ஞாயிறு, 17 ஜூன், 2012

பிரம்மாண்ட புராணம்

ராதே கிருஷ்ணா 17-06-2012

பிரம்மாண்ட புராணம்



temple
1. தோற்றுவாய்: மஹாபுராணங்கள் எனப்படும் புனித நூல்கள் பதினெட்டு. அவை சாத்விக, ராஜஸிக, தாமஸிக புராணங்கள் என்று மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சிருஷ்டி பற்றி ... மேலும்
 
13. கைலாயம்: இது சங்குபோல் வெண்மையாய், மிகப்பரந்து, தேவர்களால் விரும்பி வரக்கூடிய இடமாக உள்ளது. இதன் நடுவில் குபேரன் அவனது அழகிய அரண்மனையில் வசிக்கிறான். அவனுடைய அவைக்கு ... மேலும்
 














பிரம்மாண்ட புராணம் பகுதி-1மே 30,2012






1. தோற்றுவாய்: மஹாபுராணங்கள் எனப்படும் புனித நூல்கள் பதினெட்டு. அவை சாத்விக, ராஜஸிக, தாமஸிக புராணங்கள் என்று மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சிருஷ்டி பற்றி பெருமளவில் விவரித்து பிரம்மாவை உயர்த்திக் கூறும் புராணங்கள் ராஜஸிக புராணங்கள் எனப்படும். விஷ்ணுவின் அவதாரங்களை விவரித்து விஷ்ணுவின் புகழ்பாடுபவை சாத்விக புராணங்கள். சமயச்சடங்குகளை விவரித்துச் சிவபெருமான் புகழ்பரப்புபவை தாமஸிக புராணங்கள். பிரம்மாண்ட புராணம் ராஜசிக புராணம். பிரம வைவர்த்த புராணம், மார்க்கண்டேய புராணம், பவிஷ்ய புராணம், வாமன புராணம், பிரம புராணங்கள் இவ்வகையைச் சேர்ந்தவை. மகாபுராணங்களில் கடைசியானது பிரம்மாண்ட புராணம் ஆகும். இது  12,000 ஸ்லோகங்கள் கொண்ட ஒரு நடுத்தர அளவுள்ளது. ஸ்கந்த புராணம் மிகப்பெரியது, மார்க்கண்டேய புராணம் மிகவும் சிறியது.
பிரம்மாண்ட புராணம் மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டது. பூர்வபாகம், மத்யம பாகம், உத்தர பாகம் என்பவை அவை. பூர்வபாகம் பிரக்ரிய பதம், அனுசங்க பதம் என்றும், மத்யம பாகம் உபோத்காத பதம் என்றும், உத்தர பதம் உபசம்ஹார பதம் என்றும் பிரிவுகளாகி மொத்தத்தில் 71 அத்தியாயங்கள் ஆயின. தருமநெறியில் ஒரு மன்னன் வலிமையுடன் ஆண்டு வந்த காலம் அது. அத்துடன் உண்மையான புனித முனிவர்களும் வாழ்ந்து வந்தனர். குரு÷க்ஷத்திரத்தின் வழியாக திரிஷத்வதி என்ற ஆற்றின் கரையில் முனிவர்கள் ஒரு யாகம் செய்தனர். வேதவியாசரின் சீடர் லோமஹர்ஷணர், சூதமுனிவர், சனகாதி முனிவர்கள் என்று பலர் அங்குக் கூடியிருந்தனர். பித்ருக்கு வாசவி என்றொரு புத்திரி இருந்தாள். அவள் மீன் வயிற்றில் தோன்றியவள். வேதவியாசரும் சத்தியவதி என்ற மச்சகந்தியின் மகனே ஆவார். நைமிசாரணியத்தில் வாயு பகவான் மற்ற முனிவர்களுக்கு பிரம்மாண்ட புராணத்தை உபதேசித்தார். மற்ற புராணங்களில் உள்ளவை எல்லாம் இந்த பிரம்மாண்ட புராணத்திலும் உள்ளன.
புரூரவ மன்னன் அரசாட்சி செய்த காலத்தில், தேவர் கலைஞன் விசுவகர்மா, தேவகுரு பிருகஸ்பதிக்காகத் தங்கத்தால் யாகசாலை அலங்கரித்தான். பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து யாகம் நடைபெற்றது. புரூரவ மன்னன் யாகத்திற்கு வந்திருந்தான். பொன்னைக் கண்ட அவன் மனம் அதனைக் கொள்ளையடிக்க நினைக்க, அதற்காக முயற்சி செய்ய, முனிவர்கள் வஜ்ராயுதத்தால் அவனைக் கொன்றுவிட, அவன் மகன் ஆயு அரியணை ஏறினான். கந்தர்வர்கள் பாடிட, அப்சரஸுகள் ஆடிட, துதிப்பாடல்கள் விண்ணை முட்டின. அரக்கர்கள் யாகத்தைத் தடுக்க முயன்று தோற்றனர். யாகம் தொடர்ந்து முடிந்துவிட முனிவர்கள் வாயுபகவானைப் பிரம்மாண்ட புராணத்தைக் கூறுமாறு கேட்க அவரும் கூறலானார்.
2. சிருஷ்டி
சிருஷ்டி (அ) படைத்தல் பற்றி பரப்பிரம்மம், அண்டம், நிர்மயம், சுவயம்பு, பிரம்மா என்று தொடங்கி மற்ற புராணங்களில் கூறியவையே இங்கும் கூறப்படுகின்றன. சிறுசிறு மாறுதல்களுடன்)
பிரம்மனின் சிருஷ்டி பகலில் நடக்கிறது. இரவில் அழிவு ஏற்படுகிறது. அந்த அழிவு பிரளயம் எனப்படுகிறது. இரவு முடிந்து பகல் தோன்ற படைத்தல் தொழில் நடக்கிறது. அதுவே சிருஷ்டியாகும். இதிலும் மும்மூர்த்தி, மூன்று குணங்கள் பற்றி பேசப்படுகிறது. பிரம்மா ராஜஸ குணம், விஷ்ணு சாத்விக குணம், சிவன் தாமஸ குணம். எல்லாமே பிரம்மத்திலிருந்து தோன்றியவையே. கல்பங்கள் பல. அவற்றில் தற்போது நடைபெறுவது வராஹ கல்பம். ஒவ்வொரு கல்பத்திலும் பதினான்கு மன்வந்தரங்கள்; ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மனுவின் ஆட்சி. வராஹ அவதாரத்தின் காரணமாக வராஹ கல்பம். பிரம்மன் நாராயணனே. நர=நீர்; அயன=ஓய்விடம். பிரளய ஜல மயத்தில் ஓய்வு கொண்டதால் நாராயணன். பிரம்மா ஏழு கடல்கள், ஏழு நிலப்பகுதிகள் தோற்றுவித்தார். அடுத்து அவர் உடலிலிருந்தே தேவர், அசுரர், யக்ஷர்கள் ஆகிய பல்வகையினர் தோன்றினர்.
பிரம்மாவின் மனோ சக்தியிலிருந்து பிருகு முதலிய ஒன்பது ரிஷிகளும், சனந்த, சனக, சனாதன, சனக்குமார ரிஷிகளும் தோன்றினர். இவற்றால் மனஅமைதி பெறாத பிரம்மா தன்னிலிருந்தே முதல் ஆண், பெண் இருவரையும் தோற்றுவிக்க, ஆண் மனு என்றும், பெண் சதரூபை என்றும் பெயர் பெற்றனர். இவர்களுடைய புத்திரர்களில் பிரியவிரதனும், உத்தானபாதனும், பிரசுதி, ஆக்ருதி என்ற இரண்டு புத்திரிகளும் முக்கியமானார். பிரசுதி, தக்ஷ பிரஜாபதியை மணந்தான். இப்படி சிருஷ்டி வளர்கிறது. சிருஷ்டியில் மூல சிருஷ்டி (சரிகம்) ஒன்றுமில்லாததிலிருந்து தோன்றினர். இப்படி சிருஷ்டியும், பிரளய அழிவும் தொன்று தொட்டு மாறி மாறி ஏற்பட்டு வருகிறது என்று அறிய வேண்டும்.
3. சதுர் (அ) நான்கு யுகங்கள்
சத்தியயுகம், (கிருத) திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என யுகங்கள் நான்கு. இவை நான்கும் சேர்ந்து மஹாயுகம் ஆகும். கட்டை விரல் முதல் சிறு விரல் வரை நீளம் ஒரு விதஸ்தி. இது பன்னிரண்டு அங்குலிக்குச் சமம். இருபது அங்குலிகள் ஒரு ரத்னி. இருபது ரத்னிகள் ஒரு தனு. எண்ணாயிரம் தனுக்கள் ஒரு யோஜனை ஆகும். வருணாசிரம தரும வழியில் நான்கு வருணத்தினர் இருந்தனர். அவர்கள் தொழில்களும் நால்வகைப்பட்டன. உணவுக்காக மக்கள் பிரம்மாவை வேண்ட பூமியிலிருந்து பால், மரம், புதர், மூலிகைகள், தானியங்கள் தோற்றுவித்தார். பிருதி மன்னன் பூமியிலிருந்து பால் கறந்ததால் பூமி பிருதிவி எனப்படுகிறது. வருணாசிரம தர்மத்தின்படி நான்கு வருணத்தினர் ஏற்பட்டதுடன் ஒவ்வொரு வரும் நான்கு நிலைகளைக் கையாள வேண்டும் எனப்பட்டது. பிரம்மச்சரியம், கிரகஸ்தியம், வானப்பிரத்தம், சன்னியாசம் என்பவை. இவ்வாறான மாறுதல்களையெல்லாம் உயிர்கள் நன்கு வாழ்ந்திட வேண்டும் என்பதற்காகவே பிரம்மா ஏற்படுத்தினர்.
4. யோகமும், யோகசாதனையும்
யஜ்ஞ, யாகாதிகள், மதச்சடங்குகளால் பிரம்மனை அறிய முடியாது. யோகசாதனையால் மட்டுமே அது சாத்தியமாகும். இந்தச் சாதனையில் வெற்றி பெறுவோர் பிறப்பு, இறப்புகளையும் வெல்வர் எனப்படுகிறது. ஜீவாத்மா, பரமாத்மாவுடன் அதாவது பரப்பிரம்மத்துடன் இணைவதே யோகம் ஆகும். யோகம் செய்கையில் ஐந்து முக்கியமானவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றின் குறிக்கோள் பற்றி அறியலாம்.
பிராணாயாமம் : உடலின் மாசு நீக்கித் தூய்மை செய்கிறது. பிராணாயாமப் பலன்கள் : அ) பாவங்கள் தொலையும். மன அமைதி (அ) சாந்தம் அடைவது. ஆ) அகம்பாவம், அசூயை, பொறாமை போன்ற தீயவற்றை வெற்றி கொள்ளுதல்-அதாவது பிரசாந்தி தெளிதல் ஆகும். இ) ரிஷிகள் போல் அகக்கண் பெறுதல்-தீப்தி (அ) ஒளி எனப்படும். ஈ) மனமும் புலன்களும் அமைதியாதல்-பிரசாதம்-ஆதரவு ஆகும். பிராணாயாமம் நல்ல உடல்நிலையில், அமைதியான சூழ்நிலையில் செய்யப்பட வேண்டும். பிராணாயாமத்தில் மூச்சு அடக்கப்படுகிறது.
பிரத்தியாஹாரம் : உலகப்பொருள்களின் மீதுள்ள பற்றை மனம் நீக்கிவிட இது ஐந்தடக்கும் ஆமைக்கும் ஒக்கும்.
தியானம் : உடற்பகுதி குணங்களிலிருந்து உயர்ந்த நிலைக்கு உயர்த்துவது.
தாரணம் : நினைவில் இருத்தல். ஞானம் அறிதல்.
இவற்றைக் கவனம் செலுத்திப் பழகாவிட்டால் நன்மைக்குப் பதில் தீமையே ஏற்படும். யோகத்தைச் சரியான முறையில் பழகி வெற்றிக்காண்பவர் அஷ்டமாசித்திகளைப் பெறுவர்.
5. கெட்ட சகுனங்கள்
பஞ்சாங்கங்களில் பட்சி சகுனம், பல்லி சகுனம், விழித்தெழுந்தவுடன் காணக்கூடிய பொருள்கள் என்று பல கூறப்பட்டுள்ளன. பிரம்மாண்ட புராணம் தீய சகுனங்கள் பற்றியும் அவற்றின் பலன்களையும் கூறுகிறது. கனவில் துருவன் (அ) அருந்ததி விண்மீன்களைக் காணமுடியாதவன் ஓராண்டிலும், சூரியக் கிரணங்களைக் காணமுடியாதவன் பதினோறு மாதங்களிலும்; பொன் (அ) வெள்ளி வாந்தி எடுப்பதாகக் கனவு வந்தால் பத்து மாதங்களிலும், அழுக்குடைய பாதம் கண்டால் சில மாதங்களிலும், ஒரு காகம் அழுது (அ) புறா ஒருவர் தலைமீது இறங்கினால் ஆறு மாதங்களிலும் மரணம் அடைவர். ஒருவரைக் காக்கைகள் (அ) சாம்பல் சூழ்ந்து கொண்டால் ஐந்து மாதங்களிலும், தெற்கில் வானவில் (அ) மின்னல் தோன்றினால் மூன்று மாதங்களிலும், பிரதிபிம்பம் காணப்படாவிட்டாலும், தலையின்றி காணப்பட்டாலும் ஒரு மாதத்திலும், ஒருவரிடம் பிண வாசனை ஏற்பட்டால் பதினைந்து நாட்களிலும் மரணம் அடைவர்.
குரங்கு (அ) கரடிகளால் இழுக்கப்படும் தேரில் தெற்கே செல்வது போன்ற கனவு வந்தால் விரைவில் மரணம் ஏற்படுவதாகும். ஒருவர் செவிடானது போல் (அ) கருப்பு உடைகளுடன் இருப்பதாகக் கனவு கண்டால் விரைவில் மரணம் ஏற்படுவதாகும். கழுத்தளவு பூமியில் புதைக்கப்பட்டிருப்பதாகக் கண்டால் விரைவில் மரணம். கனவில் பாம்புகள், சாம்பல், நிலக்கரி, முடி, உலர்ந்து போன ஆறு ஆகியவை காணப்படின், பத்து நாட்களில் மரணம். கருப்பு உடை அணிந்தவரால் கல்லால் அடிபடுவதாக ஒருவன் கனவு கண்டால் விரைவில் மரணம் ஏற்படும். விடியற்காலையில் முன்னால் ஓநாய் ஊளையிட்டால் சில நாட்களில் மரணம். விளக்குத் திரி அணையும்போது ஏற்படும் சுடல் நாற்றம் தெரியாதவன் மரணவாயிலில் இருப்பான். கண்களில் தொடர்ந்து கண்ணீர், காது நீளுதல், மூக்கு வளைவாகத் தோன்றுதல் ஆகியவற்றால் விரைவில் மரணம் காட்டும். கருநாக்கு, சாம்பல் முகம், சிவந்த கன்னம் மரணவாயிலுக்கு அறிகுறி. வெளியேற முடியாத பள்ளத்தில் விழுந்திருத்தல், மற்றும் கொலை செய்யப்படுவதாக, தீயில் விழுவது போல் வரும் கனவுகள் மரணம் அருகில் எனச் சுட்டிக்காட்டுபவை. இப்படிக் கனவுகள் வந்தால் எத்தகைய பரிகாரம் உதவும். கிழக்கு (அ) தெற்கு நோக்கி அமர்ந்து சிவனைப் பிரார்த்தித்தல், ஓம் என்ற பிரணவ உச்சாரணம் இவற்றிற்கு நிவாரணம் ஆகும். நூறாண்டுகள் மாதம் ஒருமுறை அசுவமேத யாகம் செய்த பலன் பிரணவ மந்திரம் உச்சரிப்பதால் ஏற்படும். இது நூறாண்டு செய்வதால் ஏற்படும் புண்ணியத்தை விட அதிகம்.
6. கற்பங்கள்
பிரம்மாவின் ஒரு நாள் என்பது ஒரு கற்பம். ஓராயிரம் கற்பங்கள் பிரம்மாவின் ஓர் ஆண்டு. எண்ணாயிரம் கல்பங்கள் பிரம்மாயுகம். ஓராயிரம் யுகங்கள் ஒரு சவனம். இரண்டாயிரம் சவனங்கள் ஒரு திரிவிரதம். பிரம்மாவின் வாழ்க்கை காலம் திரிவிரதா ஆகும். தற்போது நடப்பது வராஹ கல்பம். இதுவரை 34 கல்பங்கள் ஆகி உள்ளன. அவற்றின் பெயர்கள் கீழ்வருமாறு:
1. பால கல்பம், 2) புவ, 3) சுப, 4) பாவ, 5) ரம்பா, 6) ரிது, 7) கிரது, 8) வன்ஹி, 9) ஹவ்யவாஹன, 10) சாவித்ர, 11) புவ, 12) உஷிக, 13) குஷிக, 14) கந்தர, 15) ரிஷப, 16) விடஜ, 17)மார்ஜியால்ய, 18) மத்யம, 19) வைராஜக, 20) நிஷத, 21) பஞ்சம, 22) மேகவாஹன, 23) சிந்தக, 24) ஆகுதி, 25) விஜ்நதி, 26) மன, 27) பவ, 28) விரிஹத், 29) சிவேதலோஹித, 30) ரக்த, 31) பிதவச, 32) சீத, 33) விச்வரூப, 34) வராஹ கல்பம்.
7. வேத வியாசர்
ஒரு கற்பத்தில் பதினான்கு மன்வந்தரங்கள். இப்போதைய மன்வந்தரம் வைவஸ்வத மன்வந்தரம் ஆகும். பிரம்மாவுக்கு சிவபெருமான் வேதவியாசர் பட்டம் பெற்று வாழ்ந்தோர் பட்டியலை எடுத்து இயம்பினார். 1) சுவேத, 2) சத்திய, 3) சதார, 4) அங்கிர, 5) சவிதா, 6) மிருத்யு, 7) சதக்ருது, 8) வசிஷ்த, 9) சரஸ்வத, 10) திரிதாம, 11) திரிவிரத, 12) விததேஜ, 13) தருமநாராயண, 14) சுரரக்ஷண, 15) அருணி, 16) யோஸஞ்ஜ, 17) கிரிதஞ்ஜய, 18) ரிதஞ்ஜய, 19) பரத்துவாஜ, 20) வாசஸ்ரவ, 21) வாசஸ்பதி, 22) ஹுக்லயன, 23) திரிணாவிந்து, 24) ரிக்ஷ, 25) ஷகிரி, 26) பராசரர், 27) ஜாதுகர்மர், 28) கிருஷ்ண துவைபாயனர்.
(விவரங்கள்-விஷ்ணு புராணத்தில் காண்க.)
8. பிரம்மாவின் படைப்பு
(பிரம்மாண்ட புராணம் ராஜஸிக புராணம் என்பதால் பிரம்மாவை உயர்வாகக் கூறி புகழ்பாடுகிறது.) பிரம்மத்திலிருந்து நாராயணன் தோன்றி நீரில் மிதக்க அவர் நாபியிலிருந்து பிரம்மா தோன்றினார். அவர் நாராயணனை யார் என்று கேட்க, அனைத்தையும் தோற்றுவிப்பவன் நான் என்று விஷ்ணு விடையளிக்க, பிரம்மா நானே அண்டத்தைப் படைப்பவன் என்றார். பிரம்மாவின் சொற்களைக் கேட்டு வியப்படைந்த விஷ்ணு பிரம்மாவின் வாய் வழியே அவர் உடலுள் புகுந்து அனைத்து உலகங்களையும் அங்கு கண்டார். பிறகு வெளிவந்த விஷ்ணு பிரம்மாவிடம் ஆதியும், அந்தமும் காணப்படவில்லை என்றார். பிரம்மாவும் விஷ்ணுவின் உடலுள் வாய் வழியே புகுந்து அனைத்தையும் கண்டு, ஆதி அந்தமற்ற நிலையைக் கண்டு வெளிவர முயல்கையில் விஷ்ணு வாயை மூடிக்கொண்டு யோகுதுயில் கொண்டதால் வெளிவர இயலாமல் இறுதியில் தன் உடலைச் சுருக்கிக் கொண்டு நாபி வழியே வெளிவந்தார்.
அப்போது அங்கே சிவனும் தோன்றினார். அந்த வேகத்தில் நீர் தெளிக்க பிரம்மன் வீற்றிருந்த தாமரை அசைய, விஷ்ணு தாமரையில் உள்ள பிரம்மாவிடம் அவர் பூசிக்கத்தக்கவரே என்றும், தாமரை மலரிலிருந்து இறுங்குமாறும் கூறினார். அப்போது பிரம்மா கேட்டுக்கொண்டபடி பிரம்மாவைத் தன் மகனாக ஏற்றார். பத்மா=தாமரை, யோனி=மூலம். எனவே பிரம்மா பத்மயோனி எனப்பட்டார். பிரம்மாவும் விஷ்ணுவும் சமாதானம் அடைந்தனர். திரிசூலத்துடன் காணப்பட்ட சிவனைப் பற்றி அவர் யார்? என்று விஷ்ணுவிடம் கேட்க, விஷ்ணு அவர் அழிக்கும் கடவுள் சிவன் என்று கூற, அவரைத் தங்களுக்குச் சமமாக ஏற்க பிரம்மா யோசிக்க, விஷ்ணு சிவன் பலம் மிக்கவர். இருவரையுமே வெல்லக்கூடியவர் என்றும் கூறி பிரம்மாவைச் சாந்தி அடையச் செய்தார்.
9. உருத்திரன்
பிரம்மா தன்னைப் போன்ற ஒரு மகன் பெற விரும்பினார். அப்போது அவர் மடி மீது ஒரு பாலன் நீலமும், சிவப்பும் கலந்த நீலலோஹிதன் தோன்றி, அழ ஆரம்பித்தது. அப்பாலன் அழுவதன் காரணத்தைக் கேட்க அது தனக்கொரு பெயர் வைக்குமாறு கேட்கிறது எனக்கூற, (ருத்=கத்தி அழுதல்) அப்பாலனுக்கு ருத்திரன் என்று பிரம்மா பெயர் வைத்தார். திரும்பத் திரும்ப அந்தக் குழந்தை மற்றொரு பெயர் வேண்டும் என்று அழ, அந்த நீலலோஹிதனுக்கு பிரம்மா ருத்திரன், பாவன், சிவன், பசுபதி, ஈசன், பீமன், உக்கிரன், மகாதேவன் என்று எட்டு பெயர்கள் கொடுத்தார். (இதுபற்றி விஷ்ணு புராணம், பத்ம புராணங்களிலும் காண்க.) நான் எங்கே வசிப்பது? என்று ருத்திரர் கேட்க பிரம்மா கூறினார் சூரியனில் ருத்திரனாக, நீரில் பாவனாக, பூமியில் சிவனாக, தீயில் பசுபதியாக, காற்றில் ஈசனாக, விண்ணில் பீமனாக, அந்தணர் உடலில் உக்கிரனாக, சந்திரனில் மகாதேவனாக வசிப்பாயாக என்றார்.
10. முனிவர்களின் தோற்றம்
தக்ஷன் மகள் கியாதி, பிருகு முனிவரை மணந்து தாதா, விதாதா என்ற இரண்டு புத்திரர்களையும், ஸ்ரீ என்ற புத்திரியையும் பெற்றாள். புத்திரர்கள் தேவர்களாக, புத்திரி ஸ்ரீவிஷ்ணுவை மணந்து பாலா, உத்சாஹா ஆகிய இரண்டு புத்திரர்களைப் பெற்றாள். தாதாவின் மனைவி நியதியின் மகள் மிருகண்டு. அவள் மகன்கள் புகழ்பெற்ற மார்க்கண்டேய முனிவரும், வேதசிரனும் ஆவர். விதாதா ஆயதியை மணந்து பாண்டுவைப் பெற்றான். இவர்கள் அனைவரும் பிருகு மகரிஷிக் குலத்தில் உதித்தவர்கள் ஆகையால் பார்க்கவர்கள் எனப்பட்டனர். தக்ஷன் மகள் சம்பூதி, மரீசி முனிவரை மணக்க அவர்களுக்குப் பிறந்த மக்கள் அனைவரும் முனிவர்கள் ஆயினர். தக்ஷனின் புத்திரி ஸன்னதி கிரது முனிவரை மணந்தாள். அவர்கள் சந்ததியார் ஆயிரக்கணக்கானவர்கள் சிறந்த முனிவர்கள் ஆயினர். அவர்கள் வாலக்கியர்கள் எனப்பட்டனர்.
தக்ஷன் மகள் ஸ்வாஹா அக்கினியை மணந்ததாகப் பிரம்மாண்ட புராணம் கூறுகிறது. அவர்கள் பரம்பரையில் வந்தவர்களையும் பட்டியலிட்டுக் காட்டலாம். ஸ்வாஹாவனின் முதல் மகன் பவகாவின் புத்திரன் சகஸ்ராக்ஷன்; இரண்டாம் மகன் பவமானனின் மகள் காவ்யவாஹனன் மற்றும் மூன்றாவது மகன் சுரூசியின் மகன் ஹவ்யவாஹனன். தேவர்கள் ஹவ்யவாஹனனையும், பித்ருக்கள் காவ்ய வாஹனனையும், அசுரர்கள் சஹஸ்ராக்ஷனனையும் தீக்கடவுளாகப் பூசித்தனர். அடுத்து சிவன், தக்ஷன் புத்திரி தாக்ஷõயணி, தக்ஷனுக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாடு, தக்ஷயஞ்ஜம், தக்ஷன் அழிவு ஆகியவை இப்புராணத்தில் கூறப்படுகின்றது. (பல புராணங்களிலும் இது பற்றிக் கூறப்பட்டுள்ளது.)
தக்ஷயாகத்தின் காரணமாக தாக்ஷõயினி உயிரை விட்டு அடுத்து பார்வதியாகப் பிறந்து சிவனையே மணக்கிறாள். இந்நிகழ்ச்சிகளால் கோபம் கொண்ட சிவன், தக்ஷணை உலகில் பிராசீன பர்ஹி, மாரீஷர்களுக்கு மகனாகப் பிறக்குமாறு சபித்தார். தக்ஷனும் சிவனுக்கு முனிவர்கள் யாகத்தில் அவிர்ப்பாகம் அளிக்கமாட்டார்கள். சொர்க்கத்தில் இல்லாமல் பூமியில் மட்டுமே உறைவிடம் ஆகும் என்று சபித்தான். அப்போது சிவபெருமான் தக்ஷ சாபத்தினால் அல்ல, பூமியே உறைவதற்கு ஏற்ற இடம்; எனவே அங்கேயே என் உறைவிடம். நான் மற்ற தேவர்களுடன் உணவு கொள்மாட்டேன். ஏனெனில் பிராமணர்கள் எனக்குத் தனியாக உணவு படைப்பர். அதேபோல் நான் தனியாகவே பூசிக்கப்படுவேன், மற்றவர்களுடன் அல்ல என்று கூறினார். மறுபிறவியிலும் தக்ஷன் தக்ஷனாகவே பிறந்து இமயமலையில் கங்கைத் துவாரம் என்ற இடத்தில் சிவன் தவிர மற்றவர்களை அழைத்து ஒரு யாகம் செய்தார். சிவனில்லாத யாகம் வெற்றி தராது என்று கூறி ததீசி முனிவர் அதில் பங்கு கொள்ளவில்லை. மேரு மலை மீதிலிருந்து சிவனும், உமையும் அனைவரும் தக்ஷனின் யாகத்திற்குச் செல்வதைக் கண்டார். அப்போது சிவபெருமான் தன் வாயிலிருந்து வீரபத்திரனைத் தோற்றுவிக்க பரமன் ஆணைப்படி தக்ஷன் யாகத்தையும், அங்கிருந்தோர்களையும் வீரபத்திரன் அழித்தான். தக்ஷன் மறுபடியும் தலையும், உயிரும் பெற்றான். மேலும் பரமன் அவன் ஆயிரம் அசுவமேத யாகங்கள், நூறு வாஜ்பேய யாகங்கள் வெற்றியுடன் நடத்துமாறு ஆசீர்வதித்தார்.
11. நிலப்பரப்பும் அதன் பகுதிகளும்
சுவாயம்புவ மனுவின் மகன் பிரியவிரதனுக்கு பத்து புத்திரர்களும், இரண்டு புத்திரிகளும் பிறந்தனர். பிரியவிரதன் உலகை ஏழு த்வீபங்களாகப் பிரித்து ஏழு புத்திரர்களுக்கும் பங்கிட்டுத் தந்தான். அக்னிதரனுக்குச் சம்பு த்வீபமும், மேதத்திற்கு ப்லக்ஹ த்வீபமும், வாசுவுக்கு ஷால்மலி த்வீபமும், ஜியோதிஷ்மனனுக்கு குசத்வீபமும், துயுதி மனனுக்கு கிரவுஞ்ச த்வீபமும், ஹவ்யனுக்கு க்ஷகத்வீபமும், சவனனுக்கு புஷ்கர த்வீபமும் அளிக்கப்பட்டது. (மற்ற மூவரும் தவம் செய்யச் சென்றதாக விஷ்ணு புராணம் கூறும். மேலும் அக்னி புராணம், பாகவத புராணமும் இப்பகுதியைக் காட்டும்). சவனன் தனது புஷ்கத்வீபத்தை இரண்டு வர்ஷங்களாகப் பிரித்து, திதகண்டன், தாடகிகண்டன் இருவருக்கும் கொடுத்தான். ஹவ்யன் தனது ஏழு குமாரர்களுக்கும் தனது ஷகத்வீபத்தை ஏழு வர்க்ஷங்களாகப் பிரித்து அளித்தான். அந்த ஏழுபேர் ஜலஜன், கவுமாரன், சுகுமாரன், மணிசகன், குசுமோத்தரன், மவுதகன், மஹத்ருமன் எனப்படுவர்.
இவ்வாறே துயுதமனன், ஜோதிஷ்மனன், வாசு (அ) வாபுஷ்மனன் மேததிதி ஆகியோரும் அவரவர் நிலப்பகுதியை, அவரவர் ஏழு பிள்ளைகளுக்கும் பிரித்துக் கொடுத்தனர். ஜம்புத்வீபம் பெற்ற அக்னிதரன் தன் நிலப்பகுதியைத் தனது ஒன்பது புத்திரர்களுக்குப் பிரித்துக் கொடுத்தான். அவை அப்புத்திரர்கள் பெயரிலேயே அறியப்பட்டன. இவ்வாறு பங்கிட்டுக் கொடுத்த பின் அக்னிதரன் தவம் செய்ய கானகம் சென்றான். மேலே கூறிய ஒன்பதின்மர் முறையே நபி, கிம்புருஷன், ஹரி, இளவிரதன், ரம்யன், ஹிரண்வனன், குரு, பத்ரஷ்வன், கேதுமாலன் என்போர். நபியின் மகன் ரிஷபன், அவன் மகன் பரதன். பரதன் பெயராலேயே நபி ஆண்டு வந்த பகுதி பாரத வர்ஷம் எனப்பட்டது.
12. ஜம்புத்வீபம்
இதைச்சுற்றி லவண சமுத்திரம், இமாலயம் முதல் ஆறு பெரும் மலைத்தொடர்கள் உள்ளன. இப்பகுதியின் நடுவில் சமேரு மலை உள்ளது. இப்பகுதியில் நான்வகை வருணத்தவரும் வாழ்ந்து வந்தனர். இமயமலைக்குத் தெற்கில் உள்ள பகுதி பாரத வர்ஷமாகும். சுமேரு பர்வதம் முழுவதையும் பிரம்மா ஒருவராலேயே காணமுடியும். அதன் மீது பிரம்மா இருக்கிறார். தேவர்கள் அவனைத் தரிசிக்க வந்த வண்ணம் உள்ளனர். விமானங்கள் பல காணப்படும். ரிஷிகள் மந்திரங்கள் உச்சரிப்பதும் யஜ்ஞ யாகாதிகள் செய்வதும் எப்போதும் நிகழ்ந்த வண்ணம் இருக்கும். அதன் சிகரம் சத்ரவத எனப்படும். அங்கு கால்வைக்க அரக்கர்கள் அஞ்சுவர். அங்கிருந்து சிறிது தூரத்தில் இந்திரனின் அமராவதி நகரம் உள்ளது. அவரது அரசவை சுதர்மா எனப்படும். அது பாரிஜாத மலரால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சுதர்மாவில் தேவர்களும், கந்தர்வர்ரகளும், அப்சரசுகளும் எப்போதும் காணப்படுவர். பிரம்மாவின் இருப்பிடத்திற்குத் தென்கிழக்கில் அக்னியின் அவை உள்ளது. இன்னும் தெற்கில் சுசும்யாமா என்னும் சூரியனின் அவை உள்ளது. மற்றும் வருணனின் சுபாவதியும், வாயுவின் காந்தவதியும், சிவபிரானின் யோஷவதியும் உள்ளன. முனிவர்கள், கந்தர்வர்கள், அப்சரசுகள், மற்றும் புண்ணியசாலிகளுக்கான இவ்விடம் சொர்க்கம் எனப்படும்.
சுமேரு மலையைச் சுற்றிலும் ஏரிகளும், அழகிய நந்தவனங்களும், பழத்தோட்டங்களும் காடுகளும் உள்ள பள்ளத்தாக்குகளும் உள்ளன. இது இந்திராதி தேவர்களுக்கும், ராக்ஷசர்களுக்கும், கின்னரர்களுக்கும், கருடன் அவன் மகன் சுக்கிரீவன், பல பாம்புகள் மற்றும் சிவனின் பூதகணங்கள், அஷ்டவசுக்கள், சப்தரிஷிகள், ருத்திரர்கள், ஆதித்தியர்கள், அசுவினிகள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், ஆகிய அனைவருக்கும் இருப்பிடமாக உள்ளது. ஹரிகுடம் என்ற சிகரத்தில் விஷ்ணுவும், ஹேமஷிரிங்கா சிகரத்தில் பிரம்மாவும் உள்ளனர். மற்ற சிகரங்களில் மற்ற இனத்தவர் வாழ்கின்றனர்.
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்



பிரம்மாண்ட புராணம் பகுதி-2மே 30,2012




13. கைலாயம்: இது சங்குபோல் வெண்மையாய், மிகப்பரந்து, தேவர்களால் விரும்பி வரக்கூடிய இடமாக உள்ளது. இதன் நடுவில் குபேரன் அவனது அழகிய அரண்மனையில் வசிக்கிறான். அவனுடைய அவைக்கு விழல என்று பெயர். அவனிடம் புஷ்பக விமானம் உள்ளது. குபேரனுடைய தோழர்கள் யக்ஷர்கள், கந்தர்வர்கள், அப்சரஸுகள். குபேரனின் நெருங்கிய நண்பனாகிய பரமசிவனும் அடிக்கடி இங்கு வருகிறார். இங்கு மந்தாகினி ஆறு பாய்கிறது. யக்ஷ கந்தர்வ ஸ்திரீகள் இங்கு காணப்படும் சிவப்பு, நீல நிற தாமரை மலர்களை விரும்பி அணிந்து மகிழ்கின்றனர். அலகநந்தா, நந்தா ஆகிய இரண்டு ஆறுகளும் கூட இங்கே பாய்கின்றன. இங்குதான் சிவ-பார்வதி திருமணம் நடைபெற்றது. இங்கே கார்த்திகேயன் பிறந்தான். உண்மையில் இது ஒரு புனிதத்தலம்.
கேதுமால வர்ஷ : மேற்கில் இருப்பது கேதுமால வர்ஷா என்பது. இங்கு வலிமையும், அழகும் மிக்க பெண்மணிகள் உள்ளனர். பலாப்பழங்கள் நிறைந்து பசுக்களும், மக்களும் மகிழ்ந்து வாழும் இடம் இது.
பத்ராக்ஷ வர்ஷ : இது கிழக்கில் உள்ளது. இங்கு சால மரங்கள் அதிகம். இங்கு இருப்பவர்கள் பல்லாயிரமாண்டுகள் ஜீவித்திருப்பர். இங்குள்ளவர்கள் நம்பிக்கை குரியவராய், அகிம்சை முறையைக் கையாண்டு வருகிறார்கள். இங்கும் அழகிய மலைகள், நதிகள், அரசுகள் உள்ளன.
கிம்புருஷ வர்ஷ : இங்கிருப்போர் ஓராயிரம் ஆண்டு ஜீவித்திருப்பவர்கள். பொன்மேனி கொண்ட ஆண்களும், அப்சரஸுகள் போன்ற பெண்களும் இங்கு வாழ்கின்றனர். இங்கு பலாக்ஷ மரங்கள் உள்ளன. இங்கும் மலைகள், நதிகள் ஆகிய இயற்கை வளங்கள் உண்டு.
ஹரி வர்ஷ : இங்குள்ளவர்கள் வெள்ளி என ஒளிர்பவர்கள். தேவர்கள் போன்றவர்கள். முதுமை என்பதையே அறியாமல் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கொண்டவர்கள். கருப்பஞ்சாறு அருந்தி நெடுநாள் வாழ்வர்.
இளவிருத வர்ஷ : இங்கு சூரியனது வெப்பம் கடுமையாக இருப்பதில்லை. தாமரைக் கண்கள் கொண்டவர்கள். இவர்கள் வாழ்வும் பல்லாயிர வருஷக்கணக்காகும். இது மிகவும் பரந்து, உயர்ந்து உள்ளது.
ரம்யக வர்ஷ : இங்குள்ளோர் அழகுமிக்கவர்கள். இங்கு ஒரு படர்ந்த ஆலமரம் உள்ளது. அதன் சாறை உட்கொண்டு பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்கின்றனர்.
ஹிரண்வன வர்ஷ : இங்கு ஹிரண்யதி என்ற ஆறு பாய்கிறது. இங்குள்ளவர்கள் செல்வந்தர்கள். இவர்களும் பல்லாயிரம் ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருப்பர்.
குரு வர்ஷ : மரவுரி ஆடைகளைச் செய்து அணிகின்றனர். இங்கு ரத்தினங்கள் கிடைக்கின்றன. மணலில் வெள்ளி தெளிக்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்கு முதுமை, நோய் வருவதில்லை. இங்கு இரட்டைக் குழந்தைகள் பிறக்கின்றனர். இங்கிருப்பவர்களும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்திருப்பர்.
14. பாரத வர்ஷம்: பாரத வர்ஷத்தின் வடக்கில் இமயமலையும், மற்ற பகுதிகளில் சமுத்திரமும் சூழ்ந்துள்ளன. இதன் பெயர்க்காரணம் முன்பே கூறப்பட்டது. பாரத வர்ஷத்தில் வாழ்க்கையே கர்மாவாகும். எனவே இதற்கு கர்ம பூமி என்று பெயர். அது போக பூமி அல்ல. இது இந்திரத்வீபம், கசேரு, தாம்ரபர்ணம், கபஸ்தமானம், நாகத்வீபம், சவும்யா, கந்தர்வ, வருண என்று எட்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது; ஒன்பதாவது தீவாகும். இதன் கிழக்கில் கிராதர்களும், மேற்கில் யவனர்களும் வசிக்கின்றனர். பாரத வர்ஷத்தில் பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களென நான்குப் பிரிவினர் வாழ்கின்றனர். அவர்கள் தம்தம் தொழில்களைப் பின்பற்றி வாழ்கின்றனர். அவர்களுக்கான சதுர்வித உபாயங்கள் அறம், பொருள், இன்பம், வீடு ஆகும்.
நாடாள்பவர்கள் சாம்ராட் என்று அழைக்கப்படுவர். இமாலயம் போன்ற முக்கிய மலைகள், கங்கை, சிந்து, காவிரி போன்ற புண்ணிய நதிகள் இங்குள்ளன. இங்கு பாயும் நதிகள் யாவும் கங்கைக்கு இணையான புனிதமானவை. இங்கு பல ராஜ்ஜியங்கள், பல வம்சத்தினரால் ஆளப்பட்டன. குரு, பஞ்சால, சால்வ, சூரசேன, வத்ச, குந்தல, கோசல, கலிங்க, மகதம் ஆகியவை மாநிலங்கள். பல இதிகாச நூல்களில் அவை ஐம்பத்தாறு அரசுகள், அரசர்கள் என்றும் கூறுவர். முதலில் கூறப்பட்ட ராஜ்யங்கள் வடக்கில் உள்ளவை. வாலிக, அபிர, சவுபிர, ஷக, கேகய, மாத்ர, காஷ்மீர், காம்போஜம் ஆகியவையும் வடமாநிலங்களே. கிழக்கில் ஆந்திரவள, சுஜராக, அந்தர்கிரி, வஹிர்கிரி, பிரபங்க, பங்க, மலத, மாளவர்ணிக, பிரம்மோத்தர ஆகியவை கிழக்கில் உள்ளவை. தெற்கில் கலிங்க, மகாராஷ்டிர, கேரள போன்ற பல ராஜ்ஜியங்கள் தோன்றின. மேற்கில் நாசிக், மஹேய, கச்சிய, சுராஷ்டிரா போன்ற மாநிலங்கள்.
15. வான சாஸ்திரம்
இப்பேரண்டத்தில் ஈரேழு பதினான்கு லோகங்கள் உள்ளன. அவற்றில் பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மஹர்லோகம், ஜனலோகம், தபலோகம், சத்தியலோகம் என்று ஏழு மேலுலகங்களும், அதல, சுதல, நிதல, கபஸ்தல, மஹாதல, ஸ்ரீதல, பாதாளம் ஆகிய ஏழு கீழுலகங்களும் உள்ளன.
காலம் :  கால அளவையில் மிகச்சிறிய அலகு நிமிஷம். 15 நிமிஷங்கள்=1 கஷ்தா; 30 கஷ்தைகள்=1 காலம்; 30 காலம்=முகூர்த்தம், 30 முகூர்த்தம்-1 நாள்-ஒரு நாள் பத்துப் பிரிவுகளாக, ஒவ்வொன்றும் முகூர்த்தங்களை கொண்டது. பிராதக் காலம், மத்திய காலம், (முற்பகல்), அபர்ணா (பிற்பகல்), சயன்ஹா (மாலை) என்று 1 நாள் பிரிக்கப்பட்டுள்ளது. பகலுக்கு 15 முகூர்த்தங்கள், இரவுக்கு 15 முகூர்த்தங்கள். 15 நாட்கள்=1 பக்ஷம்; 2 பக்ஷங்கள்=1 மாதம்; 2 மாதங்கள்=ஒரு ருது; 3 ருதுக்கள்=1 அயனம்; 2 அயனங்கள்=1 வருடம்.
12 மாதங்கள் : சைத்ர (சித்தரை), வைசாக (வைகாசி), ஜேஷ்ட (ஆனி), ஆஷாட (ஆடி), சிராவண (ஆவணி), பாத்ர (புரட்டாசி), ஆச்வின (ஐப்பசி), கார்த்திக (கார்த்திகை), ஆக்ரஹாயன (மார்கழி), பௌஷ (தை), மாக (மாசி), பல்குண (பங்குனி) என்பவை. ஆகாயத்தில் எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் (விண்மீன்கள்) உள்ளன. அவற்றுள் ஸப்த ரிஷிகள், துருவன், அருந்ததி என்பவை முக்கியமானவை. அனைத்து நட்சத்திரங்களும் துருவனைச் சுற்றி சுற்றி வருகின்றன.
மேஹனா-அடர்த்தி, திரவமாக்கல் எனப்பொருள். எனவே மேகம் என்ற பெயர் பெற்றது. மேகங்கள் ஆக்கினேய (வடமேற்கு) மேகங்கள், பிரம்மஜ மேகங்கள், பங்கஜ மேகங்கள் என்று மூன்று வகை. ஆக்கினேய மேகங்கள் இடி, மின்னல் இல்லாமல் பெருமழை பொழிவிக்கும்; மலை மீதும், மலையைச் சுற்றிலும் பிரம்மஜ மேகங்கள் இடி, மின்னலுடன் மழைபெய்விக்கும், பங்கஜ மேகங்கள் சஞ்சரித்துக் கொண்டே இருக்கும். இவை இலேசான மேகங்கள். மேலும், சூரியன், சூரியனின் ஒற்றைச் சக்கரதேர், ஆதித்தியர்கள், சந்திரன், சந்திரனின் தேர், சாஹி சுக்கில பக்ஷ (வளர்பிறை), கிருஷ்ண பக்ஷம் (தேய்பிறை) விளக்கப்பட்டுள்ளன. அத்துடன் புதன், சுக்கிரன், பிருகஸ்பதி, சனி ஆகியவை பற்றியெல்லாம் கூறப்படுகிறது. (இவை வேறு சில புராணங்களில் விவரிக்கப்பட்டுள்ளன).
சிவனின் நீலகண்டம்
அமுதம் கடைந்தபோது தோன்றிய ஆலகால விஷத்தை உலக நலன் கருதி சிவபெருமான் உட்கொள்ள, அது அவருக்கு தீங்கு விளைவிக்கும் என்று பார்வதி கழுத்தை அழுத்த விஷம் அங்கேயே தங்கி அதன் பயனாய் கழுத்து நீலநிறம் பெற்றது. அவர் நீலகண்டன் என்று பெயர் பெற்றார்.
16. வசுவும் வசுதராவும்
ஒரு சமயம் இந்திராதி தேவர்கள் ஒரு சிறப்பு அசுவமேத யாகம் செய்ய முடிவு செய்து அதற்கு எல்லா முனிவர்களையும் வரவழைத்தனர். இந்த யாகத்தில் ஆயிரக்கணக்கில் மிருகங்கள் பலியிடப்பட்டன. புரோகிதர்கள் வேதங்கள் ஓதினர். ஆனால், இவ்வாறு மிருகங்கள் பலி கொடுக்கப்படுவது கண்டு அவர்கள் மனம் இரக்கம் கொண்டது. எனவே அவர்கள் உயிர்க்கொலை தர்ம நெறிக்கு எதிரானது. யாகம் அகிம்சையுடன் கூடியதாக இருக்க வேண்டும் என்று கூறினர். இது விஷயமாய் ரிஷிக்கும், தேவர்களுக்கும் பெரிய வாதம் நடந்தது. மன்னன் உபரிசரவசுவை மத்தியஸ்தம் செய்து வைக்க அழைத்தனர். ஆனால், மன்னன் இந்திரனுடைய நண்பன் ஆனதால் மிருகபலி சாஸ்திரத்தை ஒட்டியதே என்றான். எனவே, ரிஷிகள் அவனைப் பாதாள உலகில், யாகத்தில் அளிக்கப்படும் நெய்யை அருந்தி வாழுமாறு சபித்தனர். நெய்யை வசு என்றும் கூறுவர். தா என்றால்-பாய்தல். அதனால் பூமிக்கு வசுதரா என்று பெயர் ஏற்பட்டது.
17. கலியுகம்
கலியுகம் நான்கு யுகங்களில் இறுதியானது. இது கொடுமை மிக்கது. வருணாசிரம தருமங்கள் நிலைகுலையும். ஏமாற்றுக்காரர்கள் தலைமுடியை மழித்து சமயக்குரவர் போல் சாஸ்திரம் படிப்பார்கள். அவர்களை ஏற்று மக்கள் மோசம்போவார்கள். உண்மையில் தருமநெறி உடையார் இந்த யுகத்தில் நல்ல பலன் பெறுவர். கலியுகத்தில் ஒரு நாளின் தருமம், துவாபரயுகத்தில் ஒரு மாதப் புண்ணியத்துக்கும், திரேதாயுகத்தில் ஓராண்டு புண்ணியத்துக்கும் சமமாகும். எனினும், கலியுக முடிவில் தருமம் நிலை நாட்டப்படும். விஷ்ணு பிரமதி மன்னன் வடிவில் அவதரிப்பார். இவர் கல்கி எனவும் கூறப்படுவார். கல்கி தனது முப்பத்திரண்டாவது வயதில் தருமத்தை நிலைநாட்ட ரத, கஜ, துரக, பதாதிகளுடன் கிளம்பி துஷ்ட நிக்கிரகம் செய்து, சிஷ்டபரிபாலனம் செய்வார். இவ்வாறு இருபத்தைந்து ஆண்டுகள் நடைபெறும். இவ்வாறு ஐம்பத்திரண்டு ஆண்டுகள் கழிய உலகை ஆண்டு வருவார். இவ்வாறு சத்ய யுகத்திற்கு கலியுகம் வித்தடும். மக்களெல்லாம் சிறிது சிறிதாக உயரம் குறைந்து குள்ள மனிதர்கள் ஆகித் தோன்றுவர்.
18. யஜ்ஞ வல்கியர்
ஜனக மகாராஜன் ஒரு சமயம் ஓர் அசுவமேத யாகம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான முனிவர்களை அழைத்தார். அவர் அந்த ரிஷிகளில் சிறந்தவர் யார் என்றறிய ஓர் உபாயம் செய்தார். ஒரு சோதனை நிகழ்த்தினார். அவர் ஓராயிரம் பசுக்கள், பணியாளர் பலர், மிக்க அளவில் பொன்னுடன் முனிவர்கள் முன்வந்து, இவையனைத்தும் அதிக அறிவாளியும், வேத சாஸ்திர நிபுணரும், மிகச்சிறந்தவருமான ஒருவருக்கே சொந்தமாகும். எனவே அந்த ரிஷி யார் என்பதை நீங்கள் முடிவு செய்வீராக என்று கூறினார் ஜனகர். அவர்களில் ஒருவரான யஜ்ஞவல்கியர் இவை எனக்கே உரியவை. நானே ஞானம் மிக்குடையவன். சகல சாஸ்திர சம்பன்ன விற்பன்னன் என்றார். அனைவரும் அவர் மீது கோபம் கொள்ள இதை வாதத்தின் மூலம் முடிவு செய்யலாம் என்று கூற வாதம் தொடங்கிற்று. யஜ்ஞவல்கியர் ஒரு பக்கமும், மற்ற முனிவர்கள் ஒரு பக்கமுமாக இருந்து வாதம் தொடங்கினர். மற்றவர்கள் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் யஜ்ஞவல்கியர் தக்க விடை அளித்து தானே தகுதிபெற்றவன் என்று நிரூபித்தார். இதற்கு ஷகல்யர் என்ற முனிவர் சம்மதிக்கவில்லை. ஷகல்யர் கேட்ட ஆயிரம் கேள்விகளுக்கும் யஜ்ஞவல்கியர் விடையளித்தார். அதேசமயம் யஜ்ஞவல்கியர் கேட்ட வினாக்களுக்கு ஷகல்யரால் பதில் உரைக்க இயலவில்லை. எனவே யஜ்ஞவல்கியரே சிறந்தவர் என்பது உறுதியாயிற்று. எல்லாப் பொருள்களையும் எடுத்துக்கொண்டு யஜ்ஞவல்கியர் தன் ஆசிரமம் அடைந்தார். அவர் வைசம்பாயனரிடம் வேதங்களைக் கற்றவர்.
ஒரு சமயம் வைசம்பாயனர் ஒரு கடினமான சமயச் சடங்கை ஆரம்பித்தார். அப்போது அவர் தன் சீடர்கள் அனைவரையும் வருவித்துத் தனக்கு உதவியாக இருக்குமாறு பணித்தார். அப்போது யஜ்ஞவல்கியர் தானொருவனே தேவையானவை செய்ய இயலும் என்றும், மற்றவர்களும் இருப்பதில் ஓர் ஆட்சேபணையும் இல்லை என்று கூற அது சீடரான அவரது அகம்பாவத்தை எடுத்துக் காட்டியது. எனவே வைசம்பாயனர் கர்வம் பிடித்த யஜ்ஞவல்கியர் தனக்குச் சீடனாக இருப்பதைத் தான் விரும்பவில்லை என்றும், தன்னிடம் கற்ற கல்வியைத் திருப்பி அளிக்குமாறும் ஆணையிட்டார். வைசம்பாயனர் தனக்கு வேதவியாசர் கற்பித்த யஜுர் வேதத்தை அவர் யஜ்ஞவல்கியருக்கு கற்பித்திருந்தார். தனக்குக் கற்பித்த யஜுர் வேதத்தை யஜ்ஞவல்கியர் கக்கிவிட்டார். பின்னர் யஜ்ஞவல்கியர் சூரியனை நோக்கித் தவமிருந்து அவர் அருளால் மறுபடியும் யஜுர் வேதத்தைக் கற்றறிந்தார். யஜ்ஞவல்கியர் கக்கிய யஜுர் வேதத்தை மற்ற முனிவர்கள் பறவைகள் வடிவம் கொண்டு விழுங்கினர் என்றும் அதன் மூலம் அவர்கள் பெற்ற அறிவு தைத்திரிய ஸம்ஹிதை என்றும் வேறு புராணங்கள் காட்டும்.
19. சர்வம் சிவமயம் ஜகத்
ஒரு சமயம் தன்னைக் காணவந்த தேவர்களிடம், திருமால் எனக்கேற்பட்டுள்ள மகிமை எல்லாம் பராத்பரனான பரமேஸ்வரனின் கருணையால் ஏற்பட்டது. அவரே அனைத்துலகையும் பரிபாலனம் செய்பவர். பிரளய காலத்தில் நான் ஆலிலை மீது படுத்துக்கொண்டிருக்கையில் ஆயிரக்கணக்கான தலைகள், கரங்கள், கால்களுடன் ஒரு பேரொளி காணப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக அது நான்கு முகங்களுடன், பொன்நிறம் கொண்டு, பூணூல், கமண்டலங்களுடன் தோன்றி என்னை யாரென்று கேட்டது. பின்னர் அவ்வடிவம்தான் சுவயம்பு என்றும், சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரகன் நானே என்றது. அப்போது நான் (விஷ்ணு) நானே சர்வமும் என்று கூறி விளக்கினேன். இருவருக்கும் பெரிய வாக்குவாதமே நடந்தது. அப்போது எங்கள் இருவர் எதிரில் வடக்கிலிருந்து ஒரு பேரொளி வந்து நின்றது. அதனருகில் நாங்கள் சென்று பார்க்க அது ஒரு மகாலிங்கமாய் காட்சி அளித்தது. அதன் அடியும் முடியும் புலப்படவில்லை. அப்போது அதன் அடியைக் காண நானும் (விஷ்ணு) முடியைக் காண பிரம்மாவும் புறப்பட்டோம். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகியும் அடி, முடிகளைக் காணமுடியவில்லை. இருவரும் புறப்பட்ட இடத்திற்கே வந்து தங்கள் தோல்வியை ஏற்றோம். ஓ பரமேஸ்வரா எங்களைக் காத்திடுங்கள் என்று பிரார்த்தித்தோம்.
அப்போது எதிரில் கோடி சூரிய பிரகாசத்துடன் பிநாகம், திரிசூலம், பாம்பு, பூணூலுடன் சிவன் பிரத்யக்ஷமானார். தோன்றியவர் பெரிய அட்டகாசம் செய்தார். அதைக்கண்டு நாங்கள் அச்சமடைந்தோம். அப்போது அவர் அச்சமேன். நீங்கள் என்னிலிருந்து தோன்றியவர்கள். வலக்கையிலிருந்து பிரம்மாவும், இடக்கையிலிருந்து விஷ்ணுவும் தோன்றினீர்கள். உங்களுக்குள் ஏன் போராட்டம்! உங்கள் துதியினால் மகிழ்ச்சி கொண்டேன். என்ன வரம் வேண்டும் என்று கேட்டார் பரமன். அதற்கு நாங்கள் உங்கள் திருவடிகளில் எங்கள் பக்தி என்றும் நிலைத்திருக்க வரம் அளியுங்கள் என்றோம். இனி நீங்கள் சிருஷ்டியை ஆரம்பியுங்கள் என்று பரமன் கூறி மறைந்தார். பரமன் அருளாலேயே தனக்கு துஷ்ட சிக்ஷணம், சிஷ்ட பரிபாலனம் செய்யும் சக்தி கிடைத்ததென்று அனைவரும் சிவனை பூசித்தனர் என்றார் திருமால்.
20. தாருகாவன முனிவர்கள் ஈசனை அறிதல்
இமயமலையில் தேவதாரு மரங்கள் நிறைந்த தாருகாவனத்தில் முனிவர்கள் தமது மனைவியருடன் ஆசிரமங்கள் கட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு அருள்புரிய சிவபெருமான் பிரகிருதி வடிவில் ஜடாதரனாய், கோரப்பற்களுடன் திகம்பரனாகத் தோன்றி அவர்கள் அமைதியைக் குலைக்க அவர்கள் தவம் பங்கப்பட்டது. முனிவர்கள் பரமனைக் கழுதை ஆகுமாறும், பேயாகுமாறும் சபிக்க அவர் கோபம் கொள்ளவில்லை. அவரது ஒளிக்கு முன் முனிவர்கள் சூரியனுக்கு முன் அகலாகக் காணப்பட்டனர். முனிவர்கள் வேஷதாரியிடம் நல்லவிதமாகப் பேச முனைந்தனர். இறுதியில் அவர் ஆடையுடுத்திவராவிடின் அவரது ஆண்குறி அகன்றுவிடும் என்று கூறி அச்சுறுத்த முயன்றனர். அப்போது பரமன் கேசவாதியர்களால் கூட அது முடியாது. என் லிங்கத்தை நானே பூமியில் விடுகிறேன் என்று கூற முனிவர்கள் உன் பிரபாவம் எங்களுக்குத் தேவையில்லை. ஆடையுடுத்தி நாகரிகமாய் நடந்துகொள், இல்லாவிட்டால் இவ்விடம் விட்டு அகன்று விடு என்றனர். பரமன் மறைந்து விட்டார். ஆனால் அங்கு ஒரு லிங்கம் தோன்றியது. இவ்வாறு பரமன் மறைந்தவுடன் உலகமே அசைவற்று ஸ்தம்பித்துப் போய்விட்டது.
இதன் காரணத்தை அறியாமல் முனிவர்கள் பிரம்மாவிடம் சென்று நடந்தவற்றை எல்லாம் கூறி முறையிட அவர், வந்தவர் ஆதிபுருஷனான பரமேஸ்வரனே. அவரே நாம் உயிருடன் இருப்பதற்கு, உலகில் ஜீவராசிகள் வாழ்வுக்கு ஆதிகாரணம். இது சிவனது லீலையே. எந்த தேஜஸ்ஸிலிருந்து லிங்கம் தோன்றியதோ, அதை பரமேஸ்வர ரூபமாக எண்ணிச் சேவித்து இஷ்ட சித்திகளைப் பெறுங்கள் என்றார். முனிவர்கள் திரும்பி வரும் போது சிவபெருமானும் அங்கு வந்திருந்தார். முனிவர்கள் அவரைத் துதிசெய்து, காமக்ரோதாதிகளைத் தொலைக்க முயற்சித்தோமே அன்றி சித்தி பெற்றவர்களல்லர். எனவே நாங்கள் செய்ய வேண்டியவற்றை உபதேசித்து அருள்புரியுங்கள் என்று பிரார்த்தித்தனர். அப்போது பரமன் அவர்களைப் பாசுபத விரதம் அனுஷ்டித்து, எல்லாச் செல்வங்களும் பெறுவீர்களாக என்று கூறி அருளினார். மேலும் பரமன், உலகில் மனிதன் முதன் அனைத்து ஜீவராசிகளும் பிறக்கும் போது ஆடையின்றி நக்னமாகத் தோன்றுகின்றன. மற்றும் பட்டாடை அணிந்தவர்களும் இந்திரியங்களை வெல்ல முடியாமல் நக்னர்களாகவே இருக்கின்றனர் என்றார். முக்காலமும் என் நாமம் உச்சரித்து விபூதி அணிந்து பூசிப்பவர்கள் காணாதிபத்தியம் பெறுவர். சிவபக்தி கொண்டவர்கள் மோக்ஷம் அடைவர். திருநீறு அணிந்து மயானத்தில் என்னைத் தியானிப்பவர்கள் அணிமா சித்திகளைப் பெறுவர். இந்திராதி தேவர்கள் காம்ய விரதங்கள் அனுஷ்டித்து என்னருளால் அவரவர் பதவியைப் பெற்றனர். நீங்களும் என்னைப் பக்தியுடன் ஆராதித்து பாசுபத விரதம் அனுஷ்டித்து என்னருளால் உய்யுங்கள் என்று சிவபெருமான் தாருகாவன முனிவர்களிடம் கூறி மறைந்தார்.
21. வாலியும் இராவணனும்
நிரஜன் எனும் வானரன் தன் பெண் விரஜாவை ருஷீடன் என்ற வானரனுக்கு மணம் செய்வித்தான். அந்த விரஜாவை கண்டு மோகித்த இந்திரன் அவள் சம்மதத்துடன் சேர்ந்திட வாலி என்னும் பலசாலியான வானரம் பிறந்தது. (இவனே ராமனால் கொல்லப்பட்டவன்) மற்றும் விரஜா சூரியனுடன் சேர்ந்து சுக்கிரீவனை பெற்றெடுத்தாள். அவர்கள் இருவரில் வாலி அரசாண்டு வந்தான். வாலி சுஷேணனின் பெண் தாரையையும், சுக்கிரீவன் பநஸனின் பெண் ருமையையும் மணந்தனர். அஞ்சனாதேவி கேசரி என்ற வானரனின் மனைவி. அவள் வாயுவின் அருளால் அனுமானை ஈன்றெடுத்தாள். ஒரு நாள் வாலி சூரியனுக்கு அர்க்கியம் அளிக்கத் தென் கடலுக்குச் சென்றான். இலங்கை வேந்தன் ராவணன் இதையறிந்து வாலியைத் தேடிச் சென்று அவனுக்குப் பின் பக்கமாக இருந்து அவனைத் தாக்கினான். இதைக் கண்டும் காணாமல் இருந்த வாலி, இராவணனைத் தன் அக்குளில் இருக்கிக் கொண்டு அனைத்து சமுத்திரங்களிலும் நீராடி ஜபதபங்கள் முடித்துக் கொண்டு கிஷ்கிந்தையை அடைந்து ஒரு மூட்டையை இறக்குவது போல் இராவணனைக் கீழே தள்ளினான். மூர்ச்சையாகி இருந்த இராவணனைத் தெளிவித்து வாலி, திக்பாலகர்களையும், மூன்று லோகங்களையும் வெற்றி கொண்ட நீ ஒரு வானரத்திடம் பலவீனமடைந்து விட்டாயே? என்று கேட்டான். இராவணன் வாலியிடம் மன்னிப்புக்கோரி இருவரும் சினேகிதர்களாகினர். அதனால்தான் முதலில் வாலியைக் கொன்று ராமன், பின்னர் ராவணனை போரிட்டுக் கொன்றார்.
22. பரசுராமன்
மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் பரசுராம அவதாரமும் ஒன்று. பரசுராமனின் தந்தை ஜமதக்கினி முனிவர். தாயார் ரேணுகாம்பாள். பரமேச்வரர் ஒரு வேடன் உருவில் தான் கொன்ற ஒரு மானின் மாமிசத்தை பரசுராமன் அருகில் கொண்டு வந்து வைக்க, அதனை அகற்றுமாறு பரசுராமன் கூறினான். மேலும் அவனுடன் பேசுவதுகூட பாவமே என்றான். அதற்கு வேடன், என்னை அவசியமின்றித் தூஷிக்க வேண்டாம். என் மனைவி மக்களின் உணவுக்காக இந்த மாமிசத்தைக் கொண்டு போகிறேன். இதுவே எங்களுக்கு பிரம்மா அளித்த உணவு. நான் உயிர் வாழ வேட்டை ஆடுகிறேன். ஆனால் நீயோ தந்தை சொன்னார் என்பதற்குத் தாயையே கொன்றாய். இதை அறிந்தவர் உன்னைப் பழிப்பர். எனவே வேறு இடம் செல் என்றான் வேடன். இவ்வாறு அறிவுபூர்வமாக கேட்ட வேடனை மும்மூர்த்திகளுள் ஒருவரா? வேடனாகத் தோன்றவில்லையே என்று பரசுராமன் கேட்டு வணங்கி பரமேச்வரா என்னை மன்னித்து அருள்புரியுங்கள் என்று வேண்டினான். அப்போது பரமன் தோன்றி ராமன் கேட்ட சஸ்திர அஸ்திரங்களை வழங்குகிறேன். ஆனால் அவற்றை நிர்வகிக்கும் சக்தி நீ பெற வேண்டும். தீர்த்தயாத்திரைகள் சென்று அந்தந்த தலத்தில் உள்ள தேவதைகளை உபாசித்து வந்து மறுபடியும் தீவிர தவம் செய்யவும் அப்போது அஸ்திர சஸ்திரங்களைத் தரிக்கும், நிர்வகிக்கும் சக்தி கிடைக்கும் என்றார்.
மூகலு என்னும் அரக்கி தேவலோகம் சென்று தேவர்களை விரட்டி அடிக்க, அவர்கள் சிவபெருமானிடம் முறையிட, பரமன் இமயமலையில் தவமியற்றும் பரசுராமன் அரக்கர்களைக் கொன்று, தேவர்களுக்கு வெற்றி கிடைக்கச் செய்வான் என்றார். பரமனிடம் பரசுராமன் நான் ஒரு சாமானியன். என்னால் எப்படி தேவர்களுக்கு உதவமுடியும் என்று கேட்க, பரமன் உன்னிடம் இயற்கையாகவே பராக்கிரமம் இருக்கிறது. அத்துடன் தவத்தால் ஏற்பட்ட சக்தி உள்ளது. அத்துடன் தவத்தால் ஏற்பட்ட சக்தி உள்ளது. அத்துடன் நான் உனக்கொரு பரசை (கோடாரியை) ஆயுதமாகத் தருகிறேன். மேலும் எதிலும் நீ வெற்றி பெறுமாறு என்னுடைய அருளும் உள்ளது. எனவே வெற்றியுடன் வா என்று ஆசிர்வதித்து அனுப்பினார். அன்று முதல் பார்க்கவராமன், பரசுராமன் என்று பெயர் பெற்றான். பரசுராமன் அசுரர்களை வென்று தேவர்களுக்கு வெற்றி பெற்றுத் தந்தான். மேலும் பரமனிடம் தான் எல்லா சஸ்திர, அஸ்திரங்களை உபயோகிக்கவும், உபசம்ஹாரம் செய்யவும் அருளுமாறு வேண்டி அவ்வாறே பெற்றான். அவன் பெயர் கொண்ட பார்க்கவாஸ்திரத்தையும் அருளினார்.
பரசுராமன் ஒரு சமயம் தன் தகப்பனாரைக் கொன்ற கார்த்தவீரிய அர்ச்சுனனையும், மற்றும் அரசர்கள் அனைவரையும் கொன்று குவித்தான். கடைசியில் ஸ்ரீராமன் திருமணம் செய்து கொண்டு செல்கையில் அவரிடம் தோற்று தனது தவச்சக்தியை எல்லாம் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டுத் தவம் செய்யச் சென்றார் பரசுராமன். பரசுராமன் குரு÷க்ஷத்ரத்தில் சியமந்த பஞ்சகம் என்ற குளத்தை வெட்டி அதில் நீராடி பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்தார் பரசுராமர். அரசர்களைக் கொன்ற பாவங்கள் நீங்க காசியபரைப் பிரம்மாவாகக் கொண்டு அசுவமேதயாகம் செய்தார். யாக இறுதியில் ருக்வித்துக்களுக்குத் தக்ஷிணைகள் வழங்கினார். பின்னர் தான் வசிப்பதற்கு மஹேந்திர பர்வதத்தைத் தேர்ந்தெடுத்து அதைத்தவிர மற்ற பூமிப்பகுதிகளைக் காசியபருக்குப் பிரம்மதக்ஷிணையாகத் தானம் செய்தார். அது முதல் பூமி காசியபி எனப்படுகிறது. அதன்பின் பரசுராமர் பித்ரு தேவதைகளின் கோரிக்கைப்படி சந்நிதி அடைந்து மஹேந்திர பர்வதத்தை அடைந்து தவம் செய்யலானார்.
23. கோகர்ண ÷க்ஷத்திரம்
பாரத நாட்டின் தென்பகுதியில் கோகர்ண ÷க்ஷத்திரம் உள்ளது. அது பரமேஸ்வரன் மனமுவந்து அமர்ந்துள்ள இடம். அவ்விடத்தில் செய்யும் தான தருமங்கள் தவம், ஜபம் ஆகியவை பலமடங்காகப் பரிணமிக்கும். அங்கு இறப்பவர் மோக்ஷம் அடைவர். இங்கு நீராடி கோகர்ணேச்வரருக்கு ஜபம், அபிஷேகம், ஓமங்கள் ஆகியவை செய்தால் நினைத்த காரியங்கள் சித்தியாகும். அந்தத் திருத்தலத்தில் முனிவர்கள் தினமும் கோகர்ணேச்வரரைச் சேவித்து அங்கேயே வாசம் செய்தனர். அத்தலம் கடல், ஆகாய கங்கையால் நிரம்ப நீரில் மூழ்கி விட்டது. இதனால் கவலையடைந்த முனிவர்கள் பரசுராமரை அணுகி அத்தலம் நீரிலிருந்து வெளிவர ஆவன செய்து தங்களுக்கு உதவுமாறு வேண்டினர். உடனே பரசுராமர், தென் சமுத்திரக்கரையை அடைந்து கோகர்ண ÷க்ஷத்திரத்தை வெளிவிட வேண்டிட, சமுத்திரராஜன் பதில் கூறவில்லை. அப்போது பரசுராமர் கோபம் கொண்டு ஆக்கினேய அஸ்திரத்தை எய்ய முற்பட அது கண்டு பயமடைந்த சமுத்திரராஜன் தோன்றி பார்க்கவ ராமா! உங்கள் பலத்தை நான் அறிவேன். முன்பு பிரம்மன் என்னை யாராலும் வெல்ல முடியாது என்று வரமளித்தார். எனினும், நீங்கள் விஷ்ணு அம்சமானவர். எனவே, தாங்கள் எந்த எல்லை வரையில் என்னை அகன்று செல்லச் சொல்கிறீர்களோ அதுவரையில் நான் செல்கிறேன் என்று கூற, பரசுராமர் கோகர்ண தலம் வெளிவர ஏதுவாக நாலாபக்கமும் இடம் விட்டுச் செல்க என்றார். தலம் வெளிவந்து நிலை பெற்றது. ரிஷிகள் பரசுராமரைப் புகழ்ந்தனர். அவரும் கோகர்ணேசுவரனைப் பக்தியுடன் ஆராதனை செய்துவிட்டு மகேந்திரபுரிக்குச் சென்றார்.
24. காலம் கூடி வந்தால்
ஒரு சமயம் தேவாசுர யுத்தத்தில் தேவர்கள் கை ஓங்கி நிற்க ராக்ஷசர்கள் பலர் அழிந்து போக, மீதி உள்ளவர்கள் தமது குலகுருவான சுக்கிராச்சாரியாரை அணுகி முறையிட்டனர். அரக்கர்களைக் காப்பாற்றுவதற்காக அனேக மந்திர தந்திரங்களைப் பெற சிவபெருமானைக் குறித்து தவம் செய்ய வனம் ஏகினர். செய்வதறியாமல் திகைத்த அரக்கர்களைப் பார்த்து பிருகுமுனிவர் மனைவி என் கற்பின் மகிமையால் உங்களைக் காப்பாற்றுகிறேன் என்று கூறி அபயம் அளித்தாள். பிரகஸ்பதியின் ஆலோசனைப்படி அரக்கர்களை அழிக்கத் தேவேந்திரன் புறப்பட்டான். அப்போது பிருகுமுனிவரின் மனைவி இந்திரனை ஸ்தம்பிக்கச் செய்தாள். தேவர்கள் அஞ்சி ஓடினர். அப்போது விஷ்ணு இந்திரனைத் தப்புவிக்கச் செய்தார். அப்போது பிருகுவின் பத்தினி இந்திரா உன்னையும், உனக்கு ஆதரவாக வந்த விஷ்ணுவையும் எரித்து விடுகிறேன் பார் என்று கூற, விஷ்ணு ஒரு சரம் எய்து அவள் தலையைக் கொய்தார். இதுகண்டு பிருகு மகரிஷி, பெண் கொலை செய்த விஷ்ணுவுக்கு மனித வடிவில் ஏழாண்டு பிறக்குமாறு சபித்து, தன் மனைவி தலையை அவள் உடலில் பொருத்தித் தவ வலிமையால் அவளை உயிர்ப்பித்தார்! இருப்பினும் சுக்கிராச்சாரியார் இந்த விஷயம் தெரிந்து என்ன செய்வாரோ என்று பயந்த இந்திரன் தன் மகள் ஜயந்தியைச் சுக்கிராச்சாரியாரிடம் சென்று அவருக்கு அனுகூலமாக நடந்து அவரை மகிழ்ச்சி அடையச் செய்யுமாறு கூறி அனுப்பி வைத்தான்.
சிவன் தோன்றி சுக்கிராச்சாரியார் வேண்டிய வரங்களை அளித்தார். அப்போது சுக்கிராச்சாரியார் தனக்குச் சேவை செய்த ஜயந்தியை நோக்கி அவள் வேண்டும் வரம் யாது எனக் கேட்க, அவள் மிகுந்த தவசாலி ஆன தங்களுக்குத் தெரியாதா! என்று சொல்ல அவர், அவள் உள்ளம் அறிந்து அவளுடன் பத்தாண்டு காலம் சம்சாரம் செய்யலானார். மாயையால் தன்னை மறைத்துக் கொண்டார். அசுரர்கள் சுக்கிராச்சாரியாரைக் காணாமல் தவிக்க, தேவகுரு பிரகஸ்பதி சுக்கிராச்சாரியார் வடிவில் அவர்கள் முன் தோன்றி நான் தவம் இயற்றி வித்தைகள் கற்று வந்தேன். இனி நீங்கள் தேவர்களுடன் போரிட்டாலும் தோல்வி அடையமாட்டீர்கள் என்று உற்சாகப்படுத்தினார். இதற்குள் பத்தாண்டுகள் முடிய சுக்கிராச்சாரி ஜயந்திடம் விடைபெற்று அரக்கர்களைக் காணச்சென்றார். அங்கு ஏற்கனவே ஒரு சுக்கிராச்சாரி இருப்பதைப் பார்த்து அரக்கர்களிடம் தானே உண்மையான குரு சுக்கிராச்சாரியார் என்று கூறினார். ஆனால் பிரகஸ்பதி சுக்கிராச்சாரியாரைப் பிரகஸ்பதி என்று கூற உண்மையான சுக்கிராச்சாரியார் கோபம் கொண்டு அசுரர்களை இன்னல்படுமாறும் தோற்று ஓடுமாறும் கூறிட, அதுவே தக்க சமயம் என்று தேவர்கள் அசுரர்களிடம் போர் செய்து வென்றிட, அவர்கள் பிரகலாதனை அணுகி முறையிட, பிரகலாதன் சுக்கிரரிடம் அவர் மாயையால் மறைந்ததால் அசுரர்கள் தவறினர். அது அவர்கள் தவறில்லை என்று கூறி அவர்களைக் காத்திடுமாறு வேண்டினான்.
அப்போது சுக்கிரர் இப்போது தேவர்களுக்கு அனுகூல காலம். அவர்கள் கை ஓங்கி உள்ளது. பிரகஸ்பதி, அவர்கள் குருவானதால் அவர்களுக்கு உதவினார். காலச்சக்கரம் மாறி உங்கள் கை ஓங்கும் காலம் வரப்போகிறது. மஹாபலி ராஜ்யாதிகாரி ஆவான். அப்போது உங்கள் கை ஓங்கி நிற்கும். கவலையுற வேண்டாம் என்று கூறி அசுரர்களைச் சுக்கிராச்சாரியார் சமாதானப்படுத்தினார். ஆனால், மீதியுள்ள அசுரர்கள் ஒன்று கூடி தேவர்களை எதிர்த்துப் போரிட்டனர். சுவர்க்கத்தைக் கைப்பற்றினர். இந்நிலையில் தேவர்களுக்கு அவிர்பாகம் கிடைக்காத நிலை ஏற்பட்டது. தேவர்கள் ஒன்று கூடி சுக்கிராச்சாரியாரின் குமாரரான சண்டாமார்க்கனைப் பிரார்த்தித்து தங்களுக்கு அவிர்ப்பாகம் கிடைக்குமாறு செய்ய வேண்ட, தேவர்களை மட்டும் அழைத்து யாகம் புரிந்து அவிர்ப்பாகம் அளிக்க, தேவர்கள் பலம் பெற்று அசுரர்களை விரட்டி அடிக்க, அவர்கள் பாதாள லோகத்தை அடைந்தனர். காலம் கை கூடினால் மட்டுமே நற்பலன் கிட்டும்.
பிரம்மாண்ட புராணம் முற்றிற்று.
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்



















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக