தின்பங் கொள்வோம்;
சொல்ல நாவு கனியுத டாநற்
சுதியிலொத்துத் துணையொடும் பாடி
புல்லும் மார்பினோ டாடிக் குதிக்கும்
போகம் போலொரு போகமிங் குண்டோ? 5
யோகி
நல்ல கீதம்,சிவத்தனி நாதம்,
நடன ஞானியர் சிற்கபை யாட்டம்;
அல்லல் போக இவருடன் சேர்ந்தே
ஆடி யாடிப் பெருங்களி கொள்வோம்;
சொல்ல நாவில் இனிக்கு தடா!வான்
சுழலும் அண்டத் திரளின் சுதியில்
செல்லும் பண்ணொடு சிற்சபை யாடும்
செல்வம் போலொரு செல்வமிங் குண்டோ? 6
ஞானி
மாத ரோடு மயங்கிக் களித்தும்
மதுர நல்லிசை பாடிக் குதித்தும்
காதல் செய்தும் பெறும்பல இன்பம்,
களில் இன்பம் கலைகளில் இன்பம்,
பூத லத்தினை ஆள்வதில் இன்பம்
பொய்மை யல்ல இவ்வின்பங்க ளெல்லாம்
யாதுஞ் சக்தி இயல்பெனக் கண்டோம்
இனைய துய்ப்பம் இதயம் மகிழ்ந்தே. 7
இன்பந் துன்பம் அனைத்தும் கலந்தே
இச்ச கத்தின் இயல்வலி யாகி
முன்பு பின்பல தாகியெந் நாளும்
மூண்டு செல்லும் பராசக்தி யோட
அன்பில் ஒன்றிப் பெருஞ்சிவ யோகத்
தறிவுதன்னில் ஒருப்பட்டு நிற்பார்,
துன்பு நேரினும் இன்பெனக் கொள்வார்
துய்ப்பர் இன்பம் மிகச்சுவை கொண்டே. 8
இச்சகத்தோர் பொருளையுந் தீரர்
இல்லை யென்று வருந்துவதில்லை;
நச்சி நச்சி உளத்தொண்டு கொண்டு
நானிலத்தின்பம் நாடுவதில்லை;
பிச்சை கேட்பது மில்லை;இன்பத்தில்
பித்துக் கொண்டு மயங்குவ தில்லை;
துச்ச மென்று சுகங்களைக் கொள்ளச்
சொல்லு மூடர்சொற் கேட்பதும் இல்லை. 9
தீது நேர்ந்திடின் அஞ்சுவ தில்லை.
தேறு நெஞ்சினொ டேசிவங் கண்டோர்;
மாதர் இன்பம் முதலிய வெல்லாம்
வைய கத்துச் சிவன் வைத்த வென்றே
ஆத ரித்தவை முற்றிலும் கொள்வார்;
அங்கும் இங்குமொன் றாமெனத் தேர்வார்;
யாது மெங்கள் சிவன்திருக் கேளி;
இன்பம் யாவும் அவனுடை இன்பம். 10
வேத மந்திர நாதம் ஒருபால்
வேயி னின்குழல் மெல்லொலி ஓர்பால்,
காதல் மாதரொ டாடல் ஒருபால்,
களவெம் போரிடை வென்றிடல் ஓர்பால்,
போத நல்வெறி துய்த்திடல் ஓர்பால்,
பொலியுங் கள்வெறி துய்த்தல்மற் றோர்பால்;
ஏதெ லாம்நமக் கின்புற நிற்கும்
எங்கள் தாய்அருட் பாலது வன்றே. 11
சங்கீர்த்தனம் (மூவரும் சேர்ந்து பாடுதல்)
மதுநமக்கு,மதுநமக்கு,மதுநமக்கு விண்ணெலாம்,
மதுரமிக்க ஹரிநமக்கு,மதுவெனக் கதித்தலால்;
மதுநமக்கு மதியுநாளும்,மதுநமக்கு வானமீன்,
மதுநமக்கு,மண்ணுநீரும் மதுநமக்கு,மலையெலாம்,
மதுநமக்கொர் தோல்விவெற்றி,மதுநமக்கு வினையெலாம்,
மதுநமக்கு,மாதரின்பம்,மதுநமக்கு மதுவகை;
மதுநமக்கு,மதுநமக்கு,மதுமனத்தொடாவியும்
மதுரமிக்க சிவநமக்கு மதுவெனக் கதித்தலால்.
15. சந்திரமதி
ராகம்-ஆனந்த பைரவி  தாளம்-ஆதி
பச்சைக் குழந்தை யடி!-கண்ணிற்
பாவை யடி சந்திரமதி!
இச்சைக் கினிய மது!;-என்தன்
இருவிழிக்குத் தே நிலவு;
நச்சுத்தலைப் பாம்புக் குள்ளே-நல்ல
நாகமணி யுள்ளதென்பார்;
துச்சப்படு நெஞ்சி லே-நின்தன்
சோதி வளரு தடீ!
பேச்சுக் கிடமே தடி!-நீ
பெண்குலத்தின் வெற்றி யடி!
ஆச்சர்ய மாயை யடி!-என்தன்
ஆசைக் குமாரி யடி!
நீச்சு நிலை கடந்த-வெள்ள
நீருக் குள்ளே வீழ்ந்தவர்போல்,
தீச்சுடரை வென்ற வொளி-கொண்ட
தேவி!நினை விழந்தேனடி!
நீலக் கடலினிலே-நின்தன்
நீண்ட குழல் தோன்றுதடி!
கோல மதியினி லே-நின்தன்
குளிர்ந்த முகங் காணுதடி!
ஞால வெளியினி லே-நின்தன்
ஞான வொளி வீசுதடி!
கால நடையினி லே-நின்தன்
காதல் விளங்குதடி!   (பச்சைக் குழந்தை யடி!)
4. சான்றோர்
1. தாயுமானவர் வாழ்த்து
என்றும் இருக்க உளங்கொண்டாய்!
இன்பத் தமிழுக் கிலக்கியமாய்,
இன்றும் இருத்தல் செய்கின்றாய்!
இறவாய் தமிழோ டிருப்பாய் நீ!
ஒன்று பொருள ஃதின்பமென
உணர்ந்தாய், தாயு மானவனே!
நின்ற பரத்து மாத்திரமோ?
நில்லா இகத்தும் நிற்பாய் நீ!
2. நிவேதிதா
அருளுக்கு நிவேதனமாய் அன்பினுக்கோர்
கோயிலாய் அடியேன் நெஞ்சில்
இருளுக்கு ஞாயிறாய் எமதுயர்நா
டாம்பயிர்க்கு மழையாய்,இங்கு
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்
பெரும்பொருளாய்ப் புன்மைத் தாதச்
சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய்
நிவேதிதையைத் தொழுது நிற்பேன்.
3. அபேதாநந்தா
சுருதியும் அரிய உபநிட தத்ன்
தொகுதியும் பழுதற உணர்ந்தோன்.
கருதிடற் கரிய பிரமநன் னிலையைக்
கண்டுபே ரொளியிடைக் களித்தோன்,
அரிதினிற் காணும் இயல்பொடு புவியின்
அப்புறத் திருந்துநண் பகலில்
பரிதியி னொளியும் சென்றிடா நாட்டில்
மெய்யொளி பரப்பிடச் சென்றோன். 1
வேறு
ஒன்றேமெய்ப் பொருளாகும்;உயிர்களெலாம்
அதன்வடிவாம்,ஓருங்காலை;
என்தேவன் உன்தேவன் என்றுலகர்
பகைப்பதெலாம் இழிவாம் என்று,
நன்றேயிங் கறிவுறுத்தும் பரமகுரு
ஞானமெனும் பயிரை நச்சித்
தின்றேபா ழாக்கிடுமைம் புலன்களெனும்
விலங்கின த்தைச் செகுத்த வீரன். 2
வேறு
வானந் தம்புகழ் மேவி விளங்கிய
மாசி லாதி குரவணச் சங்கரன்
ஞானந் தங்குமிந் நாட்டினைப் பின்னரும்
நண்ணி னானெனத் தேசுறு மவ்விவே-
கானந் தபெருஞ் சோதி மறைந்தபின்
அவனி ழைத்த பெருந்தொழி லாற்றியே
ஊனந் தங்கிய மானிடர் தீதெலாம்
ஒழிக்கு மாறு பிறந்த பெருந்தவன். 3
வேறு
தூய அபே தாநந்தனெனும் பெயர்கொண்
டொளிர்தருமிச் சுத்த ஞானி,
நேயமுடன் இந்நகரில் திருப்பாதஞ்
சாத்தியருள் நெஞ்சிற் கொண்டு,
மாயமெலாம் நீங்கியினி தெம்மவர்நன்
னெறிசாரும் வண்ணம் ஞானம்
தோயநனி பொழிந்திடமோர் முகில்போன்றான்
இவன்பதங்கள் துதிக்கின் றோமே 4
4. ஓவியர்மணி இரவிவர்மா
சந்திர னொளியை ஈசன் சமைத்து, அது பருகவென்றே
வந்திடு சாத கப்புள் வகுத்தனன்;அமுதண் டாக்கிப்
பந்தியிற் பருக வென்றே படைத்தனன் அமரர் தம்மை;
இந்திரன் மாண்புக் கென்ன இயற்றினன் வெளிய யானை. 1
மலரினில் நீல வானில் மாதரார் முகத்தில் எல்லாம்
இலகிய அழகை ஈசன் இயற்றினான்,சீர்த்தி இந்த
உலகினில் எங்கும் வீசி,ஓங்கிய இரவி வர்மன்
அலகிலா அறிவுக் கண்ணால் அனைத்தையும் நுகருமாறே. 2
மன்னர்மா ளிகையில் ஏழை மக்களின் குடிலில் எல்லாம்
உன்னருந் தேசு வீசி உளத்தினைக் களிக்கச் செய்வான்
நன்னரோ வியங்கள் தீட்டி நல்கிய பெருமான்,இந்நாள்
பொன்னணி யுலகு சென்றான் புவிப்புகழ் போது மென்பான். 3
அரம்பைஊர் வசிபோ லுள்ள அமரமெல் லியலார் செவ்வி
திறம்பட வகுத்த எம்மான்!செய்தொழில் ஒப்பு நோக்க
விரும்பிய கொல்லாம் இன்று விண்ணுல கடைந்து விட்டாய்?
அரம்பையர் நின்கைச் செய்கைக்கு அழிதலங் கறிவை திண்ணம். 4
காலவான் போக்கில் என்றும் கழிகிலாப் பெருமை கொண்ட
கோலவான் தொழில்கள் செய்து குலவிய பெரியோர் தாமும்,
சீலவாழ் வகற்றி ஓர்நாட் செத்திடல் உறுதி யாயின்
ஞாலவாழ் வினது மாயம் நவின்றிடற் கரிய தன்றோ? 5
5. சுப்பராம தீட்சிதர்
அகவல்
கவிதையும் அருஞ்சுவைக் கான நூலும்
புவியினர் வியக்கும் ஓவியப் பொற்பும்
மற்றுள பெருந்தொழில் வகைகளிற் பலவும்
வெற்றிகொண் டிலங்கிய மேன்மையார் பரத
நாட்டினில் இந்நாள் அன்னியர் நலிப்ப.
ஈட்டிய செல்வம் இறந்தமை யானனும்
ஆண்டகை யொடுபுகழ் அழிந்தமை யானும்
மாண்டன பழம்பெவரு மாட்சியார் தொழிலெலாம்;
தேவர்கள் வாழ்ந்த சீர்வளர் பூமியில்
மேவிய குரக்கர் விளங்குதல் போல.
நேரிலாப் பெரியோர் நிலவிய நாட்டில்
சீரிலாப் புல்லர் செறிந்துநிற் கின்றார்;
இவரிடை
சுரத்திடை இன்னீர்ச் சுனையது போன்றும்,
அரக்கர்தங் குலத்திடை வீடண னாகவும்,
சேற்றிடைத் தாமரைச் செம்மலர் போன்றும்,
போற்றதற் குரிய புனிதவான் குலத்தில்
நாரத முனிவன் நமர்மிசை யரளால்
பாரத நாட்டில் பழமாண் புறுகென
மீட்டுமோர் முறைஇவன் மேவினன் என்ன,
நாட்டுநற் சீர்த்தி நலனுயர் பெருமான்
தோமறு சுப்ப ராமனற் பெயரோன்
நாமகள் புளகுற நம்மிடை வாழ்ந்தான்
இன்னான் தானும் எமையகன் றேகினன்;
என்னே நம்மவர் இயற்றிய பாவம்!
இனியிவ னனையரை எந்நாட் காண்போம்?
கனியறு மரமெனக் கடைநிலை யுற்றோம்
அந்தோ மறலிநம் அமுனைக் கவர்ந்தான்!
நொந்தோ பயனிலை நுவல யா துளதே?
விருத்தம்
கன்னனொடு கொடைபோயிற்று;உயர்கம்ப
நாடனுடன் கவிதை போயிற்று
உன்னரிய புகழ்ப்பார்த்த னொடுவீரம்
அகன்றதென உரைப்பர் ஆன்றோர்;
என்னகநின் றகலாதோன் அருட் சுப்ப
ராமனெனும் இணையி லாவிற்
பன்னனொடு சுவைமிகுந்த பண்வளனும்
அகன் றதெனப் பகர லாமே.  1
கலைவிளக்கே!இளசையெனும் சிற்றூரில்
பெருஞ்சோதி கதிக்கத் தோன்றும்
மலைவிளக்கே!எம்மனையர் மனவிருளை
மாற்றுதற்கு வந்த ஞான
நிலைவிளக்கே!நினைப்பிரிந்த இசைத்தேவி
நெய்யகல நின்ற தட்டின்
உலைவிளக்கே யெனத்தளரும்;அந்தோ!நீ
அகன் றதுயர் உரைக்ற் பாற்றோ? 2
மன்னரையும் பொய்ஞ்ஞான மதக்குரவர்
தங்களையும் வணங்க லாதேன்
தன்னனைய புகழுடையாய்!நினைக்கண்ட
பொழுதுதலை தாழ்ந்து வந்தேன்;
உன்னருமைச் சொற்களையே தெய்விகமாம்
எனக்கருதி வந்தேன்;அந்தோ!
இன்னமொரு காலிளசைக் கேகிடின்,இவ்
வெளியன்மனம் என்ப டாதோ?  3
6. மகாமகோபாத்யாயர்
செம்பரிதி ஒளிபெற்றான்;பைந்நறவு
சுவைபெற்றுத் திகழ்ந்தது;ஆங்கண்
உம்பரெலாம் இறவாமை பெற்றனரென்று
எவரேகொல் உவத்தல் செய்வார்?
கும்பமுனி யெனத்தோன்றும் சாமிநா
தப்புலவன் குறைவில் கீர்த்தி
பம்பலுறப் பெற்றனனேல்,இதற்கென்கொல்
பேருவகை படைக் கின்றீரே?
அன்னியர்கள் தமிழ்ச்செல்வி யறியாதார்
இன்றெம்மை ஆள்வோ ரேனும்,
பன்னியசீர் மகாமகோ பாத்தியா
யப்பதவி பரிவுன் ஈந்து
பொன்னிலவு குடந்தைநகர்ச் சாமிநா
தன்றனக்குப் புகழ்செய் வாரேல்,
முன்னிவனப் பாண்டியர்நாள் இருந்திருப்பின்
இவன்பெருமை மொழிய லாமோ?
நிதிய றியோம்,இவ்வுலகத் தொருகோடி
இன்பவகை நித்தம் துய்க்கும்
கதியறி யோம்’ என்றுமனம் வருந்தற்க;
குடந்தைநகர்க் கலைஞர் கோவே!
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
காலமெலாம் புலவோர் வாயில்
துதியறிவாய்,அவர்நெஞ்சின் வாழ்த்தறிவாய்,
இறப்பின்றித் துலங்கு வாயே.
7. வெங்கடேசு ரெட்டப்ப பூபதி
1 (ஸ்ரீ எட்டயபுரம் ராஜ ராஜேந்த்ர மாகராஜ வெங்கடேசு ரெட்பப்ப பூபதி அவர்கள் சமூகத்துக்கு கவிராஜ ஸ்ரீ சி.சுப்பிரமணிய பாரதி எழுதும்
சீட்டுக் கவிகள்.)
பாரிவாழ்ந் திருந்த சீர்த்திப் பழந்தமிழ் நாட்டின் கண்ணே
ஆரிய!நீயிந் நாளில் அரசுவீற் றிருக்கின் றாயால்;
காரியங் கருதி நின்னைக் கவிஞர்தாங் காணவேண்டின்
நேரிலப் போதே யெய்தி வழிபட நினைகி லேயோ? 1
விண்ணள வுயர்ந்த கீர்த்தி வெங்கடேசு ரெட்டமன்னா!
பண்ணள வுயர்ந்த தென்பணி பாவள வுயர்ந்த தென்பா
எண்ணள வுயர்ந்த வெண்ணில் இரும்புகழ்க் கவிஞர் வந்தால்,
அண்ணலே பரிசு கோடி அளித்திட விரைகி லாயோ? 2
கல்வியே தொழிலாக் கொண்டாய்!கவிதையே தெய்வமாக
அல்லுநன் பகலும் போற்றி அதைவழி பட்டுநின்றாய்!
சொல்லிலே நிகரி லாத புலவர்நின் சூழ லுற்றால்
எல்லினைக் காணப் பாயும் இடபம்போல் முற்ப டாயோ? 3
-சுப்பிரமணிய பாரதி
2.5.1919, எட்டயபுரம்

2 (ஸ்ரீ எட்டயபுரம் மகாராஜ ராஜேந்த்ர ஸ்ரீ வெங்கடேசு ரெட்டப்ப பூபதி அவர்கள் சமூகத்துக்கு கவிராஜ ஸ்ரீ.சி.சுப்பிரமணிய பாரதி எழுதும் ஓலைத் தூக்கு)
ராஜமகா ராஜேந்த்ர ராஜகுல
சேகரன் ஸ்ரீ ராஜ ராஜன்,
தேசமெலாம் புகழ்விளங்கும் இளசைவெங்க
டேசுரெட்ட சிங்கன் காண்க.
வாசமிகு துழாய்த் தாரான் கண்ணனடி
மறவாத மனத்தான்,சக்தி
தாசனெனப் புகழ்வளரும் சுப்ரமண்ய
பாரதிதான் சமைத்த தூக்கு.  1
மன்னவனே!தமிழ்நாட்டில் தமிழறிந்த
மன்னரிலை யென்று மாந்தர்
இன்ன லுறப் புகன்றவசை நீமகுடம்
புனைந்த பொழு திரிந்த தன்றே!
சொன்னலமும் பொருணலமும் சுவைகண்டு,
சுவைகண்டு,துய்த்தத் துய்த்துக்
கன்னலிலே சுவையறியுங் குழந்தைகள்போல்
தமிழ்ச்சுவைநீ களித்தா யன்றே!  2
புவியனைத்தும் போற்றிடவான் புகழ்படைத்துத்
தமிழ்மொழியைப் புகழி லேற்றும்
கவியரசர் தமிழ்நாட்டுக் கில்லையெனும்
வசையென்னாற் கழிந்த தன்றே!
சுவைபுதிது,பொருள்புதிது,வளம்புதிது,
சொற்புதிது சோதி மிக்க
நவகவிதை,எந்நாளும் அழியாத
மகாகவிதை என்று நன்கு.  3
பிரான் ஸென்னும் சிறந்தபுகழ் நாட்டிலுயர்
புலவோரும் பிறரு மாங்கே
விராவுபுக ழாங்கிலத்தீங் கவியரசர்
தாமுமிக வியந்து கூறிப்
பராவி யென்தன் தமிழ்க்கவியை மொழிபெயர்த்துப்
போற்றுகின்றார்;பாரோ ரேத்துந்
தராதிபனே!இளசை வெங்க டேசுரெட்டா!
நின்பால்அத் தமிழ் கொணர்ந்தேன். 4
வேறு
வியப்புமிகும் புத்திசையில் வியத்தகுமென்
கவிதையினை வேந்த னே!நின்
நயப்படுசந் நிதிதனிலே நான்பாட நீகேட்டு
நன்கு போற்றி,
ஜயப்பறைகள் சாற்றுவித்துச் சாலுவைகள் பொற்பைகள்
ஜதிபல் லக்கு,
வயப்பரிவா ரங்கள்முதற் பரிசளித்துப் பல்லூழி
வாழ்க நீயே!
-சுப்பிரமணிய பாரதி
2.5.1919, எட்டயபுரம்
8. ஹிந்து மதாபிமான சங்கத்தார்

மண்ணுலகின் மீதினிலே எக்காலும்
அமரரைப் போல் மடிவில் லாமல்
திண்ணமுற வாழ்ந்திடலாம்,அதற்குரிய
உபாயமிங்கு செப்பக் கேளீர்!
நண்ணியெலாப் பொருளினிலும் உட்பொருளாய்ச்
செய்கையெலாம் நடத்தும் வீறாய்த்
திண்ணியநல் லறிவொளியாய்த் திகழுமொரு
பரம்பொருளை அகத்தில் சேர்த்து, 1
செய்கையெலாம் அதன்செய்கை,நினைவெல்லாம்
அதன்நினைவு,தெய்வ மேநாம்
உய்கையுற நாமாகி நமக்குள்ளே
யொளிர்வ தென உறுதி கொண்டு,
யொய்,கயமை,சினம்,சோம்பர்,கவலை,மயல்,
வீண் விருப்பம்,புழுக்கம்,அச்சம்,
ஐயமெனும் பேயையெலாம் ஞானமெனும்
வாளாலே அறுத்தத் தள்ளி.  2
எப்போதும் ஆனந்தச் சுடர் நிலையில்
வாழ்ந்துயிர்கட் கினிது செய்வோர்,
தப்பாதே இவ்வுலகில் அமரநிலை
பெற்றிடுவார்;சதுர்வே தங்கள்
மெய்ப்பான சாத்திரங்கள் எனுமிவற்றால்
இவ்வுண்மை விளங்கக் கூறும்
துப்பான மதத்தினையே ஹிந்துமத
மெனப்புவியோர் சொல்லு வாரே.  3
அருமையுறு பொருளிலெலாம் மிக அரிதாய்த்
தனைச்சாரும் அன்பர்க் கிங்கு
பெருமையுறு வாழ்வளிக்கும் நற்றுணையாம்
ஹிந்துமதப் பெற்றி தன்னைக்
கருதியதன் சொற்படி யிங் கொழுகாத
மக்களெலாம் கவலை யென்னும்
ஒருநரகக் குழியதனில் வீழ்ந்துதவித்
தழிகின்றார் ஓய்வி லாமே.  4
இத்தகைய துயர்நீக்கிக் கிருதயுகந்
தனையுலகில் இசைக்க வல்ல,
புத்தமுதாம் ஹிந்துமதப் பெருமைதனைப்
பாரறியப் புகட்டும் வண்ணம்;
தத்துபுகழ் வளப்பாண்டி நாட்டினிற்
காரைக்குடியூர் தனிலே சால
உத்தமராந் தனவணிகர் குலத்துதித்த
இளைஞர்பலர்,ஊக்கம் மிக்கார்.  5
உண்மையே தாரகமென் றுணர்ந்திட்டார்,
அன்பொன்றே உறுதி யென்பார்,
வண்மையே குலதர்ம மெனக்கொண்டார்
தொண்டொன்றே வழியாக் கண்டார்;
ஒண்மையுயர் கடவுளிடத் தன்புடையார்;
அவ்வன்பின் ஊற்றத்தாலே
திண்மையுறும் ஹிந்துமத அபிமான
சங்கமொன்று சேர்த்திட்டாரே.  6
பலநூல்கள் பதிப்பித்தும்,பல பெரியோர்
பிரசங்கம் பண்ணு வித்தும்
நலமுடைய கலாசாலை புத்தகசா
லைபலவும் நாட்டி யுந்தம்
குலமுயர நகருயர நாடுயர
உழைக்கின்றார்,கோடி மேன்மை
நிலவுறஇச் சங்கத்தார் பல்லூழி
வாழ்ந்தொளிர்க,நிலத்தின் மீதே!  7
9. வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு
ஆசிரியப்பா
வருக செல்வ!வாழ்கமன் நீயே!
வடமேற் றிசைக்கண் மாபெருந் தொலையினோர்
பொற்சிறு தீவகப் புரவலன் பயந்த
நற்றவக் புதல்வ! நல்வர வுனதே!
மேதக நீயும்நின் காதலங் கிளியும் 5
என்றனைக் காணுமா றித்தனை காதம்
வந்தனிர்!வாழ்திர்!என் மனம்மகிழ்ந் ததுவே
செல்வகேள்! என்னரும் சேய்களை நின்னுடை
முன்னோர் ஆட்சி தொடங்குறூஉம் முன்னர்
நெஞ்செலாம் புண்ணாய் நின்றனன் யாஅன். 10
ஆயிர வருடம் அன்பிலா அந்நியர்
ஆட்சியின் விளைந்த அல்லல்கள் எண்ணில.
போனதை எண்ணிப் புலம்பியிங் கென்பயன்?
மற்றுன் நாட்டினோர் வந்ததன் பின்னர்,
அகத்தினில் சிலபுண் ஆறுதல் எய்தின. 15
போர்த்தொகை அடங்கிஎன் ஏழைப் புத்திரர்
அமைதிபெற் றுய்வ ராயினர். என்வே,
பாரத தேவி பழமைபோல் திருவருள்
பொழிகர லுற்றனள்,பொருள்செயற் குரிய
தொழிற்கணம் பலப்பல தோன்றின,பின்னும் 20
கொடுமதப் பாவிகள் குறும்பெலாம் அகன்றன.
யாற்றினிற் பெண்களை எறிவதூஉம்,இரதத்
துருளையிற் பாலரை உயிருடன் மாய்த்தலும்,
பெண்டிரைக் கணவர்தம் பிணத்துடன் எரித்தலும்,
எனப்பல தீமைகள் இறந்துபட் டனவால். 25
மேற்றிசை இருளினை வெருட்டிய ஞான
ஒண்பெருங் கதிரின் ஓரிரு கிரணம் என்
பாலரின் மீது படுதலுற் றனவே.
ஆயினும் என்னை?ஆயிரங் கோடி
தொல்லைகள் இன்னும் தொலைந்தன வில்லை. 30
நல்குர வாதி நவமாம் தொல்லைகள்
ஆயிரம் எனைவந் தடைந்துள நுமரால்
எனினுமிங் கிவையெலாம் இறைவன் அருளால்
நீங்குவ வன்றி நிலைப்பன வல்ல.
நோயெலாந் தவிர்ப்பான் நுமரே எனக்கு. 35
மருத்துவ ராக வந்தனர் என்பதூஉம்
பொய்யிலை.ஆதலிற் புகழ்பெறும் ஆங்கில
நாட்டின ரென்றும் நலமுற வாழ்கவே!
என்னருஞ் சேய்களும் இவரும்நட் பெய்தி
இருபான் மையர்க்கும் இன்னலொன் றின்றி 40
ஒருவரை யொருவர் ஒறுத்திட லிலாது,
செவ்விதின் வாழ்க!அச் சீர்மிகு சாதியின்
இறைவனாம் உந்தை இன்பொடு வாழ்க!
வாழ்க நீ! வாழ்கநின் மனமெனும் இனிய
வேரிமென் மலர்வாழ் மேரிநல் லன்னம்! 45
மற்றென் சேய்கள் வாழிய! வாழிய!
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்


சுய சரிதை


1.
. கனவு

பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய்
மெல்லப் போனதுவே.
-பட்டினத்துப் பிள்ளை
முன்னுரை
வாழ்வு முற்றும் கனவெனக் கூறிய
மறைவ லோர்தம் உரைபிழை யன்றுகாண்;
தாழ்வு பெற்ற புவித்தலக் கோலங்கள்
சரத மன்றெனல் யானும் அறிகுவேன்;
பாழ்க டந்த பரநிலை யென்றவர்
பகரும் அநநிலை பாத்திலன் பார்மிசை
ஊழ்க டந்து வருவதும் ஒன்றுண்டோ?
உண்மை தன்னிலோர் பாதி யுணர்ந்திட்டேன். 1
மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன்;
மற்றும் இந்தப் பிரமத் தியல்பினை
ஆய நல்லருள் பெற்றிலன்; தன்னுடை
அறிவி னுக்குப் புலப்பட லின்றியே
தேய மீதெவ ரோசொலுஞ் சொல்லினைச்
செம்மை யென்று மனத்திடைக் கொள்வதாம்
தீயபக்தி யியற்கையும் வாய்ந்திலேன்;
சிறிது காலம் பொறுத்தினுங் காண்பமே. 2
உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே
உண்டு றங்கியி டர்செய்து செத்திடும்
கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர்
கனவி னுங்கன வாகும்;இதனிடை
சிலதி னங்க்ள் உயிர்க்கமு தாகியே
செப்பு தற்கரி தாகம யக்குமால்;
திலத வாணுத லார்தரு மையலாந்
தெய்வி கக்கன வன்னது வாழ்கவே. 3
ஆண்டோர் பத்தினில் ஆடியும் ஓடியும்
ஆறு குட்டையின் நீச்சினும் பேச்சினும்
ஈண்டு பன்மரத் தேறியி றங்கியும்
என்னொ டொத்த சிறியர் இருப்பரால்;
வேண்டு தந்தை விதிப்பினுக் கஞ்சியான்
வீதி யாட்டங்க ளேதினுங் கூடிலேன்.
தூண்டு நூற்கணத் தோடு தனியனாய்த்
தோழ மைபிறி தின்றி வருந்தினேன். 4
பிள்ளைக் காதல்
அன்ன போழ்தினி லுற்ற கனவினை
அந்த மிழ்ச்சொலில் எவ்வணம் சொல்லுகேன்?
சொன்னந தீங்கன வங்குத் துயிலிடைத்
தோய்ந்த தன்று,நனவிடைத் தோய்ந்ததால்;
மென்ன டைக்கனி யின்சொற் கருவிழி
மேனி யெங்கும் நறுமலர் வீசிய
கன்னி யென்றுறு தெய்வத மொன்றனைக்
கண்டு காதல் வெறியிற் கலந்தனன். 5
ஒன்ப தாயபி ராயத்த ளென்விழிக்
கோது காதைச சகுந்தலை யொத்தனள்
என்ப தார்க்கும் வியப்பினை நல்குமால்
என்செய் கேன்? பழி யென்மிசை யுண்டுகொல்?
அன்பெ னும்பெரு வெள்ளம் இழுக்குமேல்
அதனை யாவர் பிழைத்ட வல்லரே?
முன்பு மாமுனி வோர்தமை வென்றவில்
முன்ன ரேழைக் குழந்தையென் செய்வனே? 6
வயது முற்றிய பின்னுறு காதலே
மாசு டுடைத்தது தெய்விக மன்றுகாண்;
இயலு புன்மை யுடலினுக் கின்பெனும்
எண்ண முஞ்சிறி தேற்றதக் காதலாம்;
நயமி குந்தனி மாதை மானணம்
நண்ணு பாலர் த்மக்குரித் தாமன்றோ?
கயல்வி ழிச்சிறு மானினைக் காணநான்
காம னம்புகள் என்னுயிர் கண்டவே. 7
கனகன் மைந்தன் குமர குருபரன்
கனியும் ஞானசம் பந்தன் துருவன்மற்
றெனையர் பாலர் கடவுளர் மீதுதாம்
எண்ணில் பக்திகொண் டின்னுயிர் வாட்டினோர்
மனதி லேபிறந் தோன்மன முண்ணுவோன்
மதன தேவனுக் கென்னுயிர் நல்கினன்;
முனமு ரைத்தவர் வான்புகழ் பெற்றனர்;
மூட னேன்பெற்ற தோதுவன் பின்னரே. 8
நீரெ டுத்து வருதற் கவன்மணி
நித்தி லப்புன் னகைசுடர் வீசிடப்
போரெ டுத்து வருமதன் முன்செலப்
போகும் வேளை யதற்குக் தினந்தொறும்
வேரெ டுத்துச் சுதந்திர நற்பயிர்
வீழ்ந்தி டச்செய்தல் வேண்டிய மன்னர்தம்
சீரெ டுத்த புலையுயிர்ச் சாரர்கள்
தேச பத்ர் வரனைக் காத்தல்போல், 9
காத்தி ருந்தவள் போம்வழி முற்றிலும்
கண்கள் பின்னழ கார்ந்து களித்திட
யாத்த தேருரு ளைப்படு மேழைதான்
யாண்டு தேர்செலு மாங்கிழு புற்றெனக்
கோத்த சிந்தையோ டேகி யதில்மகிழ்
கொண்டு நாட்கள் பலகழீத் திட்டனன்;
பூத்த ஜோதி வதனம் திரும்புமேல்
புலன ழிந்தொரு புத்துயி ரெய்துவேன். 10
புலங்க ளோடு கரணமும் ஆவியும்
போந்து நின்ற விருப்புடன் மானிடன்
நலங்க ளேது விரும்புவன் அங்கவை
நண்ணு றப்பெ றல் திண்ணம தாமென,
இலங்கு நூலுணர் ஞானியர் கூறுவர்;
யானும் மற்றது மெய்யெனத் தேர்ந்துளேன்
விலங்கி யற்கை யிலையெனில் யாமெலாம்
விரும்பு மட்டினில் விண்ணுற லாகுமே. 11
சூழு மாய வுலகினிற் காணுறுந்
தோற்றம் யாவையும் மானத மாகுமால்;
ஆழு நெங்சகத் தாசையின் றுள்ளதேல்,
அதனு டைப்பொருள் நாளை விளைந்திடும்.
தாழு முள்ளத்தர்,சோர்வினர்,ஆடுபோல்
தாவித் தாவிப் பலபொருள் நாடுவோர்,
வீழு மோரிடை யூற்றினக் கஞ்சுவோர்,
விரும்பும் யாவும் பெறாரிவர் தாமன்றே 12
விதியை நோவர்,தம் நண்பரைத் தூற்றுவர்,
வெகுளி பொங்கிப் பகைவரை நிந்திப்பர்,
சதிகள் செய்வர்,பொய்ச் சாத்திரம் பேசுவர்
சாத கங்கள் புரட்டுவர் பொய்மைசேர்
மதியி னிற்புலை நாத்திகங் கூறுவர்
மாய்ந்தி டாத நிறைந்த விருப்பமே
கதிகள் யாவும் தருமென லோர்ந்திடார்;
கண்ணி லாதவர் போலத் திகைப்பர்காண். 13
கன்னி மீதுறு காதலின் ஏழையேன்
கவலை யுற்றனன் கோடியென் சொல்லுகேன்?
பன்னி யாயிரங் கூறினும்,பக்தியின்
பான்மை நன்கு பகர்ந்திட லாகுமோ?
முன்னி வான்கொம்பிற் றேனுக் குழன்றதோர்
முடவன் கால்கள் முழுமைகொண் டாலென
என்னி யன்றுமற் றெங்ஙனம் வாய்ந்ததோ?
என்ன டத்தவள் இங்கிதம் பூண்டதே! 14
காத லென்பதும் ஓர்வயின் நிற்குமேல்,
கடலில் வந்த கடுவினை யொக்குமால்;
ஏத மின்றி யிருபுடைத் தாமெனில்
இன்னமிர்தும் இணைசொல லாகுமோ?
ஓதொ ணாத பெருந்தவம் கூடினோர்
உம்பர் வாழ்வினை யெள்ளிடும் வாழ்வினோர்
மாத ரார்மிசை தாமுறுங் காதலை
மற்ற வர்தரப் பெற்றிடு மாந்தரே;  15
மொய்க்கும் மேகத்தின் வாடிய மாமதி
மூடு வெம்பனிக் கீழுறு மென்மலர்,
கைக்கும் வேம்பு கலந்திடு செய்யபால்,
காட்சி யற்ற கவினுறு நீள்விழி.
பொய்க்கி ளைத்து வருந்திய மெய்யரோ,
பொன்ன னாரருள் பூண்டில ராமெனில்
கைக்கி ளைப்பெயர் கொண்ட பெருந்துய்க்
காத லஃது கருதவுந் தீயதால்.  16
தேவர் மன்னன் மிடிமையைப் பாடல்போல்
தீய கைக்கிளை யானெவன் பாடுதல்?
ஆவல் கொண்ட அரும்பெறற் கன்னிதான்
அன்பெ னக்கங் களித்திட லாயினள்;
பாவம் தீமை,பழியெதுந் தேர்ந்திடோம்,
பண்டைத் தேவயுகத்து மனிதர்போல்,
காவல் கட்டு விதிவழக் கென்றிடுங்
கயவர் செய்திக ளேதும்,அறிந்திலோம். 17
கான கத்தில் இரண்டு பறவைகள்
காத லுற்றது போலவும்,ஆங்ஙனே
வான கத்தில் இயக்க ரியக்கியர்
மையல் கொண்டு மயங்குதல் போலவும்,
ஊன கத்த துவட்டுறும் அன்புதான்
ஒன்று மின்றி உயிர்களில் ஒன்றியே
தேன கத்த மணிமொழி யாளொடு
தெவ் நாட்கள் சிலகழித் தேனரோ? 18
ஆதி ரைத்திரு நாளொன்றிற் சங்கரன்
ஆலயத்தொரு மண்டபந்த தன்னில்யான்
சோதி மானொடு தன்னந் தனியனாய்ச்
கொற்க ளாடி யிருப்ப, மற் றங்கவள்
பாதி பேசி மறைந்துபின் தோன்றித்தன்
பங்க யக்கையில் மைகொணர்ந்தே,ஒரு
சேதி!நெற்றியில் பொட்டுவைப் பேன்என்றாள்;
திலத மிட்டனள்; செய்கை யழிந்தனன். 19
என்னை யின்றெனக் கைந்து பிராயத்தில்
ஏங்க விட்டுவிண் ணெய்திய தாய்தனை
முன்னை யீன்றவன்,செந்தமிழ்ச் செய்யுளால்
மூன்று போழ்துஞ் சிவனடி யேத்துவோன்,
அன்ன வன்தவப் பூசனை தீர்ந்தபின்
அருச்ச னைப்படு தேமலர் கொண்டுயான்
பொன்னை யென்னுயிர் தன்னை யணுகலும்
பூவை புன்னகை நன்மலர் பூப்பள் காண். 20
ஆங்கிலப் பயிற்சி
நெல்லையூர் சென்றவ் வூணர் கலைத்திறன்
நேரு மாறெனை எந்தை பணித்தனன்;
புல்லை யுண்கென வாளரிச் சேயினைப்
போக்கல் போலவும் ஊன்விலை வாணிகம்
நல்ல தென்றொரு பார்ப்பனப் பிள்ளையை
நாடு விப்பது போலவும்,எந்தைதான்
அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை
ஆரி யர்க்கிங் கருவருப் பாவதை. 21
நரியு யிர்ச்சிறு சேவகர்,தாதர்கள்,
நாயென னத்திரி யொற்றர் உணவினைப்
பெரிதெ னக்கொடு தம்முயிர் விற்றிடும்
பேடி யர்,பிறர்க் கிச்சகம் பேசுவோர்,
கருது மிவ்வகை மாக்கள் பயின்றிடுங்.
கலைப யில்கென என்னை விடுத்தனன்.
அருமை மிக்க மயிலைப் பிரிந்துமிவ்
அற்பர் கல்வியின் நெஞ்சுபொ ருந்துமோ? 22
கணிதம் பன்னிரண் டாண்டு பயில்வர்,பின்
கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்;
அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும்
ஆழ்ந்தி ருக்கும் கவிளம் காண்கிலார்;
வணிக மும்பொருள் நூலும் பிதற்றுவார்;
வாழு நாட்டிற் பொருள்கெடல் கேட்டிலார்
துணியு மாயிரஞ் சாத்திர நாமங்கள்
சொல்லு வாரெட் டுணைப்பயன் கண்டிலார். 23
கம்ப னென்றொரு மானிடன் வாழ்ந்ததும்,
காளி தாசன் கவிதைபு னைந்ததும்,
உம்பர் வானத்துக் கோளை மீனையும்
ஓர்ந்த ளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும்,
நம்ப ருந்திற லோடொரு பாணினி
ஞால மீதில் இலக்கணங் கண்டதும்,
இம்பர் வாழ்வின் இறுதிகண் டுண்மையின்
இயல்பு ணர்த்திய சங்கரன் ஏற்றமும், 24
சேரன் தம்பி சிலம்மை இசைத்ததும்,
தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்,
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பார ளித்ததும் தர்மம் வளர்த்ததும்,
பேரு ருட்சுடர் வாள்கொண் டசோகனார்
பிழைப டாது புவித்தலங் காத்ததும்,
வீரர் வாழ்த்த மிலேச்சர்தந் தீயகோல்
வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும். 25
அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்
தாங்கி லம்பயில் பள்ளியுட் போகுநர்;
முன்னர் நாடுட திகழ்ந்த பெருமையும்
மூண்டி ருக்குமிந் நாளின் இகழ்ச்சியும்
பின்னர் நாடுறு பெற்றியுந் தேர்கிலார்
பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள்;
என்ன கூறிமற் றெங்ஙன் உணர்த்துவேன்
இங்கி வர்க்கென துள்ளம் எரிவதே! 26
சூதி லாத வுளத்தினன் எந்தைதான்
சூழ்ந்தெ னக்கு நலஞ்செயல் நாடியே
ஏதி லார்தருங் கல்விப் படுகுழி
ஏறி யுய்தற் கரிய கொடும்பிலம்
தீதி யன்ற மயக்கமும் ஐயமும்
செய்கை யாவினு மேயசி ரத்தையும்
வாதும் பொய்மையும் என்றவி லங்கினம்
வாழும் வெங்குகைக் கென்னை வழங்கினன் 27
ஐய ரென்றும் துரையென்றும் மற்றெனக்
காங்கி லக்கலை யென்றொன் றுணர்த்திய
பொய்ய ருக்கிது கூறுவன் கேட்பிரேல்;
பொழுதெ லாமுங்கள் பாடத்தில் போக்கிநான்
மெய்ய யர்ந்து விழிகுழி வெய்திட
வீறி ழந்தென துள்ளம்நொய் தாகிட
ஐயம் விஞ்சிச் சுதந்திரம் நீங்கியென்
அறிவு வாரித் துரும்பென் றலைந்ததால். 28
செலவு தந்தைக் கோ ராயிரஞ் சென்றது;
தீதெ னக்குப்பல் லாயிரஞ் சேர்ந்தன;
நலமொ ரெட்டுணை யுங்கண்டி லேனிதை
நாற்ப தாயிரங் கோயிலிற் சொல்லுவேன்!
சிலமுன் செய்நல் வினைப்பய னாலும்நந்
தேவி பாரதத் தன்னை யருளினும்
அலைவு றுத்துநும் பேரிருள் வீழ்ந்துநான்
அழிந்தி டாதொரு வாறுபி ழைத்ததே! 29
மணம்
நினைக்க நெஞ்ச முருகும்; பிறர்க்கிதை
நிகழ்த்த நாநனி கூசும தன்றியே
எனைத்திங் கெண்ணி வருந்தியும் இவ்விடர்
யாங்ஙன் மாற்றுவ தென்பதும் ஓர்ந்திலம்;
அனைத்தொர் செய்திமற் றேதெனிற் கூறுவேன்;
அம்ம! மாக்கள் மணமெனுஞ் செய்தியே.
வினைத்தொ டர்களில் மானனட வாழ்க்கையுள்
மேவு மிம்மணம் போற்பிறி தின்றரோ! 30
வீடு றாவணம் யாப்பதை வீடென்பார்;
மிகவி ழிந்த பொருளைப் பொருளென்பார்;
நாடுங் காலொர் மணமற்ற செய்கையை
நல்ல தோர்மண மாமென நாட்டுவார்,
கூடு மாயிற் பிரம சரியங்கொள்;
கூடு கின்றில தென்னிற் பிழைகள்செய்து
ஈட ழிந்து நரக வழிச்செல்வாய்;
யாது செய்யினும் இம்மணம் செய்யல்காண். 31
வசிட்ட ருக்கும் இராமருக்கும் பின்னொரு
வள்ளு வர்க்கும்முன் வாய்த்திட்ட மாதர்போல்
பசித்தொ ராயிரம் ஆண்டு தவஞ்செய்து
பார்க்கி னும்பெறல் சால வரிதுகாண்,
புசிப்ப தும்பரின் நல்லமு தென்றெணிப்
புலையர் விற்றிடும் கள்ளுண லாகுமோ?
அசுத்தர் சொல்வது கேட்கலிர்,காளையீர்!
ஆண்மை வேண்டின் மணஞ்செய்தல் ஓம்புமின். 32
வேறு தேயத் தெவரெது செய்யினும்
வீழ்ச்சி பெற்றவிப் பாரத நாட்டினில்
ஊற ழிந்து பிணமென வாழுமிவ்
வூனம் நீக்க விரும்பும் இளையர்தாம்,
கூறு மெந்தத் துயர்கள் விளையினும்
கோடி மக்கள் பழிவந்து சூழினும்
நீறு பட்டவிப் பாழ்ச்செய்ல மட்டினம்
நெஞ்சத் தாலும் நினைப்ப தொழிகவே. 33
பால ருந்து மதலையர் தம்மையே
பாத கக்கொடும் பாதகப் பாதகர்
மூலத் தோடுகு லங்கெடல் நாடிய
மூட மூடநிர் மூடப் புலையர்தாம்,
கோல மாக மணத்திடைக் கூட்டுமிக்
கொலையெ னுஞ்செய லொன்றினை யுள்ளவும்
சால வின்னு மோராயிரம் ஆண்டிவர்
தாத ராகி அழிகெனத் தோன்றுமே! 34
ஆங்கொர் கன்னியைப் பத்துப் பிராயத்தில்
ஆழ நெஞ்சிடை யூன்றி வணங்கினன்;
ஈங்கொர் கன்னியைப் பன்னிரண் டாண்டனுள்
எந்தை வந்து மணம்புரி வித்தனன்.
தீங்கு மற்றிதி லுண்டென் றறிந்தவன்
செயலெ திர்க்குந் திறனில் னாயினேன்.
ஓங்கு காதற் றழலெவ் வளவென்றன்
உளமெ ரித்துள தென்பதுங் கண்டிலேன் 35
மற்றொர் பெண்ணை மணஞ்செய்த போழ்துமுன்
மாத ராளிடைக் கொண்டதொர் காதல்தான்
நிற்றல் வேண்டு மெனவுளத் தெண்ணிலேன்;
நினைவை யேயிம் மணத்திற் செலுத்திலேன்;
முற்றொ டர்பினில் உண்மை யிருந்ததால்
மூண்ட பின்னதொர் கேளியென் றெண்ணினேன்
கற்றுங் கேட்டும் அறிவு முதிருமுன்
காத லொன்று கடமையொன் றாயின! 36
மதனன் செய்யும் மயக்க மொருவயின்;
மாக்கள் செய்யும் பிணிப்புமற் றோர்வயின்;
இதனிற் பன்னிரண் டாட்டை யிளைஞனுக்
கென்னை வேண்டும் இடர்க்குறு சூழ்ச்சிதான்?
எதனி லேனுங் கடமை விளையுமேல்
எத்து யர்கள் உன்றுமற் றென்செய்தும்
அதனி லுண்மையோ டார்ந்திடல் சாலுமென்று
அரம்வி திப்பதும் அப்பொழு தோர்ந்திலேன். 37
சாத்தி ரங்கள் கிரியைகள் பூசைகள்
சகுன மந்திரந் தாலி மணியெலாம்
யாத்தெ னைக்கொலை செய்தன ரல்லது
யாது தர்ம முறையெனல் காட்டிலர்,
தீத்தி றன்கொள் அறிவற்ற பொய்ச்செயல்;
செய்து மற்றவை ஞான நெறியென்பர்;
மூத்த வர்வெறும் வேடத்தின் நிற்குங்கால்
மூடப் பிள்ளை அறமெவண் ஓர்வதே? 38
தந்தை வறுமையெய்திடல்
ஈங்கி தற்கிடை யெந்தை பெருந்துயர்
எய்திய நின்றனன்,தீய வறுமையான்;
ஓங்கி நின்ற பெருங்செல்வம் யாவையும்
ஊணர் செய்த சதியில் இழந்தனன்;
பாங்கில் நின்று புகழ்ச்சிகள் பேசிய
பண்டை நண்பர்கள் கைநெகிழ்த் தேகினர்;
வாங்கி யுய்ந்த கிளைஞரும் தாதரும்
வாழ்வு தேய்ந்தபின் யாது மதிப்பரோ? 39
பார்ப்ப னக்குலங் கெட்டழி வெய்திய
பாழ டைந்த கலியுக மாதலால்,
வேர்ப்ப வேர்ப்பப் பொருள்செய்வ தொன்றையே
மேன்மை கொண்ட தொழிலெனக் கொண்டனன்;
ஆர்ப்பு மிஞ்சப் பலபல வாணிகம்
ஆற்றி மிக்க பொருள்செய்து வாழ்ந்தனன்;
நீர்ப்ப டுஞ்சிறு புற்புத மாமது
நீங்க வேயுளங் குன்றித் தளர்ந்தனன். 40
தீய மாய வுலகிடை யொன்றினில்
சிந்தை செய்து விடாயுறுங் காலதை
வாய டங்க மென்மேலும் பருகினும்
மாயத் தாகம் தவிர்வது கண்டிலம்;
நேய முற்றது வந்து மிகமிக
நித்த லும்மதற் காசை வளருமால்
காய முள்ள வரையுங் கிடைப்பினும்
கயவர் மாய்வது காய்ந்த உளங்கொண்டே. 41
ஆசைக் கோரள வில்லை விடயத்துள்
ஆழ்ந்த பின்னங் கமைதியுண்டாமென
மோசம் போகலிர்என்றிடித் தோதிய
மோனி தாளிணை முப்பொழு தேத்துவாம்
தேசத் தார்புகழ் நுண்ணறி வோடுதான்
திண்மை விஞ்சிய நெஞ்சின னாயினும்
நாசக் காசினில் ஆசையை நாட்டினன்
நல்லன் எந்தை துயர்க்கடல் வீழ்ந்தனன். 42
பொருட் பெருமை
பொருளி லார்கிலை யிவ்வுல கென் றநம்
பிலவர் தம்மொழி பொய்ம்மொழி யன்றுகாண்;
பொருளி லார்க்கின மில்லை துணையிலை,
பொழுதே லாமிடர் வெள்ளம்வந் தெற்றுமால்,
பொருளி லார்பொருள் செய்தல் முதற்கடன்;
போற்றிக் காசினுக் கேங்கி யுயிர்விடும்
மருளர் தம்மிசை யேபழி கூறுவன்;
மாமகட் கிங்கொர் ஊன முரைத்திலன். 43
அறமொன் றேதரும் மெய்யின்பம் என்றநல்
லறிஞர் தம்மை அனுதினம் போற்றுவேன்;
பிறவி ரும்பி உலகினில் யான்பட்ட
பீழை எத்தனை கோடி!நினைக்கவும்
திறன ழிந்தென் மனமுடை வெய்துமால்.
தேசத் துள்ள இளைஞர் அறிமினோ!
அறமொன் றேதரும் மெய்யின்பம்;ஆதலால்
அறனை யேதுணை யென்றுகொண் டுய்திரால் 44
வெய்ய கர்மப் பயன்களின் நொந்துதான்
மெய்யு ணர்ந்திட லாகு மென்றாக்கிய
தெய்வ மேயிது நீதி யெனினும்நின்
திருவ ருட்குப் பொருந்திய தாகுமோ?
ஐய கோ!சிறி துண்மை விளங்குமன்,
ஆவி நையத் துயருறல் வேண்டுமே!
பையப் பையவோர் ஆமைகுன் றேறல்போல்
பாருளோர் உண்மை கண்டிவண் உய்வரால். 45
தந்தை போயினன் பாழ்மிடி சூழ்ந்தது;
தரணி மீதினில் அஞ்சலென் பாரிலர்;
சிந்தை யில்தெளி வில்லை; உடலினில்
திறனு மில்லை;உரனுளத் தில்லையால்;
மந்தர் பாற்பொருள் போக்கிப் பயின் றதாம்
மடமைக் கல்வியில் மண்ணும்பயனிலை.
எந்த மாக்கமும் தோற்றில தென்செய்கேன்?
ஏன்பி றந்தனன் இத்துயர் நாட்டிலே? 46
முடிவுரை
உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே
உண்டு றங்கி இடர்செய்து செத்திடும்
கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர்
கனவி னுங்கன வாகும்;இதற்குநான்
பலநி னைந்து வருந்தியிங் கென்பயன்?
பண்டு போனதை எண்ணி யென்னாவது?
சிலதி னங்கள் இருந்து மறைவதில்
சிந்தை செய்தெவன் செத்திடு வானடா! 47
ஞான முந்துற வும்பெற் றிலாதவர்
நானி லத்தத துயரன்றிக் காண்கிலர்;
போன தற்கு வருந்திலன் மெய்த்தவப்
புலமை யோனது வானத் தொளிருமோர்
மீனை நாடி வளைத்திடத் தூண்டிலை
வீச லொக்கு மெனலை மறக்கிலேன்;
ஆன தாவ தனைத்தையுஞ் செய்வதோர்
அன்னை யே! இனி யேனும் அருள்வையால். 48
வேறு
அறிவிலே தெளிவு,நெஞ்சிலே உறுதி,
அகத்திலே அன்பினோர் வெள்ளம்,
பொறிகளின் மீது தனியர சாணை,
பொழுதெலாம் நினது பே ரருளின்
நெறியிலே நாட்டம்,கரும யோகத்தில்
நிலைத்திடல் என்றிவை யருளாய்,
குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க்
குலவிடு தனிப்பரம் பொருளே!  49
2. பாரதி அறுபத்தாறு
கடவுள் வாழ்த்து-பராசக்தி துதி
எனக்கு முன்னே சித்தர்பலர் இருந்தாரப்பா!
யானும் வந்தேன் ஒருசித்தன் இந்தநாட்டில்;
மனத்தினிலே நின்றிதனை எழுதுகின்றாள்
மனோன் மணியென் மாசகதி வையத்தேவி;
தின த்தினிலே புதிதாகப் பூத்து நிற்கும்
செவய்யமணித் தாமரை நேர் முகத்தாள்; காதல்
வனத்தினிலே தன்னையொரு மலரைப் போலும்
வண்டியைப்போல் எனையுமுரு மாற்றி விட்டாள். 1
தீராத காலமெலாம் தானும் நிற்பாள்
தெவிட்டாத இன்னமுதின் செவ்வி தழ்ச்சி,
நீராகக் கனலாக வானாக் காற்றா
நிலமாக வடிவெடுத்தாள்;நிலத்தின் மீது
போராக நோயாக மரண மாக
போந்திதனை யழித்திடுவாள்;புணர்ச்சி கொண்டால்
நேராக மோனமஹா னந்த வாழ்வை
நிலத்தின்மிசை அளித்தமரத் தன்மை ஈவாள். 2
மாகாளி பராசக்தி உமையாள் அன்னை
வைரவிகங் காளிமனோன் மணிமா மாயி,
பாகார்ந்த தேமொழியாள்,படருங் செந்தீ
பாய்ந்திடுமோர் விழியுடையாள்,பரம சக்தி,
ஆகார மளித்திடுவாள்,அறிவு தந்தாள்
ஆதிபரா சக்தியென தமிர்தப் பொய்கை,
சோகாட விக்குளெனைப் புகவொட் டாமல்
துய்யசெழுந் தேன்போலே கவிதை சொல்வாள். 3
மரணத்தை வெல்லும் வழி
பொன்னார்ந்த திருவடியைப் போற்றி யிங்கு
புகலுவேன் யானறியும் உண்மை யெல்லாம்;
முன்னோர்கள் எவ்வுயிரும் கடவுள் என்றார்,
முடிவாக அவ்வுரையை நான்மேற் கொண்டேன்;
அன்னோர்கள் உரைத்ததன்றிச் செய்கை யில்லை
அத்வைத நிலைகண்டால் மரணமுண்டோ,
முன்னோர்கள் உரைத்தபல சித்த ரெல்லாம்
முடிந்திட்டார்,மடிந்திட்டார்,மண்ணாய் விட்டார். 4
பொந்திலே யுள்ளாராம்,வனத்தில் எங்கோ
புதர்களிலே யிருப்பாராம்,பொதியை மீதே
சந்திலே சவுத்தியிலே நிழலைப் போலே
சற்றேயங் கங்கேதென் படுகின் றாராம்,
நொந்தபுண்ணைக் குத்துவதில் பயனொன் றில்லை
நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்!
அந்தணனாம் சங்கரா சார்யன் மாண்டான்;
அதற்கடுத்த இராமா நுஜனும் போனான்! 5
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்;
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்;
பலர்புகழும் இமனுமே யாற்றில் வீழ்ந்தான்;
பார்மீது நான்சாகா திருப்பேன்,காண்பீர்!
மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய்கூ றேன்யான்,
மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே,
நலிவுமில்லை;சாவுமில்லை,கேளீர்,கேளீர்!
நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை.  6
அசுரர்களின் பெயர்
அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்து போகும்;
மிச்சத்தைப் பின்சொல்வேன்,சினத்தை முன்னே
வென்றிடுவீர்,மேதினியில் மரண மில்லை;
துச்சமெனப் பிறர்பொருளைக் கருதலாலே,
சூழ்ந்ததெலாம் கடவுளெனச் சுருதி சொல்லும்
நிச்சயமாம் ஞானத்தை மறத்த லாலே,
நேர்வதே மானுடர்க்குச் சினத்தீ நெஞ்சில். 7
சினத்தின் கேடு
சினங்கொள்வார் தமைத்தாமே தீயாற் சுட்டுச்
செத்திடுவா ரொப்பாவார்; சினங்கொள் வார்தாம்
மனங்கொண்டு தங்கழுத்தைத் தாமே வெய்ய
வாள்கொண்டு கிழித்திடுவார் மானு வாராம்.
தினங்கொடி முறைமனிதர் சினத்தில் வீழ்வார்
சினம்பிறர்மேற் றாங்கொண்டு கவலையாகச்
செய்ததெணித் துயர்க்கடலில் வீழ்ந்து சாவார் 8
மாகாளி பராசக்தி துணையே வேண்டும்;
வையகத்தில் எதற்கும்இனிக் கவலை வேண்டா;
சாகாம லிருப்பதுநம் சதுரா லன்று;
சக்தியரு ளாலன்றோ பிறந்தோம் பார்மேல்?
பாகான தமிழினிலே பொருளைச் சொல்வேன்;
பாரீர்நீர் கேளீரோ,படைத்தோன் காப்பான்;
வேகாத மனங்கொண்டு களித்து வாழ்வீர்
மேதினியிலேதுவந்தால் எமக்கென் னென்றே. 9
தேம்பாமை
வடகோடிங் குயர்ந்தென்னே, சாய்ந்தா லென்னே,
வான்பிறைக்குத் தென்கோடு பார்மீ திங்கே
விடமுண்டுஞ் சாகாம லிருக்கக் கற்றால்,
வேறெதுதான் யாதாயின் எமக்கிங் கென்னே?
திடங்கொண்டு வாழ்ந்திடுவோம்,தேம்பல் வேண்டா;
தேம்புவதில் பயனில்லை,தேம்பி தேம்பி
இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி
எதற்குமினி அஞ்சாதீர் புவியி லுள்ளீர்! 10
பொறுமையின் பெருமை
திருத்தணிகை மலைமேலே குமார தேவன்
திருக்கொலுவீற றிருக்குமதன் பொருளைக் கேளர்!
திருத்தணிகை யென்பதிங்கு பொறுமை யின்பேர்,
செந்தமிழ்கண் டீர்,பகுதி: தணியே னுஞ்சொல்,
பொருத்தமுறுந் தணிகையினால் புலமை சேரும்,
பொறுத்தவரே பூமியினை ஆள்வார்என்னும்
அருத்தமிக்க பழமொழியும் தமிழிலுண்டாம்
அவனியிலே பொறையுடையான் அவனே தேவன். 11
பொறுமையினை அறக்கடவுள் தல்வனென்னும்
யுதிட்டிரனும் நெடுநாளிப் புவிமேல் காத்தான்,
இறுதியிலே பொறுமைநெறி தவறிவிட்டான்
ஆதலாற் போர்புரிந்தான் இளையா ரோடே;
பொறுமையின்றிப் போர்செய்து பரத நாட்டைப்
போர்க்களத்தே அழித்துவிட்டுப் புவியின் மீது
வறுமையையுங் கலியினைம் நிறுத்தி விட்டு
மலைமீது சென்றான்பின் வானஞ் சென்றான். 12
ஆனாலும் புவியின்மிசை உயிர்க ளெல்லாம்
அநியாய மரணமெய்தல் கொடுமை யன்றோ?
தேனான உயிரைவிட்டுச் சாகலாமோ?
செத்திடற்குக் காரணந்தான் யாதென் பீரேல்,
கோனாகிச் சாத்திரத்தை யாளு மாண்பார்
ஜயதீச சந்த்ரவ கூறுகின்றான்;
(ஞானானு பவத்திலிது முடிவாங் கண்டீர்!)
நாடியிலே அதிர்ச்சியினல் மரணம்என்றான். 13
கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி யுண்டாம்;
கொடுங்கோபம் பேரதிர்ச்சி:சிறிய கோபம்
ஆபத்தாம்,அதிர்ச்சியிலே சிறிய தாகும்;
அச்சத்தால் நாடியெலாம் அவிந்து போகும்;
தாபத்தால் நாடியெலாம் சிதைந்து போகும்.
கவலையினால் நாடியெலாம் தழலாய் வேகும்;
கோபத்தை வென்றிடலே பிறவற் றைத்தான்
கொல்வதற்கு வழியெனநான் குறித்திட் டேனே. 14
கடவுள் எங்கே இருக்கிறார்?
சொல்லடா! ஹரியென்ற கடவுள் எங்கே?
சொல் லென்று ஹிரணியன் தான் உறுமிக் கேட்க,
நல்லதொரு மகன்சொல்வான்;- தூணி லுள்ளான்
நாரா யணன்துரும்பி லுள்ளான் என்றான்.
வல்லபெருங் கடவுளிலா அணுவொன் றில்லை,
மஹாசக்தி யில்லாத வஸ்து வில்லை,
அல்லலில்லை அல்லலில்லை அல்ல லில்லை;
அனைத்துமே தெய்வமென்றால் அல்ல லுண்டோ? 15
கேளப்பா,சீடனே! கழுதை யொன்றைக்
கீழான பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப்பார்த் திருகரமுஞ் சிரமேற் கூப்பிச்
சங்கரசங் கரவென்று பணிதல் வேண்டும்;
கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும்;
கூடிநின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்.
மீளத்தான் இதைத்தெளிவா விரித்துச் சொல்வேன்;
விண்மட்டும் கடவுளன்று மண்ணும் அஃதே. 16
சுத்தஅறி வேசிவமென் றுரைத்தார் மேலோர்
சுத்தமண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்;
வித்தகனாம் குருசிவமென் றுரைத்தார் மேலோர்,
வித்தையிலாப் புலையனு மஃதென்னும் வேதம்;
பித்தரே அனைத்துயிருங் கடவுளென்று
பேசுவது மெய்யானால் பெண்டி ரென்றும்
நித்தநும தருகினிலே குழந்தை யென்றும்
நிற்பனவுந் தெய்வமன்றோ நிகழ்த்து வீரே? 17
உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன் றில்லை;
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
பயிலுமுயிர் வகைமட்டு மன்றி யிங்குப்
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;
வெயிலளிக்கும் இரவி,மதி,விண்மீன்,மேகம்
மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;
எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்; 18
குருக்கள் ஸ்துதி(குள்ளச்சாமி புகழ்)
ஞானகுரு தேசிகனைப் போற்று கின்றேன்;
நாடனைத்துந் தானாவான் நலிவி லாதான்;
மோனகுரு திருவருளால் பிறப்பு மாறி
முற்றிலும்நாம் அமரநிலை சூழ்ந்து விட்டோம்;
தேனனைய பராசக்தி திறத்தைக் காட்டிச்
சித்தினியல் காட்டிமனத் தெளிவு தந்தான்;
வானகத்தை இவ்வுலகி லிருந்து தீண்டும்
வகையுணர்த்திக் காத்தபிரான் பதங்கள் போற்றி! 19
எப்போதும் குருசரணம் நினைவாய்,நெஞ்சே!
எம்பெருமான் சிதம்பரதே சிகன்தான் எண்ணாய்!
முப்பாழுங் கடந்தபெரு வெளியைக் கண்டான்,
முக்தியெனும் வானகத்தே பரிதி யாவான்,
தப்பாத சாந்தநிலை அளித்த கோமான்,
தவம்நிறைந்த மாங்கொட்டைச் சாமித் தேவன்.
குப்பாய ஞானத்தால் மரண மென்ற
குளிர்நீக்கி யெனைக்காத்தான்,குமார தேவன்; 20
தேசத்தார் இவன்பெயரைக் குள்ளச் சாமி
தேவர்பிரான் என்றுரைப்பார்;தெளிந்த ஞானி
பாசத்தை அறுத்துவிட்டான்,பயத்தைச் சுட்டான்;
பாவனையால் பரவெளிக்கு மேலே தொட்டான்;
நாசத்தை அழித்துவிட்டான்;யமனைக் கொன்றான்;
ஞானகங்கை தலைமுடிமீ தேந்தி நின்றான்;
ஆசையெனும் கொடிக்கொருகாழ் மரமே போன்றான்;
ஆதியவன் சுடர்ப்பாதம் புகழ்கின் றேனே. 21
வாயினால் சொல்லிடவும் அடங்கா தப்பா;
வரிசையுடன் எழுதிவைக்க வகையும் இல்லை.
ஞாயிற்றைச் சங்கிலியால் அளக்க லாமோ?
ஞானகுரு புகழினைநாம் வகுக்க லாமோ?
ஆயிர நூல் எழுதிடினும் முடிவு றாதாம்
ஐயனவன் பெருமையைநான் சுருக்கிக் சொல்வேன்;
காயகற்பஞ் செய்துவிட்டான்; அவன்வாழ் நாளைக்
கணகிட்டு வயதுரைப்பார் யாரும் இல்லை. 22
குருதரிசனம்
அன்றொருநாட் புதுவைநகர் தனிலே கீர்த்தி
அடைக்கலஞ்சேர் ஈசுவரன் தர்ம ராஜா
என்றபெயர் வீதியிலோர் சிறிய வீட்டில்,
இராஜாரா மையனென்ற நாகைப் பார்ப்பான்
முன்தனது பிதாதமிழில் உபநி டத்தை
மொழிபெயர்த்து வைத்ததனைத் திருத்தச் சொல்லி
என்தனைவேண் டிக்கொள்ள யான்சென் றாங்கண்
இருக்கையிலே அங்குவந்தான் குள்ளச் சாமி. 23
அப்போது நான் குள்ளச் சாமி கையை
அன்புடனே பற்றியிது பேச லுற்றேன்;
அப்பனே!தேசிகனே!ஞானி என்பார்.
அவனியிலே சிலர்நின்னைப் பித்தன் என்பார்;
செப்புறுநல் லஷ்டாங்க யோக சித்தி
சேர்ந்தவனென் றுனைப்புகழ்வார் சிலரென் முன்னே;
ஒப்பனைகள் காட்டாமல் உண்மை சொல்வாய்,
உத்தமனே! எனக்குநினை உணர்த்து வாயே. 24
யாவன்நீ? நினக்குள்ள திறமை யென்னே?
யாதுணர்வாய்? கந்தைசுற்றித் திரிவ தென்னே?
தேவனைப்போல் விழிப்ப தென்னே?சிறியாரோடும்
தெருவிலே நாய்களொடும் விளையாட் டென்னே?
பாவனையிற் புத்தரைப்போல் அலைவ தென்னே?
பரமசிவன் போலுருவம் படைத்த தென்னே?
ஆவலற்று நின்றதென்னே? அறிந்த தெல்லாம்,
ஆரியனே,எனக்குணர்ந்த வேண்டும்  என்றேன். 25
பற்றியகை திருகியந்தக் குள்ளச் சாமி
பரிந்தோடப் பார்த்தான்;யான் விடவே யில்லை,
சுற்றுமுற்றும் பார்த்துப்பின் முறுவல் பூத்தான்;
தூயதிருக் கமலபதத் துணையைப் பார்த்தேன்!
குற்றமற்ற தேசிகனும் திமிறிக் கொண்டு
குதிக்தோடி அவ்வீட்டுக் கொல்லை சேர்ந்தான்;
மற்றவன்பின் யானோடி விரைந்து சென்று
வானவனைக் கொல்லையிலே மறித்துக் கொண்டேன். 26
உபதேசம்
பக்கத்து வீடிடிந்து சுவர்கள் வீழ்ந்த
பாழ்மனையொன் றிருந்ததங்கே;பரமயோகி
ஒக்கத்தன் அருள்விழியால் என்னை நோக்கி
ஒருகுட்டிச் சுவர்காட்டிப் பரிதி காட்டி,
அக்கணமே கிணற்றுளதன் விம்பங் காட்டி,
அறிதிகொலோ?எனக்கேட்டான் அறியான் என்றேன்
மிக்கமகிழ் கொண்டவனும் சென்றான்; யானும்
வேதாந்த மரத்திலொரு வேரைக் கண்டேன். 27
தேசிகன்கை காட்டியெனக் குரைத்த செய்தி
செந்தமிழில் உலகத்தார்க் குணர்த்து கின்றேன்;
வாசியைநீ கும்பத்தால் வலியக் கட்டி,
மண்போலே சுவர்போலே வாழ்தல் வேண்டும்;
தேசுடைய பரிதியுருக் கிணற்றி னுள்ளே
தெரிவதுபோல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்;
பேசுவதில் பயனில்லை,அனுப வத்தால்
பேரின்பம் எய்துவதே ஞானம்என்றான். 28
கையிலொரு நூலிருந்தால் விரிக்கச் சொல்வேன்.
கருத்தையதில் காட்டுவேன்;வானைக் காட்டி,
மையிலகு விழியாளின் காதலொன்றே
வையகத்தில் வாழுநெறியென்று காட்டி,
ஐயனெனக் குணர்த்தியன பலவாம் ஞானம்,
அதற்கவன்காட் டியகுறிப்போ அநந்த மாகும்,
பொய்யறியா ஞானகுரு சிதம்ப ரேசன்
பூமிவிநா யகன்குள்ளச் சாமி யங்கே. 29
மற்றொருநாள் பழங்கந்தை யழுக்கு மூட்டை
வளமுறவே கட்டியவன் முதுகின் மீது
கற்றவர்கள் பணிந்தேத்தும் கமல பாதக்
கருணைமுனி சுமந்துகொண்டேன் னெதிரே வந்தான்;
சற்றுநகை புரிந்தவன்பால் கேட்க லானேன்;
தம்பிரானே!இந்தத் தகைமை என்னே?
முற்றுமிது பித்தருடைச் செய்கை யன்றோ?
மூட்டைசுமந் திடுவதென்னே? மொழிவாய்என்றேன் 30
புன்னகைபூத் தாரியனும் புகலு கின்றான்;
புறத்தேநான் சுமக்கின்றேன்; அகத்தி னுள்ளே,
இன்னதொரு பழங்குப்பை சுமக்கி றாய்நீ
என்றுரைத்து விரைந்தவனும் ஏகி விட்டான்.
மன்னவபன்சொற் பொருளினையான் கண்டுகொண்டேன்;
மனத்தினுள்ளே பழம்பொய்கள் வளர்ப்ப தாலே
இன்னலுற்ற மாந்தரெலாம் மடிவார் வீணே,
இருதயத்தில் விடுதலையை இசைத்தல் வேண்டும் 31
சென்றதினி மீளாது;மட ரேநீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர் சென்றதனைக் குறித்தல் வேண்டா;
இன்றுபுதி தாப்பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைனத்துக் கொண்டு
தின்றுவிளை யடியின்புற் றிருந்து வாழ்வீர்;
அஃதின்றிச் சென்றதையே மீட்டும் மீட்டும், 32
மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா,அந்தோ!
மேதையில்லா மானுடரே! மேலும் மேலும்
மேன்மேலும் புதியகாற் றெம்முள் வந்து
மேன்மேலும் புதியவுயிர் விளைத்தல் கண்டீர்,
ஆன்மாவென் றேகருமத் தொடர்பை யெண்ணி
அறிவுமயக் கங்கொண்டு கெடுகின் றீரே?
மான்மானும் விழியுடையாள் சக்தி தேவி
வசப்பட்டுத் தனைமறந்து வாழ்தல் வேண்டும். 33
சென்றவினைப் பயன்களெனைத் தீண்ட மாட்டா;
ஸ்ரீதரன்யன் சிவகுமா ரன்யா னன்றோ?
நன்றிந்தக் கணம்புதிதாப் பிறந்து விட்டேன்,
நான்புதியன்,நான்கடவுள் ,நலிவி லாதோன்
என்றிந்த வுலகின்மிசை வானோர் போலே
இயன்றிடுவார் சித்தரென்பார்; பரம தர்மக்
குன்றின்மிசை யொருபாய்ச்ச லாகப் பாய்ந்து,
குறிப்பற்றார் கேடற்றார் குலைத லற்றார். 34
குறியனந்த முடையோராய்க் கோடி செய்தும்
குவலயத்தில் வினைக்கடிமைப் படாதா ராகி
வெறியுடையோன் உமையாளை இடத்தி லேற்றோன்
வேதகுரு பரமசிவன் வித்தை பெற்றுச்
செறிவுடைய பழவினையாம் இருளைச் செற்றுத்
தீயினைப்போல் மண்மீது திரிவார் மேலோர்,
அறிவுடைய சீடா. நீ குறிப்பை நீக்கி
அநந்தமாம் தொழில்செய்தால் அமர னாவாய். 35
கேளப்பா!மேற்சொன்ன உண்மை யெல்லாம்
கேடற்ற மதியுடையான் குள்ளச் சாமி
நாளும்பல் காட்டாலும் குறிப்பி னாலும்
நலமுடைய மொழியாலும் விளக்கித் தந்தான்;
தோளைப்பார்த் துக்களித்தல் போலே யன்னான்
துணையடிகள் பார்த்துமனம் களிப்பேன் யானே;
வாளைப்பார்த் தின்பமுறு மன்னர் போற்றும்
மலர்த்தாளான் மாங்கொட்டைச் சாமி வாழ்க! 36
கோவிந்த ஸ்வாமி புகழ்
மாங்கொட்டைச் சாமிபுகழ் சிறிது சொன்னோம்;
வண்மைதிகழ் கோவிந்த ஞானி,பார்மேல்
யாங்கற்ற கல்வியெலாம் பலிக்கச் செய்தான்,
எம்பெருமான் பெருமையையிங் கிசைக்கக் கேளீர்!
தீங்கற்ற குணமுடையான்,புதுவை யூரார்
செய்தபெருந் தவத்தாலே உதித்த தேவன்.
பாங்குற்ற மாங்கொட்டைச் சாமி போலே
பயிலுமதி வர்ணாசிர மத்தே நிற்போன். 37
அன்பினால் முக்தியென்றான் புத்தன் அந்நாள்;
அதனையிந்நாட் கோவிந்த சாமி செய்தான்;
துன்பமுறும் உயிர்க்கெல்லாம் தாயைப் போலே
சுரக்குமரு ளுடையபிரான் துணிந்த யோகி;
அன்பினுக்குக் கடலையுந்தான் விழுங்க வல்லான்;
அன்பினையே தெய்வமென்பான் அன்பே யாவான்
மன்பதைகள் யாவுமிங்கே தெய்வம் என்ற
மதிவுடையான்,கவலையெனும் மயக்கம் தீர்ந்தான்; 38
பொன்னடியால் என்மனையைப் புனித மாக்கப்
போந்தானிம் முனியொருநாள்; இறந்த எந்தை
தன்னுருவங் காட்டினான்; பின்னர் என்னைத்
தரணிமிசைப் பெற்றவளின் வடிவ முற்றான்;
அன்னவன்மா யோகியென்றும் பரமஞானத்
தனுபூதி யுடையனென்றும் அறிந்து கொண்டேன்.
மன்னவனைக் குருவெனநான் சரண டைந்தேன்;
மரணபயம் நீங்கினேன்; வலிமை பெற்றேன் 39
யாழ்ப்பாணத்து ஸ்வாமியின் புகழ்
கோவிந்த சாமிபுகழ் சிறிது சொன்னேன்;
குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பா ணத்தான்,
தேவிபதம் மறவாத தீர ஞானி,
சிதம்பரத்து நடராஜ மூர்த்தி யாவான்,
பாவியரைக் கரையேற்றும் ஞானத் தோணி,
பரமபத வாயிலெனும் பார்வை யாளன்;
காவிவளர் தடங்களிலே மீன்கள் பாயுங்
கழனிகள்சூழ் புதுவையிலே அவனைக் கண்டேன். 40
தங்கத்தாற் பதுமைசெய்தும் இரத லிங்கம்
சமைத்துமவற் றினிலீசன் தாளைப் போற்றும்
துங்கமுறு பத்ர்பலர் புவிமீ துள்ளார்;
தோழரே!எந்நாளும் எனக்குப் பார்மேல்
மங்களஞ்சேர் திருவிழியால் அருளைப் பெய்யும்
வானவர்கோன்.யாழ்ப்பாணத் தீசன் தன்னைச்
சங்கரனென் றெப்போதும் முன்னே கொண்டு
சாரணடைந்தால் அதுகண்டீர் சர்வ சித்தி. 41
குவளைக் கண்ணன் புகழ்
யாழ்ப்பாணத் தையனையென் னிடங்கொ ணர்ந்தான்,
இணையடியை நந்திபிரான் முதுகில் வைத்துக்
காழ்ப்பான கயிலைமிசை வாழ்வான்,பார்மேல்
கனத்தபுகழ்க் குவளையூர்க் கண்ணன் என்பான்;
பார்ப்பாரக் குலத்தினிலே பிறந்தான் கண்ணன்,
பறையரையும் மறவரையும் நிகராக் கொண்டான்;
தீர்ப்பான சுருதிவழி தன்னிற் சேர்ந்தான்
சிவனடியார் இவன்மீது கருணை கொண்டார். 42
மகத்தான முனிவரெலாம் கண்ணன் தோழர்;
வானவரெல் லாங்கண்ணன் அடியா ராவார்;
மகத்தானு முயர்ந்ததுணி வுடைய நெஞ்சின்
வீரர்பிரான் குவளையூர்க் கண்ணன் என்பான்,
ஜகத்தினிலோர் உவமையிலா யாழ்ப்பா ணத்து
சாமிதனை யிவனென்றன் மனைக்கொ ணர்ந்தான்
அகத்தினிலே அவன்பாத மலரைப் பூண்டேன்;
அன்றேயப் போதேவீ டதுவே வீடு. 43
பாங்கான குருக்களைநாம் போற்றிக் கொண்டோம்,
பாரினிலே பயந்தெளிந்தோம்; பாச மற்றோம்
நீங்காத சிவசக்தி யருளைப் பெற்றோம்;
நிலத்தின்மிசை அமரநிலை யுற்றோம் அப்பா!
தாங்காமல் வையகத்தை அழிக்கும் வேந்தர்,
தாரணியில் பலருள்ளார்,தருக்கி வீழ்வார்;
ஏங்காமல் அஞ்சாமல் இடர்செய் யாமல்
என் றுமருள் ஞானியரே எமக்கு வேந்தர். 44
பெண் விடுதலை
பெண்ணுக்கு விடுதலையென் றிங்கோர் நீதி
பிறப்பித்தேன்;அதற்குரிய வெற்றி கேளீர்;
மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வ மென்றால்
மனையாளும் தெய்வமன்றோ? மதிகெட் டீரே!
விண்ணுக்குப் பறப்பதுபோல் கதைகள் சொல்வீர்
விடுதலையென் பீர்,கருணை வெள்ள மென்பீர்,
பெண்ணுக்கு விடுதலைநீ ரில்லை யென்றால்
பின்னிந்த உலகினிலே வாழ்க்கை யில்லை. 45
தாய் மாண்பு
பெண்டாட்டி தனையடிமைப் படுத்த வேண்டிப்
பெண்குலத்தை முழுதடிமைப் படுத்த லாமோ?
கண்டார்க்கு நகைப் பென்னும் உலக வாழ்க்கை
காதலெனும் கதையினுடைக் குழப்ப மன்றோ?
உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை
உமையவளென் றறியீரோ? உணர்ச்சி கெட்டீர்?
பண்டாய்ச்சி ஔவை: அன் னையும் பிதாவும்
பாரிடை முன் னறிதெய்வம் என்றாள் அன்றோ? 46
தாய்க்குமேல் இங்கேயோர் தெவ் முண்டோ?
தாய்பெண்ணே யல்லளோ? தமக்கை,தங்கை
வாய்க்கும்பெண் மகவெல்லாம் பெண்ணே யன்றோ?
மனைவியொருத் தியையடிமைப் படத்த வேண்டித்
தாய்க்குலத்தை முழுதடிமைப் படுத்த லாமோ?
தாயைப்போ லேபிள்ளை என்று முன்னோர்
வாக்குளதன் றோபெண்மை அடிமை யுற்றால்
மக்களெலாம் அடிமையுறல் வியப்பொன் றாமோ? 47
வீட்டிலுள்ள பழக்கமே நாட்டி லுண்டாம்
வீட்டினிலே தனக்கடிமை பிறராம் என்பான்;
நாட்டினிலே....... .... .... ...
நாடோறும் முயன்றிடுவான் நலிந்து சாவான்;
காட்டிலுள்ள பறவைகள்போல் வாழ்வோம்,அப்பா
காதலிங்கே உண்டாயிற் கவலை யில்லை;
பாட்டினிலே காதலைநான் பாட வேண்டிப்
பரமசிவன் பாதமலர் பணிகின்றேனே. 48
காதலின் புகழ்
காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்
கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
ஆதலினால் காதல்செய்வீர்;உலகத் தீரே
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்?
காதலினர்ல் சாகாம லிருத்தல் கூடும்;
கவலைபோம், அதனாலே மரணம் பொய்யாம். 49
ஆதிசக்தி தனையுடம்பில் அரனும் கோத்தான்;
அயன்வாணி தனைநாவில் அமர்த்திக் கொண்டான்;
சோதிமணி முகத்தினளைச் செல்வ மெல்லாம்
சுரந்தருளும் விழியாளைத் திருவை மார்பில்
மாதவனும் ஏந்தினான்: வானோர்க் கேனும்
மாதரின்பம் போற்பிறிதோர் இன்பம் உண்டோ?
காதல்செயும் மனைவியே சதி கண்டீர்
கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும். 50
கொங்கைகளே சிவலிங்கம் என்று கூறிக்
கோக்கவிஞன் காளிதா சனும்பூ ஜித்தான்;
மங்கைதனைக் காட்டினிலும் உடன்கொண் டேகி
மற்றவட்கா மதிமயங்கிப் பொன்மான் பின்னே
சிங்கநிகர் வீரர்பிரான் தெளிவின் மிக்க
ஸ்ரீதரனுஞ் சென்றுபல துன்ப முற்றான்;
இங்குபுவி மிசைக்காவி யங்க ளெல்லாம்
இலக்கியமெல் லாங்காதற் புகழ்ச்சி யன்றோ? 51
நாடகத்தில் காவியத்தில் காத லென்றால்
நாட்டி னர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்;
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோ ரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமு கின்றார்;
பாடைகட்டி அதைக்கொல்ல வழிசெய் கின்றார்;
பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க
மூடரெலாம் பொறாமையினால் விதிகள் செய்து
முறைதவறி இடரெய்திக் கெடுகின் றாரே. 52
காதலிலே இப்மெய்திக் களித்து நின்றால்
கனமான மன்னவர்போர் எண்ணுவாரோ?
மாதருடன் மனமொன்றி மயங்கி விட்டால்
மந்திரிமார் போர்த்தொழிலை மனங்கொள் வாரோ?
பாதிநடுக் கலவியிலே காதல் பேசிப்
பகலெல்லாம் இரவெல்லாம் குருவி போலே
காதலிலே மாதருடன் களித்து வாழ்ந்தால்
படைத்தலைவர் போர்த்தொழிலைக் கருது வாரோ? 53
விடுதலைக் காதல்
காதலிலே விடுதலையென் றாங்கோர் கொள்கை
கடுகிவளர்ந் திடுமென்பார் யூரோப் பாவில்;
மாதரெலாம் தம்முடைய விருப்பின் வண்ணம்
மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார் அன்னோர்;
பேதமின்றி மிருகங்கள் கலத்தல் போலே
பிரியம்வந்தால் கலந்தன்பு; பிரிந்து விட்டால்,
வேதனையொன் றில்லாதே பிரிந்து சென்று
வேறொருவன் றனைக்கூட வேண்டும் என்பார். 54
வீரமிலா மனிதர்சொலும் வார்த்தை கண்டீர்!
விடுதலையாங் காதலெனிற் பொய்மைக் காதல்!
சோரரைப்போல் ஆண்மக்கள் புவியின் மீது
சுவைமிக்க பெண்மைநல முண்ணு கின்றார்
காரணந்தான் யாதெனிலோ ஆண்க ளெல்லாம்
களவின்பம் விரும்புகின்றார்; கற்பே மேலென்று
ஈரமின்றி யெப்போதும் உபதே சங்கள்
எடுத்தெடுத்துப் பெண்களிடம் இயம்பு வாரே! 55
ஆணெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால்,
அப்போது பெண்மையுங்கற் பழிந்தி டாதோ?
நாணற்ற வார்த்தையன்றோ? வீட்டைச் சுட்டால்,
நலமான கூரையுந்தான் எரிந்தி டாதோ?
பேணுமொரு காதலினை வேண்டி யன்றோ
பெண்மக்கள் கற்புநிலை பிறழு கின்றார்?
காணுகின்ற காட்சியெல்லாம் மறைத்து வைத்துக்
கற்புக்கற் பென்றுலகோர் கதைக்கின் றாரே? 56
சர்வ மத சமரசம்
(கோவிந்த ஸ்வாமியுடன் சம்பாஷணை)

மீளவுமங் கொருபகலில் வந்தான் என்தன்
மனையிடத்தே கோவிந்த வீர ஞானி,
ஆளவந்தான் பூமியினை,அவனி வேந்தர்
அனைவருக்கும் மேலானோன்,அன்பு வேந்தன்;
நாளைப்பார்த் தொளிர்தருநன் மலரைப் போலே
நம்பிரான் வரவுகண்டு மனம்ம லர்ந்தேன்;
வேளையிலே நமதுதொழில் முடித்துக் கொள்வோம்.
வெளிலுள்ள போதினிலே உலத்திக் கொள்வோம்;  57
காற்றுள்ள போதேநாம் தூற்றி கொள்வோம்;
கனமான குருவையெதிர் கண்ட போதே
மாற்றான அகந்தையினைத் துடைத்துக் கொள்வோம்;
மலமான மறதியினை மடித்துக் கொள்வோம்;
கூற்றான அரக்கருயிர் முடித்துக் கொள்வோம்;
குலைவான மாயைதனை அடித்துக் கொல்வோம்;
பேற்றாலே குருவந்தான்;இவன்பால் ஞானப்
பேற்றையெல்லாம் பெறுவோம்யாம் என்றேனுள்ளே 58
சிந்தித்துமெய்ப்பொருளை உணர்த்தாய் ஐயோ!
தேய்வென்ற மரணத்தைத் தேய்க்கும் வண்ணம்
வந்தித்து நினைக்கேட்டேன் கூறாய் என்றேன்.
வானவனாம் கோவிந்த சாமி சொல்வான்;
அந்தமிலா மாதேவன் கயிலை வேந்தன்
அரவிந்த சரணங்கள் முடிமேற் கொள்வோம்;
பந்தமில்லை பந்தமில்லை; பந்தம் இல்லை;
பயமில்லை; பயமில்லை; பயமே இல்லை. 59
அதுவேநீ யென்பதுமுன் வேத வோத்தாம்;
அதுவென்றால் எதுவெனநான் அறையக் கேளாய்!
அதுவென்றால் மன்னிற்கும் பொரளின் நாமம்;
அவனியிலே பொருளெல்லாம் அதுவாம்; நீயும்
அதுவன்றிப் பிறிதில்லை; ஆத லாலே,
அவனியின்மீ தெதுவரினும் அசைவு றாமல்
மதுவுண்ட மலர்மாலை இராமன் தாளை
மனத்தினிலே நிறுத்தியிங்கு வாழ்வாய், சீடா! 60
பாரான உடம்பினிலே மயிர்க ளைப்போல்
பலப்பலவாம் பூண்டுவரும் இயற்கை யாலே;
நேராக மானுடர்தாம் பிறரைக் கொல்ல
நினையாமல் வாழ்ந்திட்டால் உழுதல் வேண்டா;
காரான நிலத்தைப்போய்த் திருத்த வேண்டா;
கால்வாய்கள் பாய்ச்சுவதில் கலகம் வேண்டா;
சீரான மழைபெய்யும் தெய்வ முண்டு;
சிவன்செத்தா லன் றிமண்மேல் செழுமை உண்டு 61
ஆதலால் மானிடர்கள் களவை விட்டால்
அனைவருக்கும் உழைப்பின்றி உணவுண் டாகும்;
பேதமிட்டுக் கலகமிட்டு வேலி கட்டிப்
பின்னதற்குக் காவலென்று பேரு மிட்டு
நீதமில்லாக் கள்வர்நெறி யாயிற் றப்பா
நினைக்குங்கால் இது கொடிய நிகழ்ச்சி யன்றோ?
பாதமலர் காட்டிநினை அன்னை காத்தாள்;
பாரினிலித் தருமம் நீ பகரு வாயே. 62
ஒருமொழியே பலமொழிக்கும் இடங்கொ டுக்கும்
ஒருமொழியே மலமொழிக்கும் ஒழிக்கும் என்ற
ஒருமொழியைக் கருத்தினிலே நிறுத்தும் வண்ணம்
ஒருமொழி ஓம் நமச் சிவாயவென்பர்:
ஹரி ஹரி யென் றிடினும் அஃதே ராம ராம
சிவ சிவ வென் றிட்டாலும் அஃதே யாகும்;
தெரிவுறவேஓம் சக்தி யென்று மேலோர்
ஜெபம்புரிவ தப்பொருளின் பெயரே யாகும். 63
சாரமுள்ள பொருளினைநான் சொல்லி விட்டேன்;
சங்சலங்கள் இனிவேண்டா. சரதந் தெய்வம்;
ஈரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்
எப்போதும் அருளைமனத் திசைத்துக்கொள்வாய்
வீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்;
எப்போதும் வீரமிக்க விகைள் செய்வாய்;
பேருயர்ந்த யேஹேவா அல்லா நாமம்
பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும். 64
பூமியிலே,கண்டம் ஐந்து,மதங்கள் கோடி!
புத்த மதம்,சமண மதம் பார்ஸி மார்க்கம்
சாமியென யேசுபதம் போற்று மார்க்கம்.
சநாதன மாம் ஹிந்து மதம்,இஸ்லாம்,யூதம்.
நாமமுயர் சீனத்துத் தாவுமார்க்கம்,
நல்லகண் பூசிமதம் முதலாப் பார்மேல்
யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே:
யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கொன்றே 65
பூமியிலே வழங்கிவரும் மதத்துக் கெல்லாம்
பொருளினைநாம் இங்கெடுத்துப் புகலக் கேளாய்;
சாமி நீ: சாமி நீ:கடவுள் நீயே;
தத்வமஸி; தத்வமஸி; நீயே அஃதாம்;
பூமியிலே நீ கடவு ளில்லை யென்று
புகல்வதுநின் மனத்துள்ளே புகுந்த மாயை;
சாமிநீ அம்மாயை தன்னை நீக்கி
சதாகாலம் சிவோஹ மென்று சாதிப் பாயே 66
Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்

வசன கவிதை





1. காட்சி
முதற்கிளை : இன்பம்
1. இவ்வுலகம் இனியது இதிலுள்ள வான் இனிமையுடைத்து;
காற்றும் இனிது. தீ இனிது. நீர் இனிது. நிலம் இனிது.
ஞாயிறு நன்று; திங்களும் நன்று. வானத்துச் சுடர்களெல்லாம்
மிக இனியன. மழை இனிது. மின்னல் இனிது. இடி இனிது.
கடல் இனிது, மலை இனிது காடுநன்று. ஆறுகள் இனியன.
உலோகமும், மரமும், செடியும், கொடியும், மலரும், காயும், கனியும் இனியன.
பறவைகள் இனியன. ஊர்வனவும் நல்லன. விலங்குகளெல்லாம் இனியவை, நீர் வாழ்வனவும் நல்லன. மனிதர் மிகவும் இனியர். ஆண் நன்று. பெண் இனிது. குழந்தை இன்பம். இளமை இனிது. முதுமை நன்று. உயிர் நன்று. சாதல் இனிது.
2. உடல் நன்று. புலன்கள் மிகவும் இனியன. உயிர் சுவையுடையது.
மனம் தேன். அறிவு தேன். உணர்வு அமுதம். உணர்வே அமுதம். உணர்வு தெய்வம்.
3. மனம் தெய்வம். சித்தம் தெய்வம். உயிர் தெய்வம்.
காடு, மலை, அருவி, ஆறு, கடல், நிலம், நீர், காற்று, தீ, வான், ஞாயிறு, திங்கள், வானத்துச் சுடர்கள் -எல்லாம் தெய்வங்கள்.
உலோகங்கள், மரங்கள், செடிகள், விலங்குகள், பறவைகள், ஊர்வன, நீந்துவன, மனிதர்-இவை அமுதங்கள்.
4. இவ்வுலகம் ஒன்று. ஆண், பெண், மனிதர், தேவர், பாம்பு, பறவை, காற்று, கடல், உயிர், இறப்பு-இவையனைத்தும் ஒன்றே.  ஞாயிறு, வீட்டுச்சுவர், ஈ, மலை யருவி, குழல், கோமேதகம், -இவ் வனைத்தும் ஒன்றே. இன்பம், துன்பம், பாட்டு, வண்ணான், குருவி, மின்னல், பருத்தி, இஃதெல்லாம் ஒன்று. மூடன், புலவன், இரும்பு, வெட்டுக்கிளி-இவை ஒரு பொருள். வேதம், கடல்மீன், புயற்காற்று, மல்லிகை மலர்-இவை ஒரு பொருளின் பல தோற்றம். உள்ள தெல்லாம் ஒரே பொருள்; ஒன்று. இந்த ஒன்றின் பெயர்தான்; தானே; தெய்வம், தான் அமுதம், இறவாதது.
5. எல்லா உயிரும் இன்பமெய்துக. எல்லா உடலும் நோய் தீர்க. எல்லா உணர்வும் ஒன்றாதலுணர்க. தான் வாழ்க. அமுதம் எப்போதும் இன்ப மாகுக.
6. தெய்வங்களை வாழ்த்துகின்றோம். தெய்வங்கள் இன்ப மெய்துக. அவை வாழ்க. அவை வெல்க. தெய்வங்களே!
என்றும் விளங்குவீர்; என்றும் இன்ப மெய்துவீர்; என்றும் வாழ்வீர்; என்றும் அருள் புரிவீர். எவற்றையும் காப்பீர். உமக்கு நன்று தெய்வங்களே!
எம்மை உண்பீர், எமக்கு உண வாவீர், உலகத்தை உண்பீர், உலகத்துக்கு உணவாவீர். உமக்கு நன்று. தெய்வங்களே!
காத்தல் இனிது, காக்கப் படுவதும் இனிது. அழித்தல் நன்று, அழிக்கப்படுதலும் நன்று. உண்பது நன்று, உண்ணப் படுதலும் நன்று.
சுவை நன்று, உயிர் நன்று, நன்று, நன்று,
7. உணர்வே நீ வாழ்க. நீ ஒன்று, நீ ஒளி. நீ ஒன்று, நீ பல. நீ நட்பு, நீ பகை. உள்ளதும், இல்லாததும் நீ. அறிவதும் அறியாததும் நீ.
நன்றும், தீதும் நீ, நீ அமுதம், நீ சுவை. நீ நன்று. நீ இன்பம்.
இரண்டாங் கிளை: புகழ்
ஞாயிறு
1. ஒளி தருவது யாது? தீராத இளமையுடையது யாது?
வெய்யவன் யாவன்? இன்பம் எவனுடையது? மழை எவன் தருகின்றான்? கண் எவனுடையது? உணி எவன் தருகின்றான்?
புகழ் எவன் தருகின்றான்? புகழ் எவனுக்குரியது? அறிவு எதுபோல் சுடரும்? அறிவுத் தெய்வத்தின் கோயில் எது? ஞாயிறு. அது நன்று.
2. நீ ஒளி , நீ சுடர், நீ விளக்கம், நீ காட்சி, மின்னல், இரத்தினம், கனல், தீக் கொழுந்து-இவையெல்லாம் நினது திகழ்ச்சி.
கண் நினது வீடு.
புகழ், வீரம்-இவை நினது லீலை. அறிவு நின் குறி. அறிவின் குறி நீ, நீ சுடுகின்றாய், வாழ்க. நீ காட்டுகின்றாய், வாழ்க.
உயிர் துருகின்றாய், உடல் தருகின்றாய், வளர்க்கின்றாய், மாய்க்கின்றாய், நீர் தருகின்றாய், காற்றை வீசுகின்றாய், வாழ்க.
3. வைகறையின் செம்மை இனிது. மலர்கள் போல நகைக்கும் உஷை வாழ்க!
உஷையை நாங்கள் தொழுகின்றோம். அவள் திரு. அவள்
விழிப்புத் தருகின்றாள். தெளிவு தருகின்றாள். உயி தருகின்றாள். ஊக்கந் தருகின்றாள். அழகு தருகின்றாள், கவிதை தருகின்றாள்,
அவள் வாழ்க. அவள் தேன் சித்த வண்டு அவளை விரும்புகின்றது. அவள்
அமுதம், அவள் இறப்பதில்லை. வலிமையுடன் கலக்கின்றாள். வலிமைதான் அழகுடன் கலக்கும், இனிமை மிகவும் பெரிது.
வட மேருவிலே பலவாகத் தொடர்ந்து தருவாள். வானடியைச் சூழ நகைத்துத் திரிவாள். அவளுடைய நகைப்புக்கள் வாழ்க.
தெற்கே நமக்கு ஒருத்தியாக வருகின்றாள், அன்பு மிகுதியால், ஒன்று பலவினும் இனி தன்றோ? வைகறை நன்று. அதனை வாழ்த்துகின்றோம்.
4. நீ சுடுகின்றாய். நீ வருத்தந் தருகின்றாய். நீ விடாய் தருகின்றாய். சோர்வு தருகின்றாய். பசி தருகின்றாய். இவை இனியன.
நீ கடல்நீரை வற்றடிக்கிறாய். இனியமழை தருகின்றாய். வான வெளியிலே விளக்கேற்றுகிறாய். இருளைத் தின்று விடுகின்றாய். நீ வாழ்க.
5. ஞாயிறே, இருளை என்ன செய்துவிட்டாய்? ஓட்டினாயா? கொன்றாயா? விழுங்கிவிட்டாயா? கட்டி முத்தமிட்டு நின் கதிர்களாகிய கைகளால் மறைத்துவிட்டாயா? இருள் நினக்குப் பகையா? இருள் நின் உணவுப் பொருளா? அது நின் காதலியா? இரவெல்லாம் நின்னைக் காணாத மயக்கத்தால் இருண்டிருந்ததா? நின்னைக் கண்டவுடன் நின்னொளி தானுங்கொண்டு நின்னைக் கலந்துவிட்டதா?நீங்கள் இருவரும் ஒருதாய் வயிற்றுக் குழந்தைகளா? முன்னும் பின்னுமாக வந்து உலகத்தைக் காக்கும்படி உங்கள் தாய் ஏவி யிருக்கிறாளா? உங்களுக்கு மரண மில்லையா? நீங்கள் அமுதமா? உங்களைப் புகழ்கின்றேன், ஞாயிறே, உன்னைப் புகழ்கின்றேன்.
6. ஒளியே, நீ யார்? ஞாயிற்றின் மகளா? அன்று, நீ ஞாயிற்றின் உயிர். அதன் தெய்வம்.
ஞாயிற்றினிடத்தே நின்னைத்தான் புகழ்கின்றோம். ஞாயிற்றின் வடிவம் உடல் நீ உயர் ஒளியே நீ எப்போது தோன்றியான்?
நின்னை யாவர் படைத்தனர்; ஒளியே நீ யார்? உனதியல்பு யாது?
நீ அறிவின் மகள் போலும். அறிவுதான் தூங்கிக்கிடக்கும். தெளிவு நீ போலும். அறிவின் உடல் போலும்.
ஒளியே நினக்கு வானவெளி எத்தனை நாட்வழக்கம்? உனக்கு அதனிடத்தே இவ்வகைப் பட்ட அன்பு யாது பற்றியது, அதனுடன் நீ எப்படி இரண்டறக் கலக்கிறாய்? உங்களையெல்லாம் படைத்வள் வித்தைக்காரி. அவள் மோஹினி. மாயக்காரி. அவளைத் தொழுகின்றோம். ஒளியே, வாழ்க!
7. ஞாயிறே! நின்னிடத்து ஒளி எங்ஙனம் நிற்கின்றது? நீ அதனை உமிழ்கின்றாயா? அது நின்னைத் தின்னுகிறதா?
அன்றி, ஒளி தவிர நீ வேறோன்றுமில்லையா?
விளக்குத்திரி காற்றாகிச் சுடர் தருகின்றது. காற்றுக்கும் சுடருக்கும் எவ்வகை உறவு? காற்றின் வடிவே திரியென்றறிவோம்.
ஒளியின் வடிவே காற்றுப் போலும். ஒளியே நீ இனிமை.
8. ஒளிக்கும் வெம்மைக்கும் எவ்வகை உறவு? வெம்மை யேற ஒளி தோன்றும். வெம்மையைத் தொழுகின்றோம்.
வெம்மை ஒளியின் தாய். ஒளியின் முன்னுருவம்.
வெம்மையே, நீ தீ. நீ தான் வீரத் தெய்வம். தீ தான் ஞாயிறு.
தீயின் இயல்பே ஒளி. தீ எரிக. அதனிடத்தே நெய் பொழிகின்றோம். தீ எரிக. அதனிடத்தே தசை பொழிகின்றோம்.
தீ எரிக அதனிடத்தே செந்நீர் பொழிகின்றோம் தீ எரிக. அதற்கு வேள்வி செய்கின்றோம். தீ எரிக.
அறத் தீ, அறிவுத் தீ, உயிர்த் தீ, விரதத் தீ, வேள்வித் தீ, சினத் தீ, பகைமைத் தீ, கொடுமைத் தீ-இவை யனைத்தையும் தொழுகின்றோம்.
இவற்றைக் காக்கின்றோம் இவற்றை ஆளுகின்றோம். தீயே நீ எமது உயிரின் தோழன். உன்னை வாழ்த்துகின்றோம்.
நின்னைப்போல, எமதுயிர் நூறாண்டு வெம்மையும்-சுடரும் தருக, தீயே நின்னைப்போல, எமதுள்ளம் சுடர்விடுக.
தீயே, நின்னைப்போல எமதறிவு கனலுக.
ஞாயிற்றினிடத்தே , தீயே, நின்னைத்தான் போற்றுகிறோம். ஞாயிற்றுத் தெய்வமே, நின்னைப் புகழ்கின்றோம், நினதொளி நன்று.
நின் செயல் நன்று. நீ நன்று.
9. வானவெளி என்னும் பெண்ணை ஒளியென்னும் தேவன்
மணந்திருக்கின்றான் அவர்களுடைய கூட்டம் இனிது. இதனைக் காற்றுத்தேவன் கண்டான். காற்று வலிமையுடையவன்.
இவன் வாவெளியைக் கலக்க விரும்பினான். ஒளியை விரும்புவதுபோல வானவெளி இவனை விரும்பவில்லை. இவள் தனது பெருமையை ஊதிப் பறையடிக்கின்றான்.
வெளியும் ஒளியும் இரண்டு உயிர்கள் கலப்பதுபோல் கலந்தன காற்றுத் தேவன் பொறாமை கொண்டான்.
அவன் அமைதியின்றி உழலுகிறான் அவன் சீறுகின்றான் புடைக்கின்றான். குமுறுகின்றான். ஓலமிடுகின்றான்.
சுழலுகின்றான். துடிக்கின்றான் ஓடுகின்றான். எழுகின்றான். நிலையின்றிக் கலங்குகிறான். வெளியும் ஒளியும் மோனத்திலே கலந்து நகை செய்கின்றன. காற்றுத் தேவன் வலிமையுடையவன். அவன் புகழ் பெரிது அப் புகர் நன்று. ஆனால் வானவெளியும் ஒளியும் அவனிலும் சிறந்தன.
அவை மோனத்தில் கலந்து நித்தம் இன்புறுவன. அவை
வெற்றியுடையன. ஞாயிறே, நீதான் ஒளித்தெய்வம். நின்னையே வெளிப் பெண் நன்கு காதல் செய்கிறாள். உங்கள் கூட்டம் மிக இனிது. நீவிர் வாழ்க.
10. ஞாயிறே, நின் முகத்தைப் பார்த்த பொருளெல்லாம் ஒளி பெறுகின்றது.
பூமி, சந்திரன், செவ்வாய், புதன், சனி, வெள்ளி, வியாழன், யுரேனஸ், நெப்த்யூன் முதலிய பல நூறு வீடுகள்-இவை எல்லாம் நின் கதிர்கள் பட்ட மாத்திரத்திலே ஒளியுற நகை செய்கின்றன.
தீப்பந்திலிருந்து பொறிகள் வீசுவது போல இவையெல்லாம் ஞாயிற்றிலிருந்து வெடித்து வெளிப்பட்டன வென்பர்.
இவற்றைக் காலம் என்னும் கள்வன் மருவினான். இவை ஒளி குன்றிப் போயின; ஒளி யிழந்தன வல்ல; குறைந்த ஒளி யுடையன.
ஒளியற்ற பொருள் சகத்திலே யில்லை. இருளென்பது குறைந்த ஒளி.
செவ்வாய், புதன் முதலிய பெண்கள் ஞாயிற்றை வட்டமிடுகின்றன. இவை தமது தந்தைமீது காதல் செலுத்துகின்றன. அவன் மந்திரத்திலே கட்டுண்டவரை கடவாது சுழல்கின்றன. அவனுடைய சக்தியெல்லையை என்றும் கடந்து செல்லமாட்டா.
அவன் எப்போதும் இவற்றை நோக்கி யிருக்கின்றான். அவனுடைய ஒளிய முகத்தில் உடல் முழுதும் நனையும் பொருட்டாகவே இவை உருளுகின்றன. அவனொளியை இவை மலரிலும், நீரிலும், காற்றிலும் பிடித்து வைத்துக்கொள்ளும்.
ஞாயிறு மிகச் சிறந்த தேவன். அவன் கைப்பட்ட இடமெல்லாம் உயிருண்டாகும். அவனையே மலர் விரும்புகின்றது.
இலைகள் அவனுடைய அழகிலே யோகமெய்தி யிருக்கின்றன. அவனை நீரும் நிலமும் காற்றும், உகந்து களியுறும்.
அவனை வான் கவ்விக்கொள்ளும். அவனுக்கு மற்றெல்லாத் தேவரும் பணி செய்வர். அவன் புகழைப் பாடுவோம். அவன் புகழ் இனிது.
11. புலவர்களே, அறிவுப் பொருள்களே, உயிர்களே, பூதங்களே, சத்திகளே, எல்லோரும் வருவீர். ஞாயிற்றைத் துதிப்போம், வாருங்கள்.
அவன் நமக்கெல்லாம் துணை. அவன் மழை தருகின்றான். மழை நன்று. மழைத் தெய்வத்தை வாழ்த்துகின்றோம்.
ஞாயிறு வித்தை காட்டுகின்றான். கடல் நீரைக் காற்றாக்கி மேலேகொண்டு போகிறான் அதனை மீளவும் நீராக்கும்படி காற்றை ஏவுகின்றான்.
மழை இனிமையுறப் பெய்கின்றது. மழை பாடுகின்றது. அது பலகோடி தந்திகளுடையதோர் இசைக்கருவி.
வானத்திலிருந்து அமுதவயிரக்கோல்கள் விழுகின்றன.
பூமிப்பெண் விடாய் தீர்கிறாள்; குளிர்ச்சி பெறுகின்றாள்; வெப்பத்தால் தண்மையும், தண்மையால் வெப்பமும் விளைகின்றன,
அனைத்தும் ஒன்றாதலால். வெப்பம் தவம். தண்மை யோகம். வெப்பம் ஆண். தண்மை பெண். வெப்பம் வலியது. தண்மை இனிது.
ஆணிலும் பெண் சிறந்ததன்றோ. நாம் வெம்மைத் தெய்வத்தைப் புகழ்கின்றோம். அது வாழ்க.
12. நாம் வெம்மையைப் புகழ்கின்றோம். வெம்மைத் தெய்வமே, ஞாயிறே, ஒளிக்குன்றே, அமுதமாகிய உயிரின் உலகமாகிய உடலிலே மீன்களாகத் தோன்றும் விழிகளின் நாயகமே!
பூமியாகிய பெண்ணின் தந்தையாகிய காதலே, வலிமையின் ஊற்றே, ஒளிமழையே, உயிர்க்கடலே!
சிவனென்னும் வேடன், சக்தியென்னும் குறத்தியை உலகமென்னும் புனங் காக்கச் சொல்லிவைத்து விட்டுப்போன விளக்கே!
கண்ணனென்னும் கள்வன் அறிவென்னும் தன்முகத்தை மூடிவைத்திருக்கும் ஒளியென்னும் திரையே, ஞாயிறே, நின்னைப் பரவுகின்றோம்,
மழையும் நின் மகள்; மண்ணும் நின் மகள்; காற்றும் கடலும் கனலும் நின் மக்கள்; வெளி நின் காதலி;இடியும் மின்னலும் நினது வேடிக்கை.
நீ தேவர்களுக்குத் தலைவன். நின்னைப் புகழ்கின்றோம்.
தேவர்களெல்லாம் ஒன்றே. காண்பன வெல்லாம் அவருடல். கருதுவன அவருயிர். அவர்களுடைய தாய் அமுதம். அமுதமே தெய்வம்.
அமுதமே மெய்யொளி. அஃது ஆத்மா. அதனைப் புகழ்கின்றோம். ஞாயிற்றின் புகழ் பேசுதல் நன்று.
13. மழை பெய்கிறது. காற்றடிக்கின்றது. இடி குமுறுகின்றது. மின்னல் வெட்டுகின்றது.
புலவர்களே, மின்னலைப் பாடுவோம் வாருங்கள். மின்னல் ஒளித்தெய்வத்தின் ஒரு லீலை. ஒளித்தெய்வத்தின் ஒரு தோற்றம்.
அதனை யவனர் வணங்கி ஒளி பெற்றனர். மின்னலைத் தொழுகின்றோம். அது நம்மறிவை ஒளியுறச் செய்க. மேகக் குழந்தைகள் மின்னற்பூச் சொரிகின்றன. மின்சக்தி இல்லாத இடமில்லை. எல்லாத் தெய்வங்களும் அங்ஙகமே. கருங்கல்லிலே, வெண்மணலிலே பச்சை இலையிலே செம்மலரிலே நீல மேகத்திலே, காற்றிலே, வரையிலே-எங்கும் மின்சக்தி உறங்கிக் கிடக்கின்றது அதனை போற்றுகின்றோம்.
நமது விழிகளிலே மின்னல் பிறந்திடுக. நமது நெஞ்சிலே மின்னல் விசிறிப் பாய்க நமது வலக்கையிலே மின்னல் தோன்றுக.
நமது பாட்டு மின்னலுடைத்தாகுக. நமது வாக்கு மின்போல் அடித்திடுக. மின் மெலியதைக் கொல்லும்; வலியதிலே வலிமை சேர்க்கும்.
அது நம் வலிமையை வளர்த்திடுக.
ஒளியை, மின்னலை, சுடரை, மணியை ஞாயிற்றை, திங்களை, வானத்து வீடுகளை, மீன்களை-ஒளியுடைய அனைத்தையும் வாழ்த்துகின்றோம்.
அனைத்தையும் வாழ்த்துகின்றோம். ஞாயிற்றை வாழ்த்துகின்றோம்.
2. சக்தி

1. சக்தி வெள்ளத்திலே ஞாயிறு ஓர் குமிழியாம். சக்திப் பொய்கையிலே ஞாயிறு ஒரு மலர் சக்தி அநந்தம். எல்லையற்றது.
முடிவற்றது; அசையாமையில் அசைவு காட்டுவது.
சக்தி அடிப்பது, துரத்துவது, கூட்டுவது, பிணைப்பது, கலப்பது, உதறுவது, புடைப்பது, வீசுவது, சுழற்றுவது, கட்டுவது, சிதறடிப்பது,
தூற்றுவது, ஊதிவிடுவது, நிறுத்துவது, ஓட்டுவது, ஒன்றாக்குவது, பலவாக்குவது,
சக்தி குளிர் செய்வது, அனல் தருவது, குதுகுதுப்புத் தருவது, குதூஹலந் தருவது. நோவு தீர்ப்பது, இயல்பு தருவது.
இயல்பு மாற்றுவது, சோர்வு தருவது, ஊக்கந் தருவது. எழுச்சி தருவது, கிளர்ச்சி தருவது, மலர்விப்பது, புளகஞ் செய்வது, கொல்வது,
உயிர் தருவது. சக்தி மகிழ்ச்சி தருவது, சினந் தருவது, வெறுப்புத் தருவது, உவப்புத் தருவது. பகைமை தருவது. காதல் மூட்டுவது. உறுதி தருவது.
அச்சந் தருவது, கொதிப்புத் தருவதுன. ஆற்றுவது. சக்தி முகர்வது, சுவைப்பது, தீண்டுவது, கேட்பது, காண்பது, சக்தி நினைப்பது,
ஆராய்வது, கணிப்பது, தீர்மானஞ்செய்வது. கனாக்காண்பது, கற்பனை புரிவது, தேடுவது சுழல்வது, பற்றிநிற்பது, எண்ணமிடுவது, பகுத்தறிவது.
சக்திமயக்கந் தருவது, தெளிவு தருவது, சக்தி உணர்வது. பிரமன் மகள், கண்ணன் தங்கை, சிவன் மனைவி, கண்ணன் மனைவி,
சிவன் மகள், பிரமன் தங்கை. பிரமனுக்கும் கண்ணனுக்கும் சிவனுக்கும் தாய்.
சக்தி முதற் பொருள். பொருளில்லாப் பொருளின் விளைவில்லா விளைவு.
சக்திக் கடலிலே ஞாயிறு ஓர் நுரை; சக்தி வீணையிலே ஞாயிறு ஒரு வீடு; ஒரு ஸ்வர ஸ்தானம்.
சக்திக் கூத்திலே ஒளி ஒரு தாளம். சக்தியின் கலைகளிலே ஒளி யொன்று. சக்தி வாழ்க.
2. காக்கை கத்துகிறது. ஞாயிறு வையக மாகிய கழனியில் வயிர வொளியாகிய நீர் பாய்ச்சுகிறது. அதனை மேகங்கள் வந்து மறைக்கின்றன.
அஃது மேகங்களை ஊடுருவிச்செல்லுகின்றது. மேகமாகிய சல்லடையில் ஒளியாகிய புலனை வடிகட்டும் போது, மண்டி கீழும், தெளிவு மேலுமாக நிற்கின்றன. கோழி கூவுகின்றது. எறும்பு ஊர்ந்து செல்கின்றது. ஈ பறக்கின்றது.
இளைஞன் சித்திரத்திலே கருத்துச் செலுத்துகிறான். இவையனைத்தும் மஹா சக்தியின் தொழில். அவள்நம்மைக் கர்ம யோகத்தில் நாட்டுக. நமக்குச் செய்கை இயல்பாகுக. ரசமுள்ள செய்கை, இன்பமுடைய செய்கை, வலிய செய்கை, சலிப்பில்லாத செய்கை, விளையும் செய்கை, பரவும் செய்கை, கூடிவரும் செய்கை, இறுதியற்ற செய்கை, நமக்கு மஹாசக்தி அருள் செய்க.
கவிதை, காவல், ஊட்டுதல், வளர்த்தல், மாசெடுத்தல், நலந்தருதல், ஒளிபெய்தல்-இச்செயல்கள் நமக்கு மஹாசக்தி அருள் புரிக.
அன்புநீர் பாய்ச்சி, அறவென்னும் ஏருழுது, சாத்திரங்களை போக்கி, வேதப்பயிர் செய்து, இன்பப் பயனறிந்து தின்பதற்கு மஹாசக்தியின் துணை வேண்டுகின்றோம். அதற்கு அவள் தருக.
3. இருள் வந்தது, ஆந்தைகள் மகிழ்ந்தன.
காட்டிலே காதலனை நாடிச் சென்ற ஒரு பெண் தனியே கலங்கிப் புலம்பினாள்.
ஒளி வந்ததது;காதலன் வந்தான். பெண் மகிழ்ந்தாள்.
நாம் அச்சங் கொண்டோம்; தாய் அதனை நீக்கி உறுதி தந்தாள். நாம் துயர் கொண்டோம். தாய் அதை மாற்றிக் களிப்புத் தந்தாள்.
குனிந்த தலையை நிமிர்த்தினாள்; சோர்ந்த விழியில் ஒளி
சேர்த்தாள்; கலங்கிய நெஞ்சிலே தெளிவு வைத்தாள்; இருண்ட மதியிலே ஒளி கொடுத்தாள். மஹா சக்தி வாழ்க
4. மண்ணிலே வேலி போடலாம். வானத்திலே வேலி போடலாமா? என்றான் ராம கிருஷ்ண முனி.
ஜடத்தைக் கட்டலாம். சக்தியைக் கட்டலாமா? உடலைக் கட்டலாம். உயிரைக் கட்டலாமா?
என்னிடத்தே சக்தி எனதுயிரிலும் உள்ளத்திலும் நிற்கின்றாள். சக்திக்கு அநந்தமான கோயில்கள் வேண்டும்.
தொடக்கமும் முடிவுமில்லாத காலத்திலே நிமிஷந்தோறும் அவளுக்குப் புதிய கோயில்கள் வேண்டும். இந்த அநந்தமான கோயில்களிலே ஒன்றுக்கு நான் என்று பெயர். இதனை ஓயாமல் புதுப்பித்துக்கொண்டிருந்தால் சக்தி இதில் இருப்பாள். இது பழமைப்பட்டுப் போனவுடன், இதை விட்டுவிடுவாள். இப்போது அவள் என்னுள்ளே நிறைந்திருக்கின்றாள்.
இப்போது எனதுயிரிலே வேகமும் நிறைவும் பொருந்தியிருக்கின்றன. இப்போது எனதுடலிலே சுகமும் வலிமையும் அமைந்திருக்கின்றன. இப்போது என்னுள்ளத்திலே தெளிவு நிலவிடுகின்றது. இது எனக்குப் போதும்.
சென்றது கருத மாட்டேன். நாளைச் சேர்வது நிக்கமாட்டேன். இப்போது என்னுள்ளே சக்தி கொலுவீற்றிருக்கின்றாள். அவள் நீடுழி வாழ்க.
அவளைப் போற்றுகின்றேன், புகழ்கின்றேன். வாய் ஓயாமல் வாழ்த்துகின்றேன்.
5. மண்ணிலே வேலி போடலாம். வானத்திலே வேலி போடலாமா? போடலாம். மண்ணிலும் வானந்தானே நிரம்பி யிருக்கின்றது?
மண்ணைக் கட்டினால அதிலுள்ள வானத்தைக் காட்டியதாகாதா?
உடலைக் கட்டு, உயிரைக் கட்டலாம். உயிரைக் கட்டு உள்ளத்தைக் கட்டலாம். உள்ளத்தைக் கட்டு. சக்தியை கட்டலாம்.
அநந்த சக்திக்கு கட்டுப்படுவதில் வருத்த மில்லை.
என் முன்னே பஞ்சுத் தலையணை கிடக்கிறது. அதற்கு ஒரு வடிவம். ஓரளவு, ஒரு நியமம் ஏற்பட்டிருக்கின்றது. இந்த நியமத்தை, அழியாதபடி, சக்தி பின்னே நின்று காத்துக்கொண்டிருக்கிறாள்.
மனித ஜாதி இருக்குமளவும் இதே தலையணை அழிவெய்தாதபடி காக்கலாம்.
அதனை அடிக்கடி புதுப்பித்தக்கொண்டிருந்தால், அந்த வடிவத்திலேசக்தி நீடித்து நிற்கும். புதுப்பிக்கா விட்டால் அவ்வடிவம்மாறும்.
அழுக்குத் தலையணை; ஒட்டைத் தலையணை, பழைய தலையணை- அதிலுள்ள பஞ்சை யெடுத்துப் புதிய மெத்தையிலே போடு.
மேலுறையைக் கந்தையென்று வெளியே எறி. அந்தவடிவம் அழிந்துவிட்டது.
வடிவத்தைக் காத்தால், சக்தியைக் காக்கலாம்; அதாவது சக்தியை, அவ்வடிவத்திலே காக்கலாம்; வடிவம் மாறினும் சக்தி மாறுவதில்லை.
எங்கும், எதனிலும், எப்போதும், எல்லாவிதத் தொழில்களும் காட்டுவது சக்தி, வடிவத்தைக்காப்பது நன்று, சக்தியின் பொருட்டாக.
சக்தியைப் போற்றுதல் நன்று. வடிவத்தைக் காக்குமாறு, ஆனால் வடிவத்தை மாத்திரம் போற்றுவார் சக்தியை இழந்து விடுவார்.
6. பாம்பு பிடாரன் குழலூதுகின்றான்.
இனிய இசை சோகமுடையது என்பது கேட்டுள்ளோம். ஆனால், இப் பிடாரன் ஒலிக்கும் இசை மிகவும் இனியதாயினும் சோக ரசந் தவிர்ந்தது.
இஃதோர் பண்டிதன் தர்க்கிப்பது போலிருக்கின்றது.
ஒரு நாவலன் பொருள் நிறைந்த சிறியசிறிய வாக்கியங்களை அடுக்கிக் கொண்டு போவது போலிக்கிறது.
இந்தப் பிடாரன் என்ன வாதாடுகிறான்?
தான தந்தத் தான தந்தத் தா-தனத்
தான தந்தன தான தந்தன தா-
தந்தனத்தன தந்தனத்தன தா
அவ்விதமானப் பல வகைகளில் மாற்றிச் சுருள் சுருளாக வாசித்துக் கொண்டு போகிறான். இதற்குப் பொருளென்ன?
ஒரு குழந்தை இதற்குப் பின்வருமாறு பொருள் சொல்லலாயிற்று:-
காளிக்குப் பூச்சூட்டினேன், அதைக் கழுதையென்று தின்ன வந்ததே.
பராசக்தியின் பொருட்டு இவ்வுடல் கட்டினேன். அதைப் பாவத்தால் விளைந்த நோய் தின்ன வந்தது.
பராசக்தியைச் சரணடைந்தேன். நோய் மறைந்துவிட்டது. பராசக்தி ஒளியேறி என் அகத்திலே விளங்கலாயினள். அவள் வாழ்க.
7. பாம்புப் பிடாரன் குழலூதுகின்றான். குழலிலே இசை பிறந்ததா? தொளையிலே பிறந்ததா? பாம்புப் பிடாரன் மூச்சிலே பிறந்ததா?
அவனுள்ளத்திலே பிறந்தது; குழலிலே வெளிப்பட்டது.
உள்ளம் தனியே ஒலிக்காது. குழல் தனியே இசை புரியாது. உள்ளம் குழலிலே ஒட்டாது. உள்ளம் மூச்சிலே ஒட்டும்.
மூச்சு குழலிலே ஒட்டும். குழல் பாடும். இஃது சக்தியின் லீலை.
அவள் உள்ளத்திலே பாடுகிறாள். அது குழலின் தொளையிலே கேட்கிறது.
பொருந்தாத பொருள்களைப் பொருத்தி வைத்து அதிலே இசை யுண்டாக்குதல்-சக்தி.
தொம்பப் பிள்ளைகள் பிச்சைக்குக் கத்துகின்றன. பிடாரன் குழலையும் தொம்பக் குழந்தைகளின் குரலையும் யார் சுருதி சேர்த்து விட்டது? சக்தி.
ஜாரிகை வேணும்; ஜரிகை? என்றொருவன் கத்திக்கொண்டு போகிறான். அதே சுருதியில். ஆ!பொருள் கண்டு கொண்டேன்.
பிடாரன் உயிரிலும், தொம்பக் குழந்தைகளின் உயிரிலும் ஜரிகைக்காரன் உயிரிலும் ஒரே சக்தி விளையாடுகின்றது.
கருவி பல. பாணன் ஒருவன். தோற்றம் பல. சக்தி ஒன்று அஃது வாழ்க.
8. பராசக்தியைப் பாடுகின்றோம். இவள் எப்படி உண்டாயினாள் அதுதான் தெரியவில்லை: இவள்தானேபிறந்த தாய் தான் என்ற பரம் பொருளினிடத்தே. இவள் எதிலிருந்து தோன்றினாள்? தான் என்ற பரம் பொருளிலிருந்து. எப்படித் தோன்றினாள்? தெரியாது.
படைப்பு நமது கண்ணுக்குத் தெரியாது; அறிவுக்கும் தெரியாது.
சாவு நமது கண்ணுக்குத் தெரியும்; அறிவுக்கும் தெரியாது.
வாழ்க்கை நமது கண்ணுக்குத் தெரியும்; அறிவுக்கும் தெரியும். வாழ்க்கையாவது சக்தியைப் போற்றுதல்; இதன் பயன் இன்பமெய்தல்.
உள்ளம் தெளிந்திருக்க; உயிர் வேகமும் சூடும் உடையதாக; உடல் அமைதியும் வலிமையும் பெற்றிருக்க,
மஹா சக்தியின் அருள் பெறுதலே வாழ்தல்; நாம் வாழ்கின்றோம். நம்மை வாழ்வுறச் செய்த மஹா சக்தியை மீட்டும் வாழ்த்துகின்றோம்.
3. காற்று

1. ஒரு வீட்டு மேடையிலே ஒரு பந்தல். ஓலைப் பந்தல், தென்னோலை.
குறுக்கும் நெடுக்கமாக ஏழெட்டு மூங்கிற் கழிகளைச் சாதாரணக் கயிற்றால் கட்டி மேலே தென்னங்கிடுகுகளை விரித்திருக்கிறது.
மூங்கிற் கழியிலே கொஞ்சம் மிச்சக் கயிறு தொங்குகிறது.
ஒரு சாண் கயிறு இந்தக் கயிறு. ஒரு நாள் சுகமாக ஊசலாடிக் கொண்டிருந்தது. பார்த்தால் துளிகூடக் கவலை இருப்பதாகத் தெரியவில்லை.
சில சமயங்களில் அசையாமல் உம் மென்றிருக்கும். கூப்பிட்டாற்கூட ஏனென்று கேட்காது.
இன்று அப்படியில்லை குஷால் வழியிலிருந்தது.
எனக்கும் இந்தக் கயிற்றுக்கும் ஸ்நேஹம். நாங்கள் அடிக்கடி வார்த்தை சொல்லிக் கொள்வதுண்டு.
கயிற்றினிடத்தில் பேசினால் அது மறுமொழி சொல்லுமா? பேசிப்பார், மறுமொழி கிடைக்கிறதா இல்லையா என்பதை?
ஆனால் அது சந்தோஷமாக இருக்கும் சமயம் பார்த்து வார்த்தை சொல்ல வேண்டும். இல்லா விட்டால், முகத்தைத் தூக்கிக் கொண்டு சும்மா இருந்துவிடும், பெண்களைப்போல.
எது எப்படியிருந்தாலும், இந்த வீட்டுக் கயிறு பேசும். அதில் சந்தேகமே யில்லை. ஒரு கயிறா சொன்னேன்? இரண்டு கயிறு உண்டு.
ஒன்று ஒரு சாண்; மற்றொன்று முக்கால் சாண்.
ஒன்று ஆண்; மற்றொன்று பெண்; கணவனும் மனைவியும் அவை யிரண்டும் ஒன்றையொன்று காமப்பார்வைகள் பார்த்துக் கொண்டும்,
புன்சிரிப்புச் சிரித்துக் கொண்டும், வேடிக்கைப் பேச்சுப் பேசிக்கொண்டும் ரசப் போக்கிலேயிருந்தன.
அத்தருணத்திலே நான் போய்ச் சேர்ந்தேன. ஆண் கயிற்றுக்குக் கந்தன் என்று பெயர். பெண் கயிற்றுக்குப் பெயர் வள்ளியம்மை
(மனிதர்களைப் போலவே துண்டுக் கயிறுகளுக்கும் பெயர் வைக்கலாம்)
கந்தன் வள்ளியம்மை மீது கையைப்போட வருகிறது. வள்ளியம்மை சிறிது பின் வாங்குகிறது. அந்த சந்தர்ப்பத்திலே நான் போய்ச் சேர்ந்தேன்.
என்ன, கந்தா, சௌக்கியம் தானா? ஒரு வேளை, நான் சந்தர்ப்பந் தவறி வந்துவிட்டேனோ, என்னவோ! போய், மற்றொரு முறை வரலாமா?
என்று கேட்டேன்.
அதற்குக் கந்தன்:- அட போடா வைதிக மனுஷன்! உன் முன்னே கூடி லஜ்ஜையா? என்னடி வள்ளி, நமது சல்லாபத்தை ஐயா பார்த்ததிலே உனக்குக் கோபமா? என்றது.
சரி. சரி, என்னிடத்தில் ஒன்றும் கேட்க வேண்டாம் என்றது வள்ளியம்மை.
அதற்குக் கந்தன், கடகட வென்று சிரித்துக் கைதட்டிக் குதித்து, நான் பக்கத்திலிருக்கும் போதே வள்ளியம்மைக் கட்டிக்கொண்டது.
வள்ளியம்மை கீச்சுக் கீச்சென்று கத்தலாயிற்று. ஆனால் மனதுக்குள்ளே வள்ளியம்மைக்கு சந்தோஷம். நாம் சுகப்படுவதைப் பிறர்
பார்ப்பதிலே நமக்கு சந்தோஷந்தானே?
இந்த வேடிக்கை பார்ப்பதிலே எனக்கும் மிகவும் திருப்திதான். உள்ளதைச் சொல்லி விடுவதிலே என்ன குற்றம்?
இளமையின் சல்லாபம் கண்ணுக்குப் பெரியதோர் இன்பமன்றோ?
வள்ளியம்மை அதிகக் கூச்சலிடவே, கந்தன் அதை விட்டும்விட்டது. சில க்ஷணங்களுக்குப் பின் மறுபடி போய்த் தழுவிக் கொண்டது.
மறுபடியும் கூச்சல், மறுபடியும் விடுதல்; மறுபடியும் தழுவல்; மறுபடியும் கூச்சல், இப்படியாக நடந்துகொண்டே வந்தது. என்ன, கந்தா, வந்தவனிடத்தில் ஒரு வார்த்தைகூடச் சொல்ல மாட்டேனென்கிறாய்? வேறொருசமயம் வருகிறேன். போகட்டுமா? என்றேன்.
அட போடா! வைதிகம்! வேடிக்கைதான பார்த்துக்கொண்டிருக்கிறாய். இன்னும் சிறிதுநேரம் நின்றுகொண்டிரு. இவளிடம் சில விவகாரங்கள் தீர்க்க வேண்டியிருக்கிறது. தீர்ந்தவுடன் நீயும் நானும் சில விஷயங்கள் பேசலாம். என்றிருக்கிறேன். போய்விடாதே, இரு என்றது.
நின்று மேன்மேலும் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழிந்தவுடன், பெண்ணும் இன்ப மயக்கத்திலே நான் நிற்பதை மறந்து நாணத்தை விட்டுவிட்டது. உடனே பாட்டு, நேர்த்தியான துக்கடாக்கள். ஒரு வரிக்கு ஒரு வர்ணமெட்டு.
இரண்டேசங்கதி பின்பு மற்றொரு பாட்டு. கந்தன் பாடி முடிந்தவுடன், வள்ளி, இது முடிந்தவுடன், அது மாற்றி மாற்றிப் பாடி-கோலாஹலம்.
சற்றுநேரம் ஒன்றையொன்று தொடாமல் விலகி நின்று பாடிக் கொண்டேயிருக்கும். அப்போது வள்ளியம்மை தானாகவே போய்க் கந்தனைத் தீண்டும்.
அது தழுவிக் கொள்ளவரும். இது ஓடும். கோலாஹலம்! இங்ஙனம் நெடும்பொழுது சென்ற பின் வள்ளியம்மைக்குக் களியேறி விட்டது.
நான் பக்கத்து வீட்டிலே தாகத்துக்கு ஜலம் குடித்துவிட்டு வரப் போனேன்.
நான் போவதை அவ்விரண்டு கயிறுகளும் கவனிக்கவில்லை.
நான் திரும்பிவந்து பார்க்கும்போது வள்ளியம்மை தூங்கிக்கொண்டிருந்தது, கந்தன் என் வரவை எதிர்நோக்கியிருந்தது.
என்னைக் கண்டவுடன், எங்கடா போயிருந்தாய் வைதிகம்! சொல்லிக் கொள்ளாமல் போய் விட்டாயே என்றது.
அம்மா நல்ல நித்திரை போலிருக்கிறதே? என்று கேட்டேன்.
ஆஹா! அந்த க்ஷணத்திலே கயிற்றிலிருந்து வெடித்த வெளிப்பட்டு என் முன்னே நின்ற தேவனுடைய மகிமையை என்னென்று சொல்வேன்!
காற்றுத்தேவன் தோன்றினான். அவனுடல் விம்மி விசாலமாக இருக்குமென்று நினைத்திருந்தேன். வயிர ஊசிபோல் ஒளி வடிவமாக இருந்தது. நமஸ்தே வாயோ, த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி காற்றே, போற்றி, நீயே கண்கண்ட பிரமம்.
அவன் தோன்றிய பொழுதிலே வானமுழுதும் ப்ராண சக்தி நிரம்பிக் கனல்வீசிக் கொண்டிருந்தது.
ஆயிர முறை அஞ்சலி செய்து வணங்கினேன்.
காற்றுத் தேவன் சொல்வதாயினன்:- மகனே, ஏதடா கேட்டாய்? அந்தச் சிறிய கயிறு உறங்குகிறதா என்ற கேட்கிறாயா? இல்லை. அது செத்துப் போய்விட்டது, நான் ப்ராண சக்தி.
என்னுடனே உறவுகொண்ட உடல் இயங்கும். என்னுறவில்லாதது சவம். நான் ப்ராணன். என்னாலேதான் அச்சிறு கயிறு களைபெய்தியவுடனனே அதனை உறங்க-இறக்க-விட்டு விட்டேன்.
துயிலும் சாவுதான். சாவும் துயிலே. யான் விளங்குமிடத்தே அவ்விரண்டும் இல்லை. மாலையில் வந்து ஊதுவேன்.
அது மறுபடி பிழைத்துவிடும். நான் விழிக்கச் செய்கிறேன். அசையச் செய்கிறேன். நான் சக்தி குமாரன், என்னை வணங்கி வாழ்க. என்றான்.
நமஸ்தே வாயோ, த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி த்வமேவ ப்ரத்யக்ஷம் ஹ்ம வதிஷ்யாமி.
2. நடுக் கடல். தனிக் கப்பல். வானமே சினந்து வருவதுபோன்ற புயற்காற்று. அலைகள் சாரி வீசுகின்றன. நிர்த்தூளிப் படுகின்றன. அவை மோதி வெடிக்கின்றன. சூறை யாடுகின்றன. கப்பல் நிர்த்தனஞ் செய்கின்றது; மின் வேகத்தில் எற்றப்படுகின்றது; பாறையில் மோதிவிட்டது.
ஹதம்! இருநூறு உயிகள் அழிந்தன. அழியுமுன், அவை யுக முடிவின் அனுபவம் எங்ஙனமிருக்குமென்பதை அறிந்துகொண்டு போயின.
ஊழி முடிவும் இப்படியே தானிருக்கும். உலகம் ஓடுநீராகிவிடும்; தீ, நீர், சக்தி காற்றாகி விடுவாள்.
சிவன் வெறியிலே யிருப்பான். இவ்வுலகம் ஒன்றென்பது தோன்றும். அஃது சக்தி யென்பது தோன்றும். அவன் பின்னே சிவன் நிற்பது தோன்றும்.
காற்றே பந்தல் கயிறுகளை அசைக்கின்றான். அவற்றில் உயிர் பெய்கிறான். காற்றே நீரில் சூறாவளி காட்டி, வானத்தில் மின்னேற்றி, நீரை நெருப்பாக்கி, நெருப்பை நீராக்கி நீரைத் தூளாக்கித் தூளை நீராக்கிச் சண்ட மாருதம் செய்கின்றான்.
காற்றே யுகமுடிவு செய்கின்றான். காற்றே காக்கின்றான். அவன் நம்மைக் காத்திடுக. நமஸ்தே வாயோ, த்வமேவ ப்ரத்ணக்ஷம் ப்ரஹ்மாஸி.
3. காற்றுக்குள் காது நிலை. சிவனுடைய காதிலே காற்று நிற்கிறான். காற்றில்லாவிட்டால் சிவனுக்குக் காது கேட்காது. காற்றுக்குக் காதில்லை.
அவன் செவிடன்.
காதுடையவன் இப்படி இரைச்ச லிடுவானா? காதுடையவன் மேகங்களை ஒன்றோடொன்று மோதலிட்டு இடியிடிக்கச் சொல்லி வேடிக்கை பார்ப்பானா? காதுடையவன் கடலைக் கலக்கி விளையாடுவானா? காற்றை, ஒலியை வலிமையை வணங்குகின்றோம்.
4. பாலைவனம், மணல், மணல், மணல், பல யோஜனை தூரம் ஒரே மட்டமாக நான்கு திசையிலும் மணல்.
மாலை நேரம். அவ்வனத்தின் வழியே ஓட்டைகளின் மீதேறி ஒரு வியாபாரக் கூட்டத்தோர் போகிறார்கள்.
வாயு சண்டனாகி வந்துவிட்டான். பாலைவனத்து மணல்களெல்லாம் இடை வானத்திலே சுழல்கின்றன. ஒரு க்ஷணம் யம வாதனை, வியாபாரக் கூட்டம் முழுதும் மணலிலே அழிந்து போகிறது. வாயு கொடியோன். அவன் ருத்ரன். அவனுடைய ஓசை அச்சந் தருவது. அவனுடைய செயல்கள் கொடியன. காற்றை வாழ்த்துகின்றோம்.
5. வீமனும் அனுமானும் காற்றின் மக்கள் என்று புராணங்கள் கூறும். உயிருடையனவெல்லாம் காற்றின் மக்களே என்பது வேதம். உயிர்தான் காற்று. உயிர் பொருள். காற்று அதன் செய்கை. பூமித்தாய் உயிரோடிருக்கிறாள். அவளுடைய மூச்சே பூமியிலுள்ள காற்று. காற்றே உயிர்.
அவன் உயிர்களை அழிப்பவன். காற்றே உயிர். எனவே உயிர்கள அழிவதில்லை. சிற்றுயிர் பேருயிரோடு சேர்கிறது. மரண மில்லை. அகிலவுலகமும் உயிர் நிலையே. தோன்றுதல், வளர்தல், மாறுதல், மறைதல்-எல்லாம் உயிர்ச் செயல். உயிரை வாழ்த்துகின்றோம்.
6. காற்றே வா. மகரந்தத் தூளைச் சுமந்துகொண்டு, மனத்தை மயலுறுத்துகின்ற இனிய வாசனையுடன் வா. இலைகளின் மீதும்,
நீரலைகளின் மீதும் உராய்ந்து, மிகுந்த ப்ராண -ரசத்தை எங்களுக்குக் கொண்டு கொடு.
காற்றே, வா எமது உயிர்-நெருப்பை நீடித்து நின்ற நல்லொளி தருமாறு நன்றாக வீசு. சக்தி குறைந்துபோய், அதனை அவித்துவிடாதே.
பேய்போல வீசி, அதனை மடித்துவிடாதே. மெதுவாக, நல்ல லயத்துடன், நெடுங்காலம் நின்று வீசிக் கொண்டிரு உனக்குப் பாட்டுக்கள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம். உன்னை வழிபடுகின்றோம்.
7. சிற்றெறும்பைப் பார். எத்தனை சிறியது! அதற்குள்ளே கை, கால், வாய், வயிறு எல்லா அவயவங்களும் கணக்காக வைத்திருக்கிறது.
யார் வைத்தனர்? மஹா சக்தி. அந்த உறுப்புக்களெல்லாம் நேராகவே தொழில் செய்கின்றன. எறும்பு உண்ணுகின்றது. உறங்குகின்றது-மணம் செய்து கொள்கின்றது. குழந்தை பெறுகிறது. ஓடுகிறது, தேடுகிறது, போர் செய்கிறது, நாடு காக்கிறது. இதற்கெல்லாம் காற்றுத்தான் ஆதாரம்.
மஹா சக்தி காற்றைத் கொண்டுதான் உயிர் விளையாட்டு விளையாடுகின்றாள். காற்றைப் பாடுகிறோம் அஃது அறிவிலே துணிவாக நிற்பது; உள்ளத்திலே விருப்பு வெறுப்புகளாவது. உயிரிலே. உயிர் தானாக நிற்பது. வெளி யுலகத்திலே அதன் செய்கையை நாம் அறிவோம். நாம் அறிவதில்லை. காற்றுத் தேவன் வாழ்க.
8. மழைக் காலம். மாலை நேரம். குளிர்ந்த காற்று வருகிறது நோயாளி உடம்பை மூடிக்கொள்ளுகிறான். பயனில்லை.
காற்றுக்கு அஞ்சி உலகத்திலே இன்பத்துடன் வாழ முடியாது. பிராணன் காற்றாயின் அதற்கு அஞ்சி வாழ்வதுண்டோ? காற்று நம்மீது வீசுக.
அதுநம்மை நோயின்றிக் காத்திடுக. மலைக்காற்று நல்லது. வான் காற்று நன்று.
ஊர்க்காற்றை மனிதர் பகைவனாக்கிவிடுகின்றனர். அவர்கள் காற்றுத் தெய்வத்தை நேரே வழிபடுவதில்லை.
அதனால் காற்றுத்தேவன் சினமெய்தி அவர்களை அழிக்கின்றான். காற்றுத் தேவனை வணங்குவோம் அவன் வரும் வழியில் சேறு தங்கலாகாது. நாற்றம் இருக்கலாகாது. அழுகின பண்டங்கள் போடலாகாது புழுதி படிந்திருக்கலாகாது. எவ்விதமான அசுத்தமும் கூடாது. காற்று வருகின்றான்.
அவன் வரும் வழியை நன்றாகத் துடைத்து நல்ல நீர் தெளித்து வைத்திடுவோம். அவன் வரும் வழியிலே சோலைகளும், பூந்தோட்டங்களும் செய்து வைப்போம். அவன் வரும் வழியிலே கர்ப்பூரம் முதலிய நறும் பொருள்களைக் கொளுத்தி வைப்போம். அவன் நல்ல மருந்தாக வருக.
அவன் நமக்கு உயிராகி வருக; அமுதமாகி வருக. காற்றை வழிபடுகின்றோம். அவன் சக்தி குமாரன், மஹாராணியின் மைந்தன். அவனுக்கு நல்வரவு கூறுகின்றோம். அவன் வாழ்க.
காற்றே வா. மெதுவாக வா. ஜன்னல் கதவை அடித்து உடைத்து விடாதே. காகிதங்களை யெல்லாம் எடுத்து விசிறி எறியாதே. அலமாரிப் புத்தகங்களைக் கீழே தள்ளிவிடாதே பார்த்தாயா? இதோ, தள்ளிவிட்டாய், புஸ்தகத்தின் ஏடுகளைக் கிழித்துவிட்டாய். மறுபடி மழையைக் கொண்டுவந்து சேர்த்தாய். வலியிழந்தவற்றைத் தொல்லைப்படுத்தி வேடிக்கை பார்ப்பதிலே நீ மஹா சமர்த்தன்.
நொய்ந்த வீடு, நொய்ந்த கதவு, நொய்ந்த கூரை, நொய்ந்த மரம், நொய்ந்த உடல், நொய்ந்த உயிர், நொய்ந்த உள்ளம்-இவற்றைக் காற்றுத் தேவன் புடைத்து நொறுக்கிவிடுவான். சொன்னாலும் கேட்கமாட்டான். ஆதலால், மானிடரே வாருங்கள். வீடுகளைத் திண்மையுறக் கட்டுவோம். கதவுகளை வலிமையுறச் சேர்ப்போம். உடலை உறுதி கொள்ளப் பழகுவோம். உயிரை வலிமையுற நிறுத்துவோம். உள்ளத்தை உறுதி செய்வோம். இங்ஙனம் செய்தால், காற்று நமக்குத் தோழனாகிவிடுவான். காற்று மெலிய தீயை அவித்துவிடுவான். வலிய தீயை வளர்ப்பான். அவன் தோழமை நன்று. அவனை நித்தமும் வாழ்த்துகின்றோம்.
10. மழை பெய்கிறது. ஊர்முழுதும் ஈரமாகிவிட்டது. தமிழ் மக்கள், எருமைகளைப்போல எப்போதும் ஈரத்திலே நிற்கிறார்கள். ஈரத்திலே உட்காருகிறார்கள், ஈரத்திலேயே நடக்கிறார்கள். ஈரத்திலேயே படுக்கிறார்கள். ஈரத்திலேயே சமையல், ஈரத்திலேயே உணவு.
உலர்ந்த தமிழன் மருந்துக்குகூட அகப்படமாட்டான்.
ஓயாமல் குளிர்ந்த காற்று வீசுகிறது. தமிழ் மக்களிலே பலருக்கு ஜ்வரம் உண்டாகிறது. நாள்தோறும் சிலர் இறந்து போகிறார்கள். மிஞ்சியிருக்கும் மூடர்விதிவசம் என்கிறார்கள். ஆமாம், விதிவசந்தான், அறிவில்லாதவர்களுக்கு இன்பமில்லை என்பது ஈசனுடைய விதி.
சாஸ்த்திர மில்லாத தேசத்திலே நோய்கள் விளைவது விதி.
தமிழ் நாட்டிலே சாஸ்திரங்களில்லை. உண்மையான சாஸ்திரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும் மறந்துவிட்டுத் தமிழ் நாட்டுப் பார்ப்பார் பொய்க் கதைகளை மூடரிடங் காட்டி வயிறு பிழைத்து வருகிறார்கள். குளிர்ந்த காற்றையா விஷமென்று நினைக்கிறாய்? அது அமிழ்தம்;நீ ஈரமில்லாத வீடுகளில் நல்ல உடைகளுடன் குடியிருப்பாயானால், காற்று நன்று. அதனை வழிபடுகின்றோம்.
11. காற்றென்று சக்தியைக் கூறுகின்றோம். என்றுகிற சக்தி, புடைக்கிற சக்தி, மோதுகிற சக்தி, சுழற்றுவது, ஊதுவது, சக்தியின் பல வடிவங்களிலே காற்றும் ஒன்று. எல்லாத் தெய்வங்களும் சக்தியின் கலைகளேயாம். சக்தியின் கலைகளையே தெய்வங்களென்கிறோம். காற்று சக்தி குமாரன். அவனை வழிபடுகின்றோம்.
12. காக்கை பறந்து செல்லுகிறது. காற்றின் அலைகளின்மீது நீந்திக்கொண்டு போகிறது. அலைகள் போலிருந்து, மேலே காக்கை நீந்திச் செல்வதற்கு இடமாகும் பொருள் யாது? காற்று, அஃதன்று காற்று. அது காற்றின் இடம், வாயு நிலயம். கண்ணுக்குத் தெரியாதபடி அத்தனை நுட்பமாகிய பூதத்தூள்களே (காற்றடிக்கும்போது) நம்மீது வந்து மோதுகின்றன. அத்தூள்களைக் காற்றென்பது உலக வழக்கு. அவை வாயு வல்ல, வாயு ஏறிவரும் தேர் பனிக்கட்டியிலே சூடேறினால் நீராக மாறிவிடுகிறது. நீரிலே சூடேற்றினால் வாயு வாகி விடுகிறது. தங்கத்திலே சூடேற்றினால் திரவமாக உருகிவிடுகிறது. அத்திரவத்திலே சூடேற்றினால், வாயு வாகின்றது.
இங்ஙனமே, உலகத்துப் பொருள்களனைத்தையும் வாயுநிலைக்குக் கொண்டுவந்துவிடலாம். இந்தவாயுபௌதிகத் தூள்.
இதனை ஊர்ந்துவரும் சக்தியையே நாம் காற்றுத் தேவனென்று வணங்குகிறோம்.
காக்கை பறந்து செல்லும் வழி காற்றன்று. அந்த வழியை இயக்குபவன் காற்று. அதனை அவ்வழியிலே தூண்டிச் செல்பவன் காற்று.
அவனை வணங்குகின்றோம், உயிரைச் சரணடைகின்றோம்.
13. அசைகின்ற இலையிலே உயிர் நிற்கிறதா? ஆம். இரைகின்ற கடல்-நீர் உயிரால் அசைகின்றதா? ஆம்.
கூரையிலிருந்து போடும் கல் தரையிலே விழுகின்றது. அதன் சலனம் எதனால் நிகழ்வது? உயிருடைமையால். ஓடுகின்ற வாய்க்கால் எந்த நிலையில் உளது? உயிர் நிலையில். ஊமையாக இருந்த காற்றுஊதத் தொடங்கி விட்டதே! அதற்கு என்ன நேரிட்டிருக்கிறது? உயிர் நேரிட்டிருக்கிறது.
வண்டியை மாடு இழுத்துச்செல்கிறது. அங்கு மாட்டின் உயிர் வண்டியிலும் ஏறுகிறது. வண்டி செல்லும்போது உயிருடனேதான் செல்லுகிறது.
காற்றாடி? உயிருள்ளது. நீராவி-வண்டி உயிருள்ளது; பெரிய உயிர். யந்திரங்ளெல்லாம் உயிருடையன.
பூமிப்பந்து இடைவிடாமல் மிக்க விசையுடன் சுழல்கின்றது. அவள் தீராத உயிருடையவள், பூமித்தாய். எனவே அவள் திருமேனியிலுள்ள ஒவ்வொன்றும் உயிர் கொண்டதே யாம்.
அகில முழுதும் சுழலுகிறது. சந்திரன் சுழல்கின்றது. ஞாயிறு சுழல்கின்றது. கோடி கோடி கோடி கோடி யோஜனை தூரத்துக் கப்பாலும், அதற்கப்பாலும், அதற்கப்பாலும், சிதறிக் கிடக்கும் வானத்து மீன்களெல்லாம் ஓயாது சுழன்று கொண்டேதானிருக்கின்றன. எனவே, இவ்வையகம் உயிருடையது. வையகத்தின்உயிரையே காற்றென்கிறோம் அதனை முப்போதும் போற்றி வாழ்த்துதல் செய்கின்றோம்.
14. காற்றைப் புகழ நம்மால் முடியாது. அவன் புகழ் தீராது. அவனை ரிஷிகள் ப்ரத்யஷம் ப்ரஹ்ம என்று போற்றுகிறார்கள்.
ப்ராண வாயுவைத் தொழுகின்றோம். அவன்,
நம்மைக் காத்திடுக. அபாநனைத் தொழுகின்றோம். அவன்
நம்மைக் காத்திடுக. வ்யாநனைத் தொழுகின்றோம், அவன்
நம்மைக் காத்திடுக. உதாநனைத் தொழுகின்றோம், அவன்
நம்மைக் காத்திடுக. சமாநனைத் தொழுகின்றோம், அவன்
நம்மைக் காத்திடுக. காற்றின் செயல்களையெல்லாம்
பரவுகின்றோம். உயிரை, வணங்குகின்றோம். உயிர் வாழ்க.
15. உயிரே, நினது பெருமை யாருக்குத் தெரியும்? நீ கண் கண்ட தெய்வம். எல்லா விதிகளும் நின்னால் அமைவன.
எல்லா விதிகளும் நின்னால் அழிவன. உயிரே, நீ காற்று, நீ தீ, நீ நிலம், நீ நீர், நீ வானம். தோன்றும் பொருள்களின் தோற்ற நெறி நீ. மாறுவனவற்றை மாற்றுவிப்பது நின் தொழில். பறக்கின்ற பூச்சி. கொல்லுகின்ற புலி, ஊர்கின்ற புழு, இந்தப் பூமியிலுள்ள எண்ணற்ற உயிர்கள், எண்ணற்ற உலகங்களிலுள்ள எண்ணேயில்லாத உயிர்த் தொகைகள்-இவை யெல்லாம் நினது விளக்கம்.
மண்ணிலும், நீரிலும், காற்றிலும் நிரம்பிக் கிடக்கும் உயிர்களைக் கருதுகின்றோம். காற்றிலே ஒரு சதுர-அடி வரம்பில் லக்ஷக்கணக்கான சிறிய ஜந்துக்கள் நமது கண்ணுக்குத் தெரியாமல் வாழ்கின்றன.
ஒரு பெரிய ஜந்து; அதன் உடலுக்குள் பல சிறிய ஜந்துக்கள்; அவற்றுள் அவற்றிலுஞ் சிறிய பல ஜந்துக்கள்; அவற்றுள் இன்னுஞ் சிறியவை-இங்ஙனம் இவ்வையக முழுதிலும் உயிர்களைப் பொதிந்து வைத்திருக்கிறது.
மஹத்-அதனிலும் பெரியமஹத்-அதனிலும் பெரிது-அதனிலும் பெரிது.
அணு-அதனிலும் சிறிய அணு-அதனிலும் சிறிது-அதனிலும் சிறிது-இரு வழியிலும் முடிவில்லை.
இருபுறத்திலும் அநந்தம். புலவர்களே, காலையில் எழுந்தவுடன் உயிர்களையெல்லாம் போற்றுவோம். நமஸ்தே வாயோ, த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி.
4. கடல்

1. கடலே காற்றைப் பரப்புகின்றது. விரைந்து சுழலும் பூமிப்பந்தில் பள்ளங்களிலே தேங்கியிருக்கும் கடல் நீர் அந்தச் சுழற்சியிலே தலைகீழாகக் கவிழ்ந்து திசை வெளியில் ஏன் சிதறிப் போய்விடவில்லை?
பராசக்தியின் ஆணை. அவள் நமது தலைமீது கடல்வீழ்ந்து விடாதபடி ஆதரிக்கிறாள்.
அவள் திருநாமம் வாழ்க. கடல் பெரிய ஏரி; விசாலமான குளம்; பெருங் கிணறு; கிணறு நம் தலையிலே கவிழ்கிறதா?
அதுபற்றியே கடலும் கவிழவில்லை. பராசக்தியின் ஆணை.
அவள் மண்ணிலே ஆகர்ஷணத் திறமையை நிறுத்தினாள். அது பொருள்களை நிலைப்படுத்துகின்றது. மலை நமது தலைமேலே புரளவில்லை.
கடல் நமது தலைமேலே கவிழவில்லை. ஊர்கள் கலைந்து போகவில்லை. உலகம் எல்லா வகையிலும் இயல் பெறுகின்றது.
இஃதெல்லாம் அவளுடைய திருவருள். அவள் திருவருளை வாழ்த்துகின்றோம்.
2. வெம்மை மிகுந்த பிரதேசங்களிலிருந்து வெம்மை குன்றிய பிரதேசங்களுக்குக் காற்று ஓடிவருகின்றது. அங்ஙனம், ஓடி வரும்போது காற்று மேகங்களையும் ஓட்டிக் கொண்டு வருகிறது. இவ்வண்ணம் நமக்கு வரும் மழை கடற் பாரிசங்களிலிருந்தே வருகிறது.
காற்றே, உயிர்க் கடலிலிருந்து எங்களுக்கு நிறைய உயிர் மழை கொண்டுவா. உனக்குத் தூபதீபங்கள் ஏற்றிவைக்கிறோம். வருணா, இந்திரா, நீவிர் வாழ்க இப்போது நல்ல மழை பெய்யும்படி அருள் புரிய வேண்டும்.
எங்களுடைய புலங்களெல்லாம் காய்ந்து போய்விட்டன. சூட்டின் மிகுதியால் எங்கள் குழந்தைகளுக்கும் கன்று காலிகளுக்கும் நோய் வருகிறது.
அதனை மாற்றியருள வேண்டும்.
பகல் நேரங்களிலே அனல் பொறுக்க முடியவில்லை. மனம் ஹா ஹா வென்று பறக்கிறது.
பறவைகளெல்லாம் வாட்டமெய்தி நிழலுக்காகப் பொந்துகளில் மறைந்து கிடக்கின்றன. பல தினங்களாக, மாலைதோறும் மேகங்கள் வந்து கூடுகின்றன.
மேக மூட்டத்தால் காற்று நின்றுபோய், ஓரிலை கூட அசையாமல், புழுக்கம் கொடிதாக இருக்கிறது. சிறிது பொழுது கழிந்தவுடன் பெரிய காற்றுக்கள் வந்து மேகங்களை அடித்துத் துரத்திக்கொண்டு போகின்றன. இப்படிப் பல நாட்களாக ஏமாந்து போகிறோம்.
இந்திரா, வருணா, அர்யமா, பகா, மித்திரா, உங்கள் கருணையைப் பாடுகிறேன். எங்கள் தாபமெல்லாந் தீர்ந்து, உலகம் தழைக்குமாறு, இன்ப மழை பெய்தல் வேண்டும்.
5. ஜகத் சித்திரம் (சிறுநாடகம்) முதல் காட்சி

இடம்-மலையடி வாரத்தில் ஒரு காளி கோயில்
நேரம்-நடுப்பகல்
காக்கையரசன்-(கோயிலை எதிர்த்த தடாகத்தின் இடையிலிருந்த தெப்ப மண்டபத்தின் உச்சியில் ஏறி உட்காந்து கொண்டு சூர்யனை நோக்கிச் சொல்லுகிறான்)
எங்கோ வாழ்!
நீல மலைகள் நிரம்ப அழகியன. வானம் அழகியது. வான் வெளி இனிது. வான் வெளியை மருவிய நின் னொளி இனியவற்று ளெல்லாம் இனிது.
எங்கோ எங்கோ எனவும்;அன்றி கிலுகிலு கிலு கிலு எனவும் கீக்கீகீக்கீ என்றும், கேக்க கேக்ககேட்க கேட்க எனவும்;கெக்கெக்கே-குக்குக் குக்குக் குக்குக் குக்குக் குக்கூவே!என்றும், கீச், கீச் கீச், கீச்கிசு, கிசு, கிசு, கீச்என்றும்; ரங்க ரங்க-என்றும் பல்லாயிர வகையினில் இசைக்கும் குயில்களும், கிளிகளும், குலவு பல ஜாதிப்புட்களும் இனிய பூங்குரலுடையன.
எனினும், இத்தனை யின்பத்தினிடையே உயிர்க்குலத்தின் உளத்தே மாத்திரம் இன்ப முறவில்லை. இஃதென்னே!-காக்கா! காக்கா! எங்கோ வாழ்? இதைக் கேட்டு, மற்றப் பக்ஷிகளெல்லாம் கத்துகின்றன:-
ஆம், ஆம், ஆமாம், ஆமாம், ஆமாமடா! ஆமாமடா! ஆமாம். எங்கோவாழ். எங்கோ வாழ், நன்றாக உரைத்தாய்.
மனந்தான் சத்துரு. வேறு நமக்குப் பகையே கிடையாது. மனந்தான் நமக்குள்ளேயே உட்பகையா இருந்து கொண்டு நம்மை வேரறுக்கிறது.
அடுத்துக் கெடுக்கிறது.
மனந்தான் பகை. அதைக் கொத்துவோம் வாருங்கள். அதைக் கிழிப்போம் வாருங்கள். அதை வேட்டை யாடுவோம் வாருங்கள்.
இரண்டாம் காட்சி
வானுலகம்-இந்திர சபை
(தேவேந்திரன் கொலு வீற்றிருக்கிறான்)
தேவ சேவகன்:- தேவ தேவா!
இந்திரன்:-சொல்.
தேவ சேவகன்:- வெளியே நாரதர் வந்து காத்திருக்கிறார். தங்களைத் தரிசிக்க வேண்டுமென்று சொல்லுகிறார்.
இந்திரன்:- வருக
(நாரதர் பாடிக்கொண்டு வருகிறார்)
நாராயண, நாராயண, நாராயண, ஹரி, ஹரி,
நாராயண, நாராயண
இந்திரன்:-நாரதரே! நாராயணன் எங்கிருக்கிறான்?
நாரதர்:-நீ அவனைப் பார்த்தது கிடையாதோ?
இந்திரன்:-கிடையாது.
நாரதர்:-சர்வ பூதங்களிலும் இருக்கிறான்.
இந்திரன்:-நரகத்திலிருக்கிறானா?
நாரதர்:-ஆம்
இந்திரன்:-துன்பத்திலிருக்கிறானா?
நாரதர்:-ஆம்
இந்திரன்:-மரணத்திலிருக்கிறானா?
நாரதர்:-ஆம்
இந்திரன்:-உங்களுடைய சர்வ நாராயண சித்தாந்தத்தின் துணிவு யாது?
நாரதர்:-எல்லா வஸ்துக்களும், எல்லா லோகங்களும், எல்லா நிலைமைகளும், எல்லாத் தன்மைகளும், எல்லா சக்திகளும்,
எல்லா ரூபங்களும் எல்லாம் ஒன்றுக்கொன்று சமானம்.
இந்திரன்:-நீரும் கழுதையும் சமானந்தானா?
நாரதர்:-ஆம்.
இந்திரன்:-அமிருதபானமும் விஷபானமும் சமானமா?
நாரதர்:-ஆம்
இந்திரன்:-அசுரர்களும் தேவர்களும், சமானமா?
நாரதர்:-ஆம்.
இந்திரன்:-ஞானமும், அஞ்ஞானமும் சமானமா?
நாரதர்:-ஆம்
இந்திரன்:-சுகமும், துக்கமும் சமானமா?
நாரதர்:-ஆம்
இந்திரன்:-அதெப்படி?
நாரதர்:-சர்வம் விஷ்ணுமயம் ஜகத்-(பாடுகிறார்)நாராயண, நாராயண, நாராயண, நாராயண.
மூன்றாம் காட்சி
இடம்:- மண்ணுலகத்தில் ஒரு மலையடிவாரத்தில்-ஒரு காளி கோயிலுக்கெதிரே சோலையில்.
கிளி பாடுகிறது:- தைர்ய, தைர்ய, தைர்ய-தன்மனப் பகையைக் கொன்று தாமோ குணத்தை வென்று உள்ளக் கவலை யறுத்து ஊக்கந்த தோளிற் பொறுத்து மனதில் மகிழ்ச்சி கொண்டு மயக்க மெல்லாம் விண்டு சந்தோஷத்தைப் பூண்டு தைர்யா ஹுக்கும் ஹுக்கும்! ஹுக்கும் ஹுக்கும்!
ஆமடா, தோழா! ஆமாமடா எங்கோவா, எக்கோ வா! தைர்யா, தைர்யா, தைர்யா!
குயில்கள்:-சபாஷ்!சபாஷ்!சபாஷ்!
குருவிகள்:-டிர்ர்ர்ர்ர்ர்ர், டிர்ர்ர்ர்
நாகணவாய்:-ஜீவ, ஜீவ, ஜீவ, ஜீவ, ஜீவ, ஜீவ.
குருவிகள்:-சிவ, சிவ, சிவ, சிவ, சிவ, சிவா, சிவ, சிவா
காக்கை:-எங்கோ வாழ்!எங்கோ வாழ்!
கிளி:-கேளீர், தோழர்களே! இவ்வுலகத்தில் தற்கொலையைக் காட்டிலும் பெரிய குற்றம் வேறில்லை. தன்னைத்தான் மனத்தால் துன்புறுத்திக் கொள்வதைக் காட்டிலும் பெரிய பேதைமை வேறில்லை.
காக்கை:-அக்கா!அக்கா!காவு!காவு!
குருவி:-கொட்டடா!கொட்டடா!கொட்டடா!
கிளி:-ஹுக்குக்கூ!
கிளி:-காதலைக் காட்டிலும் பெரிய இன்பம் வேறில்லை.
அணிற் பிள்ளை:-ஹுக்கும், ஹுக்கும், ஹுக்கும், ஹுக்கும்
பசு மாடு:-வெயிலைப்போல் அழகான பதார்த்தம் வேறில்லை.
அணில்:-பசுவே, இந்த மிக அழகிய வெயிலில், என் கண்ணுக்குப் புலப்படும் வஸ்துக்களுக்குள்ளே உன் கண்ணைப்போல் அழகிய பொருள் பிறிதொன்றில்லை.
நாகணவாய்:-டுபுக்! பாட்டைக் காட்டிலும் ரசமான தொழில் வேறில்லை.
எருமை மாடு:-பக்ஷி ஜாதிகளுக்குள்ள சந்தோஷமும், ஜீவ ஆரவாரமும், ஆட்ட ஓட்டமும், இனிய குரலும் மிருக ஜாதியாருக்கும், மனுஷ்ய ஜாதியாருக்கும் இல்லையே?இதன்காரணம் யாது?
நாகணவாய்:-டுபுக்! வெயில், காற்று, ஒளி இவற்றின் தீண்டுதல் மிருக மனிதர்களைக் காட்டிலும் எங்களுக்கதிகம். எங்களுக்கு உடம்பு சிறிது. ஆதலால் தீனி சொற்பம்;அதைச் சிறிது சிறிதாக நெடுநேரம் தின்கிறோம். ஆதலால் எங்களுக்கு உணவின்பம் அதிகம். மிருக மனித ஜாதியார்களுக்குள் இருப்பதைக் காட்டிலும் எங்களுக்குள்ளே காதலின்பம் அதிகம். ஆதலால் நாங்கள் அதிக சந்தோஷமும், பாட்டும், நகைப்பும், கொஞ்ச மொழிகளுமாகக் காலங்கழிக்கிறோம். இருந்தாலும், கிளியரசு சொல்லியது போல காலனுக்குத் தூதனாகிய மனக்குறையென்னும் பேய், எங்கள் குலத்தையும் அழித்துவிடத்தான் செய்கிறது. அதற்கு நிவாரணம் தேடவேண்டும். கவலையைக் கொல்வோம், வாருங்கள், அதிருப்தியைக் கொத்துவோம், கொல்லுவோம்.
மற்றப் பக்ஷிகள்:-வாருங்கள், வாருங்கள், வாருங்கள், துயரத்தை அழிப்போம், கவலையைப் பழிப்போம். மகிழ்வோம், மகிழ்வோம், மகிழ்வோம்.
நான்காம் காட்சி
இடம்:-கடற்கரை.
நேரம்:-நள்ளிரா;முழுநிலாப் பொழுது.
இரண்டு பாம்புகள் ஒரு பாலத்தடியே இருட்புதரினின்றும் வெளிப்பட்டு நிலா வீசி ஒளிரும் மணம் மீது வருகின்றன.
ஆண் பாம்பு:- உன்னுடன் கூடி வாழ்வதில் எனக்கின்பமில்லை. உன்னால் எனது வாழ்நாள் விஷமயமாகிறது. உன்னாலேதான் என் மனம் எப்போதும் அனலில் பட்ட புழுவைப் போலே துடித்துக் கொண்டிருக்கிறது.
பெண் பாம்பு:- உன்னுடன் கூடி வாழ்வதில் எனக்கின்பமில்லை. உன்னால் எனது வாழ்நாள் நரகமாகிறது. உன்னால் என் மனம் தழலிற்பட்ட புழுவைப்போல் இடையறாது துடிக்கிறது.
ஆண் பாம்பு:-நான் உன்னைப் பகைக்கிறேன்.
பெண் பாம்பு:-நான் உன்னை விரோதிக்கிறேன்.
ஆண் பாம்பு:-நான் உன்னைக் கொல்லப் போகிறேன்.
பெண் பாம்பு:-நான் உன்னைக் கொல்லப் போகிறேன்.
ஒன்றையொன்று கடித்து இரண்டு பாம்புகளும் மடிகின்றன.
ஐந்தாம் காட்சி
கடற்கரை
தேவ தத்தன் என்ற மனித இளைஞன்:- நிலா இனியது;நீலவான் இனியது. தெண்டிரைக் கடலின் சீர், ஒலி இனிய;உலகம் நல்லது. கடவுள் ஒளிப்பொருள். அறிவு கடவுள். அதனிலை மோக்ஷம். விடுதலைப் பட்டேன். அசுரரை வென்றேன். நானே கடவுள். கடவுளே நான். காதலின்பத்தாற் கடவுள் நிலை பெற்றேன்.

6. விடுதலை
(சிறுநாடகம்) முதல் காட்சி

அங்கம்:           காட்சி
இடம்-வானுலகம்
காலம்-கலிமுடிவு.
பாத்திரங்கள்-இந்திரன், வாயு, அக்நி, ஒளி (சூரியன்), சோமன், இரட்டையர் (அசுவிநி தேவர்), மருத்துக்கள், வசுக்கள், த்வஷ்டா, விசுவே தேவர் முதலாயினோர்.
இந்திரன்:-உமக்கு நன்று, தோழரே.
மற்றவர்:-தோழா, உனக்கு நன்று.
இந்திரன்:-பிரம்மதேவன் நமக்கோர் பணியிட்டான்.
மற்றோர்:-யாங்ஙனம்?
இந்திரன்:-மண்ணுலகத்து மானுடன் தன்னைக் கட்டிய தளையெலாம் சிதறுக என்று
அக்நி :-வாழ்க தந்தை; மானுடர் வாழ்க.
மற்றோர்:-தந்தை வாழ்க, தனிமுதல் வாழ்க. உண்மை வாழ்க, உலக மோங்குக, தீது கெடுக, திறமை வளர்க.
ஒளி:-உண்மையும் அறிவும் இன்பமு மாகி பலவெனத் தோன்றிப் பலவினை செய்து பலபயன் உண்ணும் பரமநற் பொருளை உயிர்க்கெலாந்தந்தையை, உயிர்க்கெலாந் தாயை உயிர்க்கெலாந் தலைவனை, உயிர்க்கெலாந் துணைவனை உயிர்க்கெலாம் உயிரை, உயிர்க்கெலாம், உணர்வை அறிவிலே கண்டு போற்றி நெறியினில் அவன்பணி நேர்படச் செய்வோம்.
இந்திரன்:-நன்று தோழரே, அமிர்த முண்போம்.
மற்றோர்:-அமிழ்தம் நன்றே ஆம். அஃதுண்போம்.
(எல்லாரும் அமிர்தபானம் செய்கிறார்கள். )
இந்திரன்:-நித்தமும் வலிது
வாயு:-நித்தமும் புதிது
அக்நி:-தீரா விரைவு.
இரட்டையர்:-மாறா இன்பம்
மருத்துக்கள்:-என்றும் இளமை
ஒளி:-என்றுந் தெளிவு
அக்நி:-மண்ணுலகத்து மானிடர் வடிக்கும் சோமப் பாலுமிவ் வமிழ்தமும் ஓர்சுவை.
இந்திரன்:-மண்ணுலகத்து மக்களே, நீவிர் இன்பங் கேட்பீர். எண்ணிய மறப்பீர், செயல்பல செய்வீர், செய்கையில் இளைப்பீர், எண்ணள வதனால் ஏழுல கினையும் விழுங்குதல் வேண்டுவீர், மீளவும் மறப்பீர், தோழரென் றெம்மை நித்தமும் சார்ந்தீர், சோமப் பாலொடு சொல்லமு தூட்டுவீர், நும்மையே அணர் நோவுறச் செய்தார்? ஆஅஅ! மறவுக் குறும்பா, அரக்கா, விருத்திரா, ஒளியினை மறைத்திடும் வேடா, நமுசிப் புழுவே, வலனே, நலிசெயுந் துன்பமே, அச்சமே, இருளே, தொழும்பர்காள், பெயர்பல காட்டும் ஒருகொடும் பேயே, உருப்பல காட்டும் ஒருபுலைப் பாம்பே படைபல கொணர்ந்து மயக்கிடும் பாழே. ஏடா, வீழ்ந்தனை, யாவரும் வீழ்ந்தீர். அரக்கரே, மனித அறிவெனுங் கோயிலை விட்டுநீ, ரொழிந்தால் மேவிடும் பொன்னுகம் முந்தை நாள் தொடங்கி மானுடர் தமக்குச் சீர்தர நினைந்துநாம் செய்ததை யெல்லாம் மேகக் கரும்புலை விருத்திரன் கெடுத்தான். வலியிலார் தேவர்;வலியவர் அரக்கர். அறமே
நொய்யாது; மறமே வலியது மெய்யே செத்தை; பொய்யே குன்றம். இன்பமே சோர்வது;துன்பமே வெல்வது என்றோர் வார்த்தையும் பிறந்தது மண்மேல் மானுடர் திகைத்தார்;மந்திரத் தோழராம் விசவாமித்திரன், வசிட்டன், காசிபன் முதலியோர் செய்த முதல்நூல் மறைந்தது;பொய்ந்நூல் பெருகின, பூமியின் கண்ணே;வேதங் கெட்டு வெறுங்கதை மலிந்தது. போதச் சுடரைப் புகையிருள் சூழ்ந்தது. தவமெலாங் குறைந்து சதிபல வளர்ந்தன. எல்லாப் பொழுதினும் ஏழை மானுடர் இன்பங் கருதி இளைத்தனர், மடிந்தார்;கங்கைநுர் விரும்பிக் கானநீர் கண்டார்;அமுதம் வேண்டி விடத்தினை யுண்டார். ஏஎ!
வலியரே போலுமிவ் வஞ்சக அரக்கர்! விதியின் பணிதான் விரைக மதியின் வலிமையால் மானுடன் ஓங்குக.
ஒளி:-ஒருவனைக் கொண்டு சிறுமை நீக்கி நித்திய வாழ்விலே நிலைபெறச் செய்தால் மானுடச் சாதி முழுதுநல் வழிபடும்; மானுடச் சாதி ஒன்று; மனத்திலும் உயிரிலும் தொழிலிலும் ஒன்றேயாகும்.
தீ:-பரத கண்டத்தில் பாண்டிய நாட்டிலே விரதந் தவறிய வேதியர் குலத்தில் வசுபதி யென்றோர் இளைஞன் வாழ்கின்றான். தோளிலே மெலிந்தான், துயரிலே அமிழ்ந்தான் நாளும் வறுமை நாயொடு பொருவான், செய்வினை யறியான், தெய்வமுந் துணியான், ஐய வலையில் அகப்பட லாயினன் இவனைக் காண்போம், இவன்புவி காப்பான்.
காற்று:-உயிர்வளங் கொடுத்தேன்; உயிரால் வெல்க.
இந்திரன்:-மதிவலி கொடுத்தேன். வசுபதி வாழ்க.
சூரியன்:-அறிவிலே ஒளியை அமைத்தேன்;வாழ்க.
தேவர்:-மந்திரங் கூறுவோம். உண்மையே தெய்வம், கவலையற் றிருத்தலே வீடு. களியே அமிழ்தம். பயன்வருஞ் செய்கையே அறமாம். அச்சமே நரகம்;அதனைச் சுட்டு நல்லதை நம்பி நல்லதே செய்க. மகனே! வசுபதி மயக்கந் தெளிந்து, தவத்தொழில் செய்து தரணியைக் காப்பாய்!
காட்சி 2
பாண்டி நாட்டில் வேதபுரம், கடற்கரை;வசுபதி தனியே நிலவைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்.
வசுபதி பாடுகிறான்:-
நிலவுப் பாட்டு
1. வாராய் நிலவே வையத் திருவே,
வெள்ளைத் தீவில் விளையுங் கடலே,
வானப் பெண்ணின் மதமே, ஒளியே,
வாராய், நிலவே, வா.
2. மண்ணுக் குள்ளே அமுதைக் கூட்டிக்
கண்ணுக் குள்ளே களியைக் காட்டி
எண்ணுக் குள்ளே இன்பத் தெளிவாய்
வாராய், நிலவே வா.
3. இன்பம் வேண்டில் வானைக் காண்பீர்
வானொளி தன்னை மண்ணிற் காண்பீர்,
துன்பந் தானோர் பேதைமை யன்றே
வாராய், நிலவே, வா.
4. அச்சப் பேயைக் கொல்லும் படையாம்
வித்தைத் தேனில் விளையுங் களியாய்
வாராய், நிலவே, வா.
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக