ஞாயிறு, 17 ஜூன், 2012

பாரதியார் கவிதைகள் - தெய்வப் பாடல்கள்,


ராதே கிருஷ்ணா 17-06-2012

பாரதியார் கவிதைகள்


பாரதியார் கவிதைகள்
Bharathiar Kavithaigal
arrow வரலாறுarrow தேசீய கீதங்கள்
arrow தெய்வப் பாடல்கள்arrow பல்வகைப் பாடல்கள்
arrow முப்பெரும் பாடல்கள்arrow புதிய பாடல்கள்
  தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்




தெய்வப் பாடல்கள்
temple
1. விநாயகர் நான்மணி மாலை
வெண்பா
1. (சக்தி பெறும்) பாவாணர் சாற்றுபொருள் யாதெனினம்
சித்திபெறச் செய்வாக்கு வல்லமைக்கா-அத்தனே!
(நின்)தனக்குக் காப்புரைப்பார்;நின்மீது ... மேலும்

temple
26. சிவசக்தி புகழ்
ராகம்-தன்யாசி    தாளம்-சதுஸ்ர ஏகம்
ஓம், சக்திசக்தி சக்தியென்று சொல்லு-கெட்ட
சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு;
சக்திசக்தி சக்தியென்று ... மேலும்

temple
51. வேய்ங் குழல்
ராகம்-ஹிந்துஸ்தான் தோடி தாளம்-ஏகதாளம்

எங்கிருந்து வருகுவதோ?-ஒலி
யாவர் செய்குவ தோ?-அடி தோழி!
குன்றி னின்றும் வருகுவதோ?-மரக்
கொம்பி னின்றும் ... மேலும்

temple
1. அச்சமில்லை
பண்டாரப் பாட்டு

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை ... மேலும்

































தோத்திர பாடல்கள் பகுதி-1





1. விநாயகர் நான்மணி மாலை
வெண்பா
1. (சக்தி பெறும்) பாவாணர் சாற்றுபொருள் யாதெனினம்
சித்திபெறச் செய்வாக்கு வல்லமைக்கா-அத்தனே!
(நின்)தனக்குக் காப்புரைப்பார்;நின்மீது செய்யும் நூல்
இன்றிதற்கும் காப்புநீ யே.
கலித்துறை
2. நீயே சரணம் நினதரு ளேசர ணஞ்சரணம்
நாயேன் பலபிழை செய்து களைத்துனை நாடிவந்தேன்;
வாயே திறவாத மெனத் திருந்துன் மலரடிக்குத்
தீயே நிகர்த்தொளி வீசுந் தமிழ்க்கவி செய்குவனே.
விருத்தம்
3. செய்யுந் தொழிலுன் தொழிலேகாண்
சீர்பெற் றிடநீ அருள்செய் வாய்.
வையந் தனையும் வெளியினையும்
வானத்தையும்முன் படைத்தவனே!
ஐயா!நான்மு கப்பிரமா!
யானை முகனே!வாணிதனைக்
கையா லணைத்துக் காப்பவனே!
கமலா சனத்துக் கற்பகமே!
அகவல்
4. கற்பக விநாயகக் கடவுளே,போற்றி!
சிற்பர மோனத் தேவன் வாழ்க!
வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க!
ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க!
படைப்புக் கிறையவன், பண்ணவர் நாயகன்  5
இந்திர குரு,எனதுஇதயத் தொளிர்வான்
சந்திர மவுலித் தலைவன் மைந்தன்
கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்;
குணமதிற் பலவாம்;கூறக் கேளீர்!
உட்செவி திறக்கும்;அகக்கண் ஒளிதரும்;  10
அக்கினி தோன்றும்;ஆண்மை வலியுறும்;
திக்கெலாம் வென்று ஜெயக்கொடி நாட்டலாம்.
கட்செவி தன்னைக் கையிலே யெடுக்கலாம்
விடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும்
துக்கமென் றென்ணித் துயரிலா திங்கு  15
நிச்சலும் வாழ்ந்து நிலைபெற் றோங்கலாம்;
அச்சந் தீரும்,அமுதம் விளையும்;
வித்தை வளரும்;வேள்வி ஓங்கும்;
அமரத் தன்மை எய்தவும்
இங்கு நாம் பெறலாம்;இஃதுணர் வீரே.  20
வெண்பா
5. (உண)ர்வீர், உணர்வீர்,உலகத்தீர்!இங்குப்
(புண)ர்வீர்,அமரருறும் போக(ம்)-கண(ப)தியைப்
(போத வடிவாகப் போற்றிப் பணிந்திடுமின்!
காதலுடன் கஞ்சமலர்க் கால்).
கலித்துறை
6. காலைப் பிடித்தேன் கணபதி!நின்பதங் கண்ணி லொற்றி
நூலைப் பலபல வாகச் சமைத்து நொடிப்பொழு(தும்)
வேலைத் தவறு நிகழாது நல்ல விகைள் செய்துன்
கோலை மனமெனும் நாட்டின் நிறுத்தல் குறியெனக்கே.
விருத்தம்
7. எனக்கு வேண்டும் வரங்களை
இசைபேன் கேளாய் கணபதி!
மனத்திற் சலன மில்லாமல்,
மதியில் இருளே தோன்றாமல்,
நினைக்கும் பொழுது நின்மவுன
நிலைவந் திடநீ செயல்வேண்டும்.
கனகுஞ் செல்வம்,நூறுவயது:
இவையும் தரநீ கடவாயே. 20
அகவல்
8. கடமை யாவன; தன்னைக் கட்டுதல்
பிறர்துயர் தீர்த்தல்,பிறர் நலம் வேண்டுதல்
வீநாயக தேவனாய், வேலுடைக் குமரனாய்,
நாரா யணனாய், நதிச்சடை முடியனாய்
பிறநாட் டிருப்போர் பெயர்பல கூறி,  5
அல்லா!யெஹோவா!எனத்தொழு தன்புறும்
தேவருந் தானாய்,திருமகள்,பாரதி,
உமையெனுந் தேவியர் உகந்தவான் பொருளாய்,
உலகெலாங் காக்கும் ஒருவனைப் போற்றுதல், 10
இந்நான் கேயிப் பூமி லெவாக்கும்
கடமை யெனப்படும்;பயனிதில் நான்காம்;
அறம்;பொருள்,இன்பம்,வீடெனு முறையே,
தன்னை யாளுஞ் சமர்த்தெனக் கருள்வாய்,
மணக்குள விநாயகா!வான்மறைத் தலைவா!
தனைத்தான் ஆளுந் தன்மைநான் பெற்றிடில். 15
எல்லாப் பயன்களும் தாமே எய்தும்,
அசையா நெஞ்சம் அருள்வாய்; உயிரெலாம்
இன்புற் றிருக்க வேண்டிநி இருதாள்
பணிவதே தொழிலெனக் கொண்டு
கணபதி தேவா! வாழ்வேன் களித்தே.  20
வெண்பா
9. களியுற்று நின்று கடவுளே!இங்குப்
பழியற்று வாழ்ந்திடக்கண் பார்ப்பாய்-ஒளிபெற்றுக்
கல்வி பலதேர்ந்து கடமையெலாம் நன்காற்றித்
தொல்விக்கட் டெல்லாம் துறந்து.
கலித்துறை
10. துறந்தார் திறமை பெரிததி னும்பெரி தாகுமிங்குக்
குறைந்தா ரைக்காத் தெளியார்க் குணவீந்து குலமகளும்
அறந்தாங்கு மக்களும் நீடூழி வாழ்கென அண்ட மெலாம்
சிறந்தாளும் நாதனைப் போற்றிடுந் தொண்டர் செயுந்தவமே.
விருந்தம்
11. தவமே புரியும் வகைய றியேன்,
சலியா துறநெஞ் சறியாது,
சிவமே நாடிப் பொழுதனைத்துந்
தியங்கித் தியங்கி நிற்பேனை
நவமா மணிகள் புனைந்தமுடி
நாதா!கருணா லயனே!தத்
துவமா கியதோர் பிரணவமே!
அஞ்செல் என்று சொல்லதியே   5
அகவல்
12. சொல்லினுக் கரியனாய்ச் சூழ்ச்சிக் கரியனாய்ப்
பல்லுரு வாகிப் படர்ந்தவான் பொருளை,
உள்ளுயி ராகி உலகங் காக்கும்
சக்தியே தானாந் தனிச்சுடர்ப் பொருளை,
சக்தி குமாரனைச் சந்திர மவுலியைப்  5
பணிந்தவ னுருவிலே பாவனை நாட்டி,
ஓமெனும் பொருளை உளத்திலே நிறுத்தி,
சக்தியைக் காக்குந் தந்திரம் பயின்று
யார்க்கும் எளியனாய், யார்க்கும் வலியனாய்,
யார்க்கும் அன்பனாய்,யார்க்கும் இனியனாய்,  10
வாழ்ந்திடட விரும்பினேன்;மனமே!நீயதை
ஆழ்ந்து கருதிஆய்ந் தாய்ந்து பலமுறை
சூழ்ந்து, தெளிந்து, பின் சூழ்ந்தார்க் கெல்லாம்
கூறிக் கூறிக் குறைவறத் தேர்ந்து,
தேறித் தேறிநான் சித்திபெற் றிடவே.  15
நின்னா லியன்ற துணைபுரி வாயேல்,
பொன்னால் உனக்கொரு கோயில் புனைவேன்;
மனமே!எனைநீ வாழ்வித் திடுவாய்!
வீணே யுழலுதல் வேண்டா,
சக்தி குமாரன் சரண்புகழ் வாயே!  20
வெண்பா
13. புகழ்வோம் கணபதிநின் பொற்கழலை நாளும்
திகழ்வோம் பெருங்கீர்த்தி சேர்ந்தே-இகழ்வோமே
புல்லரக்கப் பாதகரின் பொய்யெலாம்;ஈங்கிதுகாண்
வல்லபைகோன் தந்த வரம்.
கலித்துறை
14. வரமே நமக்கிது கண்டீர் கவலையும் வஞ்சனையும்
கரவும் புலைமை விருப்பமும் ஐயமும காய்ந்தெறிந்து,
சிரமீது எங்கள் கணபதி தாள்மலர் சேர்த்தெமக்குத்
தரமேகொல் வானவர்எனறுளத் தேகளி சார்ந்ததுவே
விருத்தம்
15. சார்ந்து நிற்பாய் எனதுளமே,
சலமும் கரவும் சஞ்சலமும்
பேர்ந்து பரம சிவாநந்தப்
பேற்றை நாடி நாள்தோறும்
ஆர்ந்த வேதப் பொருள்காட்டும்
ஐயன்,சக்தி தலைப்பிள்ளை,
கூர்ந்த இடர்கள் போக்கிடுநங்
கோமான் பாதக் குளிர்நிழலே
அகவல்
16. நிழலினும் வெயிலினும் நேர்ந்தநற் றுணையாய்த்
தழலினும் புனலினும் அபாயந் தவிர்த்து
மண்ணினும் காற்றினும் பானினும் எனக்குப்
பகைமை யொன்றின்றிப் பயந்தவிர்த் தாள்வான், 5
மெளன வாயும் வரந்தரு கையும்,
உடையநம் பெருமான் உணர்விலே நிற்பான்,
ஓமெனும் நிலையில் ஒளியாத் திகழ்வான்,
வேத முனிவர் விரிவாப் புகழ்ந்த
பிருஹஸ் பதியும் பிரமனும் யாவும்  10
தானே யாகிய தனிமுதற் கடவுள்,
யானென தற்றார் ஞானமே தானாய்
ுக்தி நிலைக்க மலவித் தாவான்,
சத்தெனத் தத்தெனச் சதுர்மறை யாளர்
நித்தமும் போற்றும் நிர்மலக் கடவுள்,  15
ஏழையர்க் கெல்லாம் இரங்கும் பிள்ளை,
வாழும் பிள்ளை, மணக்குளப் பிள்ளை,
வெள்ளாடை தரித்த விட்டுணு வென்று
செப்பிய மந்திரத் தேவனை
முப்பொழு தேத்திப் பணிவது முறையே.  20
வெண்பா
17. முறையே நடப்பாய், முழுமூட நெஞ்சே!
இறையேனும் வாடாய் இனிமேல்-கறையுண்ட
கண்டன் மகன்வேத காரணன் சக்திமகன்
தொண்டருக் குண்டு துணை.
கலித்துறை
18. துணையே! எனதுயிருள்ளே யிருந்து கடர்விடுக்கும்
மணியே! எனதுயிர் மன்னவனே! என் றன் வாழ்வினுக்கோர்
அணியே! எனுள்ளத்தி லாரமு தே! என தற்புதமே!
இணையே துனக்குரைபேன், கடைவானில் எழுஞ்சுடரே!
விருத்தம்
19. சுடரே போற்றி! கணத்ததேவர்
துரையே போற்றி! எனக்கென்றும்
இடரே யின்றிக் காத்திடுவாய்,
எண்ணாயிரங்கால் முறையிட்டேன்!
படர்வான் வெளியிற் பலகோடி
கோடி கோடிப் பல்கோடி
இடறா தோடும் அண்டங்கள்
இசைத்தாய், வாழி இறையவனே!
அகவல்
20. இறைவி இறைவன் இரண்டும்ஒன் றாகித்
தாயாய்த் தந்தையாய், சக்தியும் சிவனுமாய்
உள்ளொளி யாகி உலகெலாந் திகழும்
பரம்பொரு ளேயோ! பரம்பொரு ளேயோ!
ஆதி மூலமே! அனைத்தையும் காக்கும்  5
தேவா தேவா! சிவனே! கண்ணா
வேலா! சாத்தா! விநாயகா! மாடா!
இருளா! சூரியா! இந்துவே! சக்தியே!
வாணீ! காளீ! மாமக ளேயோ!
ஆணாய்ப் பெண்ணாய் அலியாய், உள்ளது  10
யாதுமாய் விளங்கும் இயற்கை தெய்வமே!
வேதச் சுடரே, மெய்யாங் கடவுளே!
அபயம் அபயம் அபயம் நான் கேட்டேன்;
நோவு வேண்டேன், நூற் றாண்டு வேண்டினேன்,
அச்சம் வேண்டேன், அமைதி வேண்டினேன்;  15
உடைமை வேண்டேன், உன்துணை வேண்டினேன்;
வேண்டா தனைத்தையும் நீக்கி
வேண்டிய தனைத்தையும் அருள்வதுன் கடனே.
வெண்பா
21. கடமைதா னேது!கரிமுகனே! வையத்
திடம்நு யருள்செய்தாய், எங்கள்-உடைமைகளும்
இன்பங் களுமெல்லாம் ஈந்தாய்நீ யாங்களுனக்கு
என் புரிவோம் கைம்மா றியம்பு?
கலித்துறை
22. இயம்பு மொழிகள் புகழ்மறை யாகும்;எடுத்தவினை
பயன்படும்; தேவர் இருபோதும் வந்து பதந்தருவார்;
அயன்பதி முன்னோன் கணபதி சூரியன் ஆனைமுகன்
வியன்புகழ் பாடிப் பணிவார் தமக்குறும் மேன்மைகளே.
விருத்தம்
23. மேமைப் படுவாய் மனமே! கேள்
விண்ணின் இடிமுன் விழுந்தாலும்,
பான்மை தவறி நடுங்காதே,
பயத் தாலேதும் பயனில்லை;
யான்முன் னுரைத்தேன் கோடிமுறை,
இன்னுங் கோடி மறைசொல்வேன்,
ஆன்மா வான கணபதியின்
அருளுண்டு அச்சம் இல்லையே.
அகவல்
24. அச்ச மில்லை அமுங்குத லில்லை.
நடுங்குத லில்லை நாணுத லில்லை,
பாவ மில்லை பதுங்குத லில்லை
ஏது நேரினும் இடர்பட மாட்டோம்;
அண்டஞ் சிதறினால் அஞ்ச மாட்டோம்; 5
கடல்பொங்கி எழுந்தாற் கலங்கமாட்டோம்;
யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்;
எங்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்;
வான முண்டு, மாரி யுண்டு;
ஞாயிறும் காற்றும் நல்ல நீரும்   10
தீயும் மண்ணும் திங்களும் மீன்களும்
உடலும் அறிவும் உயிரும் உளவே;
தின்னப் பொருளும் சேர்ந்திடப் பெண்டும்,
கேட்கப் பாட்டும், காணநல் லுலகும்,
களிதுரை செய்யக் கணபதி பெயரும்  15
என்றுமிங் குளவாம்; சலித்திடாய்;ஏழை
நெஞ்சே!வாழி!நேர்மையுடன் வாழி!
வஞ்சகக் கவலைக் கிடங்கொடேல் மன்னோ!
தஞ்ச முண்டு கொன்னேன்
செஞ்சுடர்த் தேவன் சேவடி நமக்கே.  20
வெண்பா
25. நமக்குத் தொழில்கவிதை, நாட்டிற் குழைத்தல்
இமைக்பொழுதுஞ் சோராதிருத்தல்-உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்;
சிந்தையே! இன்மூன்றும் செய்.
கலித்துறை
26. செய்யுங் கவிதை பராசக்தி யாலே செயப்படுங்காண்,
வையத்தைக் காப்பவள் அன்னை சிவசக்தி வண்மையெலாம்
ஐயத்தி லுந்துரி தத்திலுஞ் சிந்தி யழிவதென்னே!
பையத் தொழில் புரி நெஞ்சே!கணாதிபன் பக்திகொண்டே.
விருத்தம்
27. பக்தி யுடையார் காரியத்திற்
பதறார் மிகுந்த பொறுமையுடன்
வித்து முளைக்குந் தன்மைபோல்
பெல்லச் செய்து பயனடைவார்
சக்தி தொழிலே அனைத்துமெனிற்
சார்ந்த நமக்குச் சஞ்சலமேன்?
வித்தைக் கிறவா!கணநாதா!
மேன்மைத் தொழிலிற் பணியெனையே.
அகவல்
28. எனைநீ காப்பாய், யாவுமாந் தெய்வமே!
பொறுத்தா ரன்றோ பூமி யாள்வார்?
யாவும்நீ யாயின் அனைத்தையும் பொறுத்தல்
செவ்விய நெறி, அதில் சிவநிலை பெறலாம்;
பொங்குதல் போக்கிப் பொறையெனக் கீவாய்;  5
மங்கள குணபதி;மணக்குளக் கணபதி!
நெஞ்சக் கமலத்து நிறைந்தருள் புரிவாய்;
அகல்விழி உமையாள் ஆசை மகனே!
நாட்டினைத் துயரின்றி நன்கமைத் திடுவதும்,
உளமெனும் நாட்டை ஒருபிழை யின்றி  10
ஆள்வதும்,பேரொளி ஞாயிறே யனைய
சுடர்தரு மதியொடு துயரின்றி வாழ்தலும்
நோக்கமாக் கொண்டு நின்பதம் நோக்கினேன்
காத்தருள் புரிக, கற்பக விநாயகா!  15
கோத்தருள் புரிந்த குறிப்பரும் பொருளே!
அஞ்குச பாசமும கொம்பும் தரித்தாய்
எங்குல தேவா போற்றி!
சங்கரன் மகனே! தாளிணை போற்றி!  20
வெண்பா
29. போற்றி! கலியாணி புதல்வனே! பாட்டினிலே
ஆற்ற லருளி அடியேனைத்-தேற்றமுடன்
வாணிபதம் போற்றுவித்து வாழ்விப்பாய்! வாணியருள்
வீணையொலி என்நாவில் விண்டு
கலித்துறை
30. விண்டுரை செங்குவள் கேளாய் புதுவை விநாயகரே!
தொண்டுள தன்னை பராசக்திக் கென்றுந் தொடர்ந்திடுவேன்;
பண்டைச் சிறுமைகள் போக்கி என்னாவிற் பழுத்தகவைத்
தெண்தமிழ்ப் பாடல் ஒருகோடி மேலிடச் செய்குவையே.
விருத்தம்
31. செய்யாள் இனியாள் ஸ்ரீதேவி
செந்தா மரையிற் சேர்ந்திருப்பாள்,
கையா ளெனநின் றடியேன்செய்
தொழில்கள் யாவும் கைகலந்து
செய்வாள்;புகழ்சேர் வாணியுமென்
னுன்ளே நின்று தீங்கவிதை
பெய்வாள்,சக்தி துணைபுரிவாள்;
பிள்ளாய்!நின்னைப் பேசிடிலே.
அகவல்
32. பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன்;
கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன்;
மண்மீ துள்ள மக்கள், பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள்,புற்பூண்டு,மரங்கள்;
யாவுமென் வினையால் இடும்பை தீர்ந்தே,  5
இன்பமுற் றன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!
ஞானா காசத்து நடுவே நின்றுநான்
பூமண்ட லத்தில் அன்பும் பொறையும்
விளங்குக!துன்பமும்,மிடிமையம்,நோவும்.  10
சாவும் நீங்கிச் சார்ந்தபல் லுயிசெலாம்
இன்புற்று வாழ்கஎன்பேன்!இதனை நீ
திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி,
அங்ஙனே யாகுக என்பாய்,ஐயனே!
இந்நாள், இப்பொழு தெனக்கிவ் வரத்தினை 15
அருள்வாய்;ஆதி மூலமே! அநந்த
சக்தி குமாரனே! சந்திர மவுலீ!
நித்தியப் பொருளே! சரணம்
சரணம் சரணம் சரணமிங் குனக்கே.
வெண்பா
33. உனக்கேஎன் ஆவியும் உள்ளமும் தந்தேன்;
மனக்கேதம் யாவினைம் மாற்றி-எனக்கேநீ,
நீண்டபுகழ் வாணாள் நிறைசெல்வம் பேரழகு
வேண்டுமட்டும் ஈவாய் விரைந்து. 33
கலித்துறை
34. விரைந்துன் திருவுள மென்மீ திரங்கிட வேண்டுமையா!
குரங்கை விடுத்துப் பகைவரின் தீவைக்கொழுத்தியவன்
அரங்கத் திலே திரு மாதுடன் பள்ளிகொண்டான்மருகா!
வரங்கள் பொழியும் முகிலே!என் னுள்ளத்து வாழ்பவனே!
விருத்தம்
35. வாழ்க புதுவை மணக்குடத்து
வள்ளல் பாத மணிமலரே!
ஆழ்க உள்ளம் சலனமிலாது!
அகண்ட வெளிக்கண் அன்பினையே
சூழ்க! துயர்கள் தொலைந்திடுக
தொலையா இன்பம் விளைந்திடுக!
வீழ்க கலியின் வலியெல்லாம்!
கிருத யுகந்தான் மேவுகவே.
அகவல்
36. மேவி மேவித் துயரில் வீழ்வாய்,
எத்தனை கூறியும் விடுதலைக் கிசையாய்;
பாவி நெஞ்சே! பார்மிசை நின்னை
இன்புறச் செய்வேன்;எதற்குமினி அஞ்சேல்;
ஐயன் பிள்ளை(யார்)அருளாள்ல உனக்குநான்  5
அபயமிங் களித்தேன்....நெஞ்(சே)
நினக்குநான் உரைத்தன நிலைநிறுத்தி(டவே)
தீயடைக் குதிப்பேன்,கடலுள் வீழ்வேன்,
வென்விட முண்பேன்;மேதினி யழிப்பேன்;
ஏதுஞ் செய்துனை இடரின் றிக் காப்பேன்;  10
மூட நெஞ்சே! முப்பது கோடி
முறையுனக் குரைத்தேன்,இன்னும் மொழிவேன்;
தலையிலிடி விழுந்தால் சஞ்சலப் படாதே;
ஏது நிகழினும்நமக்கென்? என்றிரு;
பராசக்தி யுளத்தின் படியுலகம் நிகழும்  15
நமக்கேன் பொறுப்பு? நான் என்றோர் தனிப்பொருள்
இல்லை;நானெனும் எண்ணமே வெறும்பொய்
என்றான் புத்தன்;இறைஞ்சுவோம் அவன்பதம்,
இனியெப் பொழுதும் உரைத்திடேன்,இதை நீ
மறவா திருப்பாய், மடமை நெஞ்சே!  20
கவலைப் படுதலே கருநரகு, அம்மா!
கவலையற் றிருத்தலே முக்தி;
சினொரு மகனிதை நினக்கருள் செய்கேவே!
வெண்பா
37. செய்கதவம்!செய்கதவம்!நெஞ்சே!தவம் செய்தால்,
எய்த விரும்பியதை எய்தலாம்;-வையகத்ல்
அன்பிற் சிறந்த தவமில்லை;அன்புடையார்
இன்புற்று வாழ்தல் இயல்பு.
கலித்துறை
38. இயல்பு தவறி விருப்பம் விளைதல் இயல்வதன்றாம்
செயலிங்கு சித்த விருப்பிப் பின்பற்றும்;சீர்மிகவே
பயிலு நல்லன்பை இயல்பெனக் கொள்ளுதிர்பாரிலுள்ளீர்!
முயலும் விகைள் செழிக்கும் விநாயகன் மொய்ம்பினிலே.
விருத்தம்
39. மொய்க்குங் கவலைப் பகைபோக்கி,
முன்னோன் ருளைத் துணையாக்கி,
எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி,
உடலை இரும்புக் கிணையாக்கிப்
பொய்க்குங் கலியை நான்கொன்று
பூலோ கத்தார் கண்முன்னே,
மெய்க்குங் கிருத யுகத்தினையே
கொணர்வேன், தெய்வ விதியிஃதே
அகவல்
40. விதியே வாழி!விநாயகா வாழி!
பதியே வாழி! பரமா வாழி!
சிதைவினை நீக்கும் தெய்வமே, போற்றி!
புதுவினை காட்டும் புண்ணியா,போற்றி!
மதியினை வளர்க்கும் மன்னே,போற்றி! 5
இச்சையும் கிரியையும் ஞானமும் என்றாக்கும்
மூல சக்தியின் முதல்வா போற்றி!
பிறைமதி சூடிய பெருமான் வாழி!
நிறைவினைச் சேர்க்கம் நிர்மலன் வாழி!
காலம் மன்றையும் கடந்தான் வாழி! 10
சக்தி தேவி சரணம் வாழி!
வெற்றி வாழி! வீரம் வாழி!
பக்தி வாழி! பலபல காலமும்
உண்மை வாழி! ஊக்கம் வாழி!
நல்ல குணங்களே நம்மிடை யமரர் 15
பதங்களாம்,கண்டீர்!பாரிடை மக்களே!
கிருத யுகத்தினைக் கேடின்றி நிறுத்த
விரதம்நான் கொண்டனன்;வெற்றி
தருஞ்சுடர் விநாயகன் தாளிணை வாழியே!
2. முருகா! முருகா!
ராகம்-நாட்டைக்குறிஞ்சி)  தாளம்-ஆதி
பல்லவி
முருகா!-முருகா!-முருகா!
சரணங்கள்
1. வருவாய் மயில்மீ தினிலே
வடிவே லுடனே வருவாய்!
தருவாய் நலமும் தகவும் புகழும்
தவமும் திறமும் தனமும் கனமும் (முருகா)
2. அடியார் பலரிங் குளரே
அவரை விடுவித் தருள்வாய்!
முடியா மறையின் முடிவே!அசுரர்
முடிவே கருதும் வடிவே லவனே! (முருகா)
3. சுருதிப் பொருளே,வருக!
துணிவே,கனலே,வருக!
கருதிக் கருதிக் கவலைப் படுவார்
கவலைக் கடலைக் கடியும் வடிவேல். (முருகா)
4. அமரா வதிவாழ் வுறவே
அருள்வாய்!சரணம்,சரணம்
குமரா,பிணியா வையுமே சிதறக்
குமுறும் சுடர்வே லவனே,சரணம்! (முருகா)
5. அறிவா கியகோ யிலிலே
அருளா கியதாய் மடிமேல்
பொறிவே லுடனே வளர்வாய்!அடியார்
புதுவாழ் வுறவே புவிமீ தருள்வாய் (முருகா)
6. குருவே!பரமன் மகனே!
குகையில் வளருங் கனலே!
தருவாய் தொழிலும் பயனும் அமரர்
சமரா திபனே! சரணம்!சரணம்! (முருகா)
3. வேலன் பாட்டு
ராகம்-புன்னாகவராளி   தாளம்-திஸ்ர ஏகம்
வில்லினை யொத்த புருவம் வளைத்தனை;
வேலவா!-அங்கொர்
வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி
யானது, வேலவா!
சொல்லினைத் தேனிற் குழைத்துரைப் பாள்சிறு
வள்ளியைக்-கண்டு
சொக்கி மரமென நின்றனை
தென்மலைக் காட்டிலே
கல்லினை யொத்த வலிய மனங்கொண்ட
பாதகன்-சிங்கன்
கண்ணிரண் டாயிரங் காக்கைக்
கிரையிட்ட வேலவா!
பல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடும்
வள்ளியை-ஒரு
பார்ப்பனக் கோலந் தரித்துக்
கரந்தொட்ட வேலவா!   1
வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்குங்
கடலினை-உடல்
வெம்பி மறுகிக் கருகிப்
புகைய வெருட்டினாய்.
கிள்ளை மொழிச்சிறு வள்ளி யெனும்பெயர்ச்
செல்வத்தை-என்றும்
கேடற்ற வாழ்வினை-இன்ப
விளக்கை மருவினாய்.
கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு
குலைத்தவன்-பானு
கோபன் தலைபத்துக் கோடி
துணுக்குறக் கோபித்தாய்.
துள்ளிக் குலாவித் திரியுஞ் சிறுவன
மானைப்போல்-தினைத்
தோட்டத்திலேயொரு பெண்ணை
மணங்கொண்ட வேலவா!   2
ஆறு சுடர்முகங் கண்டுவிழிக்கின்ப
மாகுதே;-கையில்
அஞ்ச லெனுங்குறி கண்டு
மகிழ்ச்சியுண் டாகுதே,
நீறு படக்கொடும் பாவம் பிணிபசி
யாவையும்-இங்கு
நீக்கி அடியரை நித்தமுங்
காத்திடும் வேலவா!
கூறு படப்பல கோடி யவுணரின்
கூட்டத்தைக்-கண்டு
கொக்கரித் தண்டங் குலுங்க
நகைத்திடுஞ் சேவலாய்!
மாறு படப்பல வேறு வடிவொடு
தோன்றுவாள்-எங்கள்
வைரனிவ பெற்ற பெருங்கன
லே.வடி வேலவா!   3
4. கிளி விடு தூது
பல்லவி
சொல்ல வல்லாயோ?-கிளியே!
சொல்லநீ வல்லாயோ?-
அனுபல்லவி
வல்ல வேல்முரு கன்தனை-இங்கு
வந்து கலந்து மகிழ்ந்து குலாவென்று (சொல்ல)
சரணங்கள்
1. தில்லை யம்பலத்தே-நடனம்
செய்யும் அமரர்பிரான்-அவன்
செல்வத் திருமகனை இங்கு வந்து
சேர்ந்து கலந்து மகிழ்ந்திடு வாயென்று (சொல்ல)
2. அல்லிக் குளத்தருகே-ஒரு நாள்
அந்திப் பொழுதினிலே-அங்கோர்
முல்லைச் செடியதன்ப்ற்-செய்த வினை
முற்றும் மறந்திடக் கற்றதென் னேயென்று (சொல்ல)
3. பாலை வனத்திடைடே-தனைக் கைப்
பற்றி நடக்கையிலே-தன் கை
வேலின் மிசையாணை-வைத்துச் சொன்ன
விந்தை மொழிகளைச் சிந்தைசெய் வாயென்று (சொல்ல)
5. முருகன் பாட்டு
வீரத் திருவிழிப் பார்வையும்-வெற்றி
வேலும் மயிலும்என் முன்னின்றே-
எந்த நேரத் திலும்என்னைக் காக்குமே;-அன்னை
நீலி பராசக்தி தண்ணருட்-கரை
ஓரத்திலே புணை கூடுதே;-கந்தன்
ஊக்கத்தை என்னுளம் நாடுதே;-மலை
வாரத் திலேவிளை யாடுவான்-என்றும்
வானவர் துன்பத்தைச் சாடுவான்.  1
வேடர் கனியை விரும்பியே-தவ
வேடம் புனைந்து திரிகுவான்;-தமிழ்
நாடு பெரும்புகழ் சேரவே முனி
நாதனுக் கிம்மொழி கூறுவான்;-சுரர்
பாடு விடிந்து மகிழ்ந்திட-இருட்
பார மலைகளைச் சீறுவான்;-மறை
யேடு தரித்த முதல்வனும்-குரு
என்றிட மெய்ப்புகழ் ஏறுவான்.   2
தேவர் மகளை மணந்திடத்-தெற்குத்
தீவி லசுரனை மாய்த்திட்டான்;மக்கள்
யாவருக் குந்தலை யாயினான்;மறை
அர்த்த முணர்த்துநல் வாயினான்;தமிழ்ப்
பாவலர்க் கின்னருள் செய்குவான்;-இந்தப்
பாரிவ்ல அறமழை பெய்குவான்;-நெஞ்சின்
ஆவ லறிந்தருள் கூட்டுவான்;-நித்தம்
ஆண்மையும் வீரமும் ஊட்டுவான்.  3
தீவளர்த் தேபழ வேதியர்-நின்தன்
சேவகத் தின்புகழ் காட்டினார்;-ஒளி
மீவள ருஞ்செம்பொன் நாட்டினார்-நின்றன்
மேன்மையி னாலறம் நாட்டினார்!;-ஐய!
நீவள ருங்குரு வெற்பிலே-வந்து
நின்றுநின் சேவகம் பாடுவோம்-வரம்
ஈவள் பராசக்தி யன்னைதான்-உங்கள்
இன்னருளே யென்று நாடுவோம்-நின்றன்  4
6. எமக்கு வேலை
தோகைமேல் உலவுங் கந்தன்
சுடர்க்கரத் திருக்கும் வெற்றி
வாகையே சுமக்கும் வேலை
வணங்குவது எமக்கு வேலை.
7. வள்ளிப்பாட்டு -1
பல்லவி
எந்த நேரமும்நின் மையல் ஏறுதடீ!
குற வள்ளீ!சிறு வள்ளீ!
சரணங்கள்
(இந்த)நேரத்தி லேமலை வாரத்தி லேநதி
யோரத்தி லேயுனைக் கூடி-நின்றன்
வீரத் தமிழ்ச்சொல்லின் சாரத்தி லேமனம்
மிக்க மகிழ்ச்சிகொண் டாடி-குழல்
பாரத்தி லேஇத ழீரத்தி லேமுலை
யோரத்திலே அன்பு சூடி-நெஞ்சம்
ஆரத் தழுவி அமரநிலை பெற்று
அதன்பயனை யின்று காண்பேன். (எந்தநேரமும்)
வெள்ளை நிலாவிங்கு வானத்தை மூடி
விரிந்து பொழிவது கண்டாய்-ஒளிக்
கொள்ளை யிலேயுனைக் கூடி முயங்கிக்
குறிப்பினி லேயொன்று பட்டு-நின்தன்
பிள்ளைக் கிளிமென் குதலையி லேமனம்
பின்ன மறச்செல்ல விட்டு அடி
தெள்ளி ஞானப் பெருஞ்செல்வ மே!நினைச்
சேர விரும்பினன்,கண்டாய்! (எந்தநேரமும்)
வட்டங்க ளிட்டுக் குளமக லாத
மணிப்பெருந் தெப்பத்தைப் போலே-நினை
விட்டு விட்டுப்பல லீலைகள் செய்துநின்
மேனி தனைவிட லின்றி-அடி
எட்டுத் திசையும் ஒளிர்ந்திடுங் காலை
யிரவினைப் போன்ற முகத்தாய்! முத்தம்
இட்டுப் பலமுத்த மிட்டுப் பலமுத்தம்
இட்டுனைச் சேர்ந்திட வந்தேன். (எந்தநேரமும்)
8. வள்ளிப் பாட்டு-2
ராகம்-கரஹரப்பிரியை தாளம்-ஆதி
பல்லவி
உனையே மையல் கொண்டேன், வள்ளீ!
உவமையில் அரியாய்,உயிரினும் இனியாய்! (உனையே)
சரணங்கள்
எனை யாள்வாய், வள்ளீ!வள்ளீ!
இளமயி லே!என் இதயமலர் வாழ்வே!
கனியே!சுவையுறு தேனே!
கலவியி லேஅமு தனையாய்!-(கலவியிலே)
தனியே,ஞான விழியாய்!நிலவினில்
நினைமருவி, வள்ளீ!வள்ளீ!
நீயா கிடவே வந்தேன். (உனையே)
9. இறைவா!இறைவா!
ராகம்-தன்யாசி
பல்லவி
எத்தனை கோடி இன்பம் வைத்தாய்?-எங்கள்
இறைவா!இறைவா!இறைவா!  (ஓ-எத்தனை)
சரணங்கள்
சித்தினை அசித்தடன் இணைத்தாய்-அங்கு
சேரும் ஐம் பூதத்து வியனுல கமைத்தாய்.
அத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சிய
மாகப் பலபலநல் லழகுகள் சமைத்தாய். (ஓ-எத்தனை)
முக்தியென் றொருநிலை சமைத்தாய்-அங்கு
முழுதினையு முணரும் உணர் வ்மைத்தாய்
பக்தியென் றொருநிலை வகுத்தாய்-எங்கள்
பரமா!பரமா!பரமா! (ஓ-எத்தனை)
10. போற்றி அகவல்
போற்றி உலகொரு மூன்றையும் புணர்ப்பாய்!
மாற்றுவாய்,துடைப்பாய்,வளர்ப்பாய,காப்பாய்!
கனியிலே சுவையும் காற்றிலே இயக்கமும்
கலந்தாற் போலநீ அனைத்திலும் கலந்தாய்
உலகெலாந் தானாய் ஒளிர்வாய், போற்றி 5
அன்னை, போற்றி!அமுதமே போற்றி!
புதியதிற் புதுமையாய் முதியதில் முதுமையாய்,
உயிரிலே உயிராய் இறப்பிலும் உயிராய்,
உண்டெனும் பொருளில் உண்மையாய் என்னுளே
நானெனும் பொருளாய்,நானையே பெருக்கித் 10
தானென மாற்றுஞ் சாகாச் சுடராய்,
கவலைநோய் தீர்க்கும் மருந்தின் கடலாய்
பிணியிருள் கெடுக்கும் பேரொளி ஞாயிறாய்,
யானென தின்றி யிருக்குநல் யோகியர்
ஞானமா மகுட நடுத்திகழ் மணியாய் 15
செய்கையாய்,ஊக்கமாய,சித்தமாய்,அறிவாய்
நின்றிடுந் தாயே,நித்தமும் போற்றி!
இன்பங் கேட்டேன்,ஈவாய் போற்றி!
துன்பம் வேண்டேன், துடைப்பாய் போற்றி!
அமுதங் கேட்டேன்,அளிப்பாய் போற்றி! 20
சக்தி,போற்றி!தாயே,போற்றி!
முக்தி போற்றி! மோனமே போற்றி!
சாவினை வேண்டேன்,தவிர்ப்பாய் போற்றி!
11. சிவசக்தி
இயற்கையென் றுனைரைப்பார்-சிலர்
இணங்கும்ஐம் தங்கள் என்றிசைப்பார்:
செயற்கையின் சக்தியென்பார்-உயித்
தீயென்பார் அறிவென்பார் ஈசனென்பார்;
வியப்புறு தாய்நினக்கே-இங்கு
வேள்விசெய் திடுமெங்கள்ஓம்என்னும்
நயப்படு மதுவுண்டே?-சிவ
நாட்டியங் காட்டிநல் லருள்புரிவாய் 1
அன்புறு சோதியென்பார்-சிலர்
ஆரிருட் பாளின் றுனைப்புகழ்வார்:
இன்பமென் றுரைத்திடுவார்-சிலர்
எண்ணருந் துன்பமென் றுனைஇசைப்பார்;
புன்பலி கொண்டுவந்தோம்-அருள்
பூண்டெமைத் தேவர்தங் குலத்திடுவாய்
மின்படு சிவசக்தி எங்கள்
வீரைநின் திருவடி சரண்புகுந்தோம். 2
உண்மையில அமுதாவாய்;-புண்கள்
ஒழித்திடு வாய்களி, உதவிடுவாய்!
வண்மைகொள் உயிர்ச்சுடராய்-இங்கு
வளர்ந்திடு வாய்என்றும் மாய்வதிலாய்;
ஒண்மையும் ஊக்கமுந்தான்-என்றும்
ஊறிடுந் திருவருட் சுனையாவாய்;
அண்மையில் என்றும் நின்றே-எம்மை
ஆதரித் தருள்செய்யும் விரதமுற்றாய் 3
தெளிவுறும் அறிவினைநாம்-கொண்டுங
சேர்த்தனம்,நினக்கது சோமரசம்;
ஒளியுறும் உயிர்ச்செடியில்-இதை
ஓங்கிடு மதிவலி தனிற்பிழிந்தோம்;
களியுறக் குடித்திடுவாய்-நின்றன்
களிநடங் காண்பதற் குளங்கனிந்தோம்;
குளிர்சுவைப் பாட்டிசைத்தே-சுரர்
குலத்தினிற் சேர்ந்திடல் விரும்புகின்றோம் 4
அச்சமும் துயரும் என்றே-இரண்டு
அசுரர்வந் தெமையிங்கு சூழ்ந்துநின்றார்.
துச்சமிங் கிவர்படைகள்-பல
தொல்லைகள் கவலைகள் சாவுகளாம்;
இச்சையுற் றிவரடைந்தார்-எங்கள்
இன்னமு தைக்கவர்ந் தேகிடவே,
பிச்சையிங் கெமக்களித்தாய்-ஒரு
பெருநகர் உடலெனும் பெயரின தாம் 5
கோடி மண் டபந்திகழும்-திறற்
கோட்டையிங் கிதையவர் பொழுதனைத்தும்
நாடிநின் றிடர்புரிவார்-உயிர்
நதியினைத் தடுத்தெமை நலித்திடுவார்.
சாடுபல் குண்டுகளால்-ஒளி
சார்மதிக் கூடங்கள் தகர்த்திடுவார்;
பாடிநின் றுனைப்புகழ்வோம்-எங்கள்
பகைவரை அரித்தெமைக் காத்திடுவாய்! 6
நின்னருள் வேண்டுகின்றோம்-எங்கள்
நீதியுந் தர்மமும் நிலைப்பதற்கே
பொன்னவிர் கோயில்களும்-எங்கள்
பொற்புடை மாதரும் மதலையரும்
அன்னநல் லணிவயல்கள்-எங்கள்
ஆடுகள் மாடுகள் குதிரைகளும்,
இன்னவை காத்திடவே அன்னை
இணைமலர்த் திருவடி துணைபுகந்தோம். 7
எம்முயி ராசைகளும்-எங்கள்
இசைகளும் செயல்களும் துணிவுகளும்,
செம்மையுற் றிடஅருள்வாய் நின்தன்
சேவடி அடைக்கலம் புகுந்துவிட்டோம்
மும்மையின் உடைமைகளும்-திரு
முன்னரிட் டஞ்சலி செய்துநிற்போம்;
அம்மைநற் சிவசக்தி-எமை
அமரர்தம் நிலையினில் ஆக்கிடுவாய் 8
12. காணி நிலம் வேண்டும்
காணி நிலம் வேண்டும்-பராசக்தி
காணி நிலம் வேண்டும்;-அங்கு,
தூணில் அழகியதாய்-நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய்-அந்தக்
காணி நிலத்திடையே-ஓர் மாளிகை
கட்டித் தரவேணும்;-அங்கு,
கேணி யருகினிலே-தென்னைமரம்
கீற்று மிளநீரும்   1
பத்துப் பன்னிரண்டு-தென்னைமரம்
பக்கத்திலே வேணும்;-நல்ல
முத்துச் சுடர்போலே-நிலாவொளி
முன்புவர வேணும்?அங்கு
கத்துங் குயிலோசை-சற்றே வந்து
காதிற்பட வேணும்;-என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளந்
தென்றல்வர வேணும்.  2
பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு
பத்தினிப் பெண்வேணும்;-எங்கள்
கூட்டுக் களியினிலே-கவிதைகள்
கொண்டுதர வேணும்;-அந்தக்
காட்டு வெளியினிலே,-அம்மா!நின்தன்
காவலுற வேணும்;என்தன்
பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.  3
13. நல்லதோர் வீணை
நல்லதோர் வீணைசெய்தே-அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி;-எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ,-இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி,சிவசக்தி!-நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? 1
விசையுறு பந்தினைப்போல்-உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையுறு மனங்கேட்டேன்-நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும்-சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன்;-இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ? 2
14. மஹாசக்திக்கு விண்ணப்பம்
மோகத்தைக் கொன்றுவிடு-அல்லா லென்தன்
மூச்சை நிறுத்திவிடு;
தேகத்தைச் சாய்த்துவிடு-அல்லா லதில்
சிந்தனை மாய்த்துவிடு;
யோகத் திருத்திவிடு-அல்லா லென்தன்
ஊனைச் சிதைத்துவிடு;
ஏகத் திருந்துலகம்-இங்குள்ளன
யாவையும் செய்பவளே!  1
பந்தத்தை நீக்கிவிடு-அல்லா லுயிர்ப்
பாரத்தைப் போக்கிவிடு;
சிந்தை தெளிவாக்கு-அல்லா லிரைச்
செத்த வுடலாக்கு;
இந்தப் பதர்களையே-நெல்லாமென
எண்ணி இருப்பேனோ?
எந்தப் பொருளிலுமே-உள்ளே நின்று
இயங்கி யிருப்பவளே.  2
உள்ளம் குளிராதோ?-பொய்யாணவ
ஊனம் ஒழியாதோ?
கள்ளம் உருகாதோ?-அம்மா!பக்திக்
கண்ணீர் பெருகாதோ?
வெள் ளைக் கருணையிலே இந்நாய் சிறு
வேட்கை தவிராதோ?
விள்ளற் கரியவளே அனைத்திலும்
மேவி யிருப்பவளே!  3
15. அன்னையை வேண்டுதல்
எண்ணிய முடிதல் வேண்டும்,
நல்லவே எண்ணல் வேண்டும்;
திண்ணிய நெஞ்சம் வேண்டும்,
தெறிந்தநல் லறிவு வேண்டும்;
பண்ணிய பாவ மெல்லாம்
பரிதி முன் பனியே போல,
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்!  1
16. பூலோக குமாரி
பல்லவி
பூலோக குமாரி ஹே அம்ருத நாரி
அனுபல்லவி
ஆலோக ஸ்ருங்காரி, அம்ருத கலச குச பாரே,
கால பய குடாரி காம வாரி, கனக லதா ரூப கர்வ திமிராரே.
சரணம்
பாலே ரஸ ஜாலே,பகவதி ப்ரஸீத காலே,
நீல ரத்ன மய நேத்ர விசாலே, நித்ய யுவதி பதநீரஜ மாலே-
லீலா ஜ்வாலா நிர்மித வாணீ,நிரந்தரே நிகில லோகேசாநி
நிருபம ஸீந்தரி நித்ய கல்யாணி, நிஜம் மாம் குரு ஹே மன்மத ராணி.
17. மஹாசக்தி வெண்பா
தன்னை மறந்து சகல உலகினையும்
மன்ன நிதங்காக்கும் மஹாசக்தி-அன்னை
அவளே துணையென் றனவரதம் நெஞ்சம்
துவளா திருத்தல் சுகம்  1
நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி,
அஞ்சி உயிர்வாழ்தல் அறியாமை;-தஞ்சமென்றே
வையமெலாங் காக்கும் மஹாசக்தி நல்லருளை
ஐயமறப் பற்றல் அறிவு  2
வையகத்துக் கில்லை,மனமே!நினக்குநலஞ்
செய்யக் கருதியிவை செப்புவேன்-பொய்யில்லை
எல்லாம் புரக்கும் இறைநமையுங் காக்குமென்ற
சொல்லால் அழியும் துயர்.  3
எண்ணிற் கடங்காமல் எங்கும் பரந்தனவாய்
விண்ணிற் சுடர்கின்ற மீனையெல்லாம் பண்ணிய
சக்தியே நம்மைச் சமைத்ததுகாண். நூறாண்டு
பக்தியுடன் வாழும் படிக்கு  4
18. ஓம் சக்தி
நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப் பூண்,
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம்,இவள்
பார்வைக்கு நேர்பெருந்தீ
வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்தரெல் லாம்,
தஞ்சமென் றேயுரைப் பீர்அவள் பேர்,சக்தி
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.  1
நல்லதுந் தீயதுஞ் செய்திடும் சக்தி
நலத்தை நமக்கிழைப் பாள்;
அல்லது நீங்கும்என் றேயுலகேழும்
அறைந்திடு வாய் முர சே!
சொல்லத் தகுந்த பொருளன்று காண்!இங்கு
சொல்லு மவர்தமை யே,
அல்லல் கெடுத்தம ரர்க்கிணை யாக்கிடும்
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.  2

நம்புவ தேவழி யென்ற மறையதன்னை
நாமின்று நம்பிவிட் டோம்
கும்பிட்டெந்நேரமும்சக்தியென் றாலுனைக்
கும்பிடு வேன்,மன மே!
அம்புக்கு தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்ச மில்லாத படி
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம்
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.  3
பொன்னைப் பொழிந்திடு மின்னை வளர்த்திடு,
போற்றி உனக்கிசைத் தோம்;
அன்னை பராசக்தி என்றுரைத் தோம்;தளை
அத்தனை யுங்களைந் தோம்;
சொன்ன படிக்கு நடந்திடு வாய், மன
மே தொழில் வேறில்லை,காண்;
இன்னும தேயுரைப் போம்,சக்தி ஓம் சக்தி,
ஓம்சக்தி, ஓம்சக்தி, ஓம்.  4
வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு
ளாக விளங்கிடு வாய்!
தெள்ளு கலைத்தமிழ் வாணி! நினக்கொரு
விண்ணப்பஞ் செய்திடு வேன்;
எள்ளத் தனைப் பொழு தும்பய னின்றி
இராதென்றன் நாவினி லே
வெள்ள மெனப்பொழி வாய்சக்தி வேல், சக்தி
வேல், சக்தி வேல்,சக்தி வேல்!  5
19. பராசக்தி
கதைகள் சொல்லிக் கவிதை யெழுதென்பார்;
காவி யம்பல நீண்டன கட்டென்பார்;
விதவி தப்படு மக்களின் சித்திரம்
மேவி நாடகச் செய்யுளை மேவென்பார்;
இதய மோஎனிற் காலையும் மாலையும்
எந்த நேரமும் வாணியைக் கூவுங்கால்,
எதையும் வேடில தன்னை பராசக்தி
இன்ப மொன்றினைப் பாடுதல் அன்றியே. 1
நாட்டு மக்கள் பிணியும் வறுமையும்
நையப்பா டென்றொரு தெய்வங் கூறுமே;
கூட்டி மானுடச் சாதியை ஒன்றெனக்
கொண்டு வையம் முழுதும் பயனுறப்
பாட்டி லேயறங் காட்டெனு மோர் தெய்வம்;
பண்ணில் இன்பமுங் கற்பனை விந்தையும்
ஊட்டி எங்கும் உவகை பெருகிட
ஓங்கும் இன்கவி ஓதெனும் வேறொன்றே. 2
நாட்டு மக்கள் நலமுற்று வாழவும்
நானி லத்தவர் மேனிலை யெய்தவும்
பாட்டி லேதனி யின்பத்தை நாட்டவும்,
பண்ணி லேகளி கூட்டவும் வேண்டி நான்
மூட்டு மன்புக் கனலொடு வாணியை
முன்னுகின்ற பொழுதி லெலாங்குரல்
காட்டி அன்னை பராசகித ஏழையேன்
கவிதை யாவுந் தனக்கெனக் கேட்கின்றாள். 3
மழைபொ ழிந்திடும் வண்ணத்தைக் கண்டுநான்
வானி ருண்டு கரும்புயல் கூடியே
இழையு மின்னல் சரேலென்று பாயவும்,
ஈரவாடை இரைந்தொலி செய்யவும்
உழையெ லாம்இடை யின்றிவ் வானநீர்
ஊற்றுஞ் செய்தி உரைத்திட வேண்டுங்கால்
மழையுங் காற்றும் பராசக்தி செய்கைகாண்
வாழ்க தாய்! என்று பாடுமென் வாணியே. 4
சொல்லி னுக்கெளி தாகவும் நின்றிடாள்
சொல்லை வேறிடஞ் செல்ல வழிவிடாள்;
அல்லி னுக்குட் பெருஞ்சுடர் காண்பவர்
அன்னை சக்தியின் மேனி நலங்கண்டார்.
கல்லி னுக்குள் அறிவொளி காணுங்கால்,
கால வெள்ளத் திலேநிலை காணுங்கால்,
புல்லி னில்வயி ரப்படை காணுங்கால்
பூத லத்தில் பராசக்தி தோன்றுமே! 5
20. சக்திக் கூத்து
ராகம்-பியாக்
பல்லவி
தகத்தகத்தகத் தகதகவென் றாடோமோ?-சிவ
சக்திசக்தி சக்தியென்று பாடோமோ? (தகத்)
சரணங்கள்
1. அகத்தகத் தகத்தினிலே உள்நின்றாள்-அவள்
அம்மையம்மை எம்மைநாடு பொய்வென்றாள்
தகத்தக நமக் கருள் புரிவாள் தாளொன்றே
சரண மென்று வாழ்த்திடுவோம் நாமென்றே.  (தகத்)
2. புகப்புகப் புக வின்பமடா போதெல்லாம்
புறத்தினிலே தள்ளிடுவாய் சூதெல்லாம்
குகைக்கு ளங்கே யிருக்குதடா தீபோலே-அது
குழந்தைகயதன் தாயடிக்குகீழ் சேய்போலே    (தகத்)
3. மிகத்தகைப்படு களியினிலே மெய்சோர-உள
வீரம்வந்து சோர்வை வென்று மைதேர
சகத்தினி லுள்ள மனிதரெல்லாம் நன்றுநன்றென-நாம்
சதிருடனே தாளம் இசை இரண்டுமொன்றென    (தகத்)
4. இந்திரனா ருலகினிலே நல்லின்பம்
இருக்கு தென்பார் அதனை யிங்கே கொண்டெய்தி,
மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்-நல்ல
மதமுறவே அமுதநிலை கண்டெய்தித்(தகத்)
21. சக்தி
துன்ப மிலாத நிலையே சக்தி,
தூக்க மிலாக்கண் விழிப்பே சக்தி;
அன்பு கனிந்த கனிவே சக்தி,
ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி;
இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி,
எண்ணத் திருக்கும் எரியயே சக்தி,
முன்புநிற் கின்ற தொழிலே சக்தி,
முக்தி நிலையின் முடிவே சக்தி. 1
சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி,
சொல்லில் விளங்கும் சுடரே சக்தி;
தீம்பழந் தன்னில் சுவையே சக்தி,
தெய்வத்தை எண்ணும் நினைவே சக்தி;
பாம்பை அடிக்கும் படையே சக்தி;
பாட்டினில் வந்த களியே சக்தி;
சாம்பரைப் பூசி மலைமிசை வாழும்
சங்கரன் அன்புத் தழலே சக்தி.  2

வாழ்வு பெருக்கும் மமதியே சக்தி,
மாநிலம் காக்கும் மதியே சக்தி;
தாழ்வு தடுக்குஞ் சதிரே சக்தி,
சஞ்சலம் நீக்குந் தவமே சக்தி,
வீழ்வு தடுக்கும் விறலே சக்தி,
விண்ணை யளக்கும் விரிவே சக்தி;
ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி,
உள்ளத் தொளிரும் விளக்கே சக்தி. 3
22. வையம் முழுதும்
கண்ணிகள்
வையம் முழுதும் படைத்தளிக் கின்ற
மஹாசக்தி தன்புகழ் வாழ்த்து கின்றோம்;
செய்யும் வினைகள் அனைத்திலும் வெற்றி
சேர்ந்திட நல்லருள் செய்க வென்றே! 1
பூதங்கள் ஐந்தில் இருந்தெங்குங் கண்ணிற்
புலப்படும் சக்தியைப் போற்று கின்றோம்;
வேதங்கள் சொன்ன படிக்கு மனிதரை
மேன்மையுறச் செய்தல் வேண்டு மென்றே! 2

வேகம் கவர்ச்சி முதலிய பல்வினை
மேவிடும் சக்தியை மேவு கின்றோம்;
ஏக நிலையில் இருக்கும் அமிர்தத்தை
யாங்கள் அறிந்திட வேண்டு மென்றே! 3
உயிரெனத் தோன்றி உணவுகொண் டேவளர்ந்
தோங்கிடும் சக்தியை ஓதுகின்றோம்;
பயிரினைக் காக்கும் மழையென எங்களைப்
பாலித்து நித்தம் வளர்க்க வென்றே. 4
சித்தத்தி லேநின்று சேர்வ துணரும்
சிவசக்தி தன்புகழ் செப்பு கின்றோம்;
இத்தரை மீதினில் இன்பங்கள் யாவும்
எமக்குத் தெரிந்திடல் வேண்டு மென்றே. 5
மாறுத லின்றிப் பராசக்தி தன்புகழ்
வையமிசை நித்தம் பாடு கின்றோம்;
நூறு வயது புகழுடன் வாழ்ந்துயர்
நோக்கங்கள் பெற்றிட வேண்டு மென்றே. 6
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி என்றுரை செய்தி டுவோம்;
ஓம் சக்தி என்பவர் உண்மை கண்டார்;சுடர்
ஒண்மைகொண்டார்,உயிர் வண்மை கொண்டார். 7
23. சக்தி விளக்கம்
ஆதிப் பரம்பொருளின் ஊக்கம்-அதை
அன்னை எனப்பணிதல் ஆக்கம்;
சூதில்லை காணுமிந்த நாட்டீர்!மற்றத்
தொல்லை மதங்கள் செய்யும் தூக்கம். 1
மூலப் பழம்பொருளின் நாட்டம்-இந்த
மூன்று புவியுமதன் ஆட்டம்;
காலப் பெருங்கள்ததின் மீதே-எங்கள்
காளி நடமுலகக் கூட்டம்  2

காலை இளவெயிலின் காட்சி-அவள்
கண்ணொளி காட்டுகின்ற மாட்சி;
நீல விசும்பினிடை இரவில்-சுடர்
நேமி யனைத்துமவள் ஆட்சி.  3

நாரண னென்று பழவேதம்-சொல்லும்
நாயகன் சக்திதிருப் பாதம்;
சேரத் தவம் புரிந்து பெறுவார்-இங்கு
செல்வம் அறிவு சிவபோதம்.  4
ஆதி சிவனுடைய சக்தி-எங்கள்
அன்னை யருள்பெறுதல் முக்தி;
மீதி உயிரிருக்கும் போதே-அதை
வெல்லல் சுகத்தினுக்கு யுக்தி.  5
பண்டை விதியுடைய தேவி-வெள்ளைப்
பாரதி யன்னையருள் மேவி,
கண்ட பொருள்விளக்கும் நூல்கள்-பல
கற்றலில் லாதவனோர் பாவி.  6
மூர்த்திகள் மூன்று பொருள் ஒன்று;-அந்த
மூலப் பொருள் ஒளியின் குன்று;
நேர்த்தி திகழும் அந்த ஒளியை-அந்த
நேரமும் போற்று சக்தி என்று.  7
24.சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்
ராகம்-பூபாளம்     தாளம்-சதுஸ்ர ஏகம்
கையைச், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சாதனைகள் யாவினையுங் கூடும்-கையைச்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்தியுற்றுக் கல்வினையுஞ் சாடும். 1
கண்ணைச்,சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்தி வழியினையது காணும்-கண்ணைச்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சத்தியமும் நல்லருளும் பூணும்.  2
செவி, சக்தி தனக்கே கருவி யாக்கு-சிவ
சக்திசொலும் மொழியது கேட்கும்-செவி
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்தி திருப் பாடலினை வேட்கும். 3
வாய், சக்தி தனக்கே கருவி யாக்கு-சிவ
சக்தி புகழினையது முழங்கும்-வாய்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்திநெறி யாவினையும் வழங்கும். 4
சிவ, சக்திதனை நாசி நித்தம் முகரும்-அதைச்
சக்தி தனக்கே கருவி யாக்கு-சிவ
சக்திதிருச் சுவையினை நுகரும்-சிவ
சக்தி தனக்கே எமது நாக்கு.  5
மெய்யைச்,சக்தி தனக்கே கருவி யாக்கு-சிவ
சக்திதருந் திறனதி லேறும்-மெய்யைச்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சாதலற்ற வழியினைத் தேறும்  6

கண்டம், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சத்தமும் நல்லமுதைப் பாடும்-கண்டம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்தியுடன் என் றும்உற வாடும்.  7
தோள், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
தாரணியும் மேலுலகுந் தாங்கும்-தோள்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்தி பெற்று மேருவென ஓங்கும். 8
நெஞ்சம், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்தியுற நித்தம் விரிவாகும்-நெஞ்சம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அதைத்
தாக்கவரும் வாளொதுங்கிப் போகும். 9

சிவ, சக்தி தனக்கே எமது வயிறு-அது
சாம்பரையும் நல்லவுண வாக்கும்-சிவ
சக்தி தனக்கே எமது வயிறு-அது
சக்திபெற உடலினைக் காக்கும்.  10
இடை, சக்தி தனக்கே கருவி யாக்கு-நல்ல
சக்தியுள்ள சந்ததிகள் தோன்றும்-இடை
சக்தி தனக்கே கருவி யாக்கு-நின்தன்
சாதிமுற்றும் நல்லறத்தில் ஊன்றும். 11
கால், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சாடியெழு கடலையுந் தாவும்-கால்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சஞ்சலமில் லாமலெங்கும் மேவும். 12
மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சஞ்சலங்கள் தீர்ந்தொருமை கூடும்-மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சாத்துவிகத் தன்மையினைச் சூடும். 13
மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்தியற்ற சிந்தனைகள் தீரும்-மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சாரும் நல்ல உறுதியும் சீரும்.  14
மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்திசக்தி சக்தியென்று பேசும்-மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அதில்
சார்ந்திருக்கும் நல்லுறவும் தேசும். 15
மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்தி நுட்பம் யாவினையும் நாடும்-மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்திசக்தி யென்றுகுதித் தாடும்.  16

மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சக்தியினை எத்திசையும் சேர்க்கும்-மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
தான் விரும்வில் மாமலையைக் பேர்க்கும் 17
மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சந்ததமும் சக்திதனைச் சூழும்-மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-அது
சாவுபெறும் தீவினையும் ஊழும்.  18
மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-எதைக்
தான் விரும்பு னாலும்வந்து சேரும்-மனம்
சக்தி தனக்கே உரிமை யாக்கு-உடல்
தன்னிலுயர் சக்திவந்து சேரும்.  19
மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-இந்தத்
தாரணியில் நூ றுவய தாகும்-மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-உன்னைச்
சாரவந்த நோயழிந்து போகும்.  20
மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-தோள்
சக்திபெற்று நல்ல தொழில் செய்யும்-மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-எங்கும்
சக்தியருள் மாரிவந்து பெய்யும்.  21
மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-சிவ
சக்தி நடையாவும் நன்கு பழகும்-மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-முகம்
சார்ந்திருக்கும் நல்லருளும் அழகும். 22
மனம், சக்தி தனக்கே கருவி யாக்கு-உயர்
சாத்திரங்கள் யாவும் நன்கு தெரியும்-மனம்
சக்தி தனக்கே கருவி யாக்கு-நல்ல
சத்திய விளக்குநித்தம் எரியும்  23
சித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு-நல்ல
தாளவகை சந்தவகை காட்டும்-சித்தம்
சக்தி தனக்கே உரிமை யாக்கு-அதில்
சாரும்நல்ல வார்த்தைகளும் பாட்டும். 24
சித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது
சக்தியையெல்லோர்க்குமுணர்வுறுத்தும்-சித்தம்
சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது
சக்திபுகழ் திக்கனைத்தும் நிறுத்தும். 25

சித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது
சக்திசக்தி யென்று குழலூதும்-சித்தம்
சக்தி தனக்கே உரிமை யாக்கு-அதில்
சார்வதில்லை அச்சமுடன் சூதும். 26
சித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது
சக்தியென்று வீணைதனில் பேசும்-சித்தம்
சக்தி தனக்கே உரிமை யாக்கு-அதில்
சக்திபரி மளமிங்கு வீசும்.  27
சித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது
சக்தியென்று தாளமிட்டு முழக்கும்-சித்தம்
சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது
சஞ்சலங்கள் யாவினையும் அழிக்கும் 28
சித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது
சக்திவந்து கோட்டைகட்டி வாழும்-சித்தம்
சக்தி தனக்கே உரிமை யாக்கு-அது
சக்தியருட் சித்திரத்தில் ஆழும்  29

மதி, சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
சங்கடங்கள் யானையும் உடைக்கும்-மதி
சக்தி தனக்கே உடைமை யாக்கு-அங்கு
சத்தியமும் நல்லறமும் கிடைக்கும். 30
மதி, சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
சாரவரும் தீமைகளை விலக்கும்-மதி
சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
சஞ்சலப் பிசாசுகளைக் கலக்கும்.  31
மதி, சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
சக்தி செய்யும் விந்தைகளைத் தேடும்-மதி
சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
சக்தியுறை விடங்களை நாடும்.  32
மதி, சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
தர்க்கமெனுங் காட்டிலச்சம் நீங்கும்-மதி
சக்தி தனக்கே உடைமை யாக்கு-அதில்
தள்ளி விடும் பொய்ந்நெறியும் நீங்கும். 33
மதி, சக்தி தனக்கே உடைமை யாக்கு-அதில்
சஞ்சலத்தின் தீயவிருள் விலகும்-மதி
சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
சக்தியொளி நித்தமுநின் றிலகும். 34
மதி, சக்தி தனக்கே உடைமை யாக்கு-அதில்
சார்வதில்லை ஐயமெனும் பாம்பு-மதி
சக்தி தனக்கே உடைமை யாக்கு-அங்கு
தான் முளைக்கும் முக்திவிதைக் காம்பு. 35
மதி, சக்தி தனக்கே அடிமை யாக்கு-அது
தாரணியில் அன்பு நிலை நாட்டும்-மதி
சக்தி தனக்கே அடிமை யாக்கு-அது
சர்வசிவ சக்தியினைக் காட்டும்.  36
மதி, சக்தி தனக்கே அடிமை யாக்கு-அது
சக்திதிரு வருளினைச் சேர்க்கும்-மதி
சக்தி தனக்கே அடிமை யாக்கு-அது
தாமதப்பொய்த் தீமைகளைப் பேர்க்கும் 37
மதி, சக்தி தனக்கே அடிமை யாக்கு-அது
சத்தியத்தின் வெல்கொடியை நாட்டும்-மதி
சக்தி தனக்கே அடிமை யாக்கு-அது
தாக்கவரும பொய்ப்புலியை ஓட்டும். 38
மதி, சக்தி தனக்கே அடிமை யாக்கு-அது
சத்தியநல் லிரவியைக் காட்டும்-மதி
சக்தி தனக்கே அடிமை யாக்கு-அதில்
சாரவரும் புயல்களை வாட்டும்.  39
மதி, சக்தி தனக்கே அடிமை யாக்கு-அது
சக்திவிர தத்தையென்றும் பூணும்-மதி
சத்திவர தத்தை யென்றுங் காத்தால்-சிவ
சக்திதரும் இன்பமும்நல் லூணும். 40
மதி, சக்தி தனக்கே அடிமை யாக்கு-தெளி
தந்தமுதப் பொய்கையென ஒளிரும்-மதி
சக்தி தனக்கே அடிமை யாக்கு-அது
சந்ததமும் இன்பமுற மிளிரும்.  41
அகம், சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
தன்னையொரு சக்தியென்று தேரும்-அகம்
சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
தாமதமும் ஆணவமும் தீரும்.  42
அகம், சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
தன்னையவள் கோயிலென் றுகாணும்-அகம்
சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
தன்னை யெண்ணித் துன்பமுற நாணும். 43
அகம், சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
சக்தியெனும் கடலிலோர் திவலை-அகம்
சக்தி தனக்கே உடைமை யாக்கு-சிவ
சக்தியுண்டு நமக்கில்லை கவலை. 44
அகம், சக்தி தனக்கே உடைமை யாக்கு-அதில்
சக்திசிவ நாதநித்தம் ஒலிக்கும்-அகம்
சக்தி தனக்கே உடைமை யாக்கு-அது
சக்திதிரு மேனியொளி ஜ்வலிக்கும். 45
சிவ, சக்தி என்றும் வாழி! என்று பாடு-சிவ
சக்தி சக்தி என்றுகுதித் தாடு-சிவ
சக்தி என்றும் வாழி! என்று பாடு-சிவ
சக்திசக்தி என்றுவிளை யாடு.  46
25. சக்தி திருப்புகழ்
சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ என்றோது;
சக்தி சக்தி சக்தீ என்பார்-சாகார் என்றே நின்றோது;
சக்தி சக்தி என்றே வாழ்தல்-சால்பாம் நம்மைச் சார்ந்தீரே!
சக்தி சக்தி என்றீ ராகில்-சாகா உண்மை சேர்ந்தீரே!
சக்தி சக்தி என்றால் சக்தி-தானே சேரும் கண்டீரே!
சக்தி சக்தி என்றால் வெற்றி-தானே சேரும் கண்டீரே!
சக்தி சக்தி என்றே செய்தால்-தானே செய்கை நேராகும்;
சக்தி சக்தி என்றால் அஃது-தானே முக்தி வேராகும்.
சக்தி சக்தி சக்தீ சக்தீ சக்தீ என்றே ஆடாமோ?
சக்தி சக்தி சக்தீ யென்றே-தாளங் கொட்டிப் பாடாமோ?
சக்தி சக்தி என்றால் துன்பம்-தானே தீரும் கண்டீரே!
சக்தி சக்தி என்றால் இன்பம்-தானே சேரும் கண்டீரே!
சக்தி சக்தி என்றால் செல்வம்- தானே ஊறும் கண்டீரோ?
சக்தி சக்தி என்றால் கல்வி-தானே தேறும் கண்டீரோ?
சக்தி சக்தி சக்தீ சக்தீ-சக்தீ சக்தீ வாழீ நீ!
சக்தி சக்தி சக்தீ சக்தீ-சக்தீ சக்தீ வாழீ நீ!
சக்தி சக்தி வாழீ என்றால்-சம்பத் தெல்லாம் நேராகும்;
சக்தி சக்தி என்றால் சக்தி-தாசன் என்றே பேராகும்.
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்



தோத்திர பாடல்கள் பகுதி-2





26. சிவசக்தி புகழ்
ராகம்-தன்யாசி    தாளம்-சதுஸ்ர ஏகம்
ஓம், சக்திசக்தி சக்தியென்று சொல்லு-கெட்ட
சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு;
சக்திசக்தி சக்தியென்று சொல்லி-அவள்
சந்நிதியி லேதொழுது நில்லு.  1
ஓம்,சக்திமிசை பாடல்பல பாடு-ஓம்
சக்திசக்தி என்று தாளம் போடு;
சக்திதருஞ் செய்கை நிலந் தனிலே-சிவ
சக்திவெறி கொண்டுகளித் தாடு.  2
ஓம்,சக்திதனை யேசரணங் கொள்ளு என்றும்
சாவினுக்கொ ரச்சமில்லை தள்ளு,
சக்திபுக ழாமமுதை அள்ளு-மது
தன்னிலினிப் பாகுமந்தக் கள்ளுன. 3
ஓம், சக்திசெய்யும் புதுமைகள் பேசு-நல்ல
சக்தியற்ற பேடிகளை ஏசு;
சக்திதிருக் கோயிலுள்ள மாக்கி-அவள்
தந்திடுநற் குங்குமத்தைப் பூசு.  4
ஓம், சக்தியினைச் சேர்ந்ததிந்தச் செய்கை -இதைச்
சார்ந்துநிற்ப தேநமக்கோ ருய்கை;
சக்தியெனும் இன்பமுள்ள பொய்கை-அதில்
தண்ணமுத மாரிநித்தம் பெய்கை. 5
ஓம்,சக்திசக்தி சக்தியென்று நாட்டு-சிவ
சக்தியருள் பூமிதனில் காட்டு;
சக்திபெற்ற நல்லநிலை நிற்பார்-புவிச்
சாதிகளெல் லாமதனைக் கேட்டு.  6

ஓம்,சக்திசக்தி சக்தியென்று முழங்கு-அவள்
தந்திரமெல் லாமுலகில் வழங்கு;
சக்தியருள் கூடிவிடு மாயின்-உயிர்
சந்ததமும் வாழும்நல்ல கிழங்கு  7
ஓம்,சக்திசெய்யுந் தொழில்களை எண்ணு நித்தம்
சக்தியுள்ள தொழில்பல பண்ணு;
சக்திதனை யேயிழந்து விட்டால்-இங்கு
சாவினையும் நோவினையும் உண்ணு. 8
ஓம், சக்தியரு ளாலுலகில் ஏறு-ஒரு
சங்கடம்வந் தாலிரண்டு கூறு;
சக்திசில சோதனைகள் செய்தால்-அவள்
தண்ணருளென் றேமனது தேறு.  9
ஓம்,சக்திதுணை என்று நம்பி வாழ்த்து-சிவ
சக்திதனையே அகத்தில் ஆழ்த்து;
சக்தியும் சிறப்பும் மிகப் பெறுவாய்-சிவ
சக்தியருள் வாழ்கவென்று வாழ்த்து! 10
27. பேதை நெஞ்சே!
இன்னுமொரு முறைசொல்வேன்,பேதை நெஞ்சே!
எதற்குமினி உளைவதிலே பயனொன் றில்லை;
முன்னர்நம திச்சையினாற் பிறந்தோ மில்லை;
முதலிறுதி இடைநமது வசத்தில் இல்லை;
மன்னுமொரு தெய்வத்தின் சக்தி யாலே
வையகத்திற் பொருளெல்லாம் சலித்தல் கண்டாய்!
பின்னையொரு கவலையுமிங் கில்லை,நாளும்
பிரியாதே விடுதலையைப் பிடித்துக் கொள்வாய்! 1
நினையாத விளைவெல்லாம் விளைந்து கூடி,
நினைத்தபயன் காண்பதவன் செய்கையன்றோ?
மனமார உண்மையினைப் புரட்டலாமோ?
மஹாசக்தி செய்தநன்றி மறக்க லாமோ?
எனையாளும் மாதேவி,வீரார் தேவி,
இமையவருந் தொழுந்தேவி, எல்லைத் தேவி,
மனைவாழ்வு பொருளெல்லாம் வகுக்குந் தேவி,
மலரடியே துணையென்று வாழ்த்தாய் நெஞ்சே! 2
சக்தியென்று புகழ்ந்திடுவோம் முருகன் என்போம்;
சங்கரனென் றுரைத்திடுவோம்,கண்ணன் என்போம்;
நித்தியமிங் கவள்சரணே நிலையென் றெண்ணி,
நினக்குள்ள குறைகளெல்லாந் தீர்க்கச் சொல்லி
பக்தியினாற் பெருமையெல்லாம் கொடுக்கச் சொல்லி,
பசிபிணிக ளில்லாமற் காக்கச் சொல்லி,
உத்தமநன் னெறிகளிலே சேர்க்கச் சொல்லி,.
உலகளந்த நாயகிதாள் உரைப்பாய்,நெஞ்சே! 3
செல்வங்கள் கேட்டால்நீ கொடுக்க வேண்டும்.
சிறுமைகளென் னிடமிருந்தால் விடுக்க வேண்டும்;
கல்வியிலே மதியினைநீ தொடுக்க வேண்டும்.
கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும்,
தொல்லைதரும் அகப்பேயைத் தொலைக்க வேண்டும்
துணையென்று நின்னருளைத் தொடரச் செய்தே
ந்லலவழி சேர்ப்பித்துக் காக்க வேண்டும்.
நமோநமஓம் சக்தி யென நவிலாய் நெஞ்சே! 4
பாட்டினிலே சொல்லுவதும் அவள்சொல் லாகும்;
பயனனிறி உரைப்பாளோ? பாராய், நெஞ்சே!
கேட்டதுநீ பெற்றிடுவாய்,ஐயமில்லை;
கேடில்லை,தெய்வமுண்டு,வெற்றி யுண்டு;
மீட்டுமுனக் குரைத்திடுவேன், ஆதிச சக்தி,
வேதத்தின் முடியினிலே விளங்கும் சதி,
நாட்டினிலே சனகனைபோல் நமையும் செய்தாள்;
நமோநம,ஓம் சக்தி யென நவிலாய் நெஞ்சே! 5
28. மஹா சக்தி
சந்திர னொளியில் அவளைக் கண்டேன்,
சரண மென்று புகுந்து கொண்டேன்;
இந்திரி யங்களை வென்று விட்டேன்,
எனதென் ஆசையைக் கொன்று விட்டேன். 1
பயனெண் ணாமல் உழைக்கச் சொன்னாள்,
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்;
துயரி லாதெனைச் செய்து விட்டாள்,
துன்ப மென்பதைக் கொய்து விட்டாள். 2
மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள்;
வீசி நிற்கும் வளியைச் செய்தாள்;
வான்க ணுள்ள வெளியைச் செய்தாள்,
வாழி நெஞ்சிற் களியைச் செய்தாள். 3
29. நவராத்திரிப் பாட்டு (உஜ்ஜயினீ)
உஜ்ஜயினீ நித்ய கல்யாணீ!
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி   (உஜ்ஜயினீ)
உஜ்ஜய காரண சங்கர தேவீ
உமா ஸரஸ்வதீ ஸ்ரீ மாதா ஸா.(உஜ்ஜயினீ)
வாழி புனைந்து மஹேசுவர தேவன்,
தோழி பதங்கள் பணிந்து துணிந்தனம்,     (உஜ்ஜயினீ)
சத்ய யுகத்தை அகத்தி லிருத்தி,
திறத்தை நமக்கரு ளிச்செய்யும் உத்தமி. (உஜ்ஜயினீ)
30. காளிப் பாட்டு
யாதுமாகி நின்றாய்-காளி!-எங்கும் நீதி றைந்தாய்;
தீது நன்மை யெல்லாம்-காளி!-தெய்வ லீலை யன்றோ;
பூத மைந்தும் ஆனாய்-காளி!-பொறிக ளைந்தும் ஆனாய்;
போத மாகி நின்றாய்-காளி!-பொறியை விஞ்சி நின்றாய் 
இன்ப மாகி விட்டாய்-காளி!-என்னு ளேபு குந்தாய்
பின்பு நின்னை யல்லால்-காளி!-பிறிது நானும் உண்டோ?
அன்ப ளித்து விட்டாய்-காளி!-ஆண்மை தந்து விட்டாய்;
துன்பம் நீக்கிவிட்டாய்-காளி!-தொல்லை போக்கிவிட்டாய்
31. காளி ஸ்தோத்திரம்
யாதுமாகி நின்றாய்-காளி!-எங்கும் நீதி றைந்தாய்;
தீது நன்மையெல்லாம்-நின்தன்-செயல்க ளன்றி யில்லை.
போதும் இங்கு மாந்தர்-வாழும்-பொய்மை வாழ்க்கை யெல்லாம்
ஆதிசக்தி,தாயே!-என் மீ-தருள் புரிந்து காப்பாய்.
எந்த நாளும் நின்மேல்-தாயே!இசைகள் பாடி வாழ்வேன்;
கந்த னைப்ப யந்தாய்,-தாயே!கருணை வெள்ள மானாய்!
மந்த மாரு தத்தில்-வானில்-மலையி னுச்சி மீதில்,
சிந்தை யெங்கு செல்லும்-அங்குன்-செம்மை தோன்று மன்றே
கர்ம் யோக மொன்றே-உலகில்-காக்கு மென்னும் வேதம்;
தர்ம நீதி சிறிதும்-இங்கே-தவற லென்ப தின்றி,
மர்ம மான பொருளாம்-நின்தன்-மலர டிக்கண் நெஞ்சம்,
செம்மை யுற்று நாளும்-சேர்ந்தே-தேசு கூட வேண்டும்.
என்த னுள்ள வெளியில்-ஞானத்-திரவி யேற வேண்டும்;
குன்ற மொத்த தோளும்-மேருக்-கோல மொத்த வடிவும்,
நன்றை நாடு மனமும்-நீயெந்-நாளு மீதல் வேண்டும்;
ஒன்றை விட்டு மற்றோர்-துயரில்-உழலும் நெஞ்சம் வேண்டா.
வான கத்தி னொளியைக்-கண்டே-மனம கிழ்ச்சி பொங்கி,
யானெ தற்கும் அஞ்சேன்-ஆகி-எந்த நாளும் வாழ்வேன்;
ஞான மொத்த தம்மா!-உவமை-நானு ரைக்கொ ணாதாம்!
வான கத்தி னொளியின்-அழகை-வாழ்த்து மாறி யாதோ?
ஞாயி றென்ற கோளம்-தருமோர்-நல்ல பேரொ ளிக்கே
தேய மீதோர் உவமை-எவரே-தேடி யோத வல்லார்?
வாயி னிக்கும் அம்மா!-அழகாம்-மதியின் இன்ப ஒளியை
நேயமோ டுரைத் தால்-ஆங்கே-நெஞ்சி ளக்க மெய்தும்.
காளி மீது நெஞ்சம்-என்றும்-கலந்து நிற்க வேண்டும்;
வேளை யொத்த விறலும், பாரில்-வேந்த ரேத்து புகழும்,
யாளி யொத்த வலியும்-என்றும்-இன்பம் நிற்கும் மனமும்,
வாழி யீதல் வேண்டும்-அன்னாய்!வாழ்க நின்தன் அருளே!
32. யோக சித்தி் வரங் கேட்டல்
விண்ணும் கண்ணும் தனியாளும்-எங்கள்
வீரை சகித நினதருளே என்தன்
கண்ணுங் கருதும் எனக்கொண்டு-அன்பு
கசிந்து கசிந்து கசிந்துருகி-நான்
பண்ணும் பூசனை கள்எல்லாம்-வெறும்
பாலை வனத்தில் இட்ட நீரோ?-உனக்
கெண்ணுஞ் சிந்தை யொன்றிலையோ?-அறி
வில்லா தகிலம் அளிப்பாயோ?
நீயே சரணமென்று கூவி-என்தன்
நெஞ்சிற் பேருறுதி கொண்டு-அடி
தாயே!யெனக்குமிக நிதியும்-அறந்
தன்னைக் காகுமொரு திறனும்-தரு
வாயே யென்று பணிந் தேத்திப்-பல
வாறா நின்றுபுகழ் பாடி-வாய்
ஓயே னாவதுண ராயோ?-நின
துண்மை தவறுவதொர் உலகோ?
காளீ வலியசா முண்டி-ஓங்
காரத் தலைவியென் னிராணி-பல
நாளிங் கெனையலைக்க லாமோ?-உள்ளம்
நாடும் பொருளடைதற் கன்றோ?-மனல்த்
தாளில் விழுந்தபயங் கேட்டேன்-அது
தாரா யெனிலுயிரைக் தீராய்-துன்பம்
நீளில் உயிர்தரிக்க மாட்டேன்-கரு
நீலியென் னியல்பறி யாயோ?
தேடிச் சோறுநிதந் தின்று-பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி-மனம்
வாடித் துன்பமிக உழன்று-பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து-நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி-கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும்-பல
வேடிக்கை மனிதரைப் போலே-நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
நின்னைச் சிலவரங்கள் கேட்பேன்-அவை
நேரே இன்றெனக்குத் தருவாய்-என்தன்
முன்னைத் தீயவினைக் பயன்கள்-இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும்-இனி
என்னைப் புதியவுயி ராக்கி-எனக்
கேதுங் கவலையறச் செய்து-மதி
தன்னை மிகப்தெளிவு செய்த-எனுறும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்
தோளை வலியுடைய தாக்கி-உடற்
சோர்வும் பிணிபலவும் போக்கி-அரி
வாளைக் கொண்டுபிளந் தாலும்-கட்டு
மாறா வுடலுறுதி தந்து-சுடர்
நாளைக் கண்டதோர் மலர்போல்-ஒளி
நண்ணித் திகழும்முகந் தந்து-மத
வேளை வெல்லும்முறை கூறித்-தவ
மேன்மை கொடுத்தருளல் வேண்டும்.
எண்ணுங் காரியங்க ளெல்லாம்-வெற்றி
யேறப் புரிந்தருளல் வேண்டும்-தொழில்
பண்ணப் பெருநிதியும் வேண்டும்-அதிற்
பல்லோர் துணைபுரிதல் வேண்டும்-சுவை
நண்ணும் பாட்டினொடு தாளம்-மிக
நன்றா வுயத்தழுந்தல் வேண்டும்-பல
பண்ணிற் கோடிவகை இன்பம்-நான்
பாடத் திறனடைதல் வேண்டும்.
கல்லை வயிரமணி யாக்கல்-செம்பைக்
கட்டித் தங்கமெனச் செய்தல்-வெறும்
புல்லை நெல்லெனப் புரிதல்-பன்றிப்
போத்தைச் சிங்கவே றாக்கல்-மண்ணை
வெல்லத் தினிப்புவரச் செய்தல்-என
விந்தை தோன்றிட இந்நாட்டை-நான்
தொல்லை தீர்த்துயர்வு கல்வி-வெற்றி
சூழும் வீரமறி வாண்மை.
கூடுந் திரவியத்தின் குவைகள்-திறல்
கொள்ளுங் கோடிவகைத் தொழில்கள்-இவை
நாடும் படிக்குவினை செய்து-இந்த
நாட்டோர் கீர்த்தியெங்கு மோங்கக்-கலி
சாடுந் திறனெனக்குத் தருவாய்-அடி
தாயே!உனக்கரிய துண்டோ?-மதி
மூடும் பொய்மையிரு ளெல்லாம்-எனை
முற்றும் விட்டகல வேண்டும்.
ஐயந் தீர்ந்துவிடல் வேண்டும்-புலை
அச்சம் போயொழிதல் வேண்டும்-பல
பையச் சொல்லுவதிங் கென்னே! முன்னைப்
பார்த்தன் கண்ணனிவர் நேரா-எனை
உய்யக் கொண்டருள வேண்டும்-அடி
உன்னைக் கோடிமுறை தொழுதேன்-இனி
வையத் தலைமையெனக் கருள்வாய்-அன்னை
வாழி!நின்னதருள் வாழி!
ஓம் காளி!வலிய சாமுண்டீ!
ஓங்காரத் தலைவி! என்இராணி!

33. மஹா சக்தி பஞ்சகம்
கரணமுந் தனுவும் நினக்கெனத் தந்தேன்,
காளிநீ காத்தருள் செய்யே;
மரணமும் அஞ்சேன்;நோய்களை அஞ்சேன்;
மாரவெம் பேயினை அஞ்சேன்.
இரணமுஞ் சுகமும்,பழியுநற் புகழும்
யாவுமோர் பொருளெனக் கொள்ளேன்;
சரணமென் றுனது பதமலர் பணிந்தேன்
தாயெனைக் காத்தலுன் கடனே.  1
எண்ணிலாப் பொருளும்,எல்லையில்,வெளியும்
யாவுமா நின்தனைப் போற்றி,
மணிணிலார் வந்து வாழ்த்தினுஞ் செறினும்
மயங்கிலேன்;மனமெனும் பெயர்கொள்
கண்ணிலாப் பேயை எள்ளுவேன்;இனியெக்
காலுமே அமைதியி லிருப்பேன்;
தண்ணிலா முடியிற் புனைந்துநின் றிலகும்
தாயுனைச் சரண்புகுந் தேனால்.  2
நீசருக் கினிதாந் தனத்தினும், மாதர்
நினைப்பினும்,நெறியிலா மாக்கள்
மாசுறு பொய்ந்நட் பதனிலும், பன்னாள்
மயங்கினேன்;அதையினி மதியேன்;
தேசுறு நீல நிறத்தினாள்,அறிவாய்ச்
சிந்தையிற் குலவிடு திறத்தாள்.
வீசுறுங் காற்றில் நெருப்பினில் வெளியில்
விளங்குவாள் தனைச்சரண் புகுந்தேன். 3
ஐயமுந் திகப்புந் தொலைந்தன; ஆங்கே
அச்சமுந் தொலைந்தது;சினமும்
பொய்யுமென் றினைய புன்மைக ளெல்லாம்
போயின; உறுதிநான் கண்டேன்,
வையமிங் கனைத்தும் ஆக்கியும் காத்தும்
மாய்த்துமே மகிழ்ந்திடு தாயைத்
துய்யவெண் ணிறத்தாள் தனைக்கரி யவளைத்
துணையெனத் தொடர்ந்தது கொண்டே. 4
தவத்தினை எளிதாப் புரிந்தனள், யோகத்
தனிநிலை எளிதெனப் புரிந்தாள்;
சிவத்தினை இனிதாப் புரிந்தனள்,மூடச்
சித்தமும் தெளிவுறச் செய்தாள்;
பவத்தினை வெறுப்ப அருளினள், நானாம்
பான்மை கொன் றவன்மயம் புரிந்தாள்;
அவத்தினைக் களைந்தாள் அறிவென விளைந்தாள்,
அநந்தமா வாழ்கஇங் கவளே!  5
34. மஹாசக்தி வாழ்த்து
விண்டு ரைக்க அறிய அரியதாய்
விவிந்த வான வெளியென நின்றனை;
அண்ட கோடிகள் வானில் அமைத்தனை;
அவற்றில் எண்ணற்ற வேகஞ் சமைத்தனை;
மண் டலத்தை அணுவணு வாக்கினால்,
வருவ தெத்தனை அததனை யோசனை
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை,
கோலமே!நினைக் காளியென் றேத்துவேன். 1
நாடு காக்கும் அரசன் தனையந்த
நாட்டு ளோர்அர சென்றறி வார்எனில்,
பாடு தண்டைக் குழந்தை தனக்கிதம்
பண்ணும் அப்பன் அவனென் றறிந்திடும்;
கோடி யண்டம் இயகி யளிக்கும்நின்
கோலம் ஏழை குறித்திட லாகுமோ?
நாடி யிச்சிறு பூமியிற் காணுநின்
நலங்கள் ஏத்திட நல்லருள் செய்வே. 2
பரிதி யென்னும் பொருளிடை யேய்ந்தனை,
பரவும் வெய்ய கதிரெனக் காய்ந்தனை;
கரிய மேகத் திளெனச் செல்லுவை,
மாலு மின்னென வந்துயிர் கொல்லுவை;
சொரிய்ம நுரெனப் பல்லுயிர் போற்றுவை,
சூழும் வெள்ள மெனவுயிர் மாற்றுவை;
விரியும் நீள்கட லென்ன நிறைந்தனை,
வெல்க காளி யென தம்மை வெல்கவே. 3
வாயு வாகி வெளியை அளந்தனை,
வாழ்வெ தற்கும் உயிர்நிலை ஆயினை,
தேயு வாகி ஒளிருள் செய்குவை,
செத்த வற்றைக் கருப்பொருள் ஆக்குவை;
பாயு மாயிரஞ் சக்திக ளாகியே
பாரி லுள்ள தொழில்கள் இயற்றுவை;
சாயும் பல்லுயிர் கொல்லுனைவ,நிற்பன
தம்மைக் காத்துச் சுகம்பல நல்குவை. 4
நிலத்தின் கீழ்பல் லுலோகங்கள் ஆயினை,
நீரின் கீழெண் ணிலாநிதி வைத்தனை;
தலத்தின் மீது மலையும் நதிகளும்,
சாருங் காடுஞ் சுனைகளும் ஆயினை;
குலத்தி லெண்ணற்ற பூண்டு பயிரினம்
கூட்டி வைத்துப் பலநலந் துய்த்தனை;
புலத்தை யிட்டிங் குயிர்கள் செய்தாய்,அன்னே!
போற்றி!போற்றி!நினதருள் போற்றியே! 5
சித்த சாகரஞ் செய்தனை ஆங்கதிற்
செய்த கர்மப் பயனெனப் பல்கினை;
தத்துகின்ற திரையுஞ் சுழிகளும்
தாக்கி யெற்றிடுங் காற்றுமுள் ளோட்டமுஞ்
சுத்த மோனப் பகுதியும் வெண்பனி
சூழ்ந்த பாகமும் சுட்டவெந் நீருமென்று
ஒத்த நீக்கடல் போலப் பலவகை
உள்ள மென்னுங்க கடலில் அமைந்தனை. 6

35. ஊழிக் கூத்து
வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட-வெறும்
வெளியி லிரத்தக் கயொடு பூதம் பாட-பாட்டின்
அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக்-களித்
தாடுங் காளீ!சாமுண் டீ!கங் காளீ!
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.  1
ஐந்துறு பூதம் சிந்திப் போயொன் றாகப்-பின்னர்
அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக-அங்கே
முந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத்-தோடே
முடியா நடனம் புரிவாய,அடு தீ சொரிவாய்!
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.  2
பாழாம் வெளியும் பதறிப் போய்மெய் குலையச்-சலனம்
பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய-அங்கே
ஊழாம் பேய்தான்"ஓஹோ ஹோ"வென் றலைய;-வெறித்
துறுமித் திரிவாய்,செருவெங் கூத்தே புரிவாய்!
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.  3
சத்திப் பேய்தான் தலையொடு தலைகள் முட்டிச்-சட்டச்
சடசட சட்டெனுடைபடு தாளங்கொட்டி-அங்கே
எத்திக் கினிலும் நின்விழி யனல் போய் எட்டித்-தானே
எரியுங் கோலங் கண்டே சாகும் காலம்.
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.  4
காலத் தொடுநிர் மூலம் படுமூ வுலகும்-அங்கே
கடவுள் மோனத் தொளியே தனியா யிலகும்-சிவன்
கோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும்-கையைக்
கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக்கூத் திடுவாய்!
அன்னை!அன்னை!ஆடுங் கூத்தை
நாடச் செய்தாய் என்னை.  5

36. காளிக்குச் சமர்ப்பணம்
இந்த மெய்யும் கரணமும் பொறியும்
இருபத் தேழு வருடங்கள் காத்தனன்;
வந்த னம்;அடி பேரருள் அன்னாய்!
வைர வீ! திறற் சாமுண்டி! காளி!
சிந்த னைதெளிந் தேனினி யுன்தன்
திரு வருட்கென அர்ப்பணஞ் செய்தேன்;
வந்தி ருந்து பலபய னாகும்
வகைதெ ரிந்துகொள் வாழி யடி!நீ.

37. காளி தருவாள்
எண்ணி லாத பொருட்குவை தானும்,
ஏற்றமும், புவி யாட்சியும் ஆங்கே
விண்ணில் ஆதவன் நேர்ந்திடும் ஒளிம்
வெம்மை யும்பெருந் திணமையும் அறிவும்,
தண்ணி லாவின் அமைதியும் அருளும்
தருவள் இன்றென தன்னை யென்காளி;
மண்ணி லார்க்குந் துயரின்றிச் செய்வேன்,
வறுமை யென்பதை மண்மிசை மாய்ப்பேன். 1
தானம் வேள்வி தவங்கல்வி யாவும்
தரணி மீதில் நிலைபெறச் செய்வேன்,
வானம் மூன்று மழைதரச் செய்வேன்
மாறி லாத வளங்கள் கொடுப்பேன்;
மானம் வீரியம் ஆண்மை நன்னேர்மை
வண்மை யாவும் வழங்கறச் செய்வேன்,
நான்வி ரும்பின காளி தருவாள்.  2
38. மஹா காளியின் புகழ்
காவடிச் சிந்து
ராகம்-ஆனந்த பைரவி    தாளம்-ஆதி
காலமாம் வனத்திலண்டக் கோலமா மரத்தின்மீது
காளிசக்தி யென்றபெயர் கொண்டு-ரீங்
காரமிட் டுலவுமொரு வண்டு-தழல்
தாலும்விழி நீலவன்ன மூலஅத்து வாக்களெனும்
கால்களா றுடையதெனக் கண்டு-மறை
காணுமுனி வோருரைத்தார் பண்டு.
மேலுமாகிக் கீழுமாகி வேறுள திசையுமாகி
விணணுமண்ணு மானசக்தி வெள்ளம்-இந்த
விந்தையெல்லா மாங்கதுசெய் கள்ளம்-பழ
வேதமா யதன்முனுள்ள நாதமாய் விளங்குமிந்த
வீரசக்தி வெள்ளம்விழும் பள்ளம்-ஆக
வேண்டும் நித்த மென்தனேழை யுள்ளம் 1
அன்புவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பள்
ஆக்கநீக்கம் யாவுமவள் செய்கை-இதை
ஆர்ந்துணர்ந்த வர்களுக்குண் டுய்கை-அவள்
ஆதியா யநாதியா யகண்டவறி வாவளுன்தன்
அறவுமவவள் மேனியிலோர் சைகை-அவள்
ஆனந்தத்தி னெல்லை யற்ற பொய்கை.
இன்பவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பள்
இஃதெலா மவள்புரியம் மாயை-அவள்
ஏதுமற்ற மெய்ப பொருளின் சாயை-எனில்
எண்ணியேஓம் சக்தியெனும் புண்ணிய முனிவர்நித்தம்
எய்துவார்மெய்ஞ் ஞானமெனும் தீயை-எரித்த
எற்றுவாரிந் நானெ னும்பொய்ப் பேயை. 2
ஆதியாஞ் சிவனுமவன் சோதியான சக்தியுந்தான்
அங்குமிங்கு மெங்குமுள வாகும்-ஒன்றே
யாகினா லுலகனைத்தும் சாகும்-அவை
யன்றியோர் பொருளுமில்லை அன்றியொன்று மில்லை
ஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும்-இந்த
அறிவுதான் பரமஞான மாகும்.
நீதியா மரசுசெய்வர் நிதிகள்பல கோடிதுய்ப்பர்
நீண்டகாலம் வாழ்வர்தரை மீது-எந்த
நெறியுமெய்து வர்நினைத்தபோது-அந்த
நித்தமுத்த சுத்தபுத்த சத்தபெருங் காளிபத
நீழலடைந் தார்க்கில்லையோர் தீது-என்றும்
நேர்மைவேதம் சொல்லும்வழி யீது. 3

39. வெற்றி
எடுத்த காரியம் யாவினும் வெற்றி,
எங்கு நோக்கினும் வெற்றிமற் றாங்கே
விடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி,
வேண்டி னேனுக் கருளினள் காளி;
தடுத்து நிற்பது தெய்வத மேனும்
சாகு மானுட மாயினும் அஃதைப்
படுத்து மாய்பபள் அரட்பெருங் காளி,
பாரில் வெற்ற எனக்குறு மாறே.  1
எண்ணு மெண்ணங்கள் யாவினும் வெற்றி,
எங்கும் வெற்றி, எதனிலும் வெற்றி,
கண்ணு மாயிரு ரும்மென நின்றாள்
காளத் தாயிங் கெனக்கருள் செய்தாள்;
மண்ணும் காற்றும் புனலும் அனலும்
வானும் வந்து வணங்கிநில் லாவோ?
விண்ணு ளோர்பணிந் தேவல்செய் யாரோ?
வெல்க காளி பதங்களென் பார்க்கே. 2
40. முத்துமாரி
உலகத்து நாயகியே!-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
உன் பாதம் சரண்பகுந்தோம்,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
கலகத் தரக்கர்பலர்,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
கருத்தி னுற்றே புகுந்துவிட்டார்,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பலகற்றும் பலகேட்டும்-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பய னொன்று மில்லையடி-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
நிலையெங்கும் காணவில்லை,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
நின்பாதம் சரண் புகுந்தோம்,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!  1
துணிவெளுக்க மண்ணுண்டு,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
தோல்வெளுக்கச் சாம்பருண்டு,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
மணி வெளுடக்கச் சாணையுண்டு,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
மனம்வெளுக்க வழியில்லை,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பிணிகளுக்கு மாற்றுண்டு,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பேதைமைக்கு மாற்றில்லை,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
அணிகளுகொ ரெல்லையில்லாய்,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
அடைக்கலமிங் குனைப்புகுந்தோம்,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!  2
41. தேச முத்துமாரி
தேடியுனைச் சரணடைந்தேன்,தேச முத்து மாரி!
கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந் தருவாய்
பாடியுனைச் சரணடைந்தேன் பாசமெல்லாங் களைவாய்;
கோடிநலஞ் செய்திடுவாய்,குறைகளெல்லாந் தீர்ப்பாய்
எப்பொழுதும் கவலையிலே இணங்கி நிற்பான் பாவி;
ஒப்பியுன தேவல்செய்வேன் உனதருளால் வாழ்வேன்
சக்தி யென்று நேர மெல்லாந் தமிழ்க் கவிதை பாடி,
பக்தியுடன் போற்றி நின்றால் பயமனைத்துந் தீரும்
ஆதாரம் சக்தி யென்றே அருமறைகள் கூறும்;
யாதானுந் தொழில் புரிவோம்;யாதுமவள் தொரிலாம்
துன்பமே இயற்கையெனும் சொல்லைமறந் திடுவோம்;
இன்பமே வேண்டி நிற்போம்;யாவுமவள் தருவாள்
நம்பினார் கெடுவ தில்லை;நான்கு மறைத் தீர்ப்பு;
அம்பி கையைச் சரண் புகுந்தால் அதிகவரம் பெறலாம்.
42. கோமதி மஹிமை
தாருக வனத்தினிலே-சிவன்
சரணநன் மலரிடை யுளம்பதித்துச்
சீருறத் தவம் புரிவார்-பர
சிவன்பு கழமுதினை அருந்திடுவார்;
பேருயர் முனிவர் முன்னே-கல்விப்
பெருங்கடல் பருகிய சூதனென்பான்
தேருமெய்ஞ் ஞனத்தினால்-உயர்
சிவனிகர் முனிவரன் செப்புகின்றான். 1
வாழிய முனிவர்களே!-புகழ்
வளர்ந்திடுஞ் சங்கரன் கோயிலிலே,
உழியைச் சமைத்த பிரான்;-இந்த
உலக மெலாமுருக் கொண்டபிரான்,
ஏழிரு புவன்ததிலும்-என்றும்
இயல்பெரும் உயிகளுக் குயிராவான,
ஆழுநல் லறிவாவான்,-ஒளி
யறிவிக் கடந்தமெய்ப் பொருளாவான். 2
தேவர்க் கெலாந்தேவன்;-உயர்
சிவபெரு மான்பண்டொர் காலத்திலே
காவலி னுலகளிக்கும்-அந்தக்
கண்ணனுந் தானுமிங் கோருருவாய்,
ஆவசெல டருந்தவங்கள்-பல
ஆற்றிய நாகர்கள் இருவர் முன்னே
மேவிநின் றருள்புரிந்தான்,-அந்த
வியப்புறு சரிதையை விளம்புகின்றேன். 3
கேளீர்,முனிவர்ளே!-இந்தக்
கீர்த்திகொள் சரிதையைக் கேட்டவர்க்கே
வேள்விகள் கோடி செய்தால்-சதுர்
வேதங்க ளாயிரமுறை படித்தால்,
மூளுநற் புண்ணியந்தான்-வந்து
மொய்த்திடும்;சிவனியல் விளங்கிநிற்கும்;
நாளுநற் செல்வங்கள்-பல
நணுகிடும்;சரதமெய் வாழ்வுண்டாம். 4
இக்கதை உரைத்திடுவேன்,-உளம்
இன்புறக் கேட்பீர்,முனிவர்களே!
நக்க பிரினருளால்-இங்கு
நடைபெறு முலகங்கள் கணக்கிலவாம்!
தொக்கன அண்டங்க்ள்-வளர்
தொகைபல கோடிபல் கோடிகளாம்!
இக்கணக் கெவர றிவார்?-புவி
எத்தனை யுளதென்ப தியார றிவார்? 5
நக்க பிரான றிவான்;-மற்று
நானறி யேன்பிற நரரறியார்;
தொக்க பேரண்டங்கள்-கொண்ட
தொகைக்கெல்லை யில்லையென்று சொல்லுகின்ற
தக்கபல் சாத்திரங்கள்;ஒளி
தருகின்ற வானமொர் கடல்போலாம்;
அக்கடலதனுக்கே-எங்கும்
அக்கரை யிக்கரை யொன்றில்லையாம். 6
இக்கட லதனக்தே-அங்கங்
கிடையிடைத் தான்றும்புன் குமிழிகள்போல்
தொக்கன உலகங்கள்-திசைத்
தூவெளி யதனிடை விரைந்தோடம்
மிக்கதொர் வியப்புடைத்தாம்-இந்த
வியன்பெரு வையத்தின் காட்சி,கண்டீர்
மெய்ககலை முனிவர்களே!-இதன்
மெய்ப்பொருள் பரசிவன்சக்தி,கண்டீர்!
எல்லை யுண்டோ இலையோ?-இங்கு
யாவர் கண்டார்திசை வெளியினக்கே?
சொல்லுமொர் வரம்பிட்டால்-அதை
***(இது முற்றுப் பெறவில்லை)
43. சாகா வரம்
பல்லவி
சாகாவர மருள்வாய், ராமா!
சதுர்மறை நாதா!-சரோஜ பாதா!
சரணங்கள்
ஆகாசந் தீகால் நீர்மண்
அத்தனை தமும் ஒத்து நிறைந்தாய்
ஏகாமிர்த மாகிய நித்ள்
இணைசர ணென்றால் இதுமுடி யாதா?              (சாகா)
வாகார்தோள் வீரா, தீரா,
மன்மத ரூபா, வானவர் பூபா,
பாகார்மொழி சீதையுன் மென்தோள்
பழகிய மார்பா! பதமலர் சார்பா!  (சாகா)
நித்யா,நிர்மலா,ராமா
நிஷ்க ளங்கா, சர்வா தாரா,
சத்யா, சநாதநா,ராமா,
சரணம்,சரணம்,சரண முதாரா!    (சாகா)
44. கோவிந்தன் பாட்டு
கண்ணி ரண்டும் இமையாமல் செந்நிறத்து
மெல்லிதழ்ப்பூங் கமலத் தெய்வப்
பெண்ணிரண்டு விழிகளைஹயம் நோக்கிடுவாய்
கோவிந்தா! பேணி னோர்க்கு
நண்ணிரண்டு பொற்பாத மளித்தருள்வாய்
சராசரத்து நாதா! நாளும்
எண்ணிரண்டு கோடியினும் மிப்பலவாம்
வீண்கவலை எளிய னேற்கே.  1
எளியனேன் யானெனலை எப்போது
போக்டுவாய்,இறைவ னே!இவ்
வளியிலே பறவையிலே மரத்தினிலே
முகிலினிலே வரம்பில் வான
செளியிலே கடலிடையே மண்ணகத்தே
வீதியிலே வீட்டி லெல்லாம்
களியிலே, கோவிந்தா!நினைக்கண்டு
நின்னொடுநான் கலப்ப தென்றோ? 2
என்கண்ணை மறதுனிரு கண்களையே
என்னகத்தில் இசைத்துக்கொண்டு
நின்கண்ணாற் புவியெல்லாம் நீயெனவே
நான்கண்டு நிறைவு கொண்டு
எவனகண்மை மறதியுடன் சோம்பர்முதற்
பாவமெலாம் மடிந்து,நெஞ்சிற்
புன்கண்போய் வாழ்ந்திடவே, கோவிந்தா!
என்க்கமுதம் புகட்டு வாயே.  3
45. கண்ணனை வேண்டுதல்
வேத வானில் விளங்கி"அறஞ்செய்மின்,
சாதல் நேரினுஞ் சத்தியம் பூணுமின்,
தீத கற்றுமின்"என்று திசையெல்லாம்
மோத நித்தம் இடித்து முழுங்கியே. 1
உண்ணுஞ் சாதிக் குறக்கமும் சாவுமே
நண்ணு றாவணம் நன்கு புரந்திடும்
எண்ண ரும்புகழ்க் கீதையெனச் சொலும்
பண்ண மிழ்தத் தருள்மழை பாலித்தே, 2
எங்க ளாரிய பூமி யெனும்பயிர்
மக்க ளம்பெற நித்தலும் வாழ்விக்கும்
துங்க முற்ற துணைமுகி லே! மலர்ச்
செங்க ணாய்நின் பதமலர் சிந்திப்பாம் 3
வீரர் தெவ்தம் கர்ம விளக்குநற்
பார தர்செய் தவத்தின் பயனெ னும்
தார விர்ந்த தடம்புயக் பாத்தனோர்
கார ணம்மெனக் கொண்டு கடவுள்நீ. 4
நின்னை நம்பி நிலத்திடை யென்றுமே
மன்னு பாரத மாண்குலம் யாவிற்கும்
உன்னுங் காலை உயர்துணை யாகவே
சொன்ன சொல்லை யுயிரிடைச் சூடுவோம். 5
ஐய கேளினி யோர்சொல் அடியர்யாம்
உய்ய நின்மொழி பற்றி யோழுகிய
மைய றும்புகழ் வாழ்க்கை பெறற்கெனச்
செய்யும் செய்கையி னின்னருள் சேர்பையால். 6
ஒப்பி லாத உயர்வொடு கல்வியும்
எய்ப்பில் வீரமும் இப்புவி யாட்சியும்
தப்பி லாத தருமமுங் கொண்டுயாம்
அப்ப னேநின் னடிபணிந் துய்வமால். 7
மற்று நீயிந்த வாழ்பு மறுப்பையேல்
சற்று நேரத்துள் எம்முயிர் சாய்த்தருள்
கொற்ற வா!நின் குவலய மீதினில்
வெற்று வாழ்க்கை விரும்பி யழிகிலேம். 8
நின்தன் மாமர பில்வந்து நீசராய்ப்
பொன்றல் வேண்டிலம் பொற்கழ லாணைகாண்
இன்றிங் கெம்மை யதம்புரி, இல்லையேல்
வென்றி யும்புக ழுந்தரல் வேண்டுமே. 9
46. வருவாய் கண்ணா!
பல்லவி
வருவாய் வருவாய் வருவாய்-கண்ணா!
வருவாய் வருவாய் வருவாய்!
சரணங்கள்
உருவாய் அறிவில் ஒளிர்வாய்-கண்ணா!
உயிரின் னமுதாய்ப் பொழிவாய்-கண்ணா!
கருவாய் என்னுள் வளர்வாய்-கண்ணா!
கமலத் திருவோ டிணைவாய்-கண்ணா! (வருவாய்)
இணைவாய் எனதா வியிலே-கண்ணா!
இதயத் ரிதனிலே யமர்வாய்-கண்ணா!
கணைவா யசரர் தலைகள்-சிதறக்
கடையூ ரியிலே படையோ டெழுவாய்! (வருவாய்)
எழுவாய் கடல்மீ தினிலே-எழுமோர்
இரவிக் கணையா உளமீ தினிலே
தொழுவேன் சிவனாம் நினையே-கண்ணா!
துணையே அமரர் தொழும் வானவனே! (வருவாய்)
47. கண்ண பெருமானே!
காயிலே புளிப்பதென்னே கண்ண பெருமானே!-நீ
கனியிலே இனிப்பதென்னே? கண்ண பெருமானே!
நோயிலே படுப்பதென்னே? கண்ண பெருமானே!-நீ
நோன்பிலே உயிர்ப்பதென்னே?கண்ண பெருமானே!
காற்றிலே குளிர்ந்ததென்னே?கண்ண பெருமானே!-நீ
கனலிலே சுடுவதென்னே? கண்ண பெருமானே!
சேற்றிலே குழம்பலென்னே? கண்ண பெருமானே!
திக்கிலே தெளிந்ததென்னே? கண்ண பெருமானே!
ஏறிறிநின்னைத் தொழுவதென்னே? கண்ண பெருமானே!நீ
எளியர்தம்மைக் காப்பதென்னே? கண்ண பெருமானே!
போற்றினோரைக் காப்பதென்னே!கண்ண பெருமானே!நீ
பொய்யர் தம்மை மாய்ப்பதென்னே?கண்ண பெருமானே!
வேறு
போற்றி!போற்றி!போற்றி!போற்றி!
கண்ண பெருமானே!-நீ
பொன்னடி போற்றி நின்றேன்
கண்ண பெருமானே!
48. நந்த லாலா
ராகம்-யதுகுல காம்போதி   தாளம்-ஆதி
காக்கைச் சிறகினிலே நந்த லாலா!-நின்தன்
கரியநிறந் தோன்று தையே நந்த லாலா!
பார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா!-நின்தன்
பச்சை நிறந் தோன்று தையே நந்த லாலா!
கேட்கு மொலியி லெல்லாம் நந்த லாலா!-நின்தன்
கீத மிசக்குதடா நந்த லாலா!
தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா!-நின்னைத்
தீண்டு மின்பந் தோன்று தடா நந்த லாலா!
49. கண்ணன் பிறப்பு
கண்ணன் பிறந்தான்-எங்கள்
கண்ணன் பிறந்தான்-இந்தக்
காற்றதை யெட்டுத் திசையிலுங் கூறிடும்.
தின்ன முடையான்-மணி
வண்ண முடையான்-உயர்
தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்
பண்ணை யிசைப்பீர்-நெஞ்சிற்
புண்ணை யொரிப்பீர்-இந்தப்
பாரினிலே துயர் நீங்கிடும் என்றிதை
எண்ணிடைக் கொள்வீர்-நன்கு
கண்ணை விழிப்பீர்-இனி
ஏதுங் குறைவில்லை;வேதம் துணையுண்டு, (கண்ணன்)
அக்கினி வந்தான்-அவன்
திக்கை வளைத்தான்-புவி
யாரிருட் பொய்மைக் கலியை மடித்தனன்
துக்கங் கெடுத்தான்-சுரர்
ஒக்கலும் வந்தார்-சுடர்ச்
சூரியன்,இந்திரன்,வாயு,மருத்துக்கள்
மிக்க திரளாய்-சுரர்
இக்கணந் தன்னில்-இங்கு
மேவி நிறைந்தனர்;பாவி யசுரர்கள்
பொக்கென வீழ்ந்தார்,-உயிர்
கக்கி முடிந்தார்-கடல்
போல ஒலிக்குது வேதம் புவிமிசை. (கண்ணன்)
சங்கரன் வந்தான்-இங்கு
மங்கல மென்றான்-நல்ல
சந்திரன் வந்தின் னமுதைப் பொழிந்தனன்
பங்க மொன் றில்லை-ஒளி
மங்குவ தில்லை-இந்தப்
பாரின்கண் முன்பு வானத்திலே நின்று
கங்கையும் வந்தாள்-கலை
மங்கையும் வந்தாள்-இன்பக்
காளி பராசக்தி அன்புட னெய்தினள்
செங்கம லத்தாள்-எழில்
பொங்கு முகத்தாள்-திருத்
தேவியும் வந்து சிறப்புற நின்றனள். (கண்ணன்)
50. கண்ணன் திருவடி
கண்ணன் திருவடி, எண்ணுக மனமே
திண்ணம் அழியா, வண்ணந் தருமே,
தருமே நிதியும்,பெருமை புகழும்
கருமா மேனிப்,பெருமா னிங்கே,
இங்கே யமரர்,சங்கந் தோன்றும்
மங்கும் தீமை,பொங்கும் நலமே.
நலமே நாடிற்,புலவீர் பாடீர்;
நிலமா மகளின்,தலைவன் புகழே.
புகழ்வீர் கண்ணன்,தகைசே ரமரர்
தொகையோ யசருப்,பகைதீர்ப் பதையே
தீர்ப்பான் இருளைப் பேர்ப்பான் கலியை
ஆர்பபா ரமரர்,பார்ப்பார் தவமே.
தவறா துணர்வீர்,புவியீர் மாலும்
சிவனும் வானோர்,எவரும் ஒன்றே
ஒன்றே பலவாய், நின்றோர் சக்தி
என்றுந் திகழும், குன்றா வொளியே
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்



தோத்திர பாடல்கள் பகுதி-3



51. வேய்ங் குழல்
ராகம்-ஹிந்துஸ்தான் தோடி தாளம்-ஏகதாளம்

எங்கிருந்து வருகுவதோ?-ஒலி
யாவர் செய்குவ தோ?-அடி தோழி!
குன்றி னின்றும் வருகுவதோ?-மரக்
கொம்பி னின்றும் வருகுவதோ?-வெளி
மன்றி னின்று வருகுவதோ?-என்தன்
மதி மருண்டிடச் செய்குதடி-இஃது,               (எங்கிருந்து)
அலையொ லித்திடும் தெய்வ-யமுனை
யாறி னின்றும் ஒலுப்பதுவோ?-அன்றி
இலையொ லிகும் பொழிலிடை நின்றும்
எழுவதோ இஃதின்ன முதைப்போல்?           (எங்கிருந்து)
காட்டி னின்றும் வருகுவதோ?-நிலாக்
காற்றிக் கொண்டு தருகுவதோ?-வெளி
நாட்டி னின்றுமித் தென்றல் கொணர்வதோ?
நாதமிஃதென் உயிரை யுருக்குதே!               (எங்கிருந்து)
பறவை யேதுமொன் றுள்ளதுவோ!-இங்ஙன்
பாடுமோ அமுதக்கனற் பாட்டு?
மறைவினிறுங் கின்னர ராதியர்
வாத்தியதினிசை யிதுவோ அடி!                  (எங்கிருந்து)
கண்ண னூதிடும் வேய்ங்குழல தானடீ!
காதி லேயமு துள்ளத்தில் நஞ்சு,
பண்ணன் றாமடி பாவையர் வாடப்
பாடி யெய்திடும் அம்படி தோழி!                   (எங்கிருந்து)
52. கண்ணம்மாவின் காதல்
காற்று வெளியிடைக் கண்ணம்மா!-நின்தன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன்;-அமு
தூற்றினை யொத்த இதழ்களும்-நில
வூறித் ததும்பும் விழிகளும்-பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனிம்-இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும்-எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே-இங்கொர்
விண்ணவ னாகப் புரியுமே!-இந்தக் (காற்று வெளி)
நீயென தின்னுயிர் கண்ணம்மா!-எந்த
நேரமும் நின்தன்ப் போற்றுவேன்-தயர்
போயின போயின துன்பங்கள்-நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே-என்தன்
வாயினி லேயமு தூறுதே-கண்ணம்
மாவென் றபேர்சொல்லும் போழ்திலே-உயிர்த்
தீயினி லேவளர் சோதியே!-என்தன்
சிந்தனையே என்தன் சித்தமே!-இந்தக்  (காற்று வெளி)
53. கண்ணம்மாவின் நினைப்பு
பல்லவி
நின்னை யே ரதியென்று நினைக்கிறேனடி-கண்ணம்மா!
தன்னையே சகியென்று சரணமெய்தினேன்! (நின்)
சரணங்கள்
பொன்னை யே நிகர்த்த மேனி மின்னை ய, நிகர்த்த சாயற்
பின்னை யே!-நித்ய கன்னியே! கண்ணம்மா!  (நின்)
மார னம்புக ளென்மீது வாரி வாரி வீச நீ-கண்
பாரா யோ? வந்த சேரா யோ? கண்ணம்மா?   (நின்)
யாவு மே சுக முனிக் கொர் ஈசனா னெக்குன் தோற்றம்
மேவு மே-இங்கு யாவு மே,கண்ணம்மா!   (நின்)
54. மனப் பீடம்
பல்லவி
பீடத்தி லேறிக் கொண்டாள்-மனப்
பீடத்தி லேறிக் கொண்டாள்.
சரணங்கள்
நாடித் தவம் புரிந்து பீடுற்ற முனிவரர்
கேடற்ற தென்று கண்டு கூடக் கருது மொளி
மாடத்தி லேறி ஞானக்ச கூடத்தில் விளையாடி
ஓடத் திருந்து கன்னி வேடத்தி ரதியைப்போல்,
ஈடற்ற கற்பனைகள் காடுற்ற சிந்தனைகள்
மூடிக் கிடக்கு நெஞ்சின் ஊடுற் றதை யமரர்
தேடித் தவிக்கு மின்ப வீடொத் தினிமைசெய்து
வேடத்தி சிறுவள்ளி வித்தையென் கண்ணம்மா (பீடத்தி)
கண்ணன் திருமார்பிற் கலந்த கமலை யென்கோ?
விண்ணவர் தொழுதிடும் வீரச் சிங்காதனத்தே
நண்ணிச் சிவனுடலை நாடுமவ ளென்கோ?
எண்ணத்துதிக்குதடா இவள்பொன் னுடலமுதம்!
பெண்ணி லரசியிவள் பெரிய எரி லுடையாள்
கண்ணுள் கணியெனக்குக் காத லிரதியிவள்
பண்ணி லினிய சுவை பரந்த மொழியினாள்
உண்ணு மிதழமுற ஊற்றினள் கண்ணம்மா  (பீடத்தி)
55. கண்ணம்மாவின் எழில்

ராகம்-செஞ்சுருட்டி தாளம்-ரூபகம்

பல்லவி
எங்கள் கண்ணம்மா நகை புது ரோஜாப் பூ;
எங்கள் கண்ணம்மா விழி இந்த்ர நீலப் பூ!
எங்கள் கண்ணம்மா முகஞ் செந்தாமரைப் பூ;
எங்கள் கண்ணம்மா நுதல் பால சூர்யன்.
சரணங்கள்
எங்கள் கண்ணம்மா எழில் மின்னலை நேர்க்கும்;
எங்கள் கண்ணம்மா புருவங்கள் மதன் விற்கள்;
திங்களை மடிய பாம்பினைப் போலே
செறிகுழல்,இவள் நாசி எட் பூ   (எங்கள்)
மங்கள வாக்கு நித்யானந்த ஊற்று;
மதரு வாய் அமிர்தம்;இத ழமிர் தம்;
சங்கீத மென் குரல் சரஸ்வதி வீணை
சாய லரம்பை; சதுர் அயிராணி.   (எங்கள்)
இங்கித நாத நிலைய மிருசெவி
சங்கு நிகர்த்த கண்டம் அமிர்த சங்கம்;
மங்களக் கைகள் மஹர் சக்தி வாசம்;
வயி ராலிலை,இடை அமிர்த வீடு.   (எங்கள்)
சங்கரனைத் தாங்கு நந்தி பத சதுரம்;
தாமரை யிருதாள் லக்ஷ்மீ பீடம்;
பொங்கித் ததும்பித் திசை யெங்கும் பாயும்
புத்தன்பும் ஞானமும் மெய்த்திருக் கோலம்  (எங்கள்)
56. திருக் காதல்
திருவே! நினைக்காதல்கொண் டேனே-நினது திரு
வுருவே மறவாதிருந் தேனே-பல திசையில்
தேடித் திரிந்நிளைத் தேனே-நினக்கு மனம்
வாடித் தினங்களைதேனே-அடி,நினது
பருவம் பொறுத்திருந் தேனே-மிகவும் நம்பிக்
கருவம் படைத்திருந்தேனே-இடை நடுவில்
பையச் சதிகள்செய் தாயே-அதனிலுமென்
மையல் வளர்தல்கண் நல் காயே-நினதருளில்
உய்யக் கருணைசெய் வாயே-பெருமைகொண்டு
வையந் தழைக்கவைப் பேனே-அமரயுகஞ்
செய்யத் துணிந்துநிற் பேனே-அடியெனது
தேனே! என திரு கண்ணே!-எனையுகந்து
தானே வருந் திருப்-பெண்ணே!
57. திருவேட்கை
ராகம்-நாட்டை  தாளம்-சதுஸ்ர ஏகம்
மலரின் மேவு திருவே!-உன் மேல்
யைல் பொங்கி நின்றேன்;
நிலவு செய்யும் முகமும்-காண்பார்
நினைவ ழிக்கும் விழியும்,
கலக லென்ற மொழியும்-தெய்வக்
களிது லங்கு நகையும்,
இலகு செல்வ வடிவும்-கண்டுன்
இன்பம் வேண்டு கின்றேன் 1
கமல மேவு திருவே!-நின்மேல்
காதலாகி நின்றேன்.
குமரி நின்னை இங்கே-பெற்றோர்
கோடி யின்ப முற்றார்;
அமரர் போல வாழ்வேன்,-என்மேல்
அன்பு கொள்வை யாயின்
இமமய வெற்பின் மோத,-நின்மேல்
இசைகள் பாடி வாழ்வேன். 2
வாணி தன்னை என்றும்-நினது
வரிசை பாட வைப்பேன்!
நாணி யேக லாமோ?-என்னை
நன்க றிந்தி லாயோ?
பேணி வைய மெல்லாம்-நன்மை
பெருக வைக்கும் விரதம்
பூணு மைந்த ரெல்லாம்-கண்ணன்
பொறிக ளாவ ரன்றோ? 3
பொன்னும் நல்ல மணியும்-சுடர்செய்
பூண்க ளேந்தி வந்தாய்!
மின்னு நின்தன் வடிவிற்-பணிகள்
மேவி நிற்கும் அழகை
என்னு ரைப்ப னேடீ!-திருவே!
என்னு யிக்கொ ரமுதே!
நின்னை மார்பு சேரத்-தழுவி
நிக ரிலாது வாழ்வேன். 4
செல்வ மெட்டு மெய்தி-நின்னாற்
செம்மை யேறி வாழ்வேன்;
இல்லை என்ற கொடுமை-உலகில்
இல்லை யாக வைப்பேன்;
முல்லை போன்ற முறுவல்-காட்டி
மோக வாதை நீக்கி,
எல்லை யற்ற சுவையே!-எனை நீ
என்றும் வாழ வைப்பாய். 5
58. திருமகள் துதி

ராகம்-சக்கரவாகம் தாளம்-திஸ்ரஏகம்
நித்தமுனை வேண்டி மனம்
நினைப்ப தெல்லாம் நீயாய்ப்
பித்தனைப்போல் வாழ்வதிலே
பெருமையுண்டோ? திருவே!
சித்தவுறுதி கொண்டிருந்தார்
செய்கை யெல்லாம் வெற்றி கொண்டே
உத்தமநிலை சேர்வ ரென்றே
உயர்ந்த வேதமுரைப்ப தெல்லாம்,
சுத்த வெறும் பொய்யோடீ?
சுடர் மணியே!திருவே!
மெத்த மையல் கொண்டு விட்டேன்
மேவிடுவாய்,திருவே! 1
உன்னையன்றி இன்ப முண்டோ
உலகமிசை வேறே!
பொன்னை வடிவென் றுடையாய்
புத்தமுதே,திருவே!
மின்னொளி தருநன் மணிகள்
மேடை யுயர்ந்த மாளிகைகள்
வன்ன முடைய தாமரைப் பூ
மணிக்குள முள்ள சோலைகளும்,
அன்ன நறு நெய் பாலும்
அதிசயமாத் தருவாய்!
நின்னருளை வாழ்த்தி என்றும்
நிலைத்திருப்பேன்,திருவே! 2
ஆடுகளும் மாடுகளும்
அழகுடைய பரியும்
வீடுகளும் நெடுநிலமும்
விரைவினிலே தருவாய்!
ஈடு நினக்கோர் தெய்வமுண்டோ?
எனக்குனை யன்றிச் சரணுமுண்டோ?
வாடு நிலத்தைக் கண் டிரங்கா
மழையினைப் போல் உள்ள முண்டோ
நாடு மணிச் செல்வ மேல்லாம்
நன்கருள்வாய், திருவே!
பீடுடைய வான் பொருளே
பெருங் களியே, திருவே! 3
59. திருமகளைச் சரண் புகுதல்

மாதவன் சக்தியினைச்-செய்ய
மலர்வளர் மணியினை வாழ்த்திடுவோம்;
போதுமிவ் வறுமையெலாம்-எந்தப்
போதிலுஞ் சிறுமையின் புகைதனிலே
வேதனைப் படுமனமும்-உயர்
வேதமும் வெறுப்புறச் சோர்மதியும்
வாதனை பொறுக்கவில்லை-அன்னை
மாமக ளடியிணை சரண் புகுவோம். 1
கீழ்களின் அவமதிப்பும்-தொழில்
கெட்டவ னிணக்கமும் கிணற்றினுள்ளே
மூழ்கிய விளக்கினைப் போல்-செய்யும்
முயற்சியெல் லாங்கெட்ட முடிவதுவும்,
ஏழ்கட லோடியுமோர்-பயன்
எய்திட வழியின்றி இருப்பதுவும்,
வீழ்கஇக்கொடு நோய்தான்-வைய
மீதினில் வறுமையோர் கொடுமை யன்றோ? 2
பாற்கட லிடைப் பிறந்தாள்-அது
பயந்தநல் லமுதத்தின் பான்மைகொண்டாள்;
ஏற்குமோர் தாமரைப்பூ-அதில்
இணைமலர்த் திருவடி இசைந்திருப்பாள்;
நாற்கரந் தானுடையாள்-அந்த
நான்கினும் பலவகைத் திருவுடையாள்;
வேற்கரு விழியுடையாள்-செய்ய
மேனியள் பசுமையை விரும்பிடுவாள். 3
நாரணன் மார்பினிலே-அன்பு
நலமுற நித்தமும் இணைந்திருப்பாள்;
தோரணப் பந்தரிலும்-பசுத்
தொழுவிலும் சுடர்மணி மாடத்திலும்,
வீரர்தந் தோளினிலும்-உடல்
வெயர்திட உழைப்பவர் தொழில்களிலம்
பாரதி சிரத்தினிலும்-ஒளி
பரவிட வீற்றிருந் தருள் புரிவாள். 4
பொன்னிலும் மணிகளிலும் -நறும்
பூவிலும் சாந்திலும் விளக்கினிலும்,
கன்னியர் நகைப்பினிலும்-செழுங்
காட்டிலும் பொழிலிலம் கழனியிலம்,
முன்னிய தணிவினிலும்-மன்னர்
முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப்
பன்னிநற் புகழ்பாடி-அவள்
பதமலர் வாழ்த்திநற் பதம்பெறு வோம். 5
மண்ணினுட் கனிகளிலும்-மலை
வாய்ப்பிலும் வார்கட லாழத்திலும்,
புண்ணிய வேள்வியிலும்-உயர்
புகழிலும் மதியிலும் புதுமையிலும்
பண்ணுநற் பாவையிலும்-நல்ல
பாட்டிலும் கூத்திலும் படத்தினிலும்,
நண்ணிய தேவிதனை-எங்கள்
நாவிலும் மனத்திலும் நாட்டிடுவோம். 6
வெற்றிகொள் படையினிலும்-பல
விநயங்கள் அறிந்தவர் கடையினிலும்
நற்றவ நடையினிலும்-நல்
நாவலர் தேமொழித் தொடரினிலும்,
உற்றசெந் திருத்தாயை-நித்தம்
உவகையிற் போற்றியிங் குயர்ந்திடுவோம்;
கற்றபல் கலைகளெல்லாம்-அவள்
கருணை நல் லொளிபெறக் கலிதவிர்ப்போம். 7
60. ராதைப் பாட்டு
ராகம்-கமாஸ்  தாளம்-ஆதி
பல்லவி
தேகி முதம் தேகி ஸ்ரீ ராதே, ராதே!
சரணங்கள்
ராக ஸமுத்ரஜாம்ருதே ராதே, ராதே!;
ராஜ்ஞீ மண்டல ரத்ந ராதே, ராதே!
போக ரதி கோடி துல்யே ராதே, ராதே!                                 (ஜய ஜய தேகி)
பூதேவி தப; பல ராதே, ராதே!
வேத மஹா மந்த்ர ரஸ ராதே, ராதே!
வேத வித்யா விலாஸினி ஸ்ரீ ராதே, ராதே!
ஆதி பரா சக்தி ரூப ராதே, ராதே!
அத் யத்புத ச்ருங்காரமய ராதே, ராதே!  (தேகி)
தமிழ்க் கண்ணிகள்
காதலெனுந் தீவினிலே, ராதே, ராதே!-அன்று
கண்டெடுத்த பெண்மணியே! ராதே, ராதே!   (தேகி)
காதலெனுஞ் சோலையிலே ராதே, ராதே!-நின்ற
கற்பகமாம் பூந் தருவே ராதே, ராதே!  (தேகி)
மாதரசே!செல்வப் பெண்ணே, ராதே, ராதே!-உயர்
வானவர்க ளின்ப வாழ்வே ராதே, ராதே!   (தேகி)
61. கலைமகளை வேண்டுதல்
நொண்டிச் சிந்து
எங்ஙனம் சென்றிருந்தீர்?-என
தின்னுயிரே!என்தன் இசையமுதே!
திங்களைக் கண்டவுடன்-கடல்
திரையினைக் காற்றினைக் கேட்டவுடன்
கங்குலைப் பார்த்தவுடன்-இங்கு
காலையில் இரவியைத் தொழுதவுடன்,
பொங்குவீர் அமிழ்தெனவே-அந்தப்
புதுமையி லேதுயர் மறந்திருப்பேன். 1
மாதமொர் நான்காய்நீர்-அன்பு
வறுமையி லேயெனை வீழ்த்திவீட்டீர்;
பாதங்கள் போற்றுகின்றேன் என்தன்
பாவமெலாங் கெட்டு ஞானகங்கை
நாதமொ டெப்பொழுதும்-என்தன்
நாவினி லேபொழிந் திடவேண்டும்;
வேதங்க ளாக்கிடுவீர்-அந்த
விண்ணவர் கண்ணிடை விளங்கிடுவீர். 2
கண்மணி போன்றவரே!-இங்குக்
காலையும் மாலையும் திருமகளாம்
பெண்மணி யின்பத்தையும்;-சக்திப்
பெருமகள் திருவடிப் பெருமையையும்,
வண்மையில் ஓதிடுவீர்!-என்தன்
வாயிலும் மதியிலும் வளர்ந்திடுவீர்;
அண்மையில் இருந்திடுவீர்!இனி
அடியனைப் பிரிந்திடல் ஆற்றுவனோ! 3
தானெனும் பேய்கெடவே,-பல
சஞ்சலக் குரங்குகள் தலைப்படவே,
வானெ னும் ஒளி பெறவே,-நல்ல
வாய்மையி லேமதி நிலைத்திடவே.
தேனெனப் பொழிந்திடுவீர்!-அந்தத்
திருமகள் சினங்களைத் தீர்த்திடுவீர்!
ஊனங்கள் போக்கிடுவீர்!-நல்ல
ஊக்கமும் பெருமையும் உதவிடுவீர்! 4
தீயினை நிறுத்திடுவீர்!-நல்ல
தீரமுந் தெளிவுமிங் கருள்புரிவீர்!
மாயையில் அறிவிழந்தே-உம்மை
மதிப்பது மறந்தனன்; பிழைகளெல்லாம்,
தாயென உமைப்பணிந்தேன்-பொறை
சார்த்திநல் லருள்செய வேண்டுகின்றேன்.
வாயினிற் சபத மிட்டேன்;இனி
மறக்ககி லேன்.எனை மறக்ககிலீர்!      5           
62. வெள்ளைத் தாமரை
ராகம்-ஆனந்த பைரவி தாளம்-சாப்பு
1. வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
கொள்ளை யின்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்;
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;
கள்ள முற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசக்த் துட்பொரு ளாவாள். (வெள்ளைத்)
2. மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்;
கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்
இன்ப மேவடி வாகிடப் பெற்றாள். (வெள்ளைத்)
3. வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்;
வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லர்
வித்தை யோர்ந்திடு சிற்பியர்,தச்சர்,
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்,
வீர மன்னர்பின் வேதியர் யாரும்
தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்
தரணி மீதறி வாகிய தெய்வம்.      (வெள்ளைத்)
4. தெய்வம் யாவும் உணர்ந்திடுந் தெய்வம்,
தீமைகாட்டி விலக்கிடுந் தெய்வம்;
உய்வ மென்ற கருத்துடை யோர்கள்
உயிரி னுக்குயி ராகிய தெய்வம்;
செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்
செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்
கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்
கவிஞர் தெய்வம்,கடவுளர் தெய்வம் (வெள்ளைத்)
5. செந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளீர்!
சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்!
வந்த னம்இவட் கேசெய்வ தென்றால்
வாழி யஃதிங் கெளிதன்று கண்டீர்!
மந்தி ரத்தை முணுமுணுத் தேட்டை
வரிசை யாக அடுக்கி அதன்மேல்
சந்த னத்தை மலரை இடுவோர்
சாத்திரம் இவள் பூசனை யன்றாம். (வெள்ளைத்)
6. வீடு தோறும் கலையின் விளக்கம்,
வீதி தோறும் இரண்டொரு பள்ளி;
நாடு முற்றிலும் உள்ளவ வூர்கள்
நகர்க ளெங்கும் பலபல பள்ளி;
தேடு கல்வியி லாததொ ரூரைத்
தீயி னுக்கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அனனை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர், (வெள்ளைத்)
7. ஊணர் தேசம் யவனர்தந் தேசம்
உதய ஞாயிற் றொளிபெறு நாடு;
சேண கன் றதோர் சிற்றடிச் சீனம்
செல்வப் பார சிகப்பழந் தேசம்
தோண லத்த துருக்கம் மிசிரம்
சூழ்க டற்கப் புறத்தினில் இன்னும்
காணும் பற்பல நாட்டிடை யெல்லாம்
கல்வித் தேவின் ஒளிமிகுந்தோங்க.  (வெள்ளைத்)
8. ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
நல்ல பாரத நாட்டை வந்தீர்!
ஊனம் இன்று பெரிதிழைக் கின்றீர்!
ஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்!
மான மற்று விலங்குக ளொப்ப
மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ?
போன தற்கு வருந்துதல் வேண்டா
புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்!  (வெள்ளைத்)
9. இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
அனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்;
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆல யம்பதி னாயிரம் நாட்டல்.
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல் (வெள்ளைத்)
10. நிதிமி குத்தவர் பொற்குவை தாரீர்!
நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
வாணி பூசைக் குரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் வ்வகை யானும்
இப்பெருந் தொழில நாட்டுவம் வாரீர்! (வெள்ளைத்) 
63. நவராத்திரிப் பாட்டு
(மாதா பராசக்தி)

பரா சக்தி
(மூன்றும் ஒன்றாகிய மூர்த்தி)
மாதா பராசக்தி வையமெலாம் நீ நிறைந்தாய்?
ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே?
ஏதாயினும் வழிநீ சொல்வாய் எமதுயிரே!
வேதாவின் தாயே! மிகப்பணிந்து வாழ்வோமே 1
வாணி
வாணி கலைத்தெய்வம் மணிவாக் குதவிடுவாள்
ஆணிமுத்தைப் போலே அறிவுமுத்து மாலையினாள்
காணுகின்ற காட்சியாய்க் காண்பதெலாங் காட்டுவதாய்
மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே. 2
ஸ்ரீதேவி
பொன்னரசி நாரணனார் தேவி,புகழரசி
மின்னுநவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள்.
அன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள்,ஸ்ரீதேவி
தன்னிரு பொற்றாளே சரண்புகுந்து வாழ்வோமே. 3
பார்வதி
மலையிலே தான்பிறந்தாள்,சங்கரனை மாலையிட்டாள்,
உலையிலே யூதி உலகக் கனல்வளர்ப்பாள்,
நிலையில் உயர்ந்திடுவாள்,நேரே அவள்பாதம்
தலையிலே தாங்கித் தரணிமிசை வாழ்வோமே. 4
64. மூன்று காதல்
முதலாவது-சரஸ்வதி காதல்
ராகம்-சரஸ்வதி மனோஹரி தாளம்-திஸ்ர ஏகம்
பிள்ளைப் பிராயத்திலே-அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட்டேனங்கு
பள்ளிப் படிப்பினிலே-மதி
பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட
வெள்ளை மலரணமேல்-அவள்
ணையுங் கையும் விரிந்த முகமலர்
விள்ளும் பொருளமுதும்-கண்டேன்
வெள்ளை மனது பறிகொடுத் தேன், அம்மா! 1
ஆடி வருகையிலே-அவள்
அங்கொரு வீதி முனையில் நிற்பாள்;கையில்
ஏடு தரித்திருப்பாள்-அதில்
இங்கித மாகப் பதம் படிப்பாள், அதை
நாடி யருகணைந்தால்-பல
ஞானங்கள் சொல்லி இனிமைசெய்வாள்:”இன்று
கூடி மகிழ்வ” மென்றால்-விழிக்
கோணத்தி லேநகை காட்டிச் செல்வாள்,அம்மா! 2
ஆற்றங் கரைதனிலே-தனி
யானதோர் மண்டப மீதினிலே,தென்றற்
காற்றை நுகர்ந்திருந்தேன்-அங்கு
கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள்;அதை
ஏற்று மனமகிழ்ந்தே-’ அடி
என்னோ டிணங்கி மணம்புரி வாய்” என்று
போற்றிய போதினிலே-இளம்
புன்னகை பூத்து மறைந்துவிட்டாள்,அம்மா! 3
சித்தந் தளர்ந்ததுண்டோ?-கலைத்
தேவியின் மீது விருப்பம் வளர்ந்தொரு
பித்துப் பிடித்ததுபோல-பகற்
பேச்சும் இரவிற் கனவும் அவளிடை
வைத்த நினைவை யல்லால்-பிற
வாஞ்சை யுண்டோ? வய தங்ஙன மேயிரு
பத்திரண் டாமளவும்-வெள்ளைப்
பண்மகள் காதலைப் பற்றிநின் றேன்,அம்மா! 4
இரண்டாவது-லக்ஷ்மி காதல்
ராகம்-ஸ்ரீராகம் தாளம்-திஸ்ர ஏகம்
இந்த நிலையினிலே,அங்கொர்
இன்பப் பொழிலி னிடையினில் வேறொரு
சுந்தரி வந்துநின்றாள்-அவள்
சோதி முகத்தின் அழகினைக் கண்டென்தன்
சிந்தை திறைகொடுத்தேன்-அவள்
செந்திரு வென்று பெயர்சொல்லி னாள்;மற்றும்
அந்தத் தினமுதலா-நெஞ்சம்
ஆரத் தழுவிட வேண்டுகின் றேன்,அம்மா!
புன்னகை செய்திடுவாள்-அற்றைப்
போது முழுதும் மகிழ்ந்திருப்பேன்;சற்றென்
முன்னின்று பார்த்திடுவாள்-அந்த
மோகத்தி லேதலை சுற்றிடுங் காண்;பின்னர்
என்ன பிழைகள் கண்டோ-அவள்
என்னைப் புறக்கணித் தேகிடு வாள்;அங்கு
சின்னமும் பின்னமுமா-மனஞ்
சிந்தி யுளமிக நைந்திடு வேன்,அம்மா!
காட்டு வழிகளிலே-மலைக்
காட்சியிலே,புனல் வீழ்ச்சி யிலே,பல
நாட்டுப் புறங்களிலே-நகர்
நண்ணு சிலசுடர் மாடத்தி லே,சில
வேட்டுவர் சார்பினிலே-சில
வீர ரிடத்திலும் வேந்த ரிடத்திலும்,
மீட்டு மவள்வருவாள்-கண்ட
விந்தை யிலேயின்ப மேற்கொண்டு போம்,அம்மா!
மூன்றாவது-காளி காதல்
ராகம்-புன்னகவராளி தாளம்-திஸ்ர ஏகம்
பின்னோர் இராவினிலே-கரும்
பெண்மை யழகொன்று வந்தது கண்முன்பு;
கன்னி வடிவமென்றே-களி
கண்டு சற்றேயரு கிற்சென்று பார்க்கையில்
அன்னை வடிவமடா!-இவள்
ஆதி பராசக்தி தேவி யடா!-இவள்
இன்னருள் வேண்டுமடா!-பின்னர்
யாவு முலகில் வசப்பட்டுப் போமடா!
செல்வங்கள் பொங்கிவரும்;-நல்ல
தெள்ளறி வெய்தி நலம்பல சார்ந்திடும்;
அல்லும் பகலுமிங்கே இவை
அத்தனை கோடிப் பொருளினுள்ளே நின்று
விலலை யசைப்பவளை-இந்த
வேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியைத்
தொல்லை தவிர்ப்பவளை-நித்தம்
தோத்திரம் பாடித் தொழுதிடு வோமடா!
65. ஆறு துணை

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்-பரா சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி -ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
கணபதி ராயன்-அவனிரு
காலைப் பிடித் திடுவோம்;
குண முயர்ந் திடவே-விடுதலை
கூடி மகிழ்ந்திடவே (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
சொல்லுக் கடங்காவே-பரா சக்தி
சூரத் தனங்க ளெல்லாம்;
வல்லமை தந்திடுவாள்-பரா சக்தி
வாழியென்றேதுதிப்போம்.  (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
வெற்றி வடிவேலன்-அவனுடை
வீரத்தினைப் புகழ்வோம்
சுற்றி நில்லாதே போ!-பகையே!
துள்ளி வருகுது வேல்.  (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
தாமரைப் பூவினிலே-சுருதியைத்
தனியிருந் துரைப்பாள்
பூமணித் தாளினையே-கண்ணி லொற்றிப்
புண்ணிய மெய்திடுவோம்.  (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
பாம்புத் தலைமேலே-நடஞ் செயும்
பாதத்தினைப் புகழ்வோம்;
மாம்பழ வாயினிலே-குழலிசை
வண்மை புகழ்ந்திடுவோம்.  (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
செல்வத் திருமகளைத்-திடங்கொண்டு
சிந்தனை செய்திடுவோம்;
செல்வமெல்லாம் தருவாள்-நமதொளி
திக்க னைத்தும் பரவும்.  (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)
66. விடுதலை வெண்பா
சக்தி பதமே சரணென்று நாம்புகுந்து
பக்தியினாற் பாடிப் பலகாலும்-முக்தி நிலை
காண்போம் அதனாற் கவலைப் பிணிதீர்ந்து
பூண்போம் அமரப் பொறி.  1
பொறிசிந்தும் வெங்கனல்போற் பொய்தீர்ந்து தெய்வ
வெறிகொண்டால் ஆங்கதுவே வீடாம்-நெறிகொண்ட
வையமெலாந் தெய்வ வலியன்றி வேறில்லை
ஐயமெலாந் திர்ந்த தறிவு.  2
அறிவிலே தோன்றில் அவனியிலே தோன்றும்,
வறிஞராய்ப் பூமியிலே வாழ்வீர்!-குறிகண்டு
செல்வமெலாம் பெற்றுச் சிறப்புறவே சக்திதரும்
வெல்வயிரச் சீர்மிகுந்த வேல்.  3
வேலைப் பணிந்தால் விடுதலையாம்;வேல் முருகன்
காலைப் பணிந்தால் கவலைபோம்-மேலறிவு
தன்னாலே தான்பெற்று சக்தி சக்தி சக்தியென்று
சொன்னால் அதுவே சுகம்.  4
சுகத்தினைநான் வேண்டித் தொழுவேன் எப்போதும்
அகத்தினிலே துன்பற் றழுதேன்-யுகத்தினிலோர்
மாறுதலைக் காட்டி வலிமை நெறிகாட்டி
அறுதலைத் தந்தாள் அவள்.  5
67. ஐயம் உண்டு
ராகம்-கமாஸ் (தாளம்-ஆதி)
பல்லவி
ஜயமுண்டு பயமில்லை மனமே!-இந்த
ஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு. (ஜய)
அனுபல்லவி
பயனுண்டு பக்தியினாலே-நெஞ்சிற்
பதிவுற்றற குலசக்தி சரணுண்டு பகையில்லை (ஜய)
சரணங்கள்
புயமுண்டு குன்றத்தைப் போலே-சக்தி
பொற்பாத முண்டு அதன் மேலே;
நியம மெல்லாம்சக்தி நினைவன்றிப் பிறிதில்லை;
நெறியுண்டு,குறியுண்டு,குலசக்தி வெறியுண்டு (ஜய)
மதியுண்டு செல்வங்கள் சேர்க்கும்-தெய்வ
வலியுண்டு தீமையைப் போக்கும்;
விதியுண்டு,தொழிலுக்கு விளைவுண்டு,குறைவில்லை;
விசனப்பொய்க் கடலுக்குக் குமரன்கைக் கணையுண்டு (ஜய)
அலைபட்ட கடலுக்கு மேலே-சக்தி
அருளென்னுந் தோணியி னாலே
தொலையெட்டிக் கரையுற்றுத் துயரற்று விடுபட்டுத்
துணிவுற்ற குலசக்தி சரணத்தில் முடிதொட்டு. (ஜய)
68. ஆரிய தரிசனம்  (ஓர் கனவு)
ராகம்-ஸ்ரீராகம் (தாளம்-ஆதி)
கனவென்ன கனவே-என்தன்
கண்துயி லாதுநனவினிலே யுற்ற (கன)
1. கானகம் கண்டேன்-அடர்
கானகங் கண்டேன்-உச்சி
வானகத்தே வட்ட மதியொளி கண்டேன்.  (கன)
2. பொற்றிருக் குன்றம்-அங்கொர்
பொற்றிருக் குன்றம்-அதைச்
சுற்றி யிருக்கும் சுனைகளும் பொய்கையும் (கன)
புத்த தரிசனம்
3. குன்றத்தின் மீதே-அந்தக்
குன்றத்தின் மீதே-தனி
நின்றதோர் ஆல நெடுமரங் கண்டேன். (கன)
4. பொன்மரத் தின்கீழ்-அந்தப்
பொன்மரத் தின்கீழ்-வெறுஞ்
சின்மய மானதோர் தேவன் இருந்தனன். (கன)
5. புத்த பகவன்-எங்கள்
புத்த பகவன்-அவன்
சுத்தமெய்ஞ் ஞானச் சுடர்முகங் கண்டேன்.  (கன)
6. காந்தியைப் பார்த்தேன்-அவன்
காந்தியைப் பார்த்தேன்-உப
சாந்தியில் மூழ்கித் ததும்பிக் குளித்தனன். (கன)
7. ஈதுநல் விந்தை!-என்னை!
ஈதுநல் விந்தை!-புத்தன்
சோதி மறைந்திருள் துன்னிடக் கண்டனன்.    (கன)
8. பாய்ந்ததங் கொளியே;-பின்னும்
பாய்ந்ததங் கொளியே;-அருள்
தேய்ந்த தென்மேனி சிலிர்த்திடக் கண்டேன். (கன)
கிருஷ்ணார்ஜுன தரிசனம்
9. குன்றத்தின் மீதே-அந்தக்
குன்றத்தின் மீதே-தனி
நின்ற பொற்றேரும் பரிகளும் கண்டேன் (கன)
10. தேரின்முன் பாகன்-மணித்
தேரின்முன் பாகன்-அவன்
சீரினைக் கண்டு திகைத்துநின் றேனிந்தக் (கன)
11. ஓமென்ற மொழியும்-அவன்
ஓமென்ற மொழியும்-நீலக்
காமன்தன் உருவும்,அவ் வீமனதன் திறலும். (கன)
12. அருள் பொங்கும் விழியும்-தெய்வ
அருள் பொங்கும் விழியும்-காணில்
இருள் பொங்கு நெஞ்சினர் வெருள்
பொங்குந் திகிரியும்.   (கன)
13. கண்ணனைக் கண்டேன்-எங்கள்
கண்ணனைக் கண்டேன்-மணி
வண்ணனை ஞான மலையினைக் கண்டேன்.  (கன)
14. சேனைகள் தோன்றும்-வெள்ளச்
சேனைகள் தோன்றும்-பரி
யானையுந் தேரும் அளவில் தோன்றும்.  (கன)  
15. கண்ணன்நற் றேரில்-நீலக்
கண்ணன்நற் றேரில்-மிக
எண்ணயர்ந் தானொர் இளைஞனைக் கண்டேன். (கன)
16. விசையன்கொ லிவனே!-விறல்
விசையன்கொ லிவனே!-நனி
இசையும் நன்கிசையும் இங்கிவனுக் கிந்நாமம்  (விசை)
17. வீரிய வடிவம்!-என்ன
வீரிய வடிவம்!-இந்த
ஆரியன் நெஞ்சம் அயர்ந்ததென் விந்தை!  (விசை)
18. பெற்றதன் பேறே-செவி
பெற்றதன் பேறே-அந்தக்
கொற்றவன் சொற்கள் செவியுறக் கொண்டேன்.  (கன)
19. வெற்றியை வேண்டேன்;-ஜய;
வெற்றியை வேண்டேன்;-உயிர்
அற்றிடு மேனும் அவர்தமைத் தீண்டேன். (பெற்ற)      
20. சுற்றங் கொல்வேனோ?-என்தன்
சுற்றங் கொல்வேனோ?-கிளை
அற்றபின் செய்யும் அரசுமோர் அரசோ?” (பெற்ற)
21. மிஞ்சிய அருளால்-மித
மிஞ்சிய அருளால்-அந்த
வெஞ்சிலை வீரன் பலசொல் விரித்தான். (கன)
22. இம்மொழி கேட்டான்-கண்ணன்
இம்மொழி கேட்டான்-ஐயன்
செம்மலர் வதனத்திற் சிறுநகை பூத்தான். (கன)
23. வில்லினை யெடடா!-கையில்
வில்லினை யெடடா!-அந்தப்
புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா! (வில்)
24. வாடி நில்லாதே;-மனம்
வாடி நில்லாதே;-வெறும்
பேடியர் ஞானப் பிதற்றல் சொல்லாதே. (வில்)
25. ஒன்றுள துண்மை-என்றும்
ஒன்றுள துண்மை-அதைக்
கொன்றி டொணாது குறைத்த லொண்ணாது.  (வில்)
26. துன்பமு மில்லை-கொடுந்
துன்பமு மில்லை-அதில்
இன்பமு மில்லை பிறப்பிறப் பில்லை.  (வில்)
27. படைகளுந் தீண்டா-அதைப்
படைகளுந் தீண்டா-அனல்
கடவு மொண்ணாது புனல்நனை யாது. (வில்)
28. செய்தலுன் கடனே-அறஞ்
செய்தலுன் கடனே-அதில்
எய்துறும் விளைவினில் எண்ணம் வைக்காதே. (வில்)
69. சூரிய தரிசனம் ராகம்-பூபாளம்
சுருதி யின்கண் முனிவரும் பின்னே
தூமொழிப்புல வோர் பலர் தாமும்
பெரிது நின்தன் பெருமையென் றேத்தும்
பெற்றி கண்டுனை வாழ்த்திட வந்தேன்;
பரிதி யே! பொருள் யாவிற்கும் முதலே!
பானுவே! பொன்செய் பேரொளித் திரளே!
கருதி நின்னை வணங்கிட வந்தேன்;
கதிர்கொள் வாண்முகம் காட்டுதி சற்றே. 1
வேதம் பாடிய சோதியைக் கண்டு
வேள்வி பாடல்கள் பாடுதற் குற்றேன்;
நாத வார்கட லின்னொலி யோடு
நற்ற மிழ்ச்சொல இசையையுஞ் சேர்ப்பேன்;
காத மாயிரம் ஓர்கணத் துள்ளே
கடுகி யோடும் கதிரினம் பாடி
ஆத வா! நினை வாழ்த்திட வந்தேன்.
அணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே. 2
70. ஞாயிறு வணக்கம்
கடலின்மீது கதிர்களை வீசிக்
கடுகி வாள்மிசை ஏறுதி யையா!
படரும் வானொளி யின்பத்தைக் கண்டு
பாட்டுப்பாடி மகிழ்வன புட்கள்
உடல்ப ரந்த கடலுந் தனுள்ளே
ஒவ்வொர் நுண்துளி யும்விழி யாகச்
சுடரும் நின்தன் வடிவையுட் கொண்டே
சுருதி பாடிப் புகழ்கின்ற திங்கே.  1
என்த னுள்ளங் கடலினைப் போலே
எந்த நேரமும் நின்னடிக் கீழே
நின்று தன்னகத் தொவ்வொர் அணுவும்
நின்தன் ஜோதி நிறைந்தது வாகி
நன்று வாழ்ந்திடச் செய்குவை யையா!
ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!
மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்
வாழ நோக்கிடும் வள்ளிய தேவா! 2
காதல்கொண்டனை போலும் மண்மீதே,
கண்பிறழ் வின்றி நோக்குகின்றாயே
மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
மண்டினாள்,இதில் ஐயமொன்றில்லை;
சோதி கண்டு முகத்தில் இவட்கே
தோன்று கின்ற புதுநகை யென்னே!
ஆதித் தாய்தந்தை நீவிர் உமக்கே
ஆயி ரந்தரம் அஞ்சலி செய்வேன். 3
71. ஞான பாநு
திருவளர் வாழக்கை,கீர்த்தி,தீரம்,நல் லறிவு,வீரம்,
மருவுபல் கலையின் சோதி, வல்லமை யென்ப வெல்லாம்,
வருவது ஞானத் தாலே வையக முழுதும் எங்கள்
பெருமைதான் நிலவி நிற்கப் பிறந்தது ஞான பாநு. 1
கவலைகள்,சிறுமை,நோவு,கைதவம் வறுமைத் துன்பம்,
அவலமா மனைத்தைக் காட்டில் அவலமாம் புலைமை யச்சம்,
இவையெலாம் அறிவி லாமை என்பதோர் இருளிற் பேயாம்
நவமுறு ஞான பாநு நண்ணுக;தொலைக பேய்கள். 2
அனைத்தையும் தேவர்க்காக்கி அறத்தொழில் செய்யும் மேலோர்
மனத்திலே சக்தி யாக வளர்வது நெருப்புத் தெய்வம்;
தினத்தொளி ஞானங் கண்டீர் இரண்டுமே சேர்ந்தால் வானோர்
இனத்திலே கூடி வாழ்வர் மனிதரென் றிசைக்கும் வேதம். 3
பண்ணிய முயற்சியெல்லாம் பயனுற வோங்கும்,ஆங்கே
எண்ணிய எண்ண மெல்லாம் எளிதிலே வெற்றி யெய்தும்;
திண்ணிய கருத்தி னோடும் சிரித்திடு முகத்தினோடும்
நண்ணிடும் ஞான பாநு,அதனைநாம் நன்கு போற்றின். 4
72.  சோமதேவன் புகழ்
ஜய சோம, ஜய சோம, ஜய சோம தேவா! ஜய ஜய!
சரணம்
நயமுடைய இந்திரனை நாயகத் திட்டாய்,
வயமிக்க அசரரின் மாயையைச் சுட்டாய்;
வியனுலகில் ஆநந்த விண்ணிலவு பெய்தாய்,
துயர்நீங்கி யென்னுளஞ் சுடர்கொளச் செய்தாய்;
மயல்கொண்ட காதலரை மண்மிசைக் காப்பாய்;
உயவேண்டி இருவருளம் ஒன்றுக் கோப்பாய்;
புயலிருண் டேகுமுறி யிருள்வீசி வரல்போற்
பொய்த்திரள் வருமதைப் புன்னகையில் மாய்ப்பாய் (ஜய)
73. வெண்ணிலாவே!
எல்லை யில்லாததோர் வானக் கடலிடை
வெண்ணிலாவே!-விழிக்
கின்ப மளிப்பதோர் தீவென் றிலகுவை
வெண்ணிலாவே!
சொல்லையும் கள்ளையும் நெஞ்சையுஞ் சேர்த்திங்கு
வெண்ணிலாவே!-நின்தன்
சோதி மயக்கும் வகையது தானென்சொல்
வெண்ணிலாவே!
நல்ல ஒளியின் வகைபல கண்டிலன்
வெண்ணிலாவே!-(இந்த)
நனவை மறந்திடச் செய்வது கண்டிலன்
வெண்ணிலாவே!
கொல்லும் அமிழ்தை நிகர்த்திடுங் கள்ளொன்று
வெண்ணிலாவே!-வந்து
கூடி யிருக்குது நின்னொளி யோடிங்கு
வெண்ணிலாவே!  1
மாதர் முகத்தை நினக்கிணை கூறுவர்
வெண்ணிலாவே!-அஃது
வயதிற் கவலையின் நோவிற் கெடுவது
வெண்ணிலாவே!
காதலொருத்தி இளைய பிராயத்தள்
வெண்ணிலாவே!-அந்தக்
காமன்தன் வில்லை யிணைத்த புருவத்தள்
வெண்ணிலாவே!
மீதெழும் அன்பின் விளையபுன் னகையினள்
வெண்ணிலாவே!-முத்தம்
வேண்டிமுன் காடு முகத்தி னெழிலிங்கு
வெண்ணிலாவே!
சாதல் அழிதல் இலாது நிரந்தரம்
வெண்ணிலாவே!-நின்
தன்முகந் தன்னில் விளங்குவ தென்னைகொல்?
வெண்ணிலாவே!  2
நின்னொளி யாகிய பாற்கடல் மீதிங்கு
வெண்ணிலாவே!-நன்கு
நீயும் அமுதும் எழுந்திடல் கண்டனன்
வெண்ணிலாவே!
மன்னு பொருள்க ளமைத்திலும் நிற்பவன்
வெண்ணிலாவே!-அந்த
மாயன் அப் பாற்கடல் மீதுறல் கண்டனன்
வெண்ணிலாவே!
துன்னிய நீல நிறத்தள் பராசக்தி
வெண்ணிலாவே!-இங்கு
தோன்றும் உலகவ ளேயென்று கூறுவர்
வெண்ணிலாவே!
பின்னிய மேகச் சடைமிசைக் கங்கையும்
வெண்ணிலாவே!-(நல்ல)
பெட்புற நீயும் விளங்குதல் கண்டனன்
வெண்ணிலாவே!  3
காதலர் நெஞ்சை வெதுப்புவை நீயென்பர்
வெண்ணிலாவே!-நினைக்
காதல் செய்வார் நெங்சிற் கின்னமு தாகுவை
வெண்ணிலாவே!
சீத மணிநெடு வானக் குளத்திடை
வெண்ணிலாவே!-நீ
தேசு மிகுந்தவெண் தாமரை போன்றனை
வெண்ணிலாவே!
மோத வருங்கரு மேகத் திரளினை
வெண்ணிலாவே!-நீ
முத்தி னொளிதந் தழகுறச் செய்குவை
வெண்ணிலாவே!
தீது புரிந்திட வந்திடும் தீயர்க்கும்
வெண்ணிலாவே!-நலஞ்
செய்தொளி நல்குவர் மேலவ ராமன்றோ?
வெண்ணிலாவே!  4
மெல்லிய மேகத் திரைக்குள் மறைந்திடும்
வெண்ணிலாவே!-உன்தன்
மேனி யழகு மிகைபடக் காணுது
வெண்ணிலாவே!
நல்லிய லார்யவ னத்தியர் மேனியை
வெண்ணிலாவே!-மூடு
நற்றிரை மேனி நயமிகக் காட்டிடும்
வெண்ணிலாவே!
சொல்லிய வார்த்தையில் நாணுற்றநன போலும
வெண்ணிலாவே!-நின்
சோதி வதனம் முழுதும் மறைத்தனை
வெண்ணிலாவே!
புல்லின் செய்த பிழைபொறுத் தேயருள்
வெண்ணிலாவே!
போகிடச் செய்து நினதெழில் காட்டுதி
வெண்ணிலாவே!   5
74. தீ வளர்த்திடுவோம்! யாகப் பாட்டு
ராகம்-புன்னாகவராளி
பல்லவி
தீ வளர்த்திடுவோம்!-பெருந்
தீ வளர்த்திடுவோம்!
சரணங்கள்
1. ஆவியி னுள்ளம் அறிவி னிடையிலும்
அன்பை வளர்த்திடுவோம்-விண்ணின்
ஆசை வளர்த்திடுவோம்-களி
ஆவல் வளர்த்திடுவோம்-ஒரு
தேவி மகனைத் திறமைக் கடவுளைச்
செங்கதிர் வானவனை -விண்ணோர் தமைத்
தேனுக் கழைப்பவனைப்-பெருந்திரள்
சேர்ந்து பணிந்திடுவோம்-வாரீர்!   (தீ)
2. சித்தத் துணிவினை மானுடர் கேள்வனைத்
தீமை யழிப்பவனை-நன்மை
சேர்த்துக் கொடுப்பவனைப்-பல
சீர்க ளுடையவனைப்-புவி
அத்தனையுஞ்சுட ரேறத் திகழ்ந்திடும்
ஆரியர் நாயகனை-உருத்திரன்
அன்புத் திருமகனை-பெருந்திர
ளாகிப் பணிந்திடுவோம்-வாரீர்!   (தீ)
3. கட்டுக்கள் போக்கி விடுதலை தந்திடுங்
கண்மணி போன்றவனை-எம்மைக்
காவல் புரிபவனைத்-தொல்லைக்
காட்டை யழிப்பவனைத்-திசை
எட்டும் புகழ்வளர்ந் தோங்கிட வித்தைகள்
யாவும் பழகிடவே-புவிமிசை
இன்பம் பெருகிடவே-பெருந்திரள்
எய்திப் பணிந்திடுவோம்-வாரீர்!   (தீ)
4. நெஞ்சிற் கவலைகள் நோவுகள் யாவையும்
நீக்கிக் கொடுப்பவனை-உயிர்
நீளத் தருபவனை-ஒளிர்
நேர்மைப் பெருங்கனலை-நித்தம்
அஞ்ச லங்சேலென்று கூறி எமக்குநல்
ஆண்மை சமைப்பவனைப் பல் வெற்றிகள்
ஆக்கிக் கொடுப்பவனைப்-பெருந்திரள்
ஆகிப் பணிந்திடுவோம்-வாரீர்!  (தீ)
5. அச்சதைச் சுட்டங்கு சாம்பரு மின்றி
அழித்திடும் வானவனைச்-செய்கை
ஆற்று மதிச் சுடரைத்-தடை
யற்ற பெருந்திறலை-எம்முள்
இச்சையும் வேட்கையும் ஆசையும் காதலும்
ஏற்றதொர் நல்லறமும்-கலந்தொளி
ஏறுந் தவக்கனலைப்-பெருந்திரள்
எய்திப் பணிந்திடுவோம்-வாரீர்!  (தீ)
6. வான கத்தைச்சென்று தீண்டுவன் இங்கென்று
மண்டி யெழுந்தழலைக்-கவி
வாணர்க்கு நல்லமுதைத்-தொழில்
வண்ணந் தெரிந்தவனை-நல்ல
தேனையும் பாலையும் நெய்யையும் சோற்றையும்
தீம்பழம் யாவினையும்-இங்கேயுண்டு
தேக்கிக் களிப்பவனைப்-பெருந்திரள்
சேர்ந்து பணிந்திடுவோம்-வாரீர்!   (தீ)
7. சித்திர மாளிகை பொன்னொளிர் மாடங்கள்
தேவத் திருமகளிர்-இன்பந்
தேக்கிடுந் தேனிசைகள்-சுவை
தேறிடு நல்லிளமை-நல்ல
முத்து மணிகளும் பொன்னும் நிறைந்த
முழுக்குடம் பற்பலவும்-இங்கேதர
முற்பட்ட நிற்பவனைப்-பெருந்திரள்
மொய்த்துப் பணிந்திடுவோம்-வாரீர்! (தீ)
75. வேள்வித் தீ
ராகம்-நாதநாமக்கிரியை தாளம்-சதுஸ்ரஏகம்
ரிஷிகள் :எங்கள் வேள்விக் கூடமீதில்
ஏறுதே தீ!தீ!-இந்நேரம்,
பங்க முற்றே பேய்க ளோடப்
பாயுதே தீ!தீ!-இந்நேரம்  1
அசுரர் : தோழரே!நம் ஆவி வேகச்
சூழுதே தீ! தீ!-ஐயோ!நாம்
வாழ வந்த காடு வேக
வந்ததே தீ!தீ!-அம்மாவோ!  2

ரிஷி: பொன்னை யொத்தோர் வண்ணமுற்றான்
போந்து விட்டானே!-இந்நேரம்,
சின்ன மாகிப் பொய் யரக்கர்
சிந்தி வீழ்வாரே!-இந்நேரம்  3
அசு: இந்திராதி தேவர் தம்மை
ஏசி வாழ்ந்தோமே!-ஐயோ!நாம்,
வெந்து போக மானிடர்க்கோர்
வேத முண்டாமோ!-அம்மாவோ!  4
ரிஷி : வானை நோக்கிக் கைகள் தூக்கி
வளருதே தீ!தீ!-இந்நேரம்,
ஞான மேனி உதய கன்னி
நண்ணி விட்டாளே!-இந்நேரம்.  5
அசு: கோடி நாளாய் இவ்வனத்திற்
கூடி வாழ்ந்தோமே-ஐயோ!நாம்
பாடி வேள்வி மாந்தர் செய்யப்
பண்பிழந் தோமே!-அம்மாவோ!  6
ரிஷி:காட்டில் மேயும் காளை போன்றான்
காணுவீர் தீ!தீ!-இந்நேரம்,
ஓட்டி யோட்டிப் பகையை யெல்லாம்
வாட்டுகின்றானே!-இந்நேரம்.  7
அசு:வலியி லாதார் மாந்த ரென்று
மகிழ்ந்து வாழ்ந்தோமே-ஐயோ!நாம்
கலியை வென்றோர் வேத வுண்மை
கண்டு கொண்டாரே!-அம்மாவோ!  8
ரிஷி: வலிமை மைந்தன் வேள்வி முன்னோன்
வாய்திறந் தானே!-இந்நேரம்,
மலியு நெய்யுந் தேனுமுண்டு
மகிழ வந்தானே!-இந்நேரம்.  9
அசு: உயிரை விட்டும் உணவை விட்டும்
ஓடி வந்தோமே!-ஐயோ!நாம்
துயிலுடம்பின் மீதிலுந் தீ
தோன்றி விட்டானே!-அம்மாவோ!   10
ரிஷி: அமரர் தூதன் சமர நாதன்
ஆர்த் தெழுந்தானே!-இந்நேரம்,
குமரி மைந்தன் எமது வாழ்விற்
கோயில் கொண்டானே!-இந்நேரம்.   11
அசு: வருணன் மித்ரன் அர்ய மானும்
மதுவை யுண்பாரே-ஐயோ!நாம்
பெருகு தீயின் புகையும் வெப்பும்
பின்னி மாய்வோமே!-அம்மாவோ! 12
ரிஷி: அமர ரெல்லாம் வந்து நம்முன்
அவிகள் கொண்டாரே!-இந்நேரம்,
நமனு மில்லை பகையு மில்லை
நன்மை கண்டோமே!-இந்நேரம்.  13
அசு: பகனு மிங்கே யின்ப மெய்திப்
பாடுகின்றானே-ஐயோ!நாம்
புகையில் வீழ இந்திரன் சீர்
பொங்கல் கண்டீரோ!-அம்மாவோ! 14
ரிஷி:இளையும் வந்தாள் கவிதை வந்தாள்
இரவி வந்தானே!இந்நேரம்,
விளையுமெங்கள் தீயினாலே
மேன்மையுற்றோமே!-இந்நேரம்.  15
ரிஷி:அன்ன முண்பீர் பாலும் நெய்யும்
அமுது முண்பீரே!-இந்நேரம்,
மின்னி நின்றீர் தேவ ரெங்கள்
வேள்வி கொள்வீரே!-இந்நேரம்.  16
ரிஷி: சோமமுண்டு தேவர் நல்கும்
ஜோதி பெற்றோமே!-இந்நேரம்,
தீமை தீர்ந்தே வாழி யின்பஞ்
சேர்ந்து விட்டோமே!-இந்நேரம்.  17
ரிஷி: உடலுயிர்மே லுணர்விலும் தீ
ஓங்கி விட்டானே!-இந்நேரம்,
கடவுளர் தாம் எம்மை வாழ்த்திக்
கை கொடுத்தாரே!-இந்நேரம்.  18
ரிஷி:எங்கும் வேள்வி அமர ரெங்கும்
யாங்கணுந் தீ!தீ!-இந்நேரம்,
தங்கு மின்பம் அமர வாழ்க்கை
சார்ந்து நின்றோமே!-இந்நேரம்.  19
ரிஷி: வாழ்க தேவர்! வாழ்க வேள்வி!
மாந்தர் வாழ்வாரே!-இந்நேரம்,
வாழ்க வையம்! வாழ்க வேதம்!
வாழ்க தீ!தீ!தீ!-இந்நேரம்.  20

76. கிளிப்பாட்டு

திருவப் பணிந்து நித்தம் செம்மைத் தொழில் புரிந்து,
வருக வருவதென்றே-கிளியே!-மகிழ்வுற் றிருப்போமடி!
வெற்றி செயலுக் குண்டு தியின் நியமமென்று,
கற்றுத் தெளிந்த பின்னும்-கிளியே!-கவலைப்படலாகுமோ?
துன்ப நினைவு களும் சோர்வும் பயமு மெல்லாம்,
அன்பில் அழியுமடீ!-கிளியே!-அன்புக் கழிவில்லை காண்.
ஞாயிற்றை யெண்ணி யென்றும் நடுமை நிலை பயின்று,
ஆயிர மாண்டுலகில்-கிளியே!-அழிவின்றி வாழ்வோ மடீ!
தூய பெருங்கனலைச் சுப்பிர மண்ணி யனை
நேயத்துடன் பணிந்தால்-கிளியே!-நெருங்கித் துயர் வருமோ?
77. யேசு கிறிஸ்து

ஈசன் வந்து லுவையில் மாண்டான்,
எழுந்து யிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;
நேசமா மரியா மக்த லேநா
நேரிலே இந்தச் செய்தியைக் கண்டாள்;
தேசத் தீர்!இதன் உட்பொருள் கேளீர்;
தேவர் வந்து நமக்குட் புகுந்தே
நாச மின்றி நமை நித்தங் காப்பார்;
நம்அ கந்தையை நாம்கொன்று விட்டால். 1
அன்புகாண் மரியா மக்த லேநா,
ஆவி காணுதிர் யேசு கிறிஸ்து;
முன்பு தீமை வடிவினைக் கொன்றால்
மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்;
பொன்பொ லிந்த முகத்தினிற் கண்டே
போற்று வாள் அந்த நல்லுயிர் தன்னை;
அன்பெனும் மரியா மக்த லேநா
ஆஹ! சாலப் பெருங்களி யிஃதே.  2
உண்மை யென்ற சிலுவையிற் கட்டி
உணர்வை ஆணித் தவங்கொண் டடித்தால்,
வண்மைப் பேருயிர் யேசு கிறிஸ்து
வான மேனியில் அங்கு விளங்கும்;
பெண்மைகாண் மரியா மக்த லேநா,
பேணும் நல்லறம் யேசு கிறிஸ்து;
நுண்மை கொண்ட பொருளிது கண்டீர்
நொடியி லிஃத பயின்றிட லாகும். 3
78. அல்லா
பல்லவி
அல்லா,அல்லா,அல்லா!
சரணங்கள்
பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி யண்டங்கள்
எல்லாத் திசையிலுமோ ரெல்லை யில்லா வெளி வானிலே!
நில்லாது சுழன்றோட நியமஞ் செய்தருள் நாயகன்
சொல்லா லும்மனத்தாலுந்தொடரொணாதபெருஞ் சோதி!  (அல்லா......,)
கல்லாதவ ராயினும் உண்மை சொல்லாதவ ராயினும்
பொல்லாத ராயினும் தவ மில்லாதவ ராயினும்
நல்லாருரை நீதி யின்படி நில்லாதவ ராயினும்
எல்லாரும் வந்தேத்து மளவில் யமபயங் கெடச்செய்பவன் (அல்லா......,)
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்



ஞானப் பாடல்கள்



1. அச்சமில்லை
பண்டாரப் பாட்டு

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளொரெலாம் எதிர்த்து நின்ற போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சை கொண்ட பொருளெலாம் இழந்த விட்ட போதிலும், 1
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
நச்சை வாயி லேகொணர்ந்து நண்ப ரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. 2
2. ஜய பேரிகை
ஜய பேரிகை கொட்டடா!-கொட்டடா!
ஜய பேரிகை கொட்டடா!
1. பயமெனும பேய்தனை யடித்தோம்-பொய்மைக்
பாம்மைப் பிளந்துயிரைக் குடித்தோம்;
வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப்பிடித்தோம்  (ஜய பேரிகை)
2. இரவியி னொளி யிடைக் குளித்தோம்-ஒளி
இன்னமு தினைக்கண்டு களித்தோம்;
கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்
காலன் நடுநடுங்க விழித்தோம்   (ஜய பேரிகை)
3. காக்கை,குருவி எங்கள் ஜாதி-நீள்
கடலும்,மலையும் எங்கள் கூட்டம்;
நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக்களி யாட்டம்.  (ஜய பேரிகை)
3. சிட்டுக் குருவியைப் போலே
பல்லவி
விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டு குருவியைப் போலே
சரணங்கள்
1. எட்டு திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு (விட்டு)
2. பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்று
பீடையி லாததோர் கூடு கட்டிக்கொண்டு
முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு (விட்டு)
3. முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று.  (விட்டு)
4. விடுதலை வேண்டும். ராகம்-நாட்டை
பல்லவி
வேண்டுமடி எப்போதும் விடுதலை அம்மா!
சரணங்கள்
தூண்டு மின்ப வாடை வீசு துய்ய தேன் கடல்
சூழ நின்ற தீவி லங்கு சோதி வானவர்
ஈண்டு நமது தோழ ராகி எம்மொ டமுத முண்டுகலவ
நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய நினைத்திடு மின்ப மனைத்தும் உதவ (வேண்டுமடி)
விருத்தி ராதி தானவர்க்கு மெலிவ தின்றியே,
விண்ணு மண்ணும் வந்து பணிய மேன்மை துன்றியே,
பொருத்த முறநல் வேத மோர்ந்து பொய்மை தீர மெய்மை நேர
வருத்த மழிய வறுமை யொழிய வையம் முழுதும வண்மை பொழிய (வேண்டுமடி)
பண்ணில் இனிய பாடலோடு பாயு மொளியெலாம்
பாரில் எம்மை உரிமை கொண்டு பற்றி நிற்கவே,
நண்ணி யமரர் வெற்றி கூற நமது பெண்கள் அமரர் கொள்ள
வண்ண மினிய தேவ மகளிர் மருவ நாமும் உவகை துள்ள (வேண்டுமடி)
5. மனத்தில் உறுதி வேண்டும்.

மனதி லுறுதி வேண்டும்.
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்  1
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்.
பெண் விடுதலை வேண்டும்.
பெரிய கடவுள் காக்க வேண்டும்;
மண்பயனுற வேண்டும்,
வாகனமிங்கு தென்பட வேண்டும்.
உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்.  2
6. ஆத்ம ஜயம்

கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
கவர்ந்திட மாட்டாவோ?-அட
மண்ணில் தெரியுது வானம்,அதுநம்
வசப்பட லாகாதோ?
எண்ணி யெண்ணிப் பல நாளு முயன்றிங்
கிறுதியிற் சோர்வோமோ,
விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்
மேவு பராசக்தியே!  1
என்ன வரங்கள்,பெருமைகள்,வெற்றிகள்
எத்தனை மேன்மைகளோ!
தன்னை வென்றா லவை யாவும் பெறுவது
சத்திய மாகுமென்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள்
முற்றுமுணர்ந்த பின்னும்
தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு
தாழ்வுற்று நிற்போமோ?  2
7. காலனுக்கு உரைத்தல்

ராகம்-சக்ரவாகம் தாளம்-ஆதி
பல்லவி
காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்; என்தன்
காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்-அட (காலா)
சரணங்கள்
1. வேலாயுத விருதினை மனதிற் பதிக்கிறேன்-நல்ல
வேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்யித் துதிக்கிறேன்-ஆதி
மூலா வென்றுகதறிய யானையயைக் காக்கவே-நின்தன்
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ,கெட்ட மூடனே? அட-(காலா)
2. ஆலால முண்டவனடி சரணென் றமார்க்கண்டன்-தன
தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை யறிகுவேன்-இங்கு
நாலாயிரம் காதம் விட்டகல்!உனை விதிக்கிறேன்-ஹரி
நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன்-அட (காலா)
8. மாயையைப் பழித்தல்
ராகம்-காம்போதி  தாளம்-ஆதி
1. உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ?
மாயையே!-மனத்
திண்மையுள்ளாரை நீ செய்வது
மொன்றுண்டோ!-மாயையே!
2. எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்
மாயையே! நீ
சித்தத் தெளிவெனுந் தீயின்முன்
நிற்பாயோ?-மாயையே!
3. என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்
கெட்ட மாயையே!-நான்
உன்னைக் கெடுப்ப துறுதியென்
றேயுணர் மாயையே!
4. சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு
மாயையே!-இந்தத்
தேகம் பொய் யென்றுணர் துரரை யென்
செய்வாய் மாயையே!
5. இருமை யழிந்தபின் எங்கிருப்பாய்,அற்ப
மாயையே!-தெளிந்
தொருமை கண்டோர் முன்னம் ஓடாது
நிற்பையோ?-மாயையே!
6. நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ
மாயையே-சிங்கம்
நாய்தரக் கொள்ளுமோ நல்லர
சாட்சியை-மாயையே!
7. என்னிச்சை கொண்டுனை யெற்றிவிட
வல்லேன் மாயையே!-இனி
உன்னிச்சை கொண்டெனக் கொன்றும்
வராது காண்-மாயையே!
8. யார்க்கும் குடியல்லேன் யானென்ப
தோர்ந்தனன் மாயையே!-உன்தன்
போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்
உன்னை-மாயையே!
9. சங்கு
செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலா மென்றே எண்ணி யிருப்பார்
பித்த மனிதர்,அவர் சொலுஞ் சாத்திரம்
பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்! 1
இத்தரை மீதினி லேயிந்த நாளினில்
இப்பொழு தேமுக்தி சேர்ந்திட நாடிச்
சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்
தூயவ ராமென்றிங் கூதேடா சங்கம்! 2
பொய்யுறு மாயையைப் பொய்யெனக் கொண்டு,
புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே
ஐயுற லின்றிக் களித்திருப்பாரவர்
ஆரிய ராமென்றிங் கூதேடா சங்கம்! 3
மையுறு வாள்விழி யாரையும் பொன்னையும்
மண்ணெனக் கொண்டு மயக்கற்றிருந்தாரே,
செய்யுறு காரியம் தாமன்றிச் செய்வார்
சித்தர்க ளாமென்றிங் கூதேடா சங்கம்! 4
10. அறிவே தெய்வம்
கண்ணிகள்
ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்!-பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ?  1
மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கும் மதியிலிகாள்!-எத
னூடும்நின் றோங்கும் அறிவொன்றே தெய்வமென்
றோதி யறியீரோ?  2
சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ?-பல
பித்த மதங்களி லேதடு மாறிப்
பெருமை யழிவீரோ?  3
வேடம்பல் போடியொர் உண்மைக் குளவென்று
வேதம் புகன்றிடுமே-ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே.  4
நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று
நான்மறை கூறிடுமே-ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றந்
நான்மறை கண்டிலதே.  5
போந்த நிலைகள் பலவும் பராசக்தி
பூணு நிலையாமே-உப
சாந்த நிலையேவேதாந்த நிலையென்று
சான்றவர் கண்டனரே.  6
கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டும் மறைகளெல்லாம்-நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு
அவங்கள் புரிவீரோ?  7
உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே-இங்கு,
கொள்ளற் கரிய பிரமமென் றேமறை
கூவுதல் கேளீரோ?  8
மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்ந்து
வெறுங் கதைகள் சேர்த்துப்-பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்லீரோ?  9
ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனும் வேதமெலாம்-என்றும்
ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனக் கொள்வாயே.  10
11. பரசிவ வெள்ளம்
உள்ளும் புறமுமாய் உள்ளதெலாந் தானாகும்.
வெள்ளமொன்றுண் டாமதனைத் தெய்வமென்பார் வேதியரே
காணுவன நெஞ்சிற் கருதுவன உட்கருத்தைப்
பேணுவன யாவும் பிறப்பதந்த வெள்ளத்தே
எல்லைபிரி வற்றதுவாய் யாதெனுமோர் பற்றிலதாய்
இல்லையுளதென் றறிஞர் என்றும்மய லெய்துவதாய்.
வெட்டவெளி யாயறிவாய் வேறு பல சக்திகளைக்
கொட்டுமுகி லாயணுக்கள் கூட்டிப் பிரிப்பதுவாய்.
தூல வணுக்களாய்ச் சூக்கு மமாய்ச சூக்குமத்திற்
சாலவுமே நண்ணிதாய்த் தன்மையெலாந் தானாகி
தன்மையொன் றிலாததுவாய்த் தானே ஒருபொருளாய்த்
தன்மைபல வுடைத்தாய்த் தான்பலவாய் நிற்பதுவே.
எங்குமுளான் யாவும்வலான் யாவுமறி வானெனவே
தங்குபல மதத்தோர் சாற்றுவதும் இங்கிதையே
வேண்டுவோர் வேட்கையாய் வேட்பாராய் வேட்பாருக்
கீண்டுபொரு ளாய்தனை யீட்டுவதாய் நிற்குமிதே.
காண்பார்தங் காட்சியாய்க் காண்பாராய்க் காண்பொருளாய்
மாண்பார்ந் திருக்கும்,வகுத்துரைக்க வொண்ணாதே.
எல்லாந் தானாகி யிருந்திடிலும் இஃதறிய
வல்லார் சிலரென்பர் வாய்மையெல்லாங் கண்டவரே.
மற்றிதனைக் கண்டார் மலமற்றார் துன்பமற்றார்;
பற்றிதனைக் கொண்டார் பயனனைத்துங் கண்டாரே.
இப்பொருளைக் கண்டார் இடருக்கோர் எல்லைகண்டார்
எப்பொருளுந் தாம் பெற்றிங் ன்பநிலை யெய்துவரே.
வேண்டுவ வெலாம் பெறுவார் வேண்டா ரெதனையுமற்
றீண்டுபுவி யோரவரை யீசரெனப் போற்றுவரே.
ஒன்றுமே வேண்டா துலகனைத்தும் ஆடுவர்காண்;
என்றுமே யிப்பொருளோ டேகாந்தத் துள்ளவரே.
வெள்ளமடா தம்பி விரும்பியபோ தெய்திநின
துள்ள மிசைத் தானமுத வூற்றாய்ப் பொழியுமடா!
யாண்டுமிந்த இன்பவெள்ளம் என்று நின்னுள் வீழ்வதற்கே
வேண்டு முபாயம் மிகவுமெளி தாகுமடா!
எண்ணமிட்டா லேபோதும் எண்ணுவதே இவ்வின்பத்
தண்ணமுதையுள்ளே ததும்பப் புரியுமடா!
எங்கும் நிறைந்திருந்த ஈசவெள்ள மென்னகத்தே
பொங்குகின்ற தென்றெண்ணிப் போற்றி நின்றாற் போதுமடா
யாதுமாம் ஈசவெள்ளம் என்னுள் நிரம்பியதென்
றோதுவதே போதுமதை உள்ளுவதே போதுமடா!
காவித் துணிவேண்டா,கற்றைச் சடை வேண்டா;
பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே.
சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை;
தோத்திரங் ளில்லையுளந் தொட்டுநின்றாற் போதுமடா!
தவமொன்று மில்லையொரு சாதனையு மில்லையடா!
சிவமொன்றே யுள்ளதெனச் சிந்தை செய்தாற்போதுமடா!
சந்ததமு மெங்குமெல்லாந் தானாகி நின் றசிவம்,
வந்தெனுளே பாயுதென்று வாய்சொன்னாற் போதுமடா!
நித்தசிவ வெள்ள மென்னுள் வீழ்ந்து நிரம்புதென்றுள்
சித்தமிசைக் கொள்ளுஞ் சிரத்தை யொன்றே போதுமடா!
12. பொய்யோ?மெய்யோ? (உலகத்தை நோக்கி வினவுதல்)
நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்களெல்லாம்
சொற்பனந் தானோ?-பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே,நீங்க ளெல்லாம்
அற்பமாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? 1
வானகமே,இளவெயிலே,மரச்செறிவே,நீங்களெல்லாம்
கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ?
போன தெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ? 2
கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும்
கோலமும் பொய்களோ?-அங்குக் குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ? 3
காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ?
வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதில்லை
காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்.  4
13. நான்
இரட்டைக் குறள் வெண் செந்துறை

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானில் வளரும் மரமெலாம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான்  1
விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்;
மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான்,
வாரியினுள் உயிரெலாம் நான்,  2
கம்பனிசைத்த கவியெலாம் நான்,
காருகர் தீட்டும் உரவெலாம் நான்;
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில்நகர் கோபுரம் யாவுமே நான், 3
இன்னிசை மாதரிசையுளேன் நான்,
இன்பத்திரள்கள் அனைத்துமே நான்;
புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான். 4
மந்திரங்கோடி இயக்குவோன் நான்,
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்;
தந்திரங் கோடி சமைத்துளோன் நான்.
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான். 5
அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்,
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்,
கண்டல் சக்திக் கணமெலாம் நான்
காரணமாகிக் கதித்துளோன் நான். 6
நானெனும் பொய்யை நடத்துவோன் நான்,
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்;
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற்சோதி நான். 7
14. சித்தாந்தச் சாமி கோயில்

சித்தாந்தச் சாமி திருக்கோயில் வாயிலில்
தீப வொளி யுண்டாம்;-பெண்ணே
முத்தாந்த வீதி முழுதையுங் காட்டிட
மூண்ட திருச் சுடராம்;-பெண்ணே! 1
உள்ளத் தழுக்கும் உடலிற் குறைகளும்
ஓட்ட வருஞ் சுடராம்;-பெண்ணே!
கள்ளத் தனங்கள் அனைத்தும் வெளிப்படக்
காட்ட வருஞ் சுடராம்;-பெண்ணே! 2
தோன்று முயிர்கள் அனைத்தும்நன் றென்பது
தோற்றமுறுஞ் சுடராம்;-பெண்ணே
மூன்று வகைப்படும் கால நன்றென்பதை
முன்னரிடுஞ் சுடராம்;-பெண்ணே! 3
பட்டினந் தன்னிலும் பார்க்க நன்றென்பதைப்
பார்க்க வொளிச் சுடராம்;-பெண்ணே!
கட்டு மனையிலுங் கோயில் நன்றென்பதைக்
காண வொளிர்சுடராம்;-பெண்ணே! 4
15. பக்தி்

ராகம்-பிலஹரி
பல்லவி
பக்தியினாலே-தெய்வ-பக்தியினாலே
சரணங்கள்
1. பக்தியினாலே-இந்தப்
பாரினிலெய்திடும் மேன்மைகள் கேளடி!
சித்தந் தெளியும்,-இங்கு
செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும்,
வித்தைகள் சேரும்,-நல்ல
வீர ருறவு கிடைக்கும்-மனத்திடைத்
தத்துவ முண்டாம்,-நெஞ்சிற்
சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கும். (பக்தி)
2. காமப் பிசாசைக் -குதிக்
கால்கொண் டடித்து விழுத்திட லாகும்;இத்
தாமசப் பேயைக்-கண்டு
தாக்கி மடித்திட லாகும்;எந் நேரமும்
தீமையை எண்ணி-அஞ்சுந்
தேம்பற் பிசாசைத் திருகியெறிந்து பொய்ந்
நாம மில்லாத-உண்மை
நாமத்தினாலிங்கு நன்மை விளைந்திடும், (பக்தி)
3. ஆசையைக் கொல்வோம்,-புலை
அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம்,கெட்டட
பாச மறுப்போம்,-இங்கு
பார்வதி சக்தி விளங்குதல் கண்டதை
மோசஞ் செய்யாமல்-உண்மை
முற்றிலுங் கண்டு வணங்கி வணங்கி யோர்
ஈசனைப் போற்றி-இன்பம்
யாவையு முண்டு புகழ்கொண்டு வாழ்குவம், (பக்தி)
4. சோர்வுகள் போகும்,-பொய்ச்
சுகத்தினைத் தள்ளிச் சுகம்பெற லாகும்,நற்
பார்வைகள் தோன்றும்,-மிடிப்
பாம்பு கடித்த விஷமகன் றேநல்ல
சேர்வைகள் சேரும்,-பல
செல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும்
தீர்வைகள் தீரும்,பலபல இன்பங்கள் சேர்ந்திடும், (பக்தி)
5. கல்வி வளரும்,-பல
காரியுங் கையுறும்,வீரிய மோங்கிடும்,
அல்ல லொழியும்-நல்ல
ஆண்மை யுண்டாகும்,அறிவு தெளிந்திடும்,
சொல்லுவதெல்லாம்-மறைச்
சொல்லினைப் போலப் பயனுள தாகும் மெய்
வல்லமை தோன்றும்,-தெய்வ
வாழ்க்கையுற்றே யிங்கு வாழ்ந்திடலாம்,உண்மைப் (பக்தி)
6. சோம்ப லழியும்-உடல்
சொன்ன படிக்கு நடக்கும்,முடி சற்றுங்
கூம்புத லின்றி-நல்ல
கோபுரம் போல நிமிர்ந்த நிலைபெறும்
வீம்புகள் போகும்-நல்ல
மேன்மையுண்டாகிப் புயங்கள் பருக்கும்,பொய்ப்
பாம்பு மடியும்-மெய்ப்
பரம் வென்று நல்ல நெறிகளுண்டாய் விடும்.  (பக்தி)
7. சந்ததி வாழும்,-வெறுஞ்
சஞ்சலங் கெட்டு வலிமைகள் சேர்ந்திடும்
இந்தப் புவிக்கே-இங்கொர்
ஈசனுண்டாயின் அறிக்கையிட் டேனுன்தன்
கந்த மலர்த்தாள்-துணை;
காதல் மகவு வளர்ந்திட வேண்டும்,என்
சிந்தை யறிந்தே-அருள்
செய்திட வேண்டும்’ என்றால் அருளெய்திடும் (பக்தி)
16.அம்மாக்கண்ணு பாட்டு

பூட்டைத் திறப்பது கையாலே-நல்ல
மனந்திறப்பது மதியாலே
பாட்டைத் திறப்பது பண்ணாலே-இன்ப
வீட்டைத் திறப்பது பெண்ணாலே.
ஏட்டைத் துடைப்பது கையாலே மன
வீட்டைத் துடைப்பது மெய்யாலே,
வேட்டை யடிப்பது வில்லாலே-அன்புக்
கோட்டை பிடிப்பது சொல்லாலே.
காற்றை யடைப்பது மனதாலே-இந்தக்
காயத்தைக் காப்பது செய்கையாலே,
சோற்றைப் புசிப்பது வாயாலே-உயிர்
துணி வுறுவது தாயோலே.  (பூட்டைத்)
17. வண்டிக்காரன் பாட்டு

அண்ணனுக்கும் தம்பிக்கும் சம்பாஷணை
காட்டு வழிதனிலே-அண்ணே!
கள்ளர் பயமிருந்தால்?-எங்கள்
வீட்டுக் குலதெய்வம்-தம்பி
வீரம்மை காக்குமடா!  1
நிறுத்து வண்டி யென்றே-கள்ளர்
நெருக்கிக் கேட்கையிலே?-எங்கள்
கறுத்த மாரியின் பேர்-சொன்னால்
காலனும் அஞ்சுமடா!.  2
18. கடமை அறிவோம்

கடமை புரிவா ரின்புறுவார்
என்னும் பண்டைக் கதை பேணோம்;
கடமை யறியோம் தொழிலறி யோம்;
கட்டென் பதனை வெட்டென் போம்;
மடமை சிறுமை துன்பம் பொய்
வருத்தம் நோவு மற்றிவை போல்
கடமை நினைவுந் தொலைத் திங்கு
களியுற் றென்றும் வாழ்குவமே.
19. அன்பு செய்தல்

இந்தப் புவிதனில் வாழு மரங்களும்
இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
ஔடத மூலிகை பூண்டுபுல் யாவையும்
எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ? 1
வேறு
மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்புகட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்கு மன்றோ?
யானெ தற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர்
என்மதத்தைக் கைக்கொண்மின்,பாடுபடல் வேண்டா;
ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்!  2
20. சென்றது மீளாது!

சென்றதினி மீளாது,மூட ரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.
21. மனத்திற்குக் கட்டளை
பேயா யுழலுஞ் சிறுமனமே!
பேணா யென்சொல் இன் றுமுதல்
நீயா ஒன்றும் நாடாதே
நினது தலைவன் யானேகாண்;
தாயாம் சக்தி தாளினிலும்
தரும மெனயான் குறிப்பதிலும்
ஓயா தேநின் றுழைத்திடு வாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.
22. மனப் பெண்

மனமெனும் பெண்ணே!வாழி நீ கேளாய்!
ஒன்றையே பற்றி யூச லாடுவாய்
அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய்
நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய்
விட்டுவி டென்றதை விடாது போய் விழுவாய்
தொட்டதை மீள மீளவுந் தொடுவாய்
புதியது காணிற் புலனழிந் திடுவாய்
புதியது விரும்புவாய் புதியதை அஞ்சுவாய்;
அடிக்கடி மதுவினை மணுகிடும் வண்டுபோல்
பழமையாம் பொருளிற் பரிந்துபோய் வீழ்வாய்
பழமையே யன்றிப் பார்மிசை யேதும்
புதுமை காணோமெனப் பொருமுவாய்,சீச்சீ!
பிணத்தினை விரும்புங் காக்கையே போல
அழுகுதல்,சாதல்,அஞ்சுதல் முதலிய
இழிபொருள் காணில் விரைந்ததில் இசைவாய்
அங்ஙனே,
என்னிடத் தென்றும் மாறுத லில்லா
அன்புகொண் டிருப்பாய், ஆவிகாத் திடுவாய்,
கண்ணினோர் கண்ணாய், காதின் காதாய்ப்
புலன்புலப் படுத்தும் புலனா மென்னை
உலக உருளையில் ஒட்டுற வகுப்பாய்
இன்பெலாந் தருவாய் இன்பத்து மயங்குவாய்,
இன்பமே நாடியெண் ணிலாப்பிழை செய்வாய்,
இன்பங் காத்துத் துன்பமே யழிப்பாய்
இன்பமென் றெண்ணித் துன்பத்து வீழ்வாய்,
தன்னை யறியாய், சகத்தெலாந் தொலைப்பாய்,
தன்பின் னிற்குந் தனிப்பபரம் பொருளைக்
காணவே வருந்துவாய் காணெனிற் காணாய்,
சகத்தின் விதிகளைத் தனித்தனி அறிவாய்,
பொதுநிலை அறியாய் பொருளையும் காணாய்.
மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்!
நின்னொடு வாழும் நெறியுநன் கறிந்திடேன்;
இத்தனை நாட்போல் இனியுநின் னின்பமே
விரும்புவன்;நின்னை மேம்படுத் திடவே
முயற்சிகள் புரிவேன்;முத்தியுந் தேடுவேன்;
உன்விழிப் படாமல் என் விழிப் பட்ட
சிவமெனும் பொருளைத் தினமும் போற்றி
உன்தனக் கின்பம் ஓங்கிடச் செய்வேன்.
23. பகைவனுக்கருள்வாய்
பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே!
பகைவனுக் கருள்வாய்!
புகை நடுவினில் தீயிருப்பதைப்
பூமியிற் கண்டோமே-நன்னெஞ்சே!
பூமியிற் கண்டோமே.
பகைநடுவினில் அன்புரு வானநம்
பரமன் வாழ்கின்றான்-நன்னெஞ்சே!
பரமன் வாழ்கின்றான்.  (பகைவ)
சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தியறியாயோ?-நன்னெஞ்சே!
குப்பையிலேமலர் கொஞ்சுங் குரக்கத்திக்
கொடி வளராதோ?-நன்னெஞ்சே!  (பகைவ)
உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ?-நன்னெஞ்சே
தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனாமோ?-நன்னெஞ்சே!   (பகைவ)
வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ?-நன்னெஞ்சே!
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற
சாதிரங் கேளாயோ?-நன்னெஞ்சே! (பகைவ)
போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்
போலவந் தானுமவன்-நன்னெஞ்சே!
நேருக் கருச்சுனன் தேரிற் கசைகொண்டு
நின்றதுங் கண்ணனன்றோ?-நன்னெஞ்சே! (பகைவ)
தின்ன வரும்புலி தன்னையும அன்பொடு
சிந்தையிற் போற்றிடுவாய்-நன்னெஞ்சே!
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
அவளைக் கும்பிடுவாய்-நன்னெஞ்சே!  (பகைவ)
24. தெளிவு
எல்லா மாகிக் கலந்து நிறைந்தபின்
ஏழைமை யுண்டோடா?-மனமே!
பொல்லாப் புழுவினிக் கொல்ல நினைத்தபின்
புத்தி மயக்க முண்டோ?  1
உள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின்
உள்ளங் குலைவ துண்டோ?-மனமே!
வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின்
வேதனை யுண்டோடா?  2
சித்தி னியல்பு மதன்பெருஞ் சக்தியின்
செய்கையுந் தேர்ந்துவிட்டால்,-மனமே!
எத்தனை கோடி இடர்வந்து சூழினும்
எண்ணஞ் சிறிது முண்டோ?  3
செய்க செயல்கள் சிவத்திடை நின்றெனத்
தே னுரைத் தனனே;-மனமே!
பொய்கரு தாம லதன்வழி நிற்பவர்
பூதல மஞ்சுவரோ?  4
ஆன்ம வொளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க
கச்ச முண்டோடா-மனமே?
தேன்மடை யிங்கு திறந்தது கண்டு
தேக்கித் திரிவமடா!  5
25. கற்பனையூர்
கற்பனை யூரென்ற நகருண்டாம்-அங்கு
கந்தர்வா விளையாடு வராம்
சொப்பன நாடென்ற சுடர்நாடு-அங்கு
சூழ்நதவர் யாவர்க்கும் பேருவகை. 1
திருமனை யிதுகொள்ளைப் போர்க்கப்பல்-இது
ஸ்பானியக் கடலில் யாத்திரை போம்
வெருவுற மாய்வார் பலார்கடலில்-நாம்
மீளவும் நம்மூர் திரும்புமுன்னே.  2
அந்நகர் தனிலோர் இளவரசன்-நம்மை
அன்பொடு கண்டுரை செய்திடுவான்;
மன்னவன் முத்தமிட் டெழுப்பிடவே-அவன்
மனைவியும் எழுந்தங்கு வந்திடுவாள். 3
எக்கால மும்பெரு மகிழ்ச்சி-யங்கே
எவ்வகைக் கவலையும் போரு மில்லை,
பக்குவத் தயிலை நீர்குடிபோம்-அங்குப்
பதுமைகைக் கிண்ணத்தில் அளித்திடவே. 4
இன்னமு திற்கது நேராகும்-நம்மை
யோவான் விடுவிக்க வருமளவும்,
நன்னக ரதனிடை வாழ்ந்திடுவோம்-நம்னை
நலித்திடும்பே யங்கு வாராதே.  5
குழந்தைகள் வாழ்ந்திடும் பட்டணங்காண்-அங்கு
கோல்பந்து யாவிற்கு முயிருண்டாம்
அழகிய பொமுடி யரசிகளாம்-அன்றி
அரசிளங் குமரிகள் பொம்மையெலாம். 6
செந்தோ லசுரனைக் கொன்றிடவே-அங்கு
சிறுவிற கெல்லாம் சுடர்மணிவாள்.
சந்தோஷத்துடன் செங்கலையும்-அட்டைத்
தாளையுங் கொண்டங்கு மனைகட்டுவோம். 7
கள்ளரவ் வீட்டினுட் புகுந்திடவே-வழி
காண்ப திலாவகை செய்திடுவோம்-ஓ
பிள்ளைப் பிராயத்தை இழந்தீரே!-நீர்
பின்னுமந் நிலைபெற வேண்டீரோ? 8
குழந்தைக ளாட்டத்தின் கனவையெல்லாம்-அந்தக்
கோலநன் னாட்டிடைக் காண்பீரே!
இழந்தநல் லின்பங்கள் மீட்குறலாம்-நீர்
ஏகுதிர் கற்பனை நகரினுக்கே.  9
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்























































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக